தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
அகராதித் தொகுப்பினை நல்கியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரும் பழமொழித் தொகுப்பு ஒன்று தந்துள்ளனர். அண்மையில் (1984) திருமதி மீனாட்சிசுந்தரம்
என்பவர் 'கொங்குப் பழமொழிகள்-ஓர் ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். இதில் கொங்குநாட்டில் வழங்கும் 1263 பழமொழிகள் அகரவரிசையில் ஆங்கில விளக்கங்களுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளன.
இலக்கியத் தொடர்பான அகராதிகள்:
இலக்கியங்களில் வரும் சொற்பொருள்களை விளங்கிக்கொள்வதற்கு அவ்வவ் இலக்கியத்தில் பயின்றுவரும் அருஞ்சொற்பொருள்கள் அறியப்படவேண்டும். டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த நூல்களில் சிறப்புக்கூறாக அமைந்து காணப்படுவது ' அரும்பதம் முதலியவற்றின் அகராதி 'என்னும் இணைப்புப் பகுதியாகும். இவர் பதிப்பித்த சீவகசிந்தாமணி, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களில் உள்ள அகராதிகள் இங்குக் கருதத்தக்கன. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியின் தொடக்கமுதல் அந்த அகராதி நிறைவேறுவதுவரை தலைமைத் தமிழ்ப் பண்டிதராக விளங்கியவர் பேராசிரியர் மு.இராகவையங்கார் ஆவார். இவர் குறுந்தொகை, இறையனாரகப்பொருள் முதலிய சில நூல்களிலுள்ள அரும்பதங்களையும் பொருள்களையும் அகராதியின் பயன்பாட்டிற்காகத் தொகுத்து வந்தார். இவர் தொகுத்த இந்த அகராதிச் சொற்களை உள்ளடக்கி வெளியிடப் பெற்றது 'பொருட்குறிப்பகராதி' என்னும் நூல்.
சங்கநூல்களுக்குப் பதப்பிரிப்புக் குறியீட்டு விளக்கங்களுடன் குறைந்த விலையில் கண்கவர் வனப்புடன் அழகுற அச்சிட்டு வழங்கிய மர்ரே ராஜம் அவர்கள் அவற்றில் இடம் பெற்ற அருஞ்சொற்களுக்கான விளக்கங்களையும் சிற்சில பொருள் அடைவுகளையும் கொண்ட 'பாட்டும் தொகையும்' என்னும் தொகுதியை வெளியிட்டார். இது 'சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்' என்று போற்றத்தக்க சிறப்புடன் திகழ்கிறது.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய 'சேந்தன் செந்தமிழ்' நூலுள் 'அகரமுதல்' என ஒரு பகுதி உள்ளது. இதில் நூலுட் கண்ட 2456 சொற்களுக்கு அகரவரிசையில் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந் நூல் தமிழின் தனிபெருஞ் சிறப்பை எடுத்துக்காட்டும் பொருட்டு அடிகளாரால் இயற்றபெற்றது. இந் நூலின் இரண்டாம் பதிப்பு (1965) முகவுரையில் டாக்டர் மு. வரதராசனார் அடிகளாரின் நோக்கத்தை நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
'மங்கலம்' என்பது வடசொல். வடமொழியின் சொற்கள் கலவாமலே 'சேந்தன் செந்தமிழ்' என்ற நூலும் அதன் உரையும் அமையவேண்டும் என்று விரும்பியது அடிகளின் திருவுளம். அதற்கு ஏற்பவே 'மங்கலம்' என்ற வடசொல்லை நீக்கி 'நல்' என்ற சொல்லை அமைத்து, 'நல்வழக்கு' என்று எழுதியுள்ளார். இந் நோக்கம் அடிகளின் முன்னுரையைக் கற்போருக்குத் தெளிவாகும். இவ்வாறு ஒரு நூலும் உரையும் அமைந்த அமைப்பு இது வரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லை எனலாம்.
'நடுநிலைமை இன்றி, தவறானதொரு பற்றுக்கொண்டு, வடமொழியே உயர்ந்தது என்றும், தெய்வத்தன்மை உடையதென்றும் சிலர் மயங்கித் தடுமாறி எழுதியும் பேசியும் வந்த போக்கை உணர்ந்த அடிகள் அவர்களைத் திருத்தவும், அவர்களின் மயக்கத்திற் சிக்காமல் பிறரைக் காக்கவும் விழைந்து முன்வந்து செய்த புலமைத்தொண்டு இது.'
பொருள்விளக்க அகராதிகள்:
தமிழ் நூல்களில் வரும் சிறப்புப் பெயர்களின் விளக்கமாய் அமைந்த அகராதிகளும் சில உள. இவற்றுள் முதலாவதாகக் குறிபிடத்தக்க நூல் யாழ்ப்பாணம் ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை 1902-ல் வெளியிட்ட அபிதான கோசம். அபிதானம் என்றால் பெயர் என்பது பொருள்; கோசம்-தொகுப்பு. சிறப்புப் பெயர்களின் விளக்கங்கொண்ட நூல் என்பதாம். விநாயகர், கலைமகள், திருமகள் முதலிய தெய்வங்களின் பெயர்களையும் பல்வேறு நூல்களிலிருந்து எடுத்து அகர வரிசையில் வெளியிட்டுள்ள திரு. மு. சதாசிவனாரின் 'விநாயகர் அருட்செல்வம்', 'கலைமகள் அருட்செல்வம்', 'திருமகள் அருட்செல்வம்' என்பனவும் இவ்வகையினைச் சாரந்தனவே.
