தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
சொற்பொருள் உணர்த்தும் மரபு:
அகரமுதலியின் பயன் ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் பொருள்களுக்குரிய பெயர் விளக்கங்களையும் எண்ணிய மாத்திரத்தில் எளிதில் அறிவிப்பதேயாம் . சொற்பொருள் உணர்த்தும் மரபைத் தொடங்கிவைத்த முதல்வர் தொல்காப்பியரேயாவார் . இவர் தாம் ஆக்கிய பெருநூலாகிய தொல்காப்பியச் சொல்லதிகார உரியியலில் 120 உரிச்சொற்களின் பொருளை நூற்பாவில் அறிவித்துள்ளார் . இதனால் இவரே சொற்பொருள் காட்டும் ' உரிச்சொற் பனுவல்கள் ' தோன்ற அடிகோலியவராகிறார் .
இவருடைய நூலின் பிற பகுதிகளிலும் சொற்பொருள் சுட்டும் இடங்கள் பலவாகும் . வழக்குமொழி , செய்யுள்மொழி என்னும் இரண்டன் மரபுகளையும் எடுத்துரைப்பதோடு அவ் விருவகை வழக்கில் மட்டுமே தனித்துவரும் சிறப்பு மரபுகளையும் ஆங்காங்கே சுட்டிச் செல்லுகின்றார் .
தமிழ்மொழியில் உள்ள பெயர் , வினை , இடை , உரி என்னும் நால்வகைச் சொற்களையும் நன்கனம் விளக்கியுள்ளார் . இச் சொற்கள் இயற்சொற்கள் , திரிசொற்களாய் அமைந்துகிடக்கும் பான்மையையும் எடுத்துரைத்துள்ளார் . உருவம் சிதைந்து மாறிவரும் மரூஉ வழக்குகளையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை . தமிழ்நாட்டினைச் சுற்றியுள்ள பிற நாடுகளிலிருந்து வந்து புகுந்த வேற்றுமொழிச் சொற்களையும் ' திசைச்சொல் ' என்று ஏற்றுக்கொள்கிறார் .
அந் நாளிலேயே சமசுகிருதம் எனப்படும் வடமொழி வழக்குகள் தமிழ்வழக்கில் வந்து புகுந்தமையால் அவற்றையும் செய்யுட்குரிய சொல்லாக ஏற்றுக்கொண்டு அவற்றை வடசொல் என இனங்கண்டு கூறுகிறார் . அவ் வடசொற்கள் தமிழில் வருங்கால் அமையும் நெறிமுறைகளையும் வகுத்து உரைக்கின்றார் .
திவாகரம்:
தொல்காப்பியரின் வழிமுறையைத் தழுவிய நூல்கள் சில அவர் காலத்தை அடுத்தும் பின்னரும் தோன்றியிருக்கலாம் . எனினும் , கி பி . எட்டாம் நூற்றாண்டில் திவாகரர் ஆக்கிய ' திவாகரமே ' தொல்காப்பியரின் வழியில்வந்த முதற்பெரும் நூலாக நமக்குக் கிட்டியுள்ளது . இந் நூல் சொற்பொருள்களையும் பொருள்களுக்குரிய பல பெயர்களையும் வகுத்தும் தொகுத்தும் தொகைப் பெயர் விளக்கங்களைச் சேர்த்தும் பன்னிரு தொகுதிகளில் விளக்கம் தருகின்றது .
உரிச்சொற் பனுவல்:
உரிச்சொற் பொருளைத் தொல்காப்பியர் விளக்கியமையை அடியொற்றியே சொற்பொருள் விளக்கமாக அமைந்த நூல்களும் நூற்பா முதலிய பாவகைகளில் விளக்க முற்பட்டமையால் அவ்வகை நூல்களை ' உரிச்சொல் ' என்றும் , ' உரிச்சொற் பனுவல் ' என்றும் பின்னையோர் போற்றுவாராயினர் .
"இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்றிசை நூலுள் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் ; பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே " ( நன். 460 )
என நன்னூலில் பவணந்திமுனிவர் பரந்துபட்ட பெயர்களை அறியவேண்டின் , 'பிங்கலம்' முதலாக வந்துள்ள உரிச்சொல் - தொகுதிகளில் காண்க என்கிறார் . திவாகரத்தை அடுத்து வந்த சொற்பொருள் விளக்கப் பெருநூல் பிங்கலமுனிவர் ஆக்கித்தந்த பிங்கலம் . இந்த இரு நிகண்டுகளும் நூற்பாவினால் இயன்றவை .
நிகண்டு:
பின்னாளில் மண்டலபுருடர் என்பார் ' சூடாமணி நிகண்டு ' என்னும் உரிச்சொற் பனுவலை விருத்தப்பாவில் ஆக்கியளித்தார் . நிகண்டுநூல்களை மனப்பாடம்செய்து போற்றி வந்த முன்னையோர் இவர் எடுத்துக்கொண்ட விருத்தப்பாவகை மனனம் செய்ய எளிமையாயிருந்தமையின் , இந் நிகண்டினையே மிகுதியும் போற்றிக் கற்றுவரலாயினர் . மண்டலபுருடர் தம் நூலின் பாயிரத்தில் , ' நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் ' என்று உரிச்சொற் பனுவல்களை ' நிகண்டு ' என்னும் புதுப்பெயரால் சுட்டலாயினார் .
' நிகண்டு ' என்னும் வடசொல்லுக்குத் ' தொகுதி ' என்பது பொருள் . தெய்வப்பெயர் , மக்கட்பெயர் முதலியவாகத் தொகுத்து விளக்கம் தருவது என்பதாம் . சூடாமணி நிகண்டு கற்றாரிடையே மிகுதியும் போற்றப் பெற்றமையால் ஏனைய உரிச்சொற் பனுவல்களையும் ' நிகண்டு ' எனச் சுட்டும் வழக்கம் மிகுதியாயிற்று .
நிகண்டுகளின் உள்ளுறை:
நிகண்டுகள் , ஒரு பொருளுக்கு உரிய பல பெயர்களையும் தெய்வப்பெயர் , மக்கட்பெயர் , விலங்குப்பெயர் முதலியனவாக வகுத்தும் தொகுத்தும் தருகின்றன . இவற்றோடு ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களையும் விளக்கும் பகுதி ஒன்றும் காணப்பெறும் . இதுவே அகராதிநிலையில் பயன்பாடுள்ள பகுதி . இதனால் சூடாமணி நிகண்டில் ஒருசொற் பல்பொருள் உரைக்கும் பதினொன்றாம் தொகுதியைப் 'பதினொராம் நிகண்டு ' எனத்தனியாகவும் அச்சிட்டுப் போற்றுவாராயினர் . அகராதிமுறை வழக்கிற்கு வந்தபோது இத்தொகுதிச் சொற்களை அகராதியாக மாற்றி அமைத்துச் ' சொற்பொருள் விளக்கம் ' என்னும் ஒரு நூலை 1850-ல் அண்ணாசாமிப்பிள்ளை என்பார் வெளியிட்டார் .
பல்வகை நிகண்டுகள்:
இருசுடர் , முக்குணம் என்றாற்போல் வரும் தொகைப்பெயர் விளக்கமாயும் நிகண்டுகளில் ஒரு பகுதி அமைகின்றது . ஆகவே , நிகண்டுகளில் ஒருபொருட் பல்பெயர் , ஒருசொற்பல்பொருள் , தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பாகுபாடுகளைக் காணலாகும் .மேலே சுட்டிய மூவகைப் பொருள்களையுங்கொண்ட நூல்களும் அவற்றுள் ஒவ்வொரு பகுதியை மட்டும் எடுத்து விளக்கும் நூல்களும் காலப்போக்கில் பலவாக வந்துள்ளன . மூவகையான சொற்கோவைகளையும் கொண்ட நிகண்டுகள் திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, கைலாச நிகண்டு, பல்பொருட் சூடாமணி, தமிழ் உரிச்சொற் பனுவல் முதலியனவாம் .
