நற்றிணை - 172. நெய்தல்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, 'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப; நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று, அன்னை கூறினள், புன்னையது நலனே- |
5 |
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே; விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் துறை கெழு கொண்க!- நீ நல்கின், இறைபடு நீழல் பிறவுமார் உளவே. |
10 |
புதியராய் வந்த பாணர் பாடுகின்ற இளைதாய (மெல்லிய) இசைப்பாட்டுப் போல வெளிய
வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும்; விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே!;
யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடு சென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி
மறந்தொழிந்த புன்னை (யினது முற்றிய) விதையானது வேரூன்றி முளைத்து முளைதோன்றுதலானே;
மீண்டும் அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக வார்த்து இனிமையொடு
வளர்க்கு நாளில்; எம் அன்னை எம்மை நோக்கி "நீயிர் வளர்த்துவரும் புன்னையானது
நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன் பிறந்த தங்கையாந் தகுதியுடையது கண்டீர்"
என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எந் தங்கையாகிய இப் புன்னையின்
எதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மவோ?
நீ இவளை அணைந்து நல்குவையோ? நல்குவையாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவும்
ஈங்குள்ளனகாண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 170 | 171 | 172 | 173 | 174 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்த, யாம், நோக்கி, பாணர், நும்மொடு, என்று, அன்னை, நெய்