சிறப்புப் பெயர்களுக்கு என வெளிவந்த தனியான ஒரு பெரிய அகராதி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தொகுத்தளித்த ' சிறப்புப் பெயர் அகராதி ' ஆகும். 1908-ல் இந்த அகராதி வெளிவந்தது. தமிழ்ப் பண்டிதர் ஆ. சிங்காரவேலு முதலியார் சிறப்புப் பெயர்கள்பற்றிய விரிவான விளக்கங்கள் அமைந்த ஒரு பெருநூலை 'அபிதான சிந்தாமணி' என்னும் பெயரில் தொகுத்து அமைத்தார். இந் நூற்பெயர் 'அபிதான கோசம்' என்னும் முன்னூலை அடியொற்றியதாகும்.
அபிதான சிந்தாமணியைக் ' கதையகராதி ' என்றும் அறிஞர் புகழ்ந்து போற்றினர். இதன் சிறப்பினை உணர்ந்து மதுரைத் தமிழ்ச்சங்க தலைவராய் விளங்கிய பொன். பாண்டித்துரைத் தேவரவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ல் வெளிவரச் செய்தார். இதன்பின் நூலாசிரியர் சேர்த்த பொருள்களும் புதுவிளக்கங்களும் கொண்ட இதன் இரண்டாம் பதிப்பினைச் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ் வெளியீட்டாளர் 1934-ல் அழகுற அச்சிட்டு வெளிப்படுத்தினர். இப் பெருநூல் இப்பொழுது தில்லி ஆசியன் பதிப்பகத்தாரால் ஒளிப்படப் பதிப்பாக வெளியிடப்பெற்று உலவிவருகின்றது.
இந்த வகையில் நவீன முறையில் வந்த பெருநூல் 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' வெளியிட்ட பத்துத் தொகுதிகளையுடைய 'தமிழ்க் கலைக்களஞ்சியம்' ஆகும். மேலும், இவர்கள் அடுத்து வெளியிட்ட 'குழந்தைகள் கலைக்களஞ்சியமும் ' பத்துத் தொகுதிகள் கொண்டுள்ளது. இவ்விரு தொகுப்புகளும் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெரும் படைப்புகளாகும்.
தொகைப் பெயர் விளக்கம்:
தொகைப்பெயர் விளக்கமான ஓர் அகராதியை வீரமாமுனிவர் 1732ஆம் ஆண்டிலேயே தாம் படைத்த சதுரகராதியில் மூன்றாவது அகராதியாக அமைத்தார். இப் பகுதி பின்னர் வந்த தமிழகராதிகளிலும் தொடர்ந்து வந்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி முதலியவற்றில் மேலும் பெருக்கமும் விளக்கமும் பெற்றது. குடுமியாமலைச் சுப்பிரமணிய பாரதி ' பொருட்டொகை நிகண்டு 'என நூற்பாவினால் ஒரு நூலைப் படைத்தார். இதனை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின்வழிச் சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய முந்திய நூல்களை அடியொற்றி உரைநடையில் ' தொகை அகராதி ' என்னும் தொகுதியைச் சு. அ. இராமசாமிப் புலவர் ஆக்கியுள்ளார். இதனை 1969-ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர்.
இலக்கியத் தனியகராதிகள்:
பொதுவான அகராதிகள் ஒருபாலாகத் தனித்தனி இலக்கியங்களுக்கு முழுமையான அகராதிகளும் பல வெளிவந்துள்ளன. புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு முதலிய சங்கநூல்கள் தனித்தனி அகராதித் தொகுப்புகளாகப் பொருள் விளக்கங்களுடன் வெளிவந்துள்ளன. சங்கநூல்கள் முழுமைக்குமான ஒரு சொல்லடைவை மகாவித்துவான் முதுமுனைவர் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் தொகுத்து அமைத்தார். 'சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்' என்னும் பெயரில் 'அ' முதல் 'ஒள' வரையிலான முதற்பகுதி மட்டும் வெளிவந்தது. பிற்பகுதிகள் அச்சுருப் பெறவில்லை.
புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சுக் கலைக்கழகம் 'பழந்தமிழ்ச் சொல்லடைவு ' என்பதை மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இது சங்க நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், இறையனார் களவியல், முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நாற்பத்தொரு நூல்களிலும் இடம்பெற்ற அனைத்துச் சொற்களுக்குமான பெருந்தொகுப்பாகும்.
திருக்குறளுக்கு மார்க்கசகாயஞ்செட்டியார் என்பார் முதன்முதலாகச் சொல்லகராதி தொகுத்து வெளியிட்டார். இவர் ஆக்கிய 'திருக்குறள் சொற்குறிப்பு அகராதி' 1942-ல் வெளிவந்தது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு என்பவற்றை முறையே மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்களும் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் அவர்களும் சிறப்புறப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள். இவர்கள்
திரு. ந. சி. கந்தையாப்பிள்ளை 'திருக்குறள் அகராதி' என்னும் பெயரில் அமைந்த கையடக்க நூலை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார். தஞ்சைத் திருவாளர் சாமி. வேலாயுதம் பிள்ளையவர்கள் வெளியிட்ட 'திருக்குறட் சொல்லடைவு' திருக்குறளுக்கு அமைந்த இலக்கண விளக்கங்களோடுகூடிய விளக்கமான ஓர் அகராதியாகும்.
முந்திய மார்க்கசகாயரின் திருக்குறள் அகராதியைப் பயன்படுத்திச் சொற்பொருளும் சேர்த்துத் 'திருக்குறள் சொற்பொருள் அகரவரிசை' என்னும் கையடக்கமான தொகுப்பைத் திரு. சு. அ. இராமசாமிப் புலவர் அமைத்தார். இதