தொல்காப்பியம் - உரியியல்
உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி பெயரினும் வினையினும் மெய் தடுமாறி ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் எச் சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல். |
1 |
வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. |
2 |
அவைதாம், உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப. |
3 |
உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும். |
4 |
குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே. |
5 |
சல்லல் இன்னல் இன்னாமையே. |
6 |
மல்லல் வளனே ஏ பெற்று ஆகும். |
7 |
உகப்பே உயர்தல் உவப்பே உவகை. |
8 |
பயப்பே பயன் ஆம். |
9 |
பசப்பு நிறன் ஆகும். |
10 |
இயைபே புணர்ச்சி. |
11 |
இசைப்பு இசை ஆகும். |
12 |
அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. |
13 |
மழவும் குழவும் இளமைப் பொருள. |
14 |
சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே. |
15 |
கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். |
16 |
கதழ்வும் துனைவும் விரைவின் பொருள. |
17 |
அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும். |
18 |
வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள. |
19 |
தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும். |
20 |
கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. |
21 |
தடவும் கயவும் நளியும் பெருமை. |
22 |
அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும். |
23 |
கய என் கிளவி மென்மையும் செய்யும். |
24 |
நளி என் கிளவி செறிவும் ஆகும். |
25 |
பழுது பயம் இன்றே. |
26 |
சாயல் மென்மை. |
27 |
முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே. |
28 |
வம்பு நிலை இன்மை. |
29 |
மாதர் காதல். |
30 |
நம்பும் மேவும் நசை ஆகும்மே. |
31 |
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். |
32 |
புலம்பே தனிமை. |
33 |
துவன்று நிறைவு ஆகும். |
34 |
முரஞ்சல் முதிர்வே. |
35 |
வெம்மை வேண்டல். |
36 |
பொற்பே பொலிவு. |
37 |
வறிது சிறிது ஆகும். |
38 |
எற்றம் நினைவும் துணிவும் ஆகும். |
39 |
பிணையும் பேணும் பெட்பின் பொருள. |
40 |
பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும். |
41 |
படரே உள்ளல் செலவும் ஆகும். |
42 |
பையுளும் சிறுமையும் நோயின் பொருள. |
43 |
எய்யாமையே அறியாமையே. |
44 |
நன்று பெரிது ஆகும். |
45 |
தாவே வலியும் வருத்தமும் ஆகும் |
46 |
தெவுக் கொளல் பொருட்டே. |
47 |
தெவ்வுப் பகை ஆகும். |
48 |
விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே. |
49 |
அவற்றுள், விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். |
50 |
கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள. |
51 |
அவற்றுள், அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். |
52 |
கழும் என் கிளவி மயக்கம் செய்யும். |
53 |
செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். |
54 |
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும். |
55 |
கருவி தொகுதி. |
56 |
கம நிறைந்து இயலும். |
57 |
அரியே ஐம்மை. |
58 |
கவவு அகத்திடுமே. |
59 |
துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப் பொருட் கிளவி என்மனார் புலவர். |
60 |
அவற்றுள், இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும். |
61 |
இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை. |
62 |
ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள. |
63 |
கவர்வு விருப்பு ஆகும். |
64 |
சேரே திரட்சி. |
65 |
வியல் என் கிளவி அகலப் பொருட்டே. |
66 |
பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள. |
67 |
வய வலி ஆகும். |
68 |
வாள் ஒளி ஆகும். |
69 |
துய என் கிளவி அறிவின் திரிபே. |
70 |
உயாவே உயங்கல். |
71 |
உசாவே சூழ்ச்சி. |
72 |
வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம். |
73 |
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள. |
74 |
நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப. |
75 |
நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. |
76 |
புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே. |
77 |
நனவே களனும் அகலமும் செய்யும். |
78 |
மதவே மடனும் வலியும் ஆகும். |
79 |
மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. |
80 |
புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி. |
81 |
அமர்தல் மேவல். |
82 |
யாணுக் கவின் ஆம். |
83 |
பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. |
84 |
கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. |
85 |
ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. |
86 |
ஐ வியப்பு ஆகும். |
87 |
முனைவு முனிவு ஆகும். |
88 |
வையே கூர்மை. |
89 |
எறுழ் வலி ஆகும். |
90 |
மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் தம்தம் மரபின் தோன்றும்மன் பொருளே. |
91 |
கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே. |
92 |
பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே |
93 |
பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின். |
94 |
உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. |
95 |
மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. |
96 |
எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே |
97 |
அன்ன பிறவும் கிளந்த அல்ல பல் முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்து என அறியும் வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான் பாங்குற உணர்தல் என்மனார் புலவர். |
98 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உரியியல் - சொல்லதிகாரம் - தொல்காப்பியம், Tholkappiam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்