நற்றிணை - 140. குறிஞ்சி
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி, புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப் பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை |
5 |
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து, பந்தொடு பெயரும் பரிவிலாட்டி அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து பின்னிலை முனியல்மா நெஞ்சே!- என்னதூஉம் அருந் துயர் அவலம் தீர்க்கும் |
10 |
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. |
எனது பெருமையுற்ற நெஞ்சமே! நீரை முகந்து கொள்ளுதலையுடைய கரிய மேகம் மேல்பாலுள்ள மலையிலே எழுந்து மழை பெய்து தழையச் செய்த; சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் குறையோடு; பலவாய பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகு பெற வாரி; அச்சாந்தம் காய்ந்தவழி உதிர்க்கப்பட்ட துகள் பொருந்திய ஐவகையாக வகுக்கப்பட்ட கூந்தலையும பெரிய கண்ணையுமுடைய தோழியர் மகிழுமாறு; தன் தந்தையின் நெடிய தேர் இயங்குகின்ற நிலவு போன்ற வெளிய மணல் பரவிய முன்றிலின்கண்; விளையாடும் வண்ணம் பந்தோடு செல்லுகின்ற நம்பால் அன்பில்லாத இளமகள்; நம்மை அருள் செய்தாலும் அங்ஙனம் அருள்செய்யாளாய் அகன்று போனாலும்; நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள்; யான் அடைந்துடைய காமநோயொடு கலந்த துன்பமாகிய அவலத்தை ஒழிக்குமருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகள் ஒருத்தியேயன்றி வேறொன்று சிறிதளவேனும மருந்தாகும் தன்மையதில்லைகாண்!
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது. - பூதங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 138 | 139 | 140 | 141 | 142 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, பொருந்திய, அன்பில்லாத, இளமகள், யான், மணல், துகள், தேர், நிலவு, வாரி