தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
தமிழறிஞர்களின் உளப்பாங்கையும் உணர்த்தும். அவ்வகையில் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் எழுந்துள்ள இந்த அகரமுதலியும் இக்காலத் தமிழ்
வளர்ச்சியைக் குறிக்கோளாகக்கொண்டு தொகுக்கப்பெற்றுள்ளது. அறிஞர் பெருமக்களின் கருத்துகளையும் அவர்தம் நோக்கையும் போக்கையும் அடியொற்றி இந்தத் தமிழ் - தமிழ் அகரமுதலி ஆக்கப்பெற்றுள்ளது.இந்த அகரமுதலியைத் தொகுப்பதற்கு ஓர் ஆண்டுக்காலமே ஒதுக்கப்பெற்றது. எனினும், பணி வளர்ந்துவந்த நிலையில்
அந்தக் கால அளவு போதவில்லை. பின்னர் ஆறுமாதமும், அடுத்து நான்கு மாதமும் வேண்டிப்பெற்று ஓராண்டு பத்துத் திங்களில் இப் பணியினை நிறைவு செய்தேன்.
பணிக்காலமும் அகரமுதலி வளர்ச்சியும்:
பணியின் முன்னேற்றம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கைகளும் அனுப்பிவைக்கப்பெற்றன. நிறுவனப் பதிப்பாசிரியர் அவ்வப்போது அகரமுதலியின் வளர் நிலையைக் கண்காணித்து நிறுவனத்திற்கு விவரம் அறிவித்துவந்தார் . கடைசியாகப் பணி முன்னேற்றத்தை முற்றுமாய்க் கவனித்துப்பார்த்து ஆய்வு செய்வதற்காக அப்பொழுது தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராயிருந்த திரு. கொண்டல் சு. மகாதேவன் அவர்கள் நிறுவனத்தாரால் கேட்டுக் கொள்ளப்பெற்றார். திரு. மகாதேவன் அவர்கள் 29-11-76 ல் நேரில் வந்து பார்த்துப் பணிநிலை வளர்ச்சிகளை ஆராய்ந்து தம் பரிந்துரையை நிறுவனத்திற்குத் தந்தார். 'அ' முதல் 'வௌ' வரையிலான அகரமுதலியின் 3092 பக்கங்களில் அமைந்த கையெழுத்துப்படியை 31 தொகுதிகளாக அமைத்து 30-12-1976 ல் நிறுவனத்தில் ஒப்படைத்தேன்.
மேலாய்வுக்குழு:
அகரமுதலிப்படிகளை ஒப்படைத்தும் மூன்று ஆண்டுகளுக்குமேல் அப்படியே இருந்து வந்தது. திரு. குழந்தைவேல் அவர்கள் மேலாண்மை இயக்குநராய் வந்தபின் அகராதிப் படிகளை ஆராய்வதற்கு மேலாய்வுக் குழு ஒன்றை அமைத்தனர். இக் குழுவில் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் , பேராசிரியர் அ. மு. பரம சிவானந்தம், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கொண்டல் சு. மகாதேவன் மூவரும் இடம்பெற்றனர். இவர்கள் அகராதிப் படிகளைப் பார்வையிட்டு ஆராய்ந்து ஒருசில மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தனர். அவ்வாறே முற்றுமாய் மறு ஆய்வுசெய்து குழுவின்முன் மீண்டும் வைத்தேன். அதன்பின் அகரமுதலியைக் கூர்ந்து ஆராய்வதற்காக நான்கு முறைகளுக்குமேல் கூடினர். ஒவ்வொரு முறையும் நான்கைந்து நாள்கள் தொடர்ந்து குழுக்கூட்டம் நடைபெற்றது. யானும் உடனிருந்து குழுவினர் எழுப்பிய வினாக்கள், ஐயப்பாடுகள் முதலியவற்றிற்கு விளக்கம் தந்தும் திருத்தங்களை முறைப்படி அமைத்தும் வந்தேன். குழுவினர் பக்கம் பக்கமாய்ப் பார்வையிட்டு முற்றுவித்தனர். அதன்பின்பே அகரமுதலியின் அச்சுப்பணி தொடங்கப் பெற்றது.
அகரமுதலியின் அச்சுப்பணி:
அகரமுதலியின் அச்சுப்பணி நிறுவனப் படி - பதிப்பாசிரியர் மேற்பார்வையில் நடைபெறலாயிற்று. நான் வெளியூர்களில் பணி ஏற்று வந்துள்ளதால் சென்னையிலே பறங்கிமலையில் உள்ள பகத் அச்சுக்கூடத்தில் நடைபெறத் தொடங்கிய அச்சுப்பணியை உடனிருந்து கவனிக்க இயலாததாயிற்று. இதற்கெனப் புலவர் சா. சங்கரலிங்கம் அவர்களைப் பகுதிநேரப் படிதிருத்துநராக அமர்த்தி அச்சுப்படி பார்க்கச்செய்தனர். அவர் பார்த்தபின் ஒவ்வொரு நிலையிலும் முற்றுமாய் மீண்டும் ஆழ்ந்து பார்வையிட்டுப் படி-பதிப்பாசிரியர் அவர்கள் இதனை அழகுற அச்சிடுவித்தார்கள். இவர்களுடைய தமிழ்க் காதலும் பற்றும் அகரமுதலியைச் செப்பமுறப் பதிப்பிக்கப் பெருந்துணையாயின. இவர்களுடைய பணி பெரிதும் பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிடும் இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலி 1016 பக்கங்களில் அமைந்த ஒரு பேரகராதியாகவே ஆயிற்று. இதன்கண் 64,048 சொற்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்து வருக்க அடிப்படையில் சொல்தொகை பின்வருமாறு ;
அ | வருக்கம் | 4678 |
ஆ | ,, | 2019 |
இ | ,, | 2921 |
ஈ | ,, | 223 |
உ | ,, | 2160 |
ஊ | ,, | 399 |
எ | ,, | 1014 |
ஏ | ,, | 544 |
ஐ | ,, | 174 |
ஒ | ,, | 655 |
ஓ | ,, | 324 |
ஒள | ,, | 33 |
ஃ | ,, | 1 |
க | ,, | 10749 |
ங | ,, | 3 |
ச | ,, | 7538 |
ஞ | ,, | 180 |
த | ,, | 6545 |
ந | ,, | 4253 |
ப | ,, | 8336 |
ம | ,, | 5743 |
ய | ,, | 321 |
ர | ,, | 6 |
வ | ,, | 5229 |
______ 64,048 |
சொல் - பொருள் அமைப்பு முறை:
சொற்களின் அகரநிரலில் இரண்டாம் எழுத்தில் உயிர்மெய்க்கு முன் மெய்வரும் முறையே தழுவப்பட்டிருக்கிறது. தலைச்சொற்கள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து இணைப்புக் குறி (-) இட்டுப் பொருள்விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பொருள் வரையறுக்கும்போது கூடியவரையில் சொற்களுக்குரிய நேர்பொருள், தொடர்புபொருள், கருத்துப்பொருள் என்னும் வகையில் அடைவு செய்யப்பட்டுள்ளன.
பொருள்விளக்கம் சுருக்கமாயும் விளக்கமாயும் அமையவும் சொல்லின் உண்மை யுருவைப் புலப்படுத்தவும் வளைவுக் குறிகளுக்குள் அவை கொடுக்கப்பட்டுள்ளன . எடுத்துக் காட்டாக, 'அ' என்பது அஃறிணைப் பன்மை விகுதியாகவும், வியங்கோள் விகுதியாகவும், எச்ச விகுதியாகவும் வரும் இயல்பினது. இதனை விளக்க, விகுதி (அஃறிணைப் பன்மை, வியங்கோள், எச்சம் ) எனக் காட்டப்பட்டிருத்தல் காணலாம்.
கூட்டுச்சொல் தொடரின் பொருள்நிலை விளங்கத் தலைச்சொல்லை அடுத்து, அத் தொடரினைப் பிரித்துக் காட்டுதலும் உண்டு. எடுத்துக்காட்டு; அஃதான்று(அஃது-அன்று), அஃறிணை (அல் - திணை) போல்வன காண்க:
ஒருபொருள் தரும் சொல்வடிவங்கள் அகரவரிசையில் அடுத்தடுத்து வரும்பொழுது இணைப்பு வளைவுக் குறியீட்டால் சேர்த்துக்காட்டி, அவற்றிற்கு ஒருசேரப் பொருள்விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
(எ - டு)
அக்காரடலை, | } | சருக்கரைப்பொங்கல். |
அக்காரவடிசில் | ||
ஆலமர்கடவுள், | } | கல்லால மரத்தின்கீழ்த் தென்முகக் கடவுளாய் வீற்றிருக்கும் சிவன். |
ஆலமர்செல்வன் | ||
இடக்கரடக்கல், | } | பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக்கூறல். |
இடக்கரடக்கு | ||
உயிரளபு, | } | தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து. |
உயிரளபெடை |
ஒருபொருள் குறித்த வடிவ வேறுபாடுடைய சொற்கள் அகரவரிசை முறையில் வெவ்வேறிடங்களில் அமைதல் இயல்பு. இவ்வகையான பொருள் தொடர்புடைய சொற்களுள் முதல் மூலச்சொல்லுக்கு மட்டும் பொருள் தரப்பட்டிருக்கும் . ஏனைய மாற்று வடிவங்களைத் தரும்போது அவற்றின் பொருளுக்கு முதற்சொல்லைக் 'காண்க' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
(எ-டு)
அச்சாரம் | காண்க | அச்சகாரம். |
அல்லம் | காண்க | இஞ்சி. |
ஆட்டாங்கள்ளி | காண்க | திருகுகள்ளி. |
உருவங்காட்டி | காண்க | உருக்காட்டி. |
ஓரெழுத்தால் வடிவம் வேறுபடும் ஒருபொருள் குறித்த சொற்கள் வரும்போது அகர வரிசையில் மாற்றெழுத்து வளைவுக்குறிக்குள் தரப்பட்டிருக்கும். இதனால் வேற்றெழுத்து மாற்றமுடைய தனி வடிவத்தைச் சுருக்கிக் காட்டும் தன்மை காணப்படுகிறது.
(எ-டு)
அங்கி(கீ)காரம், |
அடைக்கலக்(ங்)குருவி, |
அமிர்(ழ்)து, |
காண்டி(டீ)ப(வ)ம் |
போல்வன காண்க. இதனால் அடுத்தடுத்து ஓரெழுத்து மாற்றச் சொல்வடிவம் தரப்படுதல் தவிர்க்கப்படுகிறது. 'காண்க;' என்று அடுத்தடுத்து எடுத்துக்காட்டும் நிலைமையும் தவிர்க்கப்படுகிறது.
இந்தத் தளத்தில் இவை இருவேறு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
(எ-டு)
அங்கி(கீ)காரம் இது அங்கிகாரம் அங்கீகாரம் |
பொருள் உரைக்குமிடத்து ஒரு தலைச்சொல் குறைச்சொல்லாயின அதன் முழுவடிவமும் முதலில் தந்து, பின் பொருள் விளக்கப்பட்டிருத்தலும் உண்டு. (எ-டு) அக்களிப்பு - அகக்களிப்பு, மனமகிழ்ச்சி.
ஆண் பெண் வேறுபாட்டை விளக்கிக்காட்ட அவ்விருபால் விகுதிகளும் உடன் இட்டுக்காட்டப்பெறுகின்றன. (எ-டு) செருக்குள்ளவன்(ள்).
வினைச்சொற்கள் ஏனைய அகராதிகளிற்போலத் தொழிற்பெயர் வடிவிலேயே தரப்பட்டிருக்கின்றன. வினையடியாய் வரும் ஒரு சொல்லும் அதே வடிவமுடைய பெயரும் தனித்தனி சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அடி என்பது பாதம், காற்சுவடு, முதல், கடவுள் என்று இவ்வாறு பலபொருள் தரும் பெயர்ச்சொல் . இப் பெயர்ச்சொல்லை அடுத்து அடி என்னும் வினைப்பகுதித் தலைச்சொல் வரும்போது சொல்லின்பின் (வி) என்பது வினை என்பதனைக் குறிப்பதற்காக வளைவுக் குறிக்குள் தந்து இனம்பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தமிழ், பொருள், அகரமுதலியின், அடுத்தடுத்து, சொற்களாகக், கொடுக்கப்பட்டுள்ளன, என்பது, வளைவுக், விகுதியாகவும், ஒருபொருள், சொற்கள், அடுத்து, அகரமுதலி, இந்தத், பதிப்பாசிரியர், திரு, அச்சுப்பணி, மகாதேவன், பொருள்விளக்கம்