தொல்காப்பியம் - நூல் மரபு
எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. | 1 |
அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. | 2 |
அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. | 3 |
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. | 4 |
மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. | 5 |
நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். | 6 |
கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. | 7 |
ஔகார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. | 8 |
னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. | 9 |
மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. | 10 |
மெய்யின் அளபே அரை என மொழிப. | 11 |
அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. | 12 |
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. | 13 |
உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. | 14 |
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். | 15 |
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. | 16 |
புள்ளி இல்லா எல்லா மெய்யும் உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும் ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும் ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. | 17 |
மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. | 18 |
வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. | 19 |
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. | 20 |
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. | 21 |
அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின் மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. | 22 |
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் க ச ப என்னும் மூ எழுத்து உரிய. | 23 |
அவற்றுள், ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். | 24 |
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. | 25 |
அவற்றுள், ண னஃகான் முன்னர் க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. | 26 |
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. | 27 |
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். | 28 |
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். | 29 |
மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. | 30 |
அ இ உ அம் மூன்றும் சுட்டு. | 31 |
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. | 32 |
அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் உள என மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். | 33 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நூல் மரபு - எழுத்ததிகாரம் - தொல்காப்பியம், Tholkappiam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்