தொல்காப்பியம் - உருபியல்
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் அப் பால் ஆறன் நிலைமொழி முன்னர் வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை. | 1 |
பல்லவை நுதலிய அகர இறு பெயர் வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. | 2 |
யா என் வினாவும் ஆயியல் திரியாது. | 3 |
சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே. | 4 |
சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. | 5 |
யா என் வினாவின் ஐ என் இறுதியும் ஆயியல் திரியாது என்மனார் புலவர் ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே. | 6 |
நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே. | 7 |
ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை. | 8 |
அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு அத்தொடும் சிவணும் ஏழன் உருபே. | 9 |
ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை. | 10 |
சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும் கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே. | 11 |
ஏனை வகரம் இன்னொடு சிவணும். | 12 |
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை. | 13 |
இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. | 14 |
நூம் என் இறுதி இயற்கை ஆகும். | 15 |
தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாம் என் இறுதியும் அதன் ஓரன்ன ஆ எ ஆகும் யாம் என் இறுதி ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும் ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும். | 16 |
எல்லாம் என்னும் இறுதி முன்னர் வற்று என் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையும் இறுதியான. | 17 |
உயர்திணை ஆயின் நம் இடை வருமே. | 18 |
எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும் ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி உம்மை நிலையும் இறுதியான தம் இடை வரூஉம் படர்க்கை மேன நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. | 19 |
தான் யான் என்னும் ஆயீர் இறுதியும் மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே. | 20 |
அழனே புழனே ஆயிரு மொழிக்கும் அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்தது என்ப உணருமோரே. | 21 |
அன் என் சாரியை ஏழன் இறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப. | 22 |
குற்றியலுகரத்து இறுதி முன்னர் முற்றத் தோன்றும் இன் என் சாரியை | . 23 |
நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும் அப் பால் மொழிகள் அல் வழியான. | 24 |
அவைதாம், இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. | 25 |
எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். | 26 |
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும் சொல்லும் காலை ஆன் இடை வரினும் மானம் இல்லை அஃது என் கிளவி ஆவயின் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. | 27 |
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும் ஆய்தம் கெடுதல் ஆவயினான. | 28 |
ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர் சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும் ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே. | 29 |
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் சொல்லிய அல்ல ஏனைய எல்லாம் தேரும் காலை உருபொடு சிவணி சாரியை நிலையும் கடப்பாடு இலவே. | 30 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருபியல் - எழுத்ததிகாரம் - தொல்காப்பியம், Tholkappiam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்