தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
பொருள்விளக்கப் பகுதியில் தரப்பெறும் குறியீடுகளும் அவ் விளக்கங்களுக்கு ஏற்பக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லுக்குரிய வெவ்வேறு பொருள்கள் அரைப்புள்ளியிட்டுக்
காட்டப்பட்டுள்ளன. ஒரு பொருளை விளக்க மேலும் அதே பொருளுடைய வேறு எளிய சொல் தரும்பொழுது காற்புள்ளி தரப்பெற்றிருக்கும்.
(எ-டு)
அக்கச்சி - அக்காள், தமக்கை. |
அக்கரன் - அறிவில்லாதவன்; எங்கும் நிறைபொருள், கடவுள். |
ஒரு பொருளின் விரிவு அல்லது விளக்கம் காட்ட முக்காற்புள்ளி தரப்பட்டிருக்கும்.
(எ-டு)
இமையவல்லி - காண்க; இமையவதி. |
உகாய் - காண்க; உகா. |
ஒவ்வொரு தலைச்சொல்லின் பொருளும் முற்றுப்பெறும் இடத்தில் முற்றுப்புள்ளி பெறும்.
அகரமுதலியில் ஒவ்வொரு பக்கமும் இரண்டு பத்தியாக அமைக்கப்பட்டு அகரநிரலில் தலைச்சொற்களும் அவற்றின் பொருள்களும் காட்டப்பட்டுள்ளன. அவ்வப் பக்கத்தில் வரும் முதற் பத்தியின் தொடக்கத் தலைச்சொல்லும் இரண்டாம் பத்தியின் இறுதித் தலைச் சொல்லும் அவ்வப் பத்தியின் மேல் உள்ள கோட்டின் மேலாகத் தலைப்புப்போலத் தரப்பட்டிருக்கும். இவற்றால் குறித்ததொரு பக்கத்தில் எது முதல் எது வரையில் உள்ள சொற்கள் அடங்கியுள்ளன என்பது பயன்படுத்துவாருக்கு எளிதில் தென்பட வாய்ப்பாக உள்ளது. பக்க எண், முதல்-இறுதிச் சொற்குறிப்புகளின் மையமாகத் தரப்பட்டிருக்கிறது.
சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் பிழைபடத் தந்த பொருள்களுள் சில திருத்தமுற இதில் அமைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, பிண்டம் என்பதற்கு எட்டாவது பொருளாக,' சூத்திரம், இயல், ஓத்து என்ற மூன்றுறுப்புக்கொண்ட நூல்' என்பது காணப்படுகிறது. இங்கே இயல், ஓத்து என்னும் இரண்டும் ஒரு பொருளனவே. ' சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக்கொண்ட நூல்' என்று இவ் வகரமுதலி முந்தையோர் இலக்கண மரபையொட்டித் தந்துள்ளது.
மேலும், பேரகராதியில் இடம்பெறாத பல புதுச் சொற்களும் இவ் வகரமுதலியில் சேர்க்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக ஊதாம்பை, ஏருந்து, கதிகால், நேர்காணல், பரிந்துரை, பேருந்து, போருந்து, மார்க்சியம், விளத்தம் போல்வன குறிப்பிடத்தக்கன.
அகரமுதலியின் பயன்:
நான் ஒரு நூலைப் படித்துவரும்பொழுது விளங்காப் பொருட்பகுதிகள் தென்பட்டால் தக்கவர்களை அடுத்து விளக்கம் பெற்றுக்கொள்ளுகிறோம். அங்ஙனமே தொடர்ப்பொருள் சொற்பொருள்களையும் நாம் கற்றுவல்லார் வழியாகப் பொருள் விளக்கம் பெறுகிறோம். இப்படித் தெரியாத சொற்பொருள்களுக்காக எப்பொழுதும் அறிந்த ஒருவரை நாடிச்செல்ல வேண்டுவதில்லை. எண்ணிய உடனேயே பொருள் சொல்லக்கூடிய கருவிநூல்கள் பலவாகத் தமிழில் உள்ளன. அவைதாம் நிகண்டுகளும் அகராதிகளும் ஆகும். இவைபற்றிய வரலாறுகளை முற்பகுதியில் பார்த்தோம்.
தெரியாத சொற்பொருளை மேலே காட்டிய நூல்களால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். நிகண்டுகள், கற்றுவல்ல புலவர்களாலேயே பயன்படுத்தத்தக்க அமைப் புடையன. ஆனால், அகரமுதலிகளோ எல்லோராலும் எளிதில் பார்த்துப் பயன்பெறத்தக்க அமைப்புடையன. சொற்கள் எல்லாம் அகரநிரலில் அமைத்துப் பொருள் தரப்பட்டிருப்பதால் அகரமுதலிகளில் நாம் கருதிய சொற்பொருள்களை எளிதில் கண்டுகொள்ளலாம்.
அகராதி பார்ப்பதற்குத் தமிழ் எழுத்துவரிசை முறையைத் தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். ஆங்கில மொழியில் உள்ள 26 எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருதலை யாவரும் அறிவர்.
