முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » வெற்றி வீரர் வில்லியம் (கி.பி.1027 - கி.பி.1087)
வெற்றி வீரர் வில்லியம் (கி.பி.1027 - கி.பி.1087)
1066 ஆம் ஆண்டில் நார்மண்டி கோமகனாக வில்லியம் இங்கிலாந்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஒரு சில ஆயிரம் வீரர்களுடன் ஆங்கிலேய கால்வாயைக் கடந்தார். அவருடைய வீர முயற்சி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் மீது நடைபெற்ற படையெடுப்பு வெற்றியடைந்தது இதுவே இறுதி முறையாம். இந்த நார்மன் வெற்றி வில்லியத்திற்கும் அவருடைய சந்ததியாருக்கும் இங்கிலாந்தின் வரலாற்றையே பெரிதும் மாற்றியது. அவ்விளைவுகளைப் பற்றி அப்போது வில்லியமே உணர்ந்திருக்க மாட்டார்.
1027 இல் வில்லியம் பிரான்சில் நார்கண்டியிலுள்ள பலாய்ஸ் எனும் நகரில் பிறந்தார். அவர் நார்மண்டி கோமகனாக முதலாம் ராபர்டின் ஒரே மகன். இவர் திருமணத்தின் மூலமாக பிறந்தவரல்லர். ஜெரூசலத்திற்கு திருப்பயணம் சென்று திரும்பும்போது ராபர்ட் 1035 இல் இறந்தார். அவர் செல்வதற்கு முன்னே வில்லியத்தை தமது வாரிசாக நியமித்திருந்தார். இவ்வாறாக வில்லியம் தமது 8 ஆம் வயதில் நார்மண்டி கோமகனானார்.
வில்லியம் பதவியேற்ற போது, செல்வமும் ஆற்றலும் பெற்றவராக இல்லை. அவருடைய நிலைமை உறுதியில்லாதிருந்தது. அப்போது அவர் சிறுவனாக இருந்தார். அவரது அதிகாரத்திற்குட்பட்ட நிலமானியப் பிரபுக்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள் மீது பற்றுக் கொண்டிருந்ததைவிட, தம் அதிகாரத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருந்ததில் வியப்பில்லை. அதன் விளைவாக நாட்டில் குழப்ப நிலை நிலவியது. அப்போது வில்லியத்தின் பாதுகாவலர் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். அவருடைய ஆசிரியரும் கொலையுண்டார். பெயரளவில் தம் மேலாண்மையாளராக இருந்த பிரெஞ்சு மன்னர் முதலாம் ஹென்றியின் உதவியினால், வில்லியம் அந்த இளம் வயதில் உயிர் பிழைத்தார்.
1042இல் இளைஞரான வில்லியம் வீரர் பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் அரசியல் நிகழ்ச்சிகளில் நேராகப் பங்கு பெற்றார். நார்மண்டியின் நிலமானியப் பிரபுக்களுக்கெதிராக நீண்ட நாள் போர் புரிந்தார். இறுதியில் தமது ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றார். (அவர் திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்தவராதலின் அது அவரது அரசியல் வாழ்க்கைக்குப் பெருந்தடையாக இருந்தது. அவருடைய எதிரிகள் அவரைக் "கனவில் பிறந்தவன்" என்றே குறிப்பிட்டனர்). 1063இல் அவர் அணமையிலுள்ள மேய்ன் மாநிலத்தைக் கைப்பற்றினார். 1064இல் அவர் அடுத்துள்ள பிரிட்டனி மாநிலத்தின் மேலாண்மையாளராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
1042 முதல் 1066 வரை புனிதர் எனப்படும் எட்வர்டு மன்னர் ஆண்டு வந்தார். எட்வர்டு குழந்தைகள் இல்லாமையினால், ஆங்கிலேய அரியணைக்கு உரிமை கொண்டாடப் பல முயற்சிகள் நடைபெற்றன. இரத்த உறவுப்படி எட்வர்டுக்குப் பின் பதவிக்கு வருவதற்கு வில்லியத்தின் தாத்தாவினுடைய சகோதரி ஆயினும், வில்லியத்தின் திறமையைக் கண்ட எட்வர்டு வில்லியத்தை தமது வாரிசாக ஏற்றுக் கொண்டார்.
