ஐம்பெருங் காப்பியங்கள் - மணிமேகலை
12. அறவணர்த் தொழுத கதை
ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள் யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய் நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும் மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் | 12-010 |
ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும் அளித்த பிறப்பின் ஆகிய கணவனை களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும் 'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால் பூங் கொடி நல்லாய்! கேள்' என்று உரைத்ததும் | 12-020 |
உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம் தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும் தெய்வம் போய பின் தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் 'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் 'போக' என மடந்தை போந்த வண்ணமும் மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் | 12-030 |
மணிமேகலை உரை மாதவன் கேட்டு தணியா இன்பம் தலைத்தலை மேல் வர 'பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம் ஆதி முதல்வன் அடி இணை ஆகிய பாதபங்கய மலை பரவிச் செல்வேன் கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் | 12-040 |
"மா பெருந் தானை மன்ன! நின்னொடும் தேவியர் தமக்கும் தீது இன்றோ?" என அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப "பழ வினைப் பயன் நீ பரியல்" என்று எழுந்தேன் | 12-050 |
ஆடும் கூத்தியர் அணியே போல வேற்று ஓர் அணியொடு வந்தீரோ?' என மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் 'பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய் தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல் அறம் பெருகாதாகி இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு | 12-060 |
செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டு என உணர்தல் அல்லது யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது சலாகை நுழைந்த மணித் துளை அகவையின் உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும் ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச் சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் | 12-070 |
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் சக்கரவாளத்துத் தேவர் எல்லாம் தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில் பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி இரும் பெரு நீத்தம் புகுவது போல | 12-080 |
அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம் உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம் கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் அவிர் ஒளி காட்டும் மணியே போன்று மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப் புத்த ஞாயிறு தோன்றும்காலை திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா | 12-090 |
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் | 12-100 |
போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன் மடக்கொடி! மாதர் நின்னால் வருவன இவ் ஊர் ஏது நிகழ்ச்சி யாவும் பல உள ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்! ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும் பாதபங்கய மலை பரசினர் ஆதலின் ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு | 12-110 |
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப் பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய் ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் பசிப் பிணி தீர்த்தல்' என்றே அவரும் தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என் | 12-121 |
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய் வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி தென் திசைக் குமரி ஆடி வருவோள் சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க | 13-010 |
தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர நாவான் நக்கி நன் பால் ஊட்டி போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக் கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு "ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே காதலி தன்னொடு கைதொழுது எடுத்து | 13-020 |
"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி மார்பிடை முந்நூல் வனையாமுன்னர் நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில் குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக் | 13-030 |
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து "கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும் உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன் கல் அதர் அத்தம் கடவாநின்றுழி அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம் | 13-040 |
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி "ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக் காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் "நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் | 13-050 |
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால் அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் இதனொடு வந்த செற்றம் என்னை முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?" "பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ் | 13-060 |
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும் "ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் நரி மகன் அல்லனோ கேசகம்பளன் ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் ஆவொடு வந்த அழி குலம் உண்டோ நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் | 13-070 |
"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என "நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழியாட்டி மறை முறை எய்தி குமரி பாதம் கொள்கையின் வணங்கி தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை 'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என மா மறையாட்டி வரு திறம் உரைக்கும் 'வாரணாசி ஓர் மா மறை முதல்வன் ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி | 13-080 |
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு தெற்கண் குமரி ஆடிய வருவேன் பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் | 13-090 |
புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து "மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ? சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப "ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே | 13-100 |
தாதை பூதியும் தன் மனை கடிதர "ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும் கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை தான் சென்று எய்தி சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர் ஐயக் கடிஞை கையின் ஏந்தி மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி | 13-110 |
'காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து கண்படைகொள்ளும் காவலன் தான் என் | 13-115 |
14 பாத்திர மரபு கூறிய காதை
'ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி "வயிறு காய் பெரும் பசி மலைக்கும்" என்றலும் ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த "கேள் இது மாதோ கெடுக நின் தீது" என யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத் | 14-010 |
தேவி சிந்தாவிளக்குத் தோன்றி "ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய் நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது" என்றே தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும் "சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி! ஏனோர் உற்ற இடர் களைவாய்!" எனத் | 14-020 |
தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி | 14-030 |
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி "இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க" என வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் "போம்" என்று எடுத்து உரை செய்வோன் "ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் | 14-040 |
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்?" என்றலும் "புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப | 14-050 |
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் பரப்பு நீரால் பல் வளம் சுரக்க!" என ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன் ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் பன்னீராண்டு பாண்டி நல் நாடு மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப் பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி | 14-060 |