நம் தமிழ்மொழியில் அப்படியன்று. உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் உட்பட 247 எழுத்துகள் தமிழில் உள்ளன. இந்த எழுத்துகளனைத்தும் சொல்லுக்கு முதலாக வருதல் இல்லை. நூற்றைந்து எழுத்துகளே சொல்லுக்கு முதலாக வரும் ஆற்றல் பெற்றன. எனவே, நூற்றைந்து எழுத்துகளைக் கொண்ட சொற்களே தமிழ் அகரமுதலிகளில் காணப்பெறும். மொழிமுதலில் வரும் 105 எழுத்துகளைப் பின்வரும் அட்டவணையால் எளிதில் கண்டு கொள்ளலாம்.
உயிர் எழுத்து: 12 | |||||||||||||
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஒள | 12 | |
உயிர்மெய் | |||||||||||||
எழுத்து: 93 | |||||||||||||
1 | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ | 12 |
2 | ங | 1 | |||||||||||
3 | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ | 12 |
4 | ஞ | ஞா | ஞி | ஞெ | ஞே | ஞொ | 6 | ||||||
5 | ட | 0 | |||||||||||
6 | ண | 0 | |||||||||||
7 | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ | 12 |
8 | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ | 12 |
9 | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ | 12 |
10 | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ | 12 |
11 | ய | யா | யு | யூ | யோ | யௌ | 6 | ||||||
12 | ர | 0 | |||||||||||
13 | ல | 0 | |||||||||||
14 | வ | வா | வி | வீ | வெ | வே | வை | வௌ | 8 | ||||
15 | ழ | 0 | |||||||||||
16 | ள | 0 | |||||||||||
17 | ற | 0 | |||||||||||
18 | ன | 0 |
மொழிக்கு முதலாக வரும் 105 எழுத்துகளின் வரிசைமுறையில் அகராதிச் சொற்கள் இடம்பெறினும் ஒரு சொல்லில் பின்வரும் எழுத்துகளிலும் அகரநிரல் முறைகொண்டு அவை முறைப்படுத்தப்பெறும். அகரவரிசையை எடுத்துக்கொண்டால் அகரத்தின் பின் ககரம் முதல் னகரம் ஈறான 18 மெய்வருக்க எழுத்துகளும் வரும். இவை ககரம் முதலிலும் னகரம் ஈற்றிலும் அமையுமாறு எழுத்து வரிசை முறையில் அடைவு செய்யப்பெற்றிருக்கும்.
இரண்டாம் எழுத்தாகக் ககர வருக்கம் முதல் னகர வருக்கம் வரை மெய்யும் உயிர்மெய்யும் வருதல் இயல்பு. இவற்றுள் எதனை முதலில் வைப்பது என்பதனையும் கவனித்தல் வேண்டும். சதுரகராதி முதல் சென்ற நூற்றாண்டில் வந்த அகராதிகள் எல்லாம் உயிர்மெய்யை முதலில்கொண்டு மெய்யை ஈற்றில் அமைத்து வந்துள்ளன. தமிழ்ச்சங்க அகராதி எனப்படும் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பேரகராதியை ஆக்கிய நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளை இரண்டாம் எழுத்தாக முந்திய அகராதிகள் கொண்ட முறையை விடுத்து, மெய் முன்னாகவும் உயிர்மெய் பின்னாகவும் அமையுமாறு முறைப்படுத்தினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வழிகாட்டிய இவர்தம் அகரநிரல் முறையையே இந்த நூற்றாண்டில் வந்த அகராதிகள் பலவும் பின்பற்றலாயின. சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி கதிரைவேற்பிள்ளை முறையைப் பின்பற்றியது. பெரும் பேராசிரியர்களாக விளங்கிய டாக்டர் உ.வே. சாமிநாதையர், பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை முதலியோரும் இம் முறையையே பின்பற்றித் தாம் பதிப்பித்த நூல்களில் அகரநிரல் அமைத்துள்ளனர். இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலியிலும் இரண்டாம் எழுத்தில் மெய் முன்னாக உயிர்மெய் பின்னாக வரும் முறைமையே தழுவப்பட்டுள்ளது. இரண்டாம் எழுத்து மட்டுமன்று; அதன்பின் தொடரும் எழுத்துகளிலும் மூன்று, நான்கு, ஐந்தாம் எழுத்துவரையிலுங்கூட அகரநிரல் முறைப்படி சொற்கள் அடுக்கப் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக அருள், அருள்வாக்கு, அருள்(ளு)தல், அருளகம், அருளம், அருளரசி, அருளல், அருளவம், அருளறம், அருளாழி, அருளாழிவேந்தன், அருளிச்செயல், அருளிப்பாடு எனவரும் சொற்கோவையை உற்றுநோக்கின் மேற்குறித்த அகரநிரல்முறை விளக்கமாகும்.