1064 இல் ஆங்கிலேயப் பிரபுக்களுள் ஆற்றல் மிக்க பிரபுவும் எட்வர்டின் நெருங்கிய தோழரும் மைத்துனருமான ஹெரால்டு காட்வின் வில்லியத்தின் கையில் அகப்பட்டார். வில்லியம் அவரை நன்றாக நடத்தினார். ஆயினும் ஆங்கிலேய அரியணைக்கு தாமே உரிமை உள்ளவர் என்பதை ஹெரால்டு ஏற்று வாக்குறுதி அளிக்கும் வரை வில்லியம் அவரை காவலில் வைத்திருந்தார். இவ்வாறு பெறப்படும் வாக்குறுதி சட்டபூர்வமாகவோ அற நெறிக்கேற்பவோ செல்லும்படியாகுமென பலர் நினைப்பதில்லை. ஹெரால்டும் அவ்வாறே கருதினார். 1066இல் எட்வர்டு இறந்ததும் ஹெரால்டு காட்வின் ஆங்கிலேய அரியணைக்கு உரிமை கொண்டாடினார். (அரியணை உரிமை பற்றி பலமுறை முடிவு செய்து வந்த ஆங்கிலேய பிரபுக்களின் அவையாகிய) அறிவோர் அவை அவரைப் புதிய மன்னராகத் தெரிந்தெடுத்தது. தனது ஆட்சியைப் பரப்ப விரும்பிய வில்லியம்க, ஹெரால்டின் வாக்குறுதியைக் கண்டு வெகுண்டெழுந்தார். படைபலத்துடன் தமது உரிமையை நிலை நாட்டுவதற்காக இங்கிலாந்தின் மீது படையெடுக்க முடிவு செய்தார்.
வில்லியம் பிரான்ஸ் நாட்டின் கரையருகே தரைப் படையையும் கப்பற்படையையும் குவித்தார். 1066 ஆகஸ்ட் திங்களில் அவர் புறப்படத் தயாரானார். ஆயினும் கடுமையான வட காற்று வீசியதால், அவருடைய பயணம் பல வாரங்களாகத் தடைபட்டது. இதற்கிடையில் நார்வே மன்னரான ஹெரால்டு ஹார்ட்ராடு வடகடலைத் தாண்டி வந்து இங்கிலாந்தின் மேல் படையெடுத்தனர். ஹெரால்டு காட்வின் வில்லியத்தின் படையெடுப்பை எதிர்ப்பதற்காகப் படைகளை இங்கிலாந்தின் தென்பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். இப்பொழுது நார்வே மன்னரின் தாக்குதலை
எதிர்ப்பதற்காக அவர் படைகளை வடக்கே கொண்டு போக நேர்ந்தது. செப்டம்பர் 25 ஆம் நாள் ஸ்டாஃப்போர்டு பிரிட்ஜ் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் நார்வே அரசன் கொல்லப்பட்டான். அவருடைய படைகள் சிதறியோடின.
இரண்டு நாள்கள் கழித்து ஆங்கிலேயக் கால்வாயில் காற்று மாறியது. உடனே வில்லியம் தம் படைகளுடன் இங்கிலாந்து சென்றார். ஹெரால்டு, வில்லியத்தின் படைகள் தம்மை நோக்கி வரும்வரை காத்திருக்க வேண்டும அல்லது போர் தொடுப்பதற்கு முன் தமது படைகளுக்கு ஓய்வளித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர் தம் படைகளை விரைவாகத் தெற்கு நோக்கி நடத்தி வந்து போரிடத் தயாரானார். அக்டோபர் 14, 1066இல் இரு படைகளும் புகழ் மிகு ஹேஸ்டிங்ஸ் போர்க்களத்தில் சந்தித்தன. அன்று மாலைக்குள்ளாக வில்லியத்தின் குதிரைப்படை வீரர்களும் வில்வீரர்களும் ஆங்கிலேய சாக்ஸனியப் படைகளை விரட்டி அடித்தனர். இருள் சூழும் வேளையில் ஹெரால்டு மன்னர் கொல்லப்பட்டார். அவருடைய இரு சகோதரர்களும் ஏற்கெனவே போரில் மடிந்து விட்டனர். ஆகவே புதிய படை திரட்டுவதற்கோ வில்லியத்தின் உரிமையை எதிர்ப்பதற்கோ போதிய வலிமை உடைய யாரும் இல்லை. அவ்வாண்டு கிறிஸ்து பிறந்த தின விழா அன்று லண்டனில் வில்லியம் முடி சூட்டப் பெற்றார்.
