சிதம்பரப்பாட்டியல்
உ
கடவுள் துணை
சிதம்பரப்பாட்டியல்
மூலமும் உரையும்
மூலமும் உரையும்
காப்பு.
நினைத்தவர்க்கு மன்றி நினைக்குமவர் தம்மை நினைப்பவர்க்கு முத்தி நிரம்பும்--அனைத்துமாம் ஆரணத்து முன்னவனு மம்பிகையும் பெற்றமத வாரணத்தின் பாத மலர். பாடலாஞ் செந்தமிழைப் பாடி யரனருளைக் கூடலா மின்பநலங் கொள்ளலாம்--பேடனாய் நாட்டியசீர்ப் பாவினங்க ணாடுஞ் சிதம்பரப் பாட்டியலைக் கற்றார் பயன். பாடு முறைமைக்கும் பன்னு தமிழ்தெளிந்து சூடும் பனுவற்குச் சொற்பொருள்க--ணாடுதற்கும் எண்ணிலராய் நின்றாரு மிந்நூல் வினவினரேற் கண்ணிலான் காட்சியது காண். பூமன்னு பொழில்வெண்ணை மெய்கண்டான் கச்சிப் புகழ்புனைதத் துவஞான ப்ரகாசமாய் வந்து பாமன்ன வுரையென்ன வவனருளா லவன்றன் பதம்பரவிச் சிதம்பரப்பாட் டியலெனப்பேர் வகுத்தான் மாமன்னு சிதம்பரபு ராணமுத னூலு மதுரையுலா வும்பகர்ந்தோன் மருவுகுல மைந்தன் தேமன்னு புராணகலை பல தெரிபு ராணத் திருமலைநா யகனருளின் றேசுபூண் டோனே. சிதம்பரப் பாட்டியலைச் செய்தான் றமிழாற் சிதம்பர புராணமுதற் செய்து--விதம்பெறுசீர் சேர்ந்த புராணத் திருமலைநா தன்றவத்தாற் சார்ந்தபரஞ் சோதியென்பான் றான். |
---------------------
1. உறுப்பியல்
1 |
பூமேவு திசைமுகனுஞ் செங்கணெடு மாலும் புத்தேளிர் கணங்களுமா தவத்தோரும் போற்றத் தேமேவு குழலுமையாள் கண்டுவப்ப மன்றிற் றிருநடஞ்செய் பேரொளியைச் சிந்தைதனில் வைத்துக் காமேவு கிளியென்னக் கொழுஞ்செழுந்தே னென்னக் கடலமுத மென்னமிளிர்கனித்துவர்வாய் மாதே பாமேவு தமிழ்ப்பொதியக் குறுமுனிவன் கூறும் பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவன் யானே. |
2 |
யாப்புவிதி யெழுத்தசைசீர் பந்தமடி தொடைபா வினமிவையிற் குறினெடிலொற் றுயிர்மெயுயி ராய்தம் கோப்புடைக்குற் றுகரங்குற் றிகரமையென காரக் குறுக்கமே வல்லினமெல் லினமொடிடை யினமே நீப்பரிய வுயிரளபொற் றளபசையி னெழுத்தாம் நெடில்குறில்க டனித்துமொற்றை யடுத்தும்வரி னேராம் சாய்ப்பரிய குறிலிணைகள் குறினெடில்க டனித்துந் தமதுடனொற் றடுத்தும்வரி னிரையசையு மாமே. |
'பூமேவு ...பகர்ந்திடுவென்யான்' என்றது வணக்கம்; "வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச். சிறப்பென்னும் பாயிரமாம்."
'யாப்பு விதி ....எழுத்தாம்' என்றது, யாபினதுவிதி எழுத்து முதல் எட்டாம் என்றவாறு. அவற்றுள்; எழுத்தாவன;
-குறிலெனவும், நெடிலெனவும் மெய்யெனவும் உயிர்மெய்யெனவும் உயிரெனவும் ஆய்தமெனவும்
குற்றியலுகரமெனவும் குற்றியலிகரமெனவும் ஐகாரக்குறுக்கமெனவும் ஔகாரக் குறுக்கமெனவும் வல்லினமெனவும்
மெல்லினமெனவும் இடையினமெனவும் உயிரளபெடையெனவும் ஒற்றளபெடையெனவும் வரும்.
இவற்றுள்;
குறிலாவன;-அ இ உ எ ஒ என ஐந்தாம்;
நெடிலாவன'-ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என ஏழாம்;
மெய்யாவன;-க ங ச ஞட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன எனப் பதினெட்டாம்.
உயிர் மெய்யாவன:-இவற்றின்மேல் உயிர் ஏறியவை;
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே கை, கொ, கோ, கௌ எனவரும். இப்படியே பதினெட்டொற்றின் மேலும்
பன்னீருயிரும் ஏற, இருநூற்றொருபத்தாறெழுத்தாம் உயிராவன;-
அ, ஆ,இ,ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ ஔ எனப் பன்னிரண்டாம்.
ஆய்தமாவன:--எஃகு கஃசு கஃடு கஃது கஃபு கஃறு என வரும்.
குற்றியலுகரமாவன:--
நாகு காசு காடு காது காபு காறு என நெடிற்கீழும்,
நாக்கு காச்சு காட்டு காத்து காப்பு காற்று என நெடிலொற்றின் கீழும்,
வரகு முரசு முருடு மருது துரபு கவறு எனக்குறிலிணைக்கீழும்,
அரக்கு பொரிச்சு தெருட்டு குருத்து பொருப்பு சிரற்று எனக்குறிலிணையொற்றின்கீழும்,
அசோகு பலாசு மலாடு கொடாது புதாபு விராறு எனக்குறினெடிற்கீழும்,
தமாக்கு தடாச்சு பனாட்டு கெடாத்து புதாப்பு விசாற்று எனக்குறினெடிலொற்றின் கீழும்,
கக்கு கச்சு கட்டு கத்து கப்பு கற்று எனக்குற்றொற்றின் கீழும் குற்றியலுகரம் வந்தவாறு கண்டுகொள்க.
இனி, குற்றியலிகரம் வருமாறு:--
காகியாது காசியாது காடியாது காதியாது காபியாது காறியாது எனவும் பிறவு மேற்கூறியவாறும்,
கேண்மியா சென்மியா எனவும் வரும். பிறவும் வருவன இவ்வாறொட்டிக்கொள்க.
இனி, ஐகாரக்குறுக்கமாவன:--
ஐப்பசி மைப்புறம்; மடையன் உடைவாள்; குவளை தவளை தினை பனை என மூவிடத்தும் முறையே குறுகிவந்தன.
இனி, ஔகாரக்குறுக்கமாவன:--
மௌனம் மௌலி கௌவை என முதற்கட் குறுகினவாறு. வல்லினமாயின:--
கசடதபற. மெல்லினமாவன:--ஙஞணநமன. இடையினமாவன:--
யரலவழள. இனி, உயிரளபெடையாவன:--
வாஅகை ஈஇகை ஊஉகம் ஏஎரி தைஇயல் ஓஒதை ஔஉவியம் என முதனிலையளபெடை வந்தவாறு.
பதாஅகை செவீஇயர் உலூஉகம் பரேஎரி வளைஇய விரோஒதம், மனௌஉகம் என இடைநிலையளபெடை
வந்தவாறு. குராஅ குரீஇ குழூஉ எனேஎ விளைஇ அரோஒ அநௌஉ என இறுதிநிலையளபெடை வந்தவாறு.
ஒற்றளபெடை வருமாறு:--மங்ங்கலம் மஞ்ஞ்சு மண்ண்ணு பந்ந்து அம்ம்பு மின்ன்னு
தெவ்வ்வர் வெய்ய்யர் செல்ல்க கொள்ள்கை எஃஃகு எனக் குறிற்கீழும், அரங்ங்கம் முரஞ்ஞ்சு முரண்ண்டு
பருந்ந்து அரும்ம்பு முரன்ன்று குரவ்வ்வை அரய்ய்யர் குரல்ல்கள் திரள்ள்கள் வரஃஃகு எனக்குறிலிணைக்கீழும்,
அளபெடை வந்தவாறு. பொன்ன் மடங்ங் கலந்த என இறுதிநிலையளபெடை வந்தவாறு.