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் முட்டா வாழ்க்கை முறைமையது ஆக ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி ஊரூர் தோறும் உண்போர் வினாஅய் "யார் இவன்?" என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை "இருந்தாய் நீயோ!" என்பார் இன்மையின் திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள | 14-070 |
ஒரு தனி வரூஉம் பெருமகன் போல தானே தமியன் வருவோன் தன்முன் மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் "சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் ஊன் உயிர் மடிந்தது உரவோய்!" என்றலும் "அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து" என வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின் | 14-080 |
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத் தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் "இழிந்தோன் ஏறினன்" என்று இதை எடுத்து வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் "மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம் என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன் சுமந்து என் பாத்திரம்?" என்றனன் தொழுது | 14-090 |
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் "ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று" என விடுவோன் "அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் உளர்எனில் அவர் கைப் புகுவாய்" என்று ஆங்கு உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன் "என் உற்றனையோ?" என்று யான் கேட்பத் தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக் குட திசைச் சென்ற ஞாயிறு போல | 14-100 |
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன் ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என் | 14-104 |
15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே! அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத் தண்ணென் சாவகத் தவள மால் வரை மண்முகன் என்னும் மா முனி இடவயின் பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம் தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்" அதன் வயிற்று அகத்து | 15-010 |
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன் அடர்ப் பொன் முட்டை அகவையினான்" என பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் தற்காத்து அளித்த தகை ஆ அதனை ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத் தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு | 15-020 |
ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன் பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து மண்அகம் எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது "போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும் கண்டன சிறப்பு" என | 15-030 |
சக்கரவாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் விரும்பினர் வியந்து "கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய அந்தில் பாவை அருளும் ஆயிடின் அறிகுவம்" என்றே செறி இருள் சேறலும் "மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும்" என்று ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் | 15-040 |
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி "மக்களை இல்லேன் மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை" என்று அவன் வளர்ப்ப அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான் துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ? அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் அலத்தல்காலை ஆகியது ஆய் இழை! | 15-050 |
> வெண் திரை தந்த அமுதை வானோர் உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும் அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது' என மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும் ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும் மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் | 15-060 |
கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி 'உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது திப்பியம்' என்றே சிந்தை நோய் கூர | 15-070 |
மண மனை மறுகில் மாதவி ஈன்ற அணி மலர்ப் பூங் கொம்பு 'அகம் மலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து' எனக் 'குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண் ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று வான் தருகற்பின் மனை உறை மகளிரின் தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை நீ புகல்வேண்டும் நேர் இழை!' என்றனள் | 15-080 |
> வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித் தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை மாதவன் தன்னால் வல் வினை உருப்ப சாவம் பட்டு தனித் துயர் உறூஉம் வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை எனும் காரிகை தான் என் | 15-086 |
16. ஆதிரை பிச்சையிட்ட காதை
'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள் 'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய் சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி அணி இழை தன்னை அகன்றனன் போகி கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி "காணம் இலி" என கையுதிர்க்கோடலும் | 16-010 |
வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் நாவாய் கேடுற நல் மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் "இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல் உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் | 16-020 |
சாதுவன் தானும் சாவுற்றான்" என ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு "ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம் தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி "மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும் படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது | 16-030 |
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத் "தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும் "ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் | 16-040 |
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என் கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் | 16-050 |
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி பக்கம் சேர்ந்து "பரி புலம்பினன் இவன் தானே தமியன் வந்தனன் அளியன் ஊன் உடை இவ் உடம்பு உணவு" என்று எழுப்பலும் மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின் | 16-060 |
கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள் சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி ஆங்கு அவர் உரைப்போர் "அருந்திறல்! கேளாய் ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் நீ" என அவருடன் போகி கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் எண்கு தன் பிணவோடு இருந்தது போல பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக் | 16-070 |
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் "ஈங்கு நீ வந்த காரணம் என்?" என ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் "அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து "வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும் "பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு | 16-080 |
உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின் காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும் "மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் 'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர் | 16-090 |
கண்டனை ஆக!" என கடு நகை எய்தி "உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர் இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை செவ்வனம் உரை" எனச் சினவாது "இது கேள் உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின் உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது | 16-100 |
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ" என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து "கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும் | 16-110 |
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை" என்றலும் "நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும் தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன் "ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம் ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப் "பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை | 16-120 |
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து தன் மனை நன் பல தானமும் செய்தனன் ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என மனைஅகம் புகுந்து மணிமேகலை தான் | 16-130 |
புனையா ஓவியம் போல நிற்றலும் தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர 'பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக' என ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என் | 16-135 |
