முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் (கி.பி.1042 - கி.பி.1099)
போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் (கி.பி.1042 - கி.பி.1099)
போப்பாண்டவர் இரண்டாம் அர்பனை இன்று நினைவில் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவு. எனினும், அவரைப் போல் மனித வரலாற்றில் பாதிப்பைப் பெருமளவில் ஏற்படுத்தியவர்கள் மிகச் சிலரே. புனித பூமியாக பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு ஆணையிட்டவர் இரண்டாம் அர்பன் ஆவார். இந்தப் போர்தான் சிலுவைப் போர்களுக்கு தொடக்கமாக அமைந்தது.
அர்பனின் இயற்பெயர் ஒடோ-டி-லாகரி (Odo de Lagery) என்பதாகும். அவர் 1042-ஆம் ஆண்டில் ஃபிரான்சிலுள்ள சாட்டிலான்-சூர்-மானே என்ற நகருக்கு அருகே பிறந்தார். அவர் ஃபிரெஞ்சுக் கோமான்களின் குடும்பம் ஒன்றில் தோன்றினார். அவர் சிறந்த கல்வி கற்றார். இளமையில் ரெய்ம்ஸ் நகரில் அவர் ஒரு மேற்றிராணியராகப் (Archedeaeon) பணியாற்றினார். பின்னர் அவர் ஒரு சூளூனியாக் சமய குருவாகவும் (Monk) துறவியர் குழுத் தலைவராகவும் (Prior) போப்பாண்டவரின் தேர்வுக் குழுவில் உறுப்பாண்மை பெற்ற மேற்றிராணியராகவும் (Cardinal-bishop) படிப்படியாக உயர்வு பெற்றார். 1088 ஆம் ஆண்டில் அவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அர்பன், மனத்திட்பமும், செயலாற்றலும் அரசியல் விவேகமும் வாய்ந்த போப்பாண்டவராக விளங்கினார். ஆனால், இந்தக் காரணத்திற்காக மட்டும் அவர் இந்த நூலில் இடம் பெறவில்லை. எந்த நடவடிக்கைக்காக இரண்டாம் அர்பன் முக்கியமாக நினைவில் நீங்கா இடம் பெற்றாரோ அந்த நடவடிக்கை 1095 ஆம் ஆண்டு நவம்பர் நாளன்று நிகழ்ந்தது. திருச்சபை மாமன்றக் கூட்டத்தை அவர் கூட்டினார். அக்கூட்டம், ஃபிரான்சிலுள்ள கிளர்மான்ட் நகரில் நடந்தது. பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் வரலாற்றிலேயே உணர்ச்சியை தூண்டும் தனிப்பேரூரை எனப் புகழ் பெற்ற தமது உரையை அர்பன் ஆற்றினார். இந்தப் பேரூரை பல நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைக்கும் வல்லமை வாய்ந்ததாகவும் விளங்கியது. அர்பன் தமது உரையில், துருக்கியர்கள் புனித பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு, கிறிஸ்துவப் புனித இடங்களை மாசுப்படுத்துவதையும் கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்குத் தொல்லை கொடுப்பதையும் வன்மையாகக் கண்டித்தார். கிறிஸ்தவ உலகம் முழுவம் ஒரு புனிதப் போரில் ஒருங்கிணைந்து, புனித பூமியைக் கிறிஸ்தவர்கள் மீண்டும் கைப்பற்றுவதற்குப் பெரும் புனிதப் போரைத் தொடங்க வேண்டு என்று வலியுறுத்தினார். அர்பன் தமது உரையில் மிகவும் மதி நுட்பத்துடன் பொதுநல நோக்கங்களையும் எடுத்துரைத்தார். புனித பூமி செல்வச் செழிப்புடையது என்பதையும், மக்கள் நெரிசல் மிகுந்த கிறிஸ்துவ ஐரோப்பாவைவிட செல்வ வளம் மிக்கது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இறுதியாக, இந்தப் புனிதப் போரில் பங்கு கொள்வதால் எல்லா தவங்களின் பலனும் கிட்டும் என்றும், புனிதப் போராளிக்கு அவரது பாவங்கள் அனைத்திலிருந்தம் மன்னிப்பு கிடைக்கும் என்றும் அர்பன் அறிவித்தார்.
அர்பன் ஆற்றிய இந்த அற்புதப் பேரூரை, அந்தக் கூட்டத்திலிருந்த உயர் நோக்கம் கொண்டவர்கள், தன்னலம் கொண்டவர்கள் ஆகிய இரு சாராரையும் ஒருங்கே கவர்ந்தது. அவர் உரையைக் கேட்ட கூட்டத்தினர், உணர்ச்சி தூண்டப் பெற்றுக் குமுறி எழுந்தார்கள். அர்பன் தமது உரையை முடிப்பதற்கு முன்னரே கூட்டத்தினர், "ஆண்டவன் அதை விரும்புகிறார்" என்று முழக்கமிட்டனர். இந்த முழக்கமே சிலுவைப் போர்களின் "போர் முழக்கமாகியது". இதற்குச் சில மாதங்களுக்குள்ளேயே, முதலாவது சிலுவைப் போர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல சிலுவைப் போர்கள் நடந்தன. (எட்டு பெரிய சிலுவைப் போர்களும், பல சிறிய போர்களும் நடந்தன.) இந்தச் சிலுவைப் போர்கள் சுமார் 200 ஆண்டுகள் நீடித்தன.
