நற்றிணை - 174. பாலை
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, |
5 |
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை!' என்றி- தோழி!- அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் |
10 |
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே? |
தோழீ! ஈந்தினது திரட்சியையுடைய முற்றிய குலைபோன்ற மக்களியங்காத நெறியின்கண்ணமைந்த தாளிப்பனையினது; குலைகளையுடைய நெடிய மடலிலிருந்து ஆண்பறவை தன் பெண்பறவையைக் கூவின்; அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும்படி முழங்காநிற்கும்; கோடைக்காற்று வீசுகின்ற அரிய நெறியிலே சென்ற காதலர்; மீண்டு வந்து இனிதாக நின்னை முயங்கி நீங்காது நீங்களிருவரும் ஓரிடத்தே உறையுங்காலையும்; நீ பெரிதும் நெஞ்சழிந்து மடந்தையே ஏன் வருந்துகின்றனை? என்று கூறாநின்றனை; அவ்வுண்மையை அறியாதவர்க்கு அத்தன்மையாகவேதான் காணப்படும்; நம் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டையுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை மடுப்பானாயினான், இங்ஙனம் பிறள் ஒருத்திபால் அன்பு வைத்தால் என்மாட்டு அவனுக்கு எவ்வண்ணம் அன்பு தோன்றும்?; அன்பென்பது இல்லாதவழி என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் யான் அவனைத் தழுவிக் கொள்வதனாலும் யாது பயன்படும்?;
வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 172 | 173 | 174 | 175 | 176 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்பு, வந்து, தழுவிக், கொள்வதனாலும், தோழி, முயங்கி, சென்ற, காதலர், புலி