17. உலக அறவி புக்க காதை
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத் தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி 'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று | 17-010 |
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி துன்னிய என் நோய் துடைப்பாய்!' என்றலும் எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும் | 17-020 |
'மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக் காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன் விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத் தென் திசைப் பொதியில் காணிய வந்தேன் கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர் இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி | 17-030 |
தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின் பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன் தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன் உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன் "சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் | 17-040 |
பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்! அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தீயால் தனித் துயர் உழந்து முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு உண்ணும் நாள் உன் உறு பசி களைக!" என அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை! வாடு பசி உழந்து மா முனி போய பின் பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என் | 17-050 |
அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி "ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால் காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை! வானூடு எழுக" என மந்திரம் மறந்தேன்! ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி | 17-060 |
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் "சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர் ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் பல நாள் ஆயினும் நிலனொடு போகி அப் பதிப் புகுக" என்று அவன் அருள்செய்ய இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் இந்திர கோடணை விழவு அணி வரு நாள் வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே | 17-070 |
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன் துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர் சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில் பலர் புகத் திறந்த பகு வாய் வாயில் உலக அறவி ஒன்று உண்டு அதனிடை ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர் ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் | 17-080 |
இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி வல முறை மும் முறை வந்தனை செய்து அவ் உலக அறவியின் ஒரு தனி ஏறி பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக் கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி | 17-090 |
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக் கருவி மா மழை தோன்றியதென்ன பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி 'ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது யாவரும் வருக ஏற்போர் தாம்!' என ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என் | 17-098 |
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின் தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக் கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித் 'தீர்ப்பல் இவ் அறம்!' என சித்திராபதி தான் கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் 'கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர் இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது! | 18-010 |
காதலன் வீய கடுந் துயர் எய்திப் போதல்செய்யா உயிரொடு புலந்து நளி இரும் பொய்கை ஆடுநர் போல முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம் கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் நறுந் தாது உண்டு நயன் இல் காலை வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம் | 18-020 |
வினை ஒழிகாலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் தாபதக் கோலம் தாங்கினம் என்பது யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே? மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக் கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப் பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி | 18-030 |
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப் பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின் சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர் மனைஅகம் புகாஅ மரபினன்' என்றே வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக் குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் | 18-040 |
கடுந் தேர் வீதி காலில் போகி இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப் பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த் திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச | 18-050 |
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித் திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் 'மாதவி மணிமேகலையுடன் எய்திய தாபதக் கோலம் தவறு இன்றோ?' என 'அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய நாடகம் விரும்ப நல் நலம் கவினிக் காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய | 18-060 |
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து!' என ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் "மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி" என்று ஒழிவேன் முன்னர் காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த | 18-070 |
முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம் அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப விருந்தின் மூரல் அரும்பியதூஉம் மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக் காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண் "அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு" என செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும் பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை "என் உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு" என்று இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப் | 18-080 |
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் "செய் தவம் புரிந்த அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றனள் தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ? எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச் சித்திராபதி தான் சிறு நகை எய்தி 'அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்! காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்? மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி | 18-090 |
ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும் மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த் தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்? கன்னிக் காவலும் கடியின் காவலும் தன் உறு கணவன் சாவுறின் காவலும் நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது | 18-100 |
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள் நாடவர் காண நல் அரங்கு ஏறி ஆடலும் பாடலும் அழகும் காட்டி சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச் செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப் பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப் பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல் | 18-110 |
கோன்முறை அன்றோ குமரற்கு?' என்றலும் உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி காடு அமர் செல்வி கடிப் பசி களைய ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத் தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும் இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி 'உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் | 18-120 |
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என தானே தமியள் நின்றோள் முன்னர் யானே கேட்டல் இயல்பு' எனச் சென்று 'நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது? சொல்லாய்' என்று துணிந்துடன் கேட்ப 'என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் தன் அடி தொழுதலும் தகவு!' என வணங்கி 'அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் | 18-130 |
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல் நன்றி அன்று!' என நடுங்கினள் மயங்கி 'கேட்டது மொழியேன் கேள்வியாளரின் தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இது என உணர்ந்து மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு | 18-140 |
