சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
நல்லியக்கோடனது புகழும் பண்பும்
டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின் மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித் துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட் |
265 |
டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல்லிசை நிலைஇய பண்பி நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே. |
குறிஞ்சிக் கோமான் - குறிஞ்சிக் கோமான் என்று சிறப்பிக்கப்படுவதால் நல்லியக்கோடன் மலைநாட்டுத் தலைவன் என்பது புலனைகிறது. மனிதப் பெண் - மகளிர் இடுப்புறுப்பு துளங்கும். அது துளங்கும் நொடிப்பிற்கு ஏற்ப அதன்மேல் துகிலாடை. அம்மகளிர் குளித்தபின் தம் கூந்தலை அகில் கட்டை புகையும் நறுமணப் புகையில் உலர்த்துவர். மயில் பெண் - மயிலானது மகளிரின் துகிலாடை உடுத்திய இடையைப்போலத் தன் தோகையை விரித்து ஆடும். அவர்களின் கூந்தலுக்குள் அகில் புகை நுழைவது போல் மஞ்சு எனப்படும் வெண்மேகக் குருட்டு மாசிகள் மயில் விரித்தாடும் தோகைக்குள் நுழையும். மலைப்பெண் - அவனது மலையாகிய பெண் மூங்கில் காட்டைத் தன் இடைத்துகிலாக உடுத்தியிருப்பாள். அம் மூங்கில் காடு காற்றில் அசைந்தாடும்போது மழை பொழியும் மேகத்துணி அதில் அசைந்தாடும். இந்த மூன்று ஆட்டங்களும் ஒத்திசைக் கூட்டித் தருவது போல் இடியிசை முழக்கம் இருக்கும். அது அவனது மலைமுகட்டில் மோதி எதிரொலித்து இறந்துபோகும்.
குறிஞ்சிக் கோமானாகிய நல்லியக்கோடன் கொய்துக் கொண்டுவந்த தளிர்மாலையைத் தன் அடையாளப் பூவாகத் தலையில் அணிந்திருப்பான். (அந்தத் தளிர்மாலையை மருக்கொழுந்து மாலை என்றோ, மாந்தளிர் மாலை என்றோ கருதிப் பார்க்கலாம். ) ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில் செல்லுபடியாகும் புகழிசை நாளடைவில் மறைந்து போகும். நல்லியக்கோடனின் புகழிசை\யோ என்றும் நிலைபெற்றிருக்கும். காரணம், அது அவனது பண்பினால் வந்தது. கொடை நல்கி வாங்கியது அன்று. அவனிடம் நீங்கள் விரும்பிச் சென்றால் உங்களது வாழ்க்கையானது வளம் பெறத்தக்க வகையில் பரிசில் பெறுவீர்கள். போகும்போது நடந்து செல்லும் நீங்கள் வரும்போது தேரில் வருவீர்கள்.
சிறுபாணாற்றுப்படை முற்றும்.
சிறுபாணாற்றுப்படை நூலின் முடிலில் இரண்டு வெண்பாப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் காலத்தவை. சுமார் 200 ஆண்டுகள் பிற்பட்டவை. இரண்டும் அகப்பொருள் சார்ந்த பாடல்கள். பெண் ஒருத்தி நல்லியக்கோடன் மீது காதல் கொண்டு சொல்வதாக அமைந்துள்ளன.
தனிப் பாடல்கள்
அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய் தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண் இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன் செம்மல் சிலை பொருத தோள். |
1 |
நேர்த்தியான அணிகலன்களைப் பூண்ட பெண்மணிகளை வருத்தும் அழகு கொண்டு காமநோய் உண்டாக்கும் ஆண்தெய்வமாக எயிற்பட்டின நாடன் திகழ்கிறான். மற்று, அவனே அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறான். அவர்களை வருத்தியவை அவனது செம்மாந்த தோள். சிலை (வில்) மாட்டிக்கொண்டிருக்கும் தோள். மணி பதித்த பூண் அணிந்த தோள். ‘இம்’ என்று அருவி முழங்கும் நாடன் அவன்.
நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப் படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன் சூடிய கண்ணி சுடும். |
2 |
சந்தனம் பூசிய அவனது மார்பு அவளது நெஞ்சத்தைக் குளிரவைத்தது. படமெடுத்தாடும் பாம்பு போன்ற அவளது அல்குல் இடையை மறைத்துக்கொண்டிருக்கும் கொடியாடையை நழுவும்படிச் செய்கிறான். அவன் தலையில் சூடிய கண்ணிமாலை அவளைச் சுட்டெரிக்கிறது. அவன்மீது அவளுக்குக் காமம்.
*-*-*-*-*
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, அவனது, பெண், தோள், நல்லியக்கோடன், பத்துப்பாட்டு, இலக்கியங்கள், குறிஞ்சிக், நாடன், பாடல்கள், பூண், மற்று, எயிற்பட்டின, சந்தனம், சூடிய, அவளது, பாம்பு, கொண்டு, அவன், சிலை, தலையில், துகிலாடை, துளங்கும், கோமான், சங்க, அகில், மயில், என்றோ, மாலை, மூங்கில், போல், நீங்கள்