குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு
மாலங் குடைய மலிவன மறுகி வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் |
தழை உடுத்து, மாலை சூடி, அசோகின் நிழலில் இருத்தல்
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின் வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக |
100 |
கூறப்பட்ட (99) வகைவகையான பூக்களைப் பாறையில் குவித்தோம். மழைநீர் பெய்து கழுவிய பாறைமேல் குவித்தோம். அந்தப் பூக்களின் மேல் எங்களுகுக் கொள்ளை ஆசை [மால்]. தினைப்புனத்தில் பறவைகளின் ஒலி. நாங்களும் அவ்வப்போது பெரிய உயிர்ப்புக்குரல் கொடுத்துப் பறவைகளை ஓட்டினோம். எங்கள் குரலொலி மலையில் சிலம்பி எதிரொலித்தது.
கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப் பைவரி யல்குற் கொய்தழை தைஇப் பல்வே றுருவின் வனப்பமை கோதையெம் மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் |
105 |
தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக |
தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்தோம். செடிகொடிகளைத் தளிரோடு பறித்துத் தழையாடையாக்கி இடுப்பாடை மறைய உடுத்திக் கொண்டோம். குவித்த பூக்களால் பல்வேறு வகையான மாலைகள் தொடுத்து அணிந்துகொண்டோம். பின்னிய கூந்தலும், உச்சிக் கொண்டையும் அழகு பெறுமாறு பூக்களைச் சூடிக்கொண்டோம். அங்கே, அசோகமரம் எரியும் தீயைப்போல் பூத்திருந்தது. அப்பூக்கள் உதிர்ந்து சிவப்புக் கம்பளம் விரிந்தது போல் இருந்த அதன் மரத்தடியில் நிழலுக்காகத் தங்கியிருந்தோம்.
தலைவனது வருகை
வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த் தண்ணறுந் தகரங் கமழ மண்ணி யீரம் புலர விரலுளர்ப் பவிழாக் காழகி லம்புகை கொளீஇ யாழிசை |
110 |
யணிமிகு வரமிஞி றார்ப்பத் தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும் வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய தண்ணறுத் தொடையல் வெண்போழ்க் கண்ணி |
115 |
நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப் பைங்காற் பித்தகத் தாயித ழலரி யத்தொடை யொருகாழ் வளைஇச் செந்தீ யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ யந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்த |
120 |
மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத் தொன்றுபடு நறுத்தார் பூணொடு பொலியச் செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின் வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி |
125 |
ஒருவன் வந்தவன் - அவன் தலைமயிர் சுருண்டிருந்தது. எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்தது. வயிரம் பாய்ந்த தகரக் கட்டையிலிருந்து வடித்தெடுத்த செண்டை மணம் கமழும்படி தடவியிருந்தான். மழையால் ஈரமாயிருந்த தலைமயிரை விரல்களை விட்டுப் பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தான். புகையும் அகில்கட்டையும் ஈரத்தைப் புலர்த்தின. அதன் மணத்தில் மயங்கிப் பொறிவண்டுகள் ஒலித்துக்கொண்டு அவனது குஞ்சியைச் சூழ்ந்து சுழன்று கொண்டிருந்தன. மணக்கும் மலர்க்கண்ணித் தொடையல் அவன் சென்னியை அழகுறுத்திக் கொண்டிருந்தது. தொடையலில் இருந்த பூக்கள் மலையிலும், நிலத்திலும் பூத்தவை. சினையிலும், சுனையிலும் பூத்தவை. ஆராய்ந்து பொறுக்கியெடுத்த பல்வேறு வண்ணம் கொண்டவை. அவன் மார்பில் வைரமாலையுடன் பூவிதழ்களாலான பித்திகைத் தொடையலும் தொங்கியது. ஒருபக்கம் காதோரத்தில் தலையொப்பனையாக அசோகப்பூவைச் செருகியிருந்தான். மலைக்குவடுபோல் நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சு தளிர் போன்று தளதளப்பாகவும் இருந்தது. மார்பில் சந்தனம் பூசியிருந்தான். மார்பின் அகலம் வலிமையும் விம்மித ஏற்றத்தன்மையும் கொண்டு மலர்ந்திருந்தது. அகலத்தில் பூண்மாலையும், பூமாலையும் பொலிந்தன. செம்மாந்து உயர்ந்த தோளோடு சேர்ந்த கைகளில் எய்யும் அம்போடு வரிந்துள்ள வில் இருந்தது. உடுத்தியிருந்த ஆடை நழுவாமல் இருக்க வேலைப்பாடுகள் கொண்ட கச்சை அணிந்திருந்தான்.
யியலணிப் பொலிந்த வீகை வான்கழ றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ |
தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதல்
முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் பகைபுறங்க் கண்ட பல்வே லிளைஞரி னுரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு |
130 |
முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி திளையாக் கண்ண வளைகுபு நெரிதர |
அவன் ஈகைக்கழலில் வாகை நடை போட்டு நடந்துவதான். அவனது கால்களில் கழல். அது அவனது உயர்ந்த கொடைத்திறனின் அடையாளச் சின்னம். நடந்து வரும்போது அதில் ஒரு பொலிவு. போரில் பகைவரைப் பாழாக்கும் திறப்பகட்டும் அதில் தென்பட்டது. அவனைச் சூழ்ந்து இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். பகைவரைப் புறங்கண்ட வேலுடன் அவர்கள் காணப்பட்டனர். அவன் இப்போது வேட்டைக்கு வந்துகொண்டிருந்தான். வேட்டை வாய்க்காததால் மகிழ்ச்சியில்லாத கண்களோடு வேட்டைநாய்கள் பல் தெரிய அவனைச் சூழ்ந்து வந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு, அவன், இலக்கியங்கள், குறிஞ்சிப்பாட்டு, அவனது, சூழ்ந்து, பத்துப்பாட்டு, பூத்தவை, அதில், அவனைச், பகைவரைப், உயர்ந்த, மார்பில், கொண்ட, குவித்தோம், சங்க, பல்வே, கட்டி, இருந்த, பல்வேறு, வண்ண