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ கேட்டனை ஆயின் வேட்டது செய்க!' என வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி முத்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு 'ஆடவர் செய்தி அறிகுநர் யார்?' எனத் தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி மாய விஞ்சை மந்திரம் ஓதிக் காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் மணிமேகலை தான் வந்து தோன்ற | 18-150 |
அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக் குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப் 'பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த காயசண்டிகை தன் கையில் காட்டி மாயையின் ஒளித்த மணிமேகலை தனை ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்? ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்! இன்னும் கேளாய் இமையோர் பாவாய்! பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும் | 18-160 |
அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும் முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும் குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக் கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த மதி வாள் முகத்து மணிமேகலை தனை ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன் இது குறை' என்றனன் இறைமகன் தான் என் | 18-172 |
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற 'ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன் நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை' என வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் உதயகுமரன் உள்ளம் கலங்கி பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி "அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றே செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் | 19-010 |
பை அரவு அல்குல் பலர் பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் "முத்தை முதல்வி அடி பிழைத்தாய்" எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு நீல யானை மேலோர் இன்றிக் | 19-020 |
காமர் செங் கை நீட்டி வண்டு படு பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப் பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின் உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட மறு இல் செய்கை மணிமேகலை தான் | 19-030 |
'மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் காவலன் மகனோ கைவிடலீ யான்!' காய்பசியாட்டி காயசண்டிகை என ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி "ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து" என்றே நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம்' என முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த அமுதசுரபியை அங்கையின் வாங்கிப் | 19-040 |
பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும் 'ஊட்டிய பாத்திரம் ஒன்று' என வியந்து கோட்டம் காவலர் 'கோமகன் தனக்கு இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் யாப்பு உடைத்தாக இசைத்தும்' என்று ஏகி | 19-050 |
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் அடியில் படியை அடக்கிய அந் நாள் நீரின் பெய்த மூரி வார் சிலை மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக் கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக் பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய வரிக் குயில் பாட மா மயில் ஆடும் விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் | 19-060 |
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மட மயில் பேடையும் தோகையும் கூடி இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி 'மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை இஃது ஆம்' என நோக்கியும் கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச் செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப் பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம்' என்றும் | 19-070 |
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண் மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு வால் வீ செறிந்த மராஅம் கண்டு நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும் ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர் | 19-080 |
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர் பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர் பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் | 19-090 |
ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் பொருந்துபு நின்று திருந்து நகை செய்து குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும் பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் 'வம்' எனக் கூஉய் மகிழ் துணையொடு தன் செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும் | 19-100 |
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும் வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும் பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும் ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும் யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக் கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப் | 19-110 |
பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச் சந்தி மாண் வினை விதானத்துத் தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி | 19-120 |
முறம் செவி யானையும் தேரும் மாவும் மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர் சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி! ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி! வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை! கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர் | 19-130 |
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் ஊழிதோறு ஊழி உலகம் காத்து வாழி எம் கோ மன்னவ!' என்றலும் 'வருக வருக மடக்கொடி தான்' என்று அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் | 19-140 |
வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று 'ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய!' எனத் 'தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்? யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை?' என்று அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும் 'விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி! விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை! வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக! தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது | 19-150 |
ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர் தெய்வம் தந்தது திப்பியம் ஆயது யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது' என 'யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு?' என்று வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும் 'சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர்க்கு ஆக்குமது வாழியர்!' என அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் | 19-162 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை - Impernm Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - பாத்திரம், கொண்டு, பெரும், மணிமேகலை, தோன்றி, எல்லாம், வேந்தன், மாதவன், சென்று, திருந்து, தொழுது, கேளாய், ஆபுத்திரன், என்றலும், யாவரும், வணங்கி, நின்று, மாக்கள், முதல்வன், ஆதலின், நெடுங், புகுந்து, உதயகுமரன், அல்லது, கோட்டம், தெய்வம், இருந்த, இளங்கொடி, திப்பியம், என்னும், பொருள், எடுத்து, போன்று, பெருந், வங்கம், மடக்கொடி, பெருங், சிறப்பின், தோன்றும், உரைக்கும், உடம்பு, உரைப்போன், உரைத்த, உரைத்தலும், மணிபல்லவத்திடை, மாக்கட்கு, ஏந்திய, கேட்டு, காயசண்டிகை, பெண்டிர், ஓங்கிய, இன்மையின், அந்தணர், மலர்ப், எமக்கு, சுரந்து, முதியாள், அகவயின், காரணம், பொய்கை, நீங்கி, அம்பலம், தன்னால், வாழும், காட்டி, பிச்சை, பத்தினிப், பெருஞ், ஆயினும், வண்ணமும், தனக்கு, ஞாலத்து, மந்திரம், அன்றியும், என்போன், உள்ளம், தம்முடன், காவலன், நல்லாய், சாரணர், சாதுவன், செய்தி, தானும், விஞ்சை, வினைப், பிச்சைப், உற்றதை, நெடுந், பக்கம், காரிகை, அறவணன், கையில், யாக்கை, அணங்கு, முதிர், காதலன், இயற்றிய, நெஞ்சம், காவலும், நெடியோன், யானைத்தீ, மனைஅகம், அடைதலும், தன்பால், மரபின், பொருந்திய, மலர்க், அயர்ந்து, மலர்த், அவன்பால், அம்பலப், செழுங், மாவும், கையின், முந்நீர், எழுந்து, மருங்கில், புகுவது, மாக்களை, கடவுள், அந்தணன், வெய்து, பிறந்த, சிறப்பு, தொலைவு, மக்கள், செய்து, இல்லாத், முதல்வி, இன்றியும், உயிர்க்கு, வயிற்று, வழங்கு, மாதவர், தம்மொடு, மாக்களொடு, யாண்டு, ஒருங்கு, வந்தேன், வருந்த, வாங்கு, செய்வோர், தொழில், திருவின், ஆண்டில், கைக்கொண்டு