குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு
னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற் றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் |
245 |
மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும் வலைப்படு மஞ்சையி னலஞ்செலச் சாஅய் |
250 |
நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு |
அவன் அழவில்லை இவள் அழுகிறாள் - அவன் இளமை மாறாதவன், வளமை குறையாதவன், தன் தகைமையிலிருந்து நழுவாதவன், சும்மாக் கிடக்கும் ஊரில் இப்படி மாய நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதனை நன்கு உணர்ந்தவன். இந்நிகழ்வுகளை வெறுக்காமல் இவளைப் போற்றுவான். மலரை அடிக்கும் மழைநீர் போன்றவை அவை என்று எண்ணிக்கொள்வான். அவன் அப்படி, இவள் எப்படி? இவளது கண்ணில் ஈரம், பெருகிய மதமதப்பு. அது மழையாக மாறியது. அவள் மார்பகத்தில் அரிக்கும் பனியாகிப் பொழிந்தது. வலையில் பட்ட மயில்போல் மேனியழகு குன்றி வதங்குகிறாள். நினைக்கும் போதெல்லாம் திரும்மத் திரும்ப அழுகிறாள்.
இரவில் தலைவன் வரும் வழியின் அருமை
லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும் புகற்கோட் டாமான் புகல்வியுங் களிரும் வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத் துருமுஞ் சூரு மிரைதே ரரவமு |
255 |
மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங் கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு |
இவள் கலங்குவதெல்லால் அவன் வரும் வழியில் இடர்ப்பாடுகள் உள்ளனவே என்பதுதான். குகையில் பதுங்கும் புலி, சிங்கம், கரடி, முட்டித் தள்ளும் கொம்புகளையுடைய காட்டாட்டுக் கடா, எதிர்த்துப் போரிடும் ஆண்யானை போன்றவற்றைத் தாக்கி அழிக்கும் வெஞ்சினம் அவனுக்கு இருந்தது. என்றாலும் இடி, பேய், இரை தேடும் மலைப்பாம்பு ஆகியவற்றிற்கு அவன் என் செய்வான்? நீர்க்குழிகள், நீர்ச்சுழிகள், அவற்றில் இரைதேடும் முதலை, இடங்கர், கராம் முதலான முதலையினத்துக்கு அவன் என்ன செய்வான்? – என்று கலங்குகிறாள்.
நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும் பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும் வழுவின் வழாஅ விழுமமவர் |
260 |
குழுமலை விடரக முடையவா லெனவே. |
அவனுக்கு நேரக்கூடிய மேலும் பல இடர்ப்பாடுகளை எண்ணி இவள் கலங்குகிறாள். வழிப்பறி செய்வோர் பதுங்கும் இடம், வழுக்கு நிலம், கால் போன போக்கில் சென்று வழியின்றி முட்டிக்கொள்ளும் இடங்கள், பேய், மலைப்பாம்பு, போன்றவை உளப்படப் பிறவற்றால் நேரும் வழித்துன்பங்களும் மலை பிளந்திருக்கும் பாதையில் உண்டாயிற்றே என்று கலங்குகிறாள். எனவே இவளை அவனுக்கு ஊரறிய திருமணம் செய்துவைத்துச் சேர்த்துவைக்க வேண்டும் - என்று தாயரிடம் தோழி அறத்தொடு நிற்கிறாள்.
குறிஞ்சிப்பாட்டு முற்றும்.
தனிப் பாடல்கள்
நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்; என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று அருவி கொழிக்கும் அணி மலை நாடன் தெரியுங்கால், தீயது இலன். |
1 |
அன்னையே! நீ இவளை தினைப்புனம் காவலுக்கு அனுப்பிவைத்தாயே! அதுவும் குற்றம் இல்லை. வளையல் வரிசையை உடைய இவளும் பண்புள்ளவள். என் குற்றமும் எனக்குத் தெரியவில்லை. எண்ணிப் பார்த்தால் அவனும் தீய செயல் புரியவில்லை. மேலும் அவன் மலையிலிருந்து விழும் அருவிகூடப் பொன்னைக் கொட்டும் அளவுக்கு அவன் செல்வவளம் மிக்கவன். எனவே திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்கிறாள் தோழி.
ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப் போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின் குறையாக் குறிஞ்சிக் குணம். |
2 |
வடமொழி வேதத்தில் கூறப்பட்டுள்ள 8 வகையானதிருமண முறைகளில் இது ஐந்தாவதாகக் கூறப்பட்டுள்ள முறை. அந்த 8 திருமணங்கள் இன்பம் நுகரச் செய்துவைக்கப்பட்டவை. இந்தக் குறிஞ்சிக் குணத் திருமணமோ அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நுகர்வதற்காக இயல்பாக ஒன்று கூடி நிகழ்ந்தது. எனவே அந்த ஐந்தாவதை விட இது மேலானது.
*-*-*-*-*
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு, அவன், இலக்கியங்கள், குறிஞ்சிப்பாட்டு, இவள், குற்றம், கலங்குகிறாள், பத்துப்பாட்டு, அவனுக்கு, இல்லை, தோழி, குறிஞ்சிக், அந்த, இன்பம், கூறப்பட்டுள்ள, திருமணம், பொருள், அறம், மலைப்பாம்பு, போன்றவை, அழுகிறாள், மிலனே, சங்க, வரும், பதுங்கும், மேலும், செய்வான், பேய், இவளை