முதலாவது சிலுவைப் போரில் ஜெரூசலேம் கைப்பற்றப்பட்டது. இதற்கு இரு வாரங்களுக்குப் பிறகு ஆனால், இந்த வெற்றிச் செய்தி தமக்கு எட்டுவதற்கு முன்னர், 1099 ஆம் ஆண்டில் அர்பன் காலமானார்.
சிலுவைப் போர்களின் முக்கியத்துவத்தை இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாப் போர்களையும் போலவே, இந்தப் போர்களில் பங்கு கொண்டவர்கள் மீதும் இப்போர்கள் நடந்த பகுதிகளில் வாழ்ந்த குடி மக்களின் மீதும் இந்தப் போர்கள் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தின. மேலும், அந்தக் காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாகரிகத்தை விட முன்னேறிய நாகரிகங்களாக விளங்கிய பைசாண்டிய நாகரிகத்துடனும் இஸ்லாமிய நாகரிகத்துடனும் மேற்கு ஐரோப்பா நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு இந்தப் போர்கள் வழி வகுத்தன. இந்தத் தொடர்பு, மறுமலர்ச்சிக்கு வழியமைத்து, நவீன ஐரோப்பிய நாகரிகம் முழுமையாக மலர்ச்சி பெறுவதற்கு உதவியது.
சிலுவைப் போர்களின் மகத்தான முக்கியத்துவத்தின் காரணமாக மட்டுமின்றி அர்பனின் தூண்டுதல் இல்லாது போயிருப்பின் இந்தப் போர்கள் நடந்திருக்க முடியாது என்ற காரணத்தாலும், போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார். அவர் காலத்தில் சூழ்நிலை கனிந்திருந்தது. இல்லையெனில், அவருடைய பேருரை செவிடன் காதில் ஊதிய சங்காகப் போயிருக்கும். எனினும், ஒரு பொதுவான ஐரோப்பிய இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஒரு மையமான தலைமை தேவைப்பட்டது. தேசிய அரசர் எவரும் இந்தத் தலைமையை அளித்திருக்க முடியாது. (எடுத்துக்காட்டாக, ஒரு ஜெர்மன் பேரரசர் துருக்கியருக்கு எதிராகப் புனிதப் போர்ப் பிரகடனம் செய்து தமது படைகளைச் சிலுவைப் போருக்கு நடத்திச் சென்றிருந்தால், பல ஆங்கிலேயத் தளபதிகள் அதில் சேர்ந்திருப்பார்களா என்பது ஐயமே) மேற்கு ஐரோப்பாவில் நாட்டு எல்லைகளைக் கடந்து தமது அதிகாரத்தைச் செலுத்திய ஓர் மனிதர் போப்பாண்டவர் தான். மேற்கு ஐரோப்பியக் கிறிஸ்துவ நாடுகள் அனைத்திற்குமாக ஒரு திட்டத்தை வகுத்து, தமது கருத்தைப் பெருமளவு மக்கள் செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் அறிவிப்பதற்கான வல்லமை வாய்ந்தவராக போப்பாண்டவர் மட்டுமே இருந்தார். போப்பாண்டவர் இல்லாது போயிருப்பின் அவர் உணர்ச்சியை தூண்டிய தம் பேருரையை ஆற்றாது போயிருப்பின் ஒரு மாபெரும் ஐரோப்பிய இயக்கம் என்ற முறையில் சிலுவைப் போர்கள் ஒரு போதும் நடந்திருக்க முடியாது.
அது மட்டுமின்றி, போப்பாண்டவர் பதவியை வகித்த எவரும் புனித பூமியை மீட்பதற்கு ஒரு சிலுவைப் போரைத் தொடங்கும்படி அழைப்பு விடுத்திருக்க மாட்டார். போர் தொடங்குவது பல வழிகளிலும், நடைமுறையிலும் இயலாத ஒன்றாக இருந்தது. இந்தப் போரை நடத்தினால், அதன் விளைவு எதுவாக இருக்கும் என ஊகிப்பது கடினமாக இருந்தது. எனவே, இந்த விசித்திரமான ஆலோசனையைக் கூறுவதற்குப் பெரும்பாலான விவேகமுள்ள தலைவர்கள் மிகவும் தயக்கம் காட்டியிருப்பார்கள். ஆனால், இரண்டாம் அர்பன் அந்த ஆலோசனையைத் துணிவுடன் கூறினார். அவர் அவ்வாறு செய்ததன் மூலம், மனித வரலாற்றில் தம்மைவிட மிக்க புகழ் பெற்றிருந்தவர்களை காட்டிலும் அதிகமான நிலைபெற்ற செல்வாக்கினை அவர் பெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் (கி.பி.1042 - கி.பி.1099), அவர், அர்பன், சிலுவைப், இந்தப், தமது, போப்பாண்டவர், போர்கள், புனித, புனிதப், இரண்டாம், ஐரோப்பிய, மேற்கு, போர், முடியாது, போயிருப்பின், அந்தக், ஆண்டில், இடம், போரில், கொண்டவர்கள், போர்களின், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்