நாம் விரும்பும் சொற்களை எளிதில் பார்த்தறிவதற்காகவே அகராதியின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இரண்டு பத்தியின் தலைப்பிலும் இரண்டு சொற்கள் தரப்பட்டிருக்கும். முதற்பத்தியின் தலைப்பில் இருப்பது தலைமொழி அல்லது முடிமொழி எனப்படும். அது அப் பத்தியின் தொடக்கமாக அமையும் சொல்லாகும். இரண்டாம் பத்தியின் தலைப்பில் இருப்பது கடைமொழி அல்லது வால்மொழி எனப்படும். இது இரண்டாம் பத்தியின் இறுதிச்சொல்லாக இருக்கும். தலைமொழிக்கும் கடைமொழிக்கும் இடையே அவற்றிற்குட்பட்ட அகரவரிசைச் சொற்கள் இடம்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக, 'உருவத்திருமேனி' என்பது தலைமொழியாகவும் 'உரைகோள்' என்பது கடைமொழியாகவும் இத் தமிழ்-தமிழ் அகரமுதலியின் 168ஆம் பக்கத்தில் வருவது காண்க. அவ்விரண்டிற்கும் இடைப்பட்டுத் தரப்பட்டுள்ள அகரநிரல் சொற்களையும் நோக்கி அகரவரிசையின் முறைவைப்பைக் காணலாம். உருவம், உருவாணி, உருவொளி, உருளரிசி, உருளை, உரை, உரைகல் முதலிய சொற்களைக் காணவேண்டுமாயின் இவ் விரண்டு தலை கடைமொழிகளைக் கொண்ட பக்கத்தில் எளிதில் காணலாம் என்பதனை அறிதல் வேண்டும்.
மேலும், எழுத்து வேறுபாடுகளைக் கருதியும் அகரநிரல் பார்க்கவேண்டிய இடங்களும் உள. இதுகுறித்துத் தமிழாசிரியர் சே. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் தெரிவிக்கும் கருத்துரை வருமாறு:
"அருஞ்சொற்பொருள் தேடுகையில் ரகர றகர பேதத்தையும், லகர ளகர பேதத்தையும, ணகர னகர பேதத்தையும் , குறில் நெடில் பேதத்தையும் , பெயர் வினை பேதத்தையும அறிதல் மிகவும் அவசியம். உதாரணமாக இறை என்னுஞ் சொற்பொருள் தேடுகையில் இரை என்னுஞ் சொற்கும் பொருள் தேடவேண்டும்; தாள் என்னும் மொழிக்குப் பொருள் பார்க்கையில் தால் என்னும் பதத்திற்கும் பொருள் பார்க்கவேண்டும்; தெண் என்னும் வார்த்தைக்குப் பொருள் பார்க்கையில் தென் என்னும் பதத்திற்கும் பொருள் பார்க்கவேண்டும். களை என்னும் மொழிக்குப் பொருள் பார்க்கையில் காளை என்னும் பதத்திற்கும் பொருள் பார்க்கவேண்டும். இம் முறைப்படி அகராதி பார்த்தாற்றான் அகராதி பார்த்தலால் எய்தவேண்டிய பயனை எய்தலாம்."
(தமிழ் வியாசம்,பக்.148)
இவர்கள் கூறுமாறு அகரமுதலியில் தொடர்புடைய சொற்களையும் பொருள்களையும் பார்த்துவந்தால் மொழியறிவு பெருகும்; பிழையின்றி
எழுதும் ஆற்றல் மிகும். ஒருவர் தம்முடைய பேச்சிலும் எழுத்திலும் ஏற்புடைய சிறப்பான சொற்களைப் பயன்படுத்துவதற்கு இத்தகு அகரமுதலிப் பயிற்சி கைகொடுத்து உதவும். ஆகவே, மாணவர் முதல் ஆசிரியர் ஈறாக மொழித்திறம் பெற விழைவார்க்கு எல்லாம் கைகொடுத்து உதவும் அருந்துணைவனாக
அகரமுதலிகள் விளங்குகின்றமை காணலாம். தமிழ்க் கல்வியில் மேன்மைபெற விரும்புவார் எல்லார்க்கும் இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலி உற்ற துணையாய் உதவும் என நம்புகிறேன்.
நன்றியுரை:
அகரமுதலிப் பெரும்பணியை அறிவாற்றல்களில் எளியனாகிய யான் தொகுத்து நிறைவு செய்யத் துணைநின்றவை சான்றோர்களின் அருள்நோக்கும் எனக்குப் பயிற்சி அளித்த பேராசிரியப் பெருமக்களின் வாழ்த்துமேயாகும். இப்பெரியார்களை இங்கு நினைவுகூர்ந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், தமிழ், என்னும், பத்தியின், இரண்டாம், எளிதில், வரும், அகரநிரல், சொற்கள், எழுத்து, பக்கத்தில், அகராதி, எடுத்துக்காட்டாக, என்பது, உயிர்மெய், முதலாக, கொண்ட, உதவும், பார்க்கவேண்டும், எனப்படும், பேதத்தையும், காணலாம், பார்க்கையில், பதத்திற்கும், அகராதிகள், மேலும், ஒவ்வொரு, இரண்டு, காண்க, தரப்பட்டிருக்கும், விளக்கம், உள்ள, ஓத்து, சொல்லுக்கு, முதலில், எல்லாம், அல்லது, நாம், மெய்