நற்றிணை - 34. குறிஞ்சி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தள் குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி, பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் அருவி இன் இயத்து ஆடும் நாடன் |
5 |
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து, கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி, வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்! கடவுள் ஆயினும் ஆக, |
10 |
மடவை மன்ற, வாழிய முருகே! |
முருகவேளே ! நீ நெடுங் காலம் இம் மடமையோடு வாழ்வாயாக !; கடவுட்டன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விட்டிருந்த குவளை மலரைப் பறித்து, அவற்றோடு; குருதிபோன்ற காந்தளின் ஒள்ளிய மலர்களை வடிவு விளங்கக் கட்டிச் சூடி; பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவுபெற அருவியின் ஒலியை இனிய வாச்சிய முட்டுக்களாகக்கொண்டு சூரரமகள் ஆடாநிற்கும் நாட்டையுடைய தலைவனது; மார்பைப் புணர்ந்ததன் காரணமாக அம் மார்பு தருதலாலே வந்த கருதுதலிற் குறைபாடிலாத நீங்குதற்கரிய இக்காம நோயானது; நின்னால் வருத்திக் கொடுக்கப்பட்ட தன்றென்பதை நன்றாக நீ அறிந்து வைத்தும்; தலைநிமிர்ந்து கார் காலத்து மலர்கின்ற நறிய கடப்ப மாலையைச் சூடிப் படிமத்தான் வேண்டுகையாலே; வெறிக்களத்துப் பலிபெற வந்தோய் நீ கடவுட் பகுதியாருள் வைத்தெண்ணுதற் குரியையாயினுமாகுக; திண்ணமாக நீ அறியாமையுடையை காண் !
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது. - பிரமசாரி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சூடி, வெறி, வந்தோய், கார், வந்த, குவளை, மார்பு, கடவுட்