ஒருபொருட் பல்பெயர்களை மட்டும் தனியாக எடுத்துக்காட்டும் நிகண்டு நாமதீப நிகண்டு மட்டுமே .
ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த தனி நிகண்டுகள் அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாநார்த்த தீபிகை என்பனவாம் . தொகைப்பெயர் விளக்கமாகத் தனிப்பட அமைந்த நிகண்டுநூல் பொருட்டொகை நிகண்டு ஒன்றுமே . இவ்வாறாக உரிச்சொற் பனுவல்கள் திவாகரம் முதற்கொண்டு 1984-ல் கவிராசபண்டித இராமசுப்பிரமணிய நாவலரின் தமிழ் உரிச்சொற் பனுவல்வரை 25 நூல்களுக்கு மேற்பட உள்ளன . இலக்கண நூல்கள் பல பல்வேறு காலத்தில் தோன்றியதுபோல உரிச்சொற் பனுவல்களும் பலவாக ஆக்கப்பெற்று வந்துள்ளன என்பது தெரியவரும் . இதனால் சொற் பொருள் காணும் முறைமையான வளர்ச்சியையும் நிகண்டுநூல்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன . நிகண்டுகளில் அமைந்த பாவகை: நூற்பா, வெண்பா, ஆசிரியவிருத்தம், பிறவகை விருத்தம், கட்டளைக்கலித்துறைப் பாக்களிலும் நிகண்டுகள் ஆக்கப்பட்டிருக்கின்றன . ஆயினும் , நூற்பாவினால் அமைந்த நிகண்டுகளே மிகுதியாகக் காணப்படுகின்றன . திவாகரம் , பிங்கலம் , அகராதி நிகண்டு , பல்பொருட் சூடாமணி , பொதிகை நிகண்டின் இரண்டாம் பகுதி , கைலாச நிகண்டு , பொருட்டொகை நிகண்டு , தமிழ் உரிச்சொற் பனுவல் என்னும் எட்டு நூல்கள் நூற்பாவினால் அமைந்துள்ளன . வெண்பாவினால் ஆன நிகண்டுகள் உரிச்சொல் நிகண்டும் நாமதீப நிகண்டும் . கட்டளைக்கலித்துறைப்பாவினால் இயன்றவை கயாதரம் , பாரதி தீபம் , நவமணிக் காரிகை நிகண்டு என்னும் மூன்றுமாம் . அசிரியவிருத்தம் முதலிய விருத்தப் பாக்களினால் அமைக்கப்பெற்ற நிகண்டுகள் நூற்பாவினாலான நிகண்டுகளின் தொகை அளவை எட்டுகின்றன . நிகண்டு சூடாமணி , வேதகிரியார் சூடாமணி , ஆசிரிய நிகண்டு , பொதிகை நிகண்டின் முதற் பகுதி , அரும்பொருள் விளக்க நிகண்டு , சிந்தாமணி நிகண்டு , விரிவு நிகண்டு, அபிதானந் தனிச்செய்யுள் நிகண்டு , நாநார்த்த தீபிகை என்னும் நூல்கள் விருத்த வகைகளினால் அமைந்தன * .
* இங்குச் சுட்டிய நிகண்டுகளின் விரிவான வரலாற்றை யான் எழுதிய ' நிகண்டுச் சொற்பொருட்கோவை - தெய்வப்பெயர் ' என்னும் நூலினுள் காணலாம் . மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வெளியீடு - 1982 .
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நிகண்டு, உரிச்சொற், என்னும், சூடாமணி, நிகண்டுகள், சொற்பொருள், அமைந்த, பிங்கலம், பகுதி, உரிச்சொல், பனுவல், திவாகரம், நூல்கள், தமிழ், நிகண்டுகளில், தொகைப்பெயர், நிகண்டுகளின், விளக்க, இதனால், பெயர், விளக்கம், நூல்களும், நூற்பாவினால், தெய்வப்பெயர்