நற்றிணை - 344. குறிஞ்சி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் காவல் கண்ணினம்ஆயின்- ஆயிழை!- நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை |
5 |
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப, செல்வன் செல்லும்கொல் தானே- உயர் வரைப் பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, |
10 |
செந் தினை உணங்கல் தொகுக்கும், இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே? |
ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்!; அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ?
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 342 | 343 | 344 | 345 | 346 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, நெடிய, மலையிலுள்ள, தினை, தொலைத்து, காவல், புலி, இரும்