அடுத்த ஐந்தாண்டுகளாக அங்குமிங்குமாக கிளர்ச்சிகள் முளைத்தன. ஆனால் வில்லியம் அவற்றையெல்லாம் அடக்கினார். இக்கிளர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு வில்லியம் இங்கிலாந்திலுள்ள எல்லா நிலங்களையும் பறிமுதல் செய்து அவற்றை தம் சொந்த சொத்தென அறிக்கை விட்டார். அவற்றுள் பலவற்றை அவருடைய கீழாட்களாக நிலமானியர்கள் நிலமானிய முறைப்படி பெற்றனர். அதன் விளைவாக ஆங்கிலேய சாக்ஸானியப் பிரபுக்கள் தம் நிலங்களை இழந்தனர். அவர்களுக்குப் பதிலாக நார்மானியர் நிலப்பிரபுக்களாயினர். (இது பெரும் மாற்றம் போல் தோன்றினாலும், இந்த அதிகார மாற்றத்தில் ஒரு சில ஆயிரம் பேரே நேராக ஈடுபட்டனர். நிலத்தை உழுத உழவர்களைப் பொருத்த வரை மேலாட்களில் தாம் மாற்றம் ஏற்பட்டது.
வில்லியம் தாமே இங்கிலாந்தை ஆள உரிமையுள்ளவரென்று எப்போதும் கூறி வந்தார். அவருடைய வாழ்நாளில் ஆங்கிலேய நிறுவனங்கள் பெரும்பாலும் மாற்றப்படவில்லை. புதிய நிலங்களைப் பற்றிய விவரங்களை அறிய வில்லியம் ஆவலாக இருந்ததால், இங்கிலாந்தின் மக்களையும், சொத்துக்களையும் பற்றிய விரிவான விவரங்களைத் திரட்டுமாறு ஆணையிட்டார். அவ்விவரங்கள் மாபெரும் நிலவுடமைக் கணிப்பேட்டில் எழுதப் பெற்றன. அது வரலாற்று முக்கியத்துவம் உள்ள செய்திகளைத் தரும் அரிய ஏடாக இருக்கிறது. (மூலச் சுவடிகள் இன்னும் உள்ளன. அவை இப்பொழுது லண்டனில் பொது ஆவண அலுவலகத்தில் உள்ளன).
வில்லியம் திருமணமானவர். அவருக்கு நான்கு புதல்வரும் ஐந்து புதல்விகளும் இருந்தனர். அவருக்குப் பின் அரியணையேறிய ஆங்கிலேய மன்னர் அனைவரும் அவரது வழி வந்தோரேயாவர். வெற்றி வீரரான வில்லியம் இங்கிலாந்து மன்னர்களுள் மிகவும் முக்கியமானவராக இருப்பினும், அவர் ஆங்கிலேயரல்லர். அவர், பிரெஞ்சு நாட்டவர். அவர் பிரான்சிலேயே பிறந்தார். பிரான்சிலே இறந்தார். ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும், அங்கே வாழ்ந்தார். பிரெஞ்சு மொழியே பேசி வந்தார். (அவர் எழுத்தறிவற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது).
வரலாற்றை வில்லியம் எவ்வாறு பாதித்தார் என்பதை குறிப்பிடும்போது, அவரின்றி இங்கிலாந்தின் நார்மானியப் படையெடுப்பும் வெற்றி நிகழ்தாரா என்பதை நினைனவிலிருத்த வேண்டும். இங்கிலாந்தின் அரியணைக்கு அவர்க இயல்பான வாரிசு அல்லர். அவருடைய பேராவலையும் திறமையையும் தவிர, நார்மானியப் படையெடுப்புக்கு வேறு எந்தக் காரணமோ, தேவையோ இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ரோமானிய படையெடுப்புக்குப் பிறகு, பிரான்சிலிருந்து யாரும் இங்கிலாந்தின் மீது படையெடுக்கவில்லை. வில்லியம் காலத்திற்குப் பிறகு கடந்த ஒன்பது நூற்றாண்டுகளாக பிரான்சிலிருந்து (வேறு எங்கிருந்தும்) இங்கிலாந்தின் மீது யாரும் படையெடுத்து வெற்றி பெறவில்லை.
