முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜெங்கிஸ்கான் (கி.பி.1162 - கி.பி.1227)
ஜெங்கிஸ்கான் (கி.பி.1162 - கி.பி.1227)
நாடுகளை வெற்றி கொள்வதில் மாபெரும் சாதனைகளைப் புரிந்த மாவீரர் ஜெங்கிஸ்கான் 1162 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சிறிய மங்கோலிய பழங்குடியின் தலைவராக இருந்தார். அவர் தமக்குப் போட்டியாக இருந்த தெமுஜின் (Temujin) என்ற மற்றொரு பழங்குடித் தலைவனைத் தோற்கடித்தார். இந்த வெற்றியின் நினைவாக அவர் தம் மகனுக்கு தெமுஜின் என்று பெயர் சூட்டினார். தெமுஜின் 9 வயது சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தையை ஒரு போட்டி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் கொன்று விட்டனர். இவரது குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தவர்களின் உயிருக்கும் ஆபத்து நிலவியது. அதனால் அவர்கள் சில ஆண்டுகள் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது. இவ்வாறு தெமுஜினைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் பல கொடுந் துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு போட்டிப் பழங்குடியினர், ஒரு தாக்குதலின் போது தெமுஜினைப் பிடித்துச் சென்றனர். தெமுஜின் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அவருடைய கழுத்தில் மரவளையம் ஒன்றை மாட்டி வைத்தனர். இவ்வாறு, நாகரிக வாடை சிறிதும் இல்லாமலிருந்த ஒரு வறண்ட நாட்டில், கல்வியறிவில்லாத ஒரு கைதியாக, உதவிபுரிவார் யாருமின்றி, கரைகாண முடியாத பெருந்துயரக் கடலில் ஆழ்ந்திருந்த தெமுஜின், உலகிலேயே மிகவும் வல்லமை வாய்ந்த ஒரு மனிதராக உயர்ந்தார்.
தெமுஜின் தம்மைச் சிறைப் பிடித்து வைத்திருந்தவர்களிடமிருந்து எப்படியோ தப்பினார். அதன் பின்னர் இவருடைய வட்டாரத்தில் இவரது பழங்குடிக்கு நெருங்கிய உறவுடைய ஒரு பழங்குடியின் தலைவரும் இவருடைய தந்தையின் நண்பருமாகிய தோக்ரில் (Toghril) என்பவருடன் நட்புக் கொண்டார். பல்வேறு மங்கோலியப் பழங்குடிகளிடையே பல ஆண்டுகள் ஒருவரையொருவர் அழிக்கும் உட்பகைப் போர்கள் நடந்தன. அந்தப் போர்களில் தெமுஜின் ஒவ்வொன்றாக வென்று, படிப்படியாக முன்னேறி உச்ச நிலையை எய்தினார்.
மங்கோலியப் பழங்குடியினர் நெடுங்காலமாகத் திறமை வாய்ந்த குதிரை வீரர்களாகவும், கொடூரமான போர்வீரர்களாகவும் விளங்கினர். வரலாறு நெடுகிலும், அவர்கள் வடக்குச் சீனாவிற்குள் பலமுறை படையெடுத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தெமுஜின் எழுச்சிக்கு முன்பு இந்தப் பல்வேறு பழங்குடிகள் தங்களுக்குள் போரிடுவதிலேயே தங்களின் பெரும்பாலான ஆற்றலை வீணடித்து வந்தனர். தெமுஜின் தம்முடைய இராணுவத் தந்திரம், அரசியல் செயலாண்மைத் திறம், ஈவிரக்கமற்ற கொடூரம், மகத்தான அமைப்புத் திறம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிதறுண்டு கிடந்த இந்தப் பழங்குடிகள் அனைத்தையும் தமது தலைமையில் ஒரே கொடியின் கீழ் ஒற்றுமைப்படுத்தினார். 1206 ஆம் ஆண்டில் மங்கோலியப் பழங்குடிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி தெமுஜினை ஜெங்கிஸ்கான் எனப் பிரகடனம் செய்தனர். ஜெங்கிஸ்கான் எனப் பிரகடனம் செய்தனர். ஜெங்கிஸ்கான் என்றால் அகிலப் பேரரசர் (Universal Emperor) என்று பொருள்.
