தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
தமிழ்-ஆங்கில, ஆங்கிலத்-தமிழ் அகராதிகள்:
அதன்பின் 1870-ல் விசுவநாதபிள்ளை இவ்வகையில் 'Classical Tamil- English Dictionary', என்னும் ஒரு பெரிய அகராதியை உருவாக்கி வெளியிட்டுள்ளார். 'பிராஞ்சகராதி' என்பது இரு தொகுதிகளாக 1984-ல் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஆங்கில-தமிழ்ச் சிற்றகராதிகள் பல வந்துள்ளன. டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம் வெளிட்ட ஆங்கில-தமிழ் அகராதி ஒரு பேரகராதியாகும். இது சுருக்க ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியை ஒட்டி அமைக்கப்பெற்றது. 1223 பக்கங்கள்கொண்ட இந்த அகராதியை 1963-ல் தொடங்கி 1965-ல் முற்றுவித்தது ஒரு பெருஞ்சாதனையாகும்.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்:
இதுவரை சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தோன்றிய அகரமுதலிகளின் வரலாறுகளையும் அவற்றின் தன்மை, பயன்பாடு முதலியவற்றையும் பார்த்தோம். இனி, அண்மையில் உருவாகி இப்பொழுது வெளியிடப்பெறுகின்ற தமிழ்-தமிழ் அகரமுதலி தோன்றி வளர்ந்து நிறைவு எய்திய பின்புல வரலாற்றை நோக்குவோம்.
தொடக்க காலத்தில் தமிழக அரசின் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் ஒரு பணியாக நூல் வெளியீடு தொடங்கியது. பின்னர்ப் பள்ளிகள் கல்லூரிகளுக்கான பாடநூல் தேவைகளை நிறைவேற்றும் பெரும்பணி சாரவே, அதனின்றும் கிளைத்துப் பாடநூல் நிறுவனம் தோற்றுவிக்கப்பெற்றது. பள்ளிகள் கல்லூரிகளுக்கான பாடநூல்களையும் பொதுமக்கள் பயில்வதற்கான தரமான கலை, அறிவியல் நூல்களையும் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுவருகின்றது. பள்ளி கல்லூரிகளில் பயில்வார்க்கும் தாமே முயன்று கற்பார்க்கும் துணைநிற்கும் வகையில் தமிழ்-தமிழ் அகரமுதலி ஒன்றைத் தொகுப்பித்து வெளியிட இந்நிறுவனம் அவாக் கொண்டது.
தமிழ்-தமிழ் அகரமுதலியின் தோற்றம்:
மாண்புமிகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் கல்வி அமைச்சராயும், பேராசிரியர் சு. ந. சொக்கலிங்கம் அவர்கள் மேலாண்மை இயக்குநராயும், திரு பா. மாணிக்கம் அவர்கள் செயலாளராயும் இருந்த காலத்திலே 1975-ல் இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலிக்கு வித்திடப் பெற்றது. இதனை ஆக்குவதற்கு ஊக்கமளித்து ஆணை பிறப்பித்த நாவலர் அவர்களுக்கும் செயற்படுத்திய ஏனையோர்க்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகரமுதலியின் தொகுப்புப் பணி:
தமிழ் வளர்ச்சித் துறையில் வெளியிடத் தொடங்கிய காலமுதல் பல்லாண்டுகளாகப் பல நூல்களைப் பதிப்பித்து வந்ததோடு தமிழ்நூல் விவர அட்டவணைக்கான திட்டமிட்டுப் பல தொகுதிகளையும் நான் உருவாக்கி வெளிப்படுத்தியதைத் தமிழ் வளர்ச்சித் துறையினர் நன்கு அறிவர். பாடநூல் நிறுவன வெளியீடுகள் பலவற்றின் பதிப்பாசிரியனாயும், ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்கான பாடநூல் தொகுப்பாசிரியனாயும், தொடக்கப்பள்ளி நூல்களுக்கு மேலாய்- வாளனாயும் பல பணிகளில் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன்; மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை, பேராசிரியர் அ. கி. பரந்தாமனார் முதலியோருடன் சில நிறுவன ஆய்வுக்குழுக்களில் பணிசெய்யும் வாய்ப்பும் பெற்றிருந்தேன். என் பணி நேர்மையை நன்கு அறிந்திருந்த தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் செயற்குழு, அகரமுதலி தொகுக்கும் பணியினை எனக்கு அளித்தது. நிறுவனத்தின் செயற் குழுவுக்கு நான் பெரிதும் கடப்பாடுடையேன்.
எனக்குத் துணையாக இரண்டு பதிப்பாசிரியர்களையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் அமர்த்திக்கொண்டு அகரமுதலிப் பணியை ஓராண்டிற்குள் நிறைவேற்றித் தருமாறு 15-2-1975-ல் ஆணை பிறப்பித்தனர். அப்பொழுது நான் சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சித் துறைக்குத் தலைவனாயிருந்தமையால் பல்கலைக்கழகத்தாரின் இசைவினையும் பெற்றேன். என் பிற பணிகளுக்கிடையில் அகரமுதலித் தொகுப்பினையும் கவனித்து ஆவன செய்துவரலானேன்.
அலுவலகம்:
சென்னையிலே மேலை மாம்பலத்தில் உள்ள என் இல்லமாகிய 'கவிமணி நிலைய' த்தில் என் நூலகப் படிப்பறையை அலுவலக அறையாகவும் அமைத்துக்கொண்டேன். முதுகலைப் பட்டம் பெற்றவர்களாகிய திரு. சிவ. பச்சையப்பன் என்பவரும் திரு. அ. நாகலிங்கம் என்பவரும் பதிப்பாசிரியர்களாக அமைந்தனர். திருமதி கலையரசி அலுவலகப் பணிகளை- குறிப்பாக எழுத்துப்பணி ஒப்புநோக்கும் பணிகளைச் செய்துவரலானார். பாடநூல் நிறுவனப் பதிப்பாசிரியர் நிறுவனச் சார்பில் அவ்வப்போது அகரமுதலிப் பணியைக் கண்காணித்து வந்ததோடு அதனை நெறிப்படுத்தி ஆக்குதற்கும் உறுதுணையாயிருந்தார்.
கருவிநூல்கள் தொகுத்தல்:
அகரமுதலிப் பணிக்காக முன்னர் வெளிவந்த சதுரகராதி தொடக்கமான பல பேரகராதிகளையும் சிற்றகராதிகளையும், மாணவர்க்கு என வெளிவந்த கையகராதி முதலியவற்றையும் ஒருங்குதிரட்டி வைத்துக்கொண்டேன். இவற்றுள் விலைக்குக் கிட்டிய நூல்களை வாங்கியும் பிறவற்றை நண்பர்களிடமிருந்து பெற்றும் நிரப்பிக்கொண்டேன். மாணவர்க்காக நிறுவனம் வெளியிட்ட பாடநூல்களையும் கலைச்சொற்கள் போன்ற சிறு வெளியீடுகளையும் சேர்த்து வைத்துக்கொண்டேன்.
அமைப்புத் திட்டம்:
அகரமுதலிக்கான அமைப்புத் திட்டம் ஒன்றை வகுத்தமைத்து நிறுவனத்தின் ஒப்புதலையும் பெற்றேன். இத் தொகுப்பிற்கென வரையறுத்துக்கொண்ட விதிமுறைகள் வருமாறு; இத் தொகுப்பில் பொதுவகையான எல்லார்க்கும் பயன்படத்தக்க சொற்களே எடுக்கப்பெற்றன. இலக்கிய இலக்கண வழக்குச் சொற்களும் எல்லாத் துறைகளுக்கும் பயன்படத்தக்க பொதுமைச் சொற்களும் எடுத்துக்கொள்ளப்பெற்றன.
இன்றைய வழக்குச் சொற்களுள் பல வெளிப்படையாய் எல்லார்க்கும் பொருள் விளங்கும் எனக் கருதப்படினும் தமிழ்ப் பயிற்சியில் தொடக்கநிலையில் உள்ளார்க்கும், கல்விபயிலும் மாணவர்க்கும், பிறமொழியாளர்க்கும் அவை அறிமுகமில்லாத சொற்களாயிருக்கும். எனவே, இயற்சொற்களுள்ளும் இன்றைய எளிய செஞ்சொல் வழக்குகளும் சேர்த்துக்கொள்ளப்பெற்றன.
கொச்சைச் சொற்களாகிய திருந்தாப் பேச்சும் சிதைவுச் சொற்களும் மாணவர் உள்ளத்தில் புகாமல் தடுத்தால்தான் உண்மைச் சொல்லுருவம் காண்பதில் ஊக்கம் கொள்வர். எனவே, இதில் கொச்சைச் பேச்சு, சிதைவுச் சொற்கள் ஆகியவை எடுத்துக்கொள்ளப் பெறவில்லை.
வினைச்சொற்கள் முந்திய அகரமுதலிகளிற்போலவே தொழிற்பெயர் வடிவிலேயே தரப்பெற்றுள்ளன. வினையும் பெயருமாய்ப் பொருள்பயக்கும் சொல் வடிவங்களும் பல உண்டு. அத்தகு இடங்களில் பெயர்ச்சொற் பொருளை முன்வைத்து அடுத்து வினைப் பொருள் காட்ட அச் சொல்லினை அடுத்து வளைவுக் குறிக்குள் (வி) என்னும் குறிப்புத் தந்து தனிப்பட விளக்கம் தரப்பட்டுள்ளது.
வினைவடிவ வேறுபாடுகள் எல்லாம் எடுத்துக்கொள்ளப்பெறவில்லை, என்றாலும் பயன்பாடு கருதி ஒருசில எச்சிவினை முதலியன எடுத்துக்கொள்ளப்பெற்றன.
தமிழில் பயின்றுவந்துள்ள வடசொற்களுள் இலக்கிய ஆட்சி பெற்றனவும் இன்றைய வழக்கில் தமிழுருவில் மாறி வழங்குவனவுமான சொற்கள் எடுத்துக்கொள்ளப்பெற்றன.
நூற்பெயர், ஆசிரியர் பெயர், காவிய மாந்தர் பெயர், ஊர்ப்பெயர் முதலிய இடப் பெயர்கள் போல்வனவாகிய சிறப்புப் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
ஆயினும் காரணவகையால் வந்து சொற்பொருள் விளக்கவேண்டும் நிலையில் உள்ள 'அகத்தியம்' போன்ற சில சிறப்புப் பெயர்கள் மட்டும் தேர்ந்துகொள்ளப்பட்டன. 'அகத்தியம்' என்பது அவசியம், இன்றியமையாதது என்னும் பொருளில் வரும் ஒரு பெயர். இதுவே அகத்தியரால் இயற்றப்பெற்ற நூலுக்குப் பெயராகவும் அமைகிறது. இவ்வாறு பொதுப் பெயராயும் சிறப்புப் பெயராயும் வரும் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிறப்புப் பெயர்களுள் வேறுவேறு ஏதுக்களால் பெயர்பெறும் காரணப்பெயர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. காகுத்தன் , பற்குனன், மைதிலி போன்றவற்றை வடமொழியில் 'தத்திதாந்த நாமம்' என்பர்.
அன்றியும் குறுகி வழங்கும் மரூஉ வழக்கான சில சிறப்புப் பெயர்களும் சேர்க்கப் பெற்றன. ' மயிலை ' என்பது மயிலாப்பூரைக் குறிக்கும். ' முகவை ' என்பது இராமநாதபுரத்திற்குரிய மாற்றுப் பெயர். இவைபோல்வனவும் தழுவப்பெற்றன.
நிகண்டு ஆட்சி மட்டுமேயுடைய சொற்கள் நீக்கப்பெற்றன.
கலைச்சொற்களுள் இன்றியமையாத பொதுச்சொற்கள் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. கலைச்சொற்போலவே ஏற்புடைய புத்தாக்கச் சொற்களும் எடுத்துக்கொள்ளப்பெற்றன.
தொகைப்பெயர்கள் பெருவழக்குடைய இருசுடர், முத்தீ என்றாற்போல்வன சேர்த்துக் கொள்ளப்பெற்றன.
தனிப்பொருள் சுட்டும் தொடர்மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
கைலை-கயிலை, வைத்தியன்- வயித்தியன் என்பவற்றுள் ஐகாரமும் அகரமும் ஒத்திருக்கின்றன. நிலம் - நிலன், அறம் - அறன், பந்தல் - பந்தர், கொம்பு - கொம்பர் போல்வனவான வடிவ வேறுபாடுகளும் கருதப்பெற்றன. இவைபோன்றே உணா - உண -உணவு; நிலா - நில - நிலவு; முழா - முழ - முழுவு என ஆகார ஈற்றுச் சொல்லின் வடிவவேற்றுமையும் உரிய இடங்களில் சுட்டப்பெற்றன.
இவ்வாறாகச் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகு கவனம் செலுத்தப்பெற்றது. தமிழ் லெக்சிகனில்போல அகரவரிசையில் மெய் முன்னும் உயிர்மெய் பின்னுமாக வரும் வரிசைமுறை தழுவப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருள்கள் தனித்தனி சீட்டுகளில் பதிவு செய்யப் பெற்றன.
செய்ம்முறை:
தமிழ் பயில்வார் அனைவர்க்கும் பள்ளியிற் பயிலும் மாணவர் தொடக்கமாகப் பல்கலை பயிலும் முதுகலை மாணவர், ஆசிரியர் முதலியோர்க்கெல்லாம் இது பயன்படத்தக்க வண்ணம் உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக்கொண்டது ஆதலின், பாடப்புத்தகங்களிலிருந்தே சொல் தொகுப்புத் தொடங்கப்பெற்றது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பாடநூல்களில் தரப்பெற்ற அருஞ்சொற்கள் முதலில் எடுத்துக்கொள்ளப்பெற்றன.
அடுத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வெளிவந்த சிற்றகராதிகளுள் எட்டுத் தெரிந்துகொள்ளப்பெற்றன. அவையாவன; அகராதிச்சுருக்கம், இளைஞர் தமிழ்க் கையகராதி, தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி, கழகத்தமிழ்க் கையகராதி, மாணவர் தமிழகராதி, நவீன தமிழகராதி, கழகத் தமிழகராதி, கோனார் தமிழ்க் கையகராதி என்பன. இந்த அகராதிகளுள் ஒவ்வொன்றையும் முறையே எடுத்து ஏற்கெனவே எழுதப்பெற்றிராத சொற்கள், புதிய பொருகள் ஆகியவை இணைத்துக்கொள்ளப் பெற்றன. இவ்வாறாக இந்த அகராதிகளில் இடம்பெற்ற சொற்பொருள்கள் அனைத்தும் எடுத்து எழுதிக்கொள்ளப்பெற்றன.
தமிழ் - தமிழ் அகராதிகளுள் மிகப் பெரிய யாழ்ப்பாணம் கு. நீதிபதி கதிரைவேற் பிள்ளை தொகுத்த தமிழ்ச்சங்க அகராதி எனப்படும் தமிழ்ச் சொல்லகராதி. இதனினும் பெரிதாக உள்ள இருமொழித் தமிழ்ப் பேரகராதி சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான தமிழ் லெக்சிகன். இவ்விரு பேரகராதிகளையும் உடன்வைத்து ஏற்கெனவே தொகுத்து அமைத்த சொற்பொருள்களைச் சரிபார்த்துச் செப்பம் செய்தும், அவற்றில் இடம்பெறாத இன்றைய வழக்கிற்கேற்பப் பயனுடைய புதிய சொற்பொருள்களை இணைத்தும் இந்த அகராதி உருவாக்கப்பெற்றது.
இதுகாறும் வெளிவந்துள்ள அகராதிகள் பலவற்றையும் நோக்கினால் அவை ஒவ்வொன்றும் அவ்வக் காலத் தமிழின் வளர்நிலையைப் படம்பிடித்துக் காட்டும்;
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தமிழ், பாடநூல், எடுத்துக்கொள்ளப்பெற்றன, சிறப்புப், நிறுவனம், சொற்கள், மாணவர், ஆங்கில, கையகராதி, சொற்களும், என்பது, பெயர்கள், பெயர், இன்றைய, பெற்றன, அடுத்து, தமிழகராதி, வரும், தமிழ்ப், உள்ள, சென்னைப், அகராதி, தமிழ்ச், அகராதியை, என்னும், தமிழ்நாட்டுப், அகரமுதலி, அகரமுதலிப், வெளிவந்த, நிறுவனத்தின், நான், திரு, பயன்படத்தக்க