நார்மானி வெற்றியின் விளைவுகள் எவ்வளவு முக்கியமானவை எனும் கேள்வி எழுகின்றது. குறைந்த எண்ணிக்கையுள்ள நார்மானியரே இங்கிலாந்தின் மேல் படையெடுத்தனர். ஆனால் அவர்கள் ஆங்கிலேய வரலாற்றில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தினர். நார்மானிய வெற்றிக்கு முன் 5 அல்லது 6 நூற்றாண்டுகளில் ஆங்கிலோ-சாக்ஸானியரும், ஸ்காண்டிநேவியரும் திரும்பத் திரும்ப இங்கிலாந்தின் மீது படையெடுத்தனர். இங்கிலாந்தின் பண்பாடு அடிப்படையில் டியூட்டானியப் பண்பாடாக இருந்தது. நார்மானியர்களும் வைக்கிங் எனப்படும் ஸ்காண்டிநேவிய இனத்தின் வழி வந்தவர்தாம். ஆயினும், அவர்களுடைய மொழியும், பண்பாடும் பிரெஞ்சு மொழியாகவும் பண்பாடாகவும் இருந்தன. ஆகவே நார்மானிய வெற்றியின் பயனாக ஆங்கிலேயப் பண்பாடு பிரெஞ்சுப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. (இன்று இது இயல்பாகத் தோன்றலாம். ஆனால், வெற்றி வீரர் வில்லியம் காலத்திற்கு முன் இங்கிலாந்து பெரும்பாலும் வட ஐரோப்பாகவுடனே தான் பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தது). அதன் விளைவாகப் பிரெஞ்சு ஆங்கிலோ-சாக்ஸானியப் பண்பாடுகள் பின்னிப் பிணைந்தன. இப்பிணைவு மற்றபடி நடைபெற்றிருக்காது.
வில்லியம் ஒரு முதிர்ந்த வகையான நிலமானிய முறையை இங்கிலாந்தில் புகுத்தினார். நார்மானிய அரசர்கள், தமக்கு முந்திய ஆங்கிலோ-சாக்ஸானிய மன்னர்களைப் போலில்லாமல் பல்லாயிரம் படை வீரர்களை ளவைத்திருந்தனர். இடைக்காலத் தரத்தின்படி அது ஆற்றல் மிகுந்த படையாகும். நார்மானியர்கள் திறமைமிக்க ஆட்சியாளராக இருந்தனர். ஆகவே ஆங்கிலேய அரசாங்கம் ஐரோப்பாவிலே ஆற்றல்மிகு திறமையுள்ள அரசாங்கமாக மாறியது.
புதிய ஆங்கில மொழி வளர்ச்சியடைந்தது. நார்மானிய வெற்றியின் மற்றொரு முக்கிய விளைவாகும். நார்மானிய வெற்றியின் பயனாக ஆங்கிலத்தில் ஏராளமான புதிய சொற்கள் இணைந்தன. அவை எவ்வளவு ஏராளமானவையென்றால் தற்கால ஆங்கில அகராதிகளில் ஆங்கிலோ-சாக்ஸானிய மூலச் சொற்களைவிட பிரெஞ்சு அல்லது லத்தீன் மூலச் சொற்களே மிகுதியாக உள்ளன. மேலும், நார்மானிய வெற்றிக்குப் பின் மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளாக ஆங்கில இலக்கணம் விரைவாக மாறியது. பெரும்பாலும் எளிதானது. நார்மானியர் வெற்றி பெறவில்லையெனில், இன்றைய ஆங்கிலம் இடைக்கால ஜெர்மானிய அல்லது டச்சு மொழியிலிருந்து சற்று வேறுபட்டதாகவே இருக்கும். ஒரு தனிமனிதனின் வாழ்க்கையினால் ஒரு முக்கிய மொழி இன்றைய நிலையை அடைந்திருப்பதற்கு இது ஒன்று தான் எடுத்துக்காட்டாகும். (இன்று ஆங்கிலம் உலகில் மிக முக்கியமான மொழியாக இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது).
நார்மானிய வெற்றியினால் பிரான்சில் ஏற்பட்ட விளைவையும் இங்குக் குறிப்பிடலாம். அதன் பிறகு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளாக ஆங்கிலேய மன்னர்களுக்கும் (அவர்கள் நார்மானியர் வழி வந்தோராக இருந்தனர்) பிரெஞ்சு மன்னர்களுக்குமிடையே நீண்ட போர்கள் நடைபெற்று வந்தன. இப்போர்கள் நார்மானிய வெற்றியினால் விளைந்தவை. 1066-க்கு முன் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையே போர்கள் நிகழ்ந்ததில்லை.
பல வகைகளில் இங்கிலாந்து பிற ஐரோப்பியக் கண்டத்தின் நாடுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளது. இங்கிலாந்து ஒரு பெரிய பேரரசை நிறுவியதாலும், மக்களாட்சி நிறுவனங்களை அமைத்ததாலும் உலகின் பிற பகுதிகளில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இது அதன் அளவின் விகிதத்திற்கு விஞ்சியதாக இருக்கின்றது. பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் இவ்வியல்புகள் எந்த அளவிற்கு வில்லியத்தின் நடவடிக்கைகளின் விளைவாக இருக்கின்றன?
தற்கால மக்களாட்சியானது, எடுத்துக்காட்டாக, ஜெர்மனியில்லாமல், ஏன் இங்கிலாந்தில் மட்டும் வளர்ச்சி யுற்றது என்பதைப் பற்றி வரலாற்றறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், ஆங்கிலேயப் பண்பாடும் நிறுவனங்களும் ஆங்கிலோ-சாக்ஸானிய, நார்மானியப் பண்பாடுகள் நிறுவனங்கள் ஆகியவற்றின் கலப்பாகும். இக்கலப்பு நார்மானிய வெற்றியின் விளைவேயாகும். ஆயினும், பிற்காலத்தில் வளர்ந்த ஆங்கிலேய மக்களாட்சி வல்லாட்சியாளரான வில்லியமே காரணமெனக் கூறுவது பொருந்தாதென நினைக்கிறேன். நார்மானிய வெற்றிக்குப் பிந்திய அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தில் மக்களாட்சியின் இயல்புகள் தோன்றவில்லை என்பது உண்மை.
பிரிட்டிஷ் பேரரசு உருவானதைப் பொறுத்தவரையில், வில்லியத்தின் வெற்றியின் விளைவுகள் தெளிவாகத் தெரிகின்றன. 1066-க்கு முன்னால், இங்கிலாந்து படையெடுப்புகளுக்குள்ளாகியிருந்தது. 1066-க்கு பிறகு நிலைமை மாறியது. வில்லியம் நிறுவி, அவரது வழி வந்தோர் பேணி வந்த வலிமை மத்திய அரசாங்கத்தின் காரணமாகவும், அந்த அரசாங்கம் நிறுவிய படை பலத்தின் காரணமாகவும் இங்கிலாந்தின் மீது எந்நாடும் படையெடுக்கவில்லை. அதற்கு மாறாக, இங்கிலாந்து கடல் கடந்து படையெடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. ஆகவே ஐரோப்பாவின் அதிகாரம் கடல் கடந்து பரவி போது, வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட இங்கிலாந்து மிக அதிகமாக குடியேற்ற நாடுகளைப் பெற்றிருந்ததில் வியப்பில்லை.
இங்கிலாந்தின் வரலாற்றில் பிறகு நடைபெற்ற எல்லாவற்றிற்கும் வெற்றி வீரர் வில்லியமே காரணமெனக் கூற முடியாது என்பது உண்மை. ஆயினும், பிறகு நிகழ்ந்தவற்றிற்கு நார்மானிய வெற்றி மறைமுகக் காரணமாக இருந்தது. ஆகவே வில்லியத்தின் வெற்றியினால் ஏற்பட்ட நீண்டகால விளைவுகள் மிகப் பெரியவை எனலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெற்றி வீரர் வில்லியம் (கி.பி.1027 - கி.பி.1087), வில்லியம், இங்கிலாந்தின், அவர், ஆங்கிலேய, வில்லியத்தின், அவருடைய, நார்மானிய, வெற்றி, இங்கிலாந்து, மீது, பிரெஞ்சு, ஹெரால்டு, பிறகு, ஆகவே, வெற்றியின், ஆயினும், தமது, ஆங்கிலோ, முன், அல்லது, உரிமை, அரியணைக்கு, படைகளை, இருந்தனர், நடைபெற்ற, எட்வர்டு, மாறியது, மன்னர், பெற்றார், அவரது, நூற்றாண்டுகளாக, வேறு, நார்மானியப், மூலச், நான்கு, என்பது, விளைவாக, விளைவுகள், ஆங்கில, வெற்றியினால், க்கு, சாக்ஸானிய, இங்கிலாந்தில், வரலாற்றில், ஆயிரம், பெரும்பாலும், நார்மானியர், ஆங்கிலேயப், அப்போது, காட்வின், நார்மண்டி, பின், அரசியல், வில்லியமே, என்பதை, நார்வே, யாரும், வந்தார், இல்லை, பற்றி, படையெடுத்தனர், வீரர், பெரும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்