மாபெரும் வல்லமை பொருந்தியதாக ஜெங்கிஸ்கான் உருவாக்கிய இராணுவம், அண்டை நாடுகளை நோக்கித் திரும்பியது. அவர் முதலில் வடமேற்கு சீனாவிலிருந்து ஹ’சிஹ’சியா மாநிலத்தையும், வட சீனாவிலிருந்து ஷின் பேரரசையும் தாக்கினார். இந்தப் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஜெங்கிஸ்கானுக்கும், பாரசீகத்திலும், மத்திய ஆசியாவிலும் ஒரு பெரிய பேரரசை ஆண்டு வந்த குவாரசம் ஷா முகமது என்ற பேரரசருக்குமிடையே ஒரு தகராறு எழுந்தது. ஜெங்கிஸ்கான் 1219 இல் குவாரசம் ஷாவுக்கு எதிராகப் படையெடுத்தார். மத்திய ஆசியாவையும், பாரசீகத்தையும் அவர் வெற்றி கண்டார். குவாரசம் ஷாவின் பேரரசு அடியோடு அழிவுற்றது. மற்ற மங்கோலியப் படைகள் ரஷ்யாவைத் தாக்கி கொண்டிருந்தபோது, ஜெங்கிஸ்கான் தாமே ஒரு படைக்குத் தலைமை தாங்கி ஆஃப்கானிஸ்தானதையும் வட இந்தியாவையும் தாக்கினார். இந்தப் படையெடுப்புகளிலிருந்த அவர் 1206 இல் மங்கோலிய திரும்பினார். அங்கு 1227 இல் அவர் மரணமடைந்தார்.
ஜெங்கிஸ்கான் தாம் இறப்பதற்குச் சற்று முன்பு தம் மூன்றாம் புதல்வன் ஒகடாய் (Ogadai) என்பவரைத் தமக்குப் பின் அரசராக நியமித்தார். ஒகடாயை அடுத்த மன்னராக அவர் நியமித்தது ஒரு சிறந்த செயலாகும். ஏனெனில், ஒகடாய் தாமே ஒரு திறமை வாய்ந்த தளபதியாகத் திகழ்ந்தார். அவருடைய தலைமையின் கீழ் மங்கோலியப் படைகள் சீனாவுக்குள் தொடர்ந்து முன்னேறிச் சென்றன. ரஷ்யாவை முழுமையாக வெற்றிக் கொண்டனர். ஐரோப்பாவுக்குள்ளும் நுழைந்து முன்னேறின. மங்கோலியப் படைகள் 1241 இல் போலந்து, ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய நாடுகளின் படைகளைத் தோற்கடித்து, புடாபெஸ்ட் நகரம் வரை முன்னேறின. ஆயினும், அந்த ஆண்டில் ஒகடாய் காலமாகி விடவே, மங்கோலியப் படைகள் ஐரோப்பாவிலிருந்து பின் வாங்கின. அதன் பின்பு அப்படைகள் ஐரோப்பாவுக்குத் திரும்பவே இல்லை.
ஒகடாய்வுக்குப் பிறகு யார் அரியணை ஏறுவது என்பது குறித்து மங்கோலியப் பழங்குடிகளின் தலைவர்களிடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது சிறிது காலம் மங்கோலியப் படையெடுப்புகள் நின்றிருந்தன. ஆனால், அடுத்த இரு கான்களின் (ஜெங்கிஸ்கான் போர்களாக மங்குகான் மற்றும் குப்லாய்கான்) தலைமையில் மங்கோலியப் படைகள் மீண்டும் ஆசியாவில் படையெடுப்பைத் தொடங்கின. குப்லாய் கான் 1279ஆம் ஆண்டில் சீனா முழுவதையும் வெற்றிக் கொண்டபோது வரலாற்றிலேயே மிகப் பெருமளவு நிலப்பரப்பு மங்கோலியப் பேரரசின் கீழ் வந்தது. அவர்களுடைய ஆட்சி, சீனா, ரஷியா, மத்திய ஆசியா, பாரசீகம், தென்மேற்கு ஆசியா முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அவர்களுடைய படைகள், போலந்து முதல் வட இந்தியா வரை வெற்றிகரமாகப் படையெடுப்புகளை நடத்தின. குப்லாய் கானின் இறையாண்மை (Sovereignty) கொரியா, திபெத், தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் வரையிலும் பரவியிருந்தது.