இவற்றுக்குப் பிறசூத்திரம்:--
"யாப்பும், பாட்டுந் தூக்குந் தொடர்புஞ் செய்யுளை நோக்கிற் றென்பர் நுணங்கி யோரே." "எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத் தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு தட்டு நிற்றலிற் றளையே யத்தளை யடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு தொடுத்துமுத லாயிற் றொடையே யத்தொடை பாவி நடத்தலிற் பாவே பாவொத் தினமாய் நடத்த லினமெனப் படுமே" "பந்தந் தளையின் பாற்பெய ராகும்" "அஇஉஎ ஒக்குறி லைந்தே" "ஆஈ ஊஏ ஐஓ ஔநெடில்" "ககர முதல னகர விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப" "மெய்யுடம் புறுப்பொற் றிவைதா மொருபொருள் செய்யு மென்று செப்பினர் புலவர்" "உயிரீ ராறே மெய்ம்மூ வாறே யம்மூ வாறு முயிரோ டுயிர்ப்ப யிருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே" "அகர முதல ஔகார விறுவாய்ப் பன்னிரண் டெழுத்து முயிரென மொழிப" "குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிகைத்தே" "அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே" "நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை யொற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென் றேழ்குற் றுகரக் கிடனென மொழிப" "எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம் வழுவினின்று வரூஉம் வல்லா றூர்ந்தே" "வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்து முகர மரையாம் யகரமோ டியையி னிகரமுங் குறுகு மென்மனார் புலவர்" "யகரம் வரக்குற ளுத்திரி யிகரமு மசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய" "தற்சுட் டளபொழி யைம்மூ வழிய நையு மௌவு முதலற் றாகும்" "இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடி லளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே" "ஐஔ வென்னு மாயீ ரெழுத்திற் கிகர வுகர மிசைநிறை யாகும்" "ஙஞண நமன வயலள வாய்தம் அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே" "மாத்திரை வகையாற் றளைதம கெடாநிலை யாப்பழி யாமையென் றளபெடைவேண்டும்" " கண்ணிமை கைந்நொடி யளவே மாத்திரை நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே" " உன்னல் காலே யூன்ற லரையே முருக்கல் முக்கால் விடுத்த லொன்றே" "மூன்றுயி ரளயி*ரண் டாநெடி லொன்றே குறிலோ டையெளக் குறுக்க மொற்றள பரையொற் றிஉக் குறுக்க மாய்தங் கால்குறண் மஃகா னாய்த மாத்திரை" |
எனவரும். பிறவுமன்ன.
" நெடில்குறில்க டனித்துமொற்றை யடுத்தும்வரினேராம் சாய்ப்பரிய குறிலிணைகள் குறிநெடில்க டனித்துந், தமதுடனொற் றடுத்தும்வரி னிரை யசையுமாமே" |
என்றது நெட்டெழுத்துத் தனியே வரினும் குற்றெழுத்துத் தனியேவரினும், நெட்டெழுத்து ஒற்றடுத்துவரினும் குற்றெழுத்து ஒற்றடுத்துவரினும் நேரசையாம்; குறில் இணைந்து வரினும் குறினெடில் இணைந்துவரினும், குறிலிணை ஒற்றடுத்துவரினும் குறினெடில் ஒற்றடுத்துவாரினும் நிரையசையாம் என்றவாறு. ஆ - என நெட்டெழுத்துத் தனியே வந்த நேரசை. ழி - எனக்குற்றெழுத்துத் தனியேவந்த நேரசை. செல் - எனக் குற்றெழுத்து ஒற்றடுத்து வந்த நேரிசை. போர் - என நெட்டெழுத்து ஒற்றடுத்து வந்த நேரசை. சின - எனக் குறில் இரண்டிணைந்து வந்த நிரையசை. ததை - எனக்குறினெடில் இணைந்துவந்த நிரையசை. எழில் -எனக்குறிலிணை ஒற்றடுத்துவந்த நிரையசை. சுலாம் - எனக்குறினெடில் ஒற்றடுத்து வந்த நிரையசை. இவற்றுக்கு உதாரணம்:--
"செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையு மதியம்போன் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே." |
எனவரும். இதில் நேர்நிரை கண்டுகொள்க. "அசையும்"என்ற உம்மையால், நேர்பசை நிரைபசை என்னும் இரண்டுங்கூட்டி அசை நான்கென்பாரு முளர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிதம்பரப்பாட்டியல், Chidambarapattiyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்