இத்துணை பேரளவிலான பேரரசை, அந்தக் காலத்தில் பின் தங்கிய போக்குவரத்து வசதிகளைக் கொண்டு நெடுங்காலம் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, மங்கோலியப் பேரரசு விரைவிலேயே பிளவு படலாயிற்று. எனினும் பிற்போந்த பல்வேறு நாடுகளில் நீண்டகாலம் வரை மங்கோலிய ஆட்சி நீடித்தது. சீனாவின் பெரும்பகுதியிலிருந்து 1368 ஆம் ஆண்டில் மங்கோலியர் வெளியேற்றப்பட்டனர். ரஷ்யாவில் சீனாவை விட அதிகக் காலம் மங்கோலிய ஆட்சி நீடித்தது. ஜெங்கிஸ்கானின் பேரன் பட்டு (Patu) ரஷ்யாவில் நிறுவிய மங்கோலிய முடியரசு (Golden Horde) 16 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. கிரிமியாவில் நிறுவப்பெற்ற மங்கோலிய கான் அரசு (Khanate) 1783 வரையிலும் தொடர்ந்திருந்தது. ஜெங்கிஸ்னானின் மற்றப் புதல்வர்களும், பேரர்களும் மத்திய ஆசியாவிலும், பாரசீகத்திலும் தங்கள் அரச மரபுகளை ஏற்படுத்தி ஆண்டு வந்தனர். இவ்விரு பகுதிகளையும் மங்கோலியக் குருதி வழித் தோன்றலாக வந்த ஜெங்கிஸ்கானின் வாரிசு எனக் கூறிக்கொண்டு தைமூர் (தாமர்லேன்) என்பவர் கைப்பற்றினார். தைமூரின் அரச மரபு 15 ஆம் நூற்றாண்டில் முடிவுற்றது. எனினும், அப்போது கூட மங்கோலியரின் படையெடுப்பும், ஆட்சியும் முடிவுக்கு வரவில்லை. தைமூரின் கொள்ளுப் பேரனின் மகனாகிய பாபர் இந்தியா மீது படையெடுத்து, அங்கு முகலாயர் ஆட்சியை நிறுவினார். மொகல் என்பது மங்கோல் என்ற சொல்லின் திரிபாகும். இந்தியாவின் பெரும்பகுதியை வெற்றி கொண்ட முகலாய அரசர்கள் 18 ஆம் நூற்றாண்டின் மத்தி வரையில் அங்கு ஆட்சி நடத்தினார்கள்.
உலக வரலாற்றில் உலகம் முழுவதையும் வெற்றி கொண்டு ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என்ற பேராசை அல்லது வெறி கொண்ட பல மன்னர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அத்தகைய ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மகா அலெக்சாந்தர், ஜெங்கிஸ்கான், நெப்போலியன் போனபார்ட், அடால்ஃப் இட்லர் ஆகியோர் ஆவர். இந்த நால்வரும் இந்தப் பட்டியலில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருப்பதேன்? படைகளை விடக் கொள்கைகள்தானே இறுதியில் மிக முக்கியமானவை? நீண்டக் காலப்போக்கில், வாளைவிடப் பேனாதான் வலிமை வாய்ந்த ஆயுதமாக அமையும் என்பது உண்மைதான். ஆயினும் குறுகியகாலப் பொருட்பாடுகளுக்கும் இது பொருந்தும். இந்த நால்வரில் ஒவ்வொருவரும் பெருமளவு நிலப்பரப்பை ஆண்டனர். பெருமளவு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். தங்களுடைய சமகாலத்தவரின் வாழ்வில் அளவற்ற செல்வாக்கினைச் செலுத்தினர். எனவே இவர்களை வெறும் கொள்ளைக்காரர்கள் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
இந்த நால்வரிலும் மற்ற மூவரையும்விட ஜெங்கிஸ்கானை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதுகிறேன். ஏன் தெரியுமா? அவருடைய செல்வாக்கு மற்ற மூவரையும் விட மிகப் பெருமளவு நிலப்பரப்பில் பரவியிருந்தது என்பது ஒரு காரணம். அவருடைய செல்வாக்கு மற்றவர்களுடையதை விட நெடுங்காலம் நிலைபெற்றிருந்தது என்பது மிக முக்கியமான காரணம். நெப்போலியனும், இட்லரும் அவர்களுடைய வாழ் நாளிலேயே தோற்கடிக்கப்பட்டனர். அவர்களுடைய வெற்றிகளும் அற்ப ஆயுளில் முடிந்தன. அலெக்சாந்தரின் ஆயுட்காலத்தில் அவருடைய படைகள் தோற்கடிக்கப்படவில்லையா ;யினும், அவர் தமக்கு ஒரு வாரிசை நியமித்து விட்டுச் செல்லவில்லை. அதனால், அவருடைய மரணத்திற்குப் பின்பு, அவரது பேரரசு விரைவாகச் சிதறுண்டது. இதற்கு மாறாக, ஜெங்கிஸ்கான் தமது வெற்றிகளைத் திட்டமிட்டு நிலைப்படுத்தினார். அவருடைய புதல்வர்களும், பேரர்களும் அவருக்குத் திறமை வாய்ந்த வாரிசுகளாக விளங்கினார்கள். அதனால், ஜெங்கிஸ்கான் இறந்த பின்னருங் கூட ஆசியாவின் பெரும்பகுதியில் பல நூற்றாண்டுகள் மங்கோலிய அரசர்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்தனர்.
ஜெங்கிஸ்கானின் படையெடுப்புகளினால் நேரடியாக ஏற்பட்ட ஒரு முக்கியமான விளைவை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மங்கோலிய வெற்றியானது, ஆசியாவின் பெரும் பகுதியைத் தற்காலிகமாக ஒருங்கிணைத்ததன் மூலம், ஆசியாவின் வழியாகச் சென்ற வாணிக வழித் தடங்களை (Trade Routes) முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பாதுகாப்புடையதாக ஆக்கியது. இதனால் சீனாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே வாணிகம் பெருகியது. மார்க்கோ போலோ போன்ற ஐரோப்பிய வணிகர்கள், சீனாவுக்குச் சென்று, அங்குள்ள அளவற்ற செல்வங்கள் பற்றிய தகவல்களை கொணர முடிந்தது. கீழை நாடுகளுடன் வாணிகம் பெருகியதன் காரணமாகவும், சீனாவைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வம் தோன்றியதன் விளைவாகவும் ஐரோப்பியர்கள் பல நாடாய்வுப் பயணங்களை மேற்கொண்டனர்.
கடைசியாக, ஒரு குறிப்பு, கிறிஸ்டோபர் கொலம்பஸ், சைமன் பொலீவார், தாமஸ் எடிசன் போன்றோர் தோன்றாமாலிருந்தாலும், மற்றவர்களால் அமெரிக்காவும், மின் விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜெங்கிஸ்கான் தோன்றாது போயிருப்பின் 13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மங்கோலியப் படையெடுப்புகளும், வெற்றிகளும் நிகழ்ந்திருக்கும் என உறுதியாகக் கூற முடியாது. மங்கோலியப் பழங்குடிகள் 13 ஆம் நூற்றாண்டு வரையில் ஒற்றுமைப்படவில்லை. ஜெங்கிஸ்கான் அவர்களை ஒற்றுமைப்படவில்லை. ஜெங்கிஸ்கானுக்குப் பிறகு அவர்கள் ஒற்றுமையாக வாழவில்லை. எனவேதான் மனிதகுல வரலாற்றில் உண்மையில் முதன்மையாக இயக்கு ஆற்றல் வாய்ந்தவர்களில் ஒருவராக ஜெங்கிஸ்கான் தோற்றமளிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜெங்கிஸ்கான் (கி.பி.1162 - கி.பி.1227), ஜெங்கிஸ்கான், மங்கோலியப், அவர், தெமுஜின், மங்கோலிய, அவருடைய, படைகள், இந்தப், என்பது, ஆட்சி, ஆண்டில், வாய்ந்த, ஆசியாவின், பெருமளவு, அவர்களுடைய, மத்திய, கீழ், வெற்றி, பல்வேறு, திறமை, அதனால், இவருடைய, ஜெங்கிஸ்கானின், நீடித்தது, முழுவதையும், பின், பேரரசு, குவாரசம், மற்ற, பழங்குடிகள், ஒகடாய், அங்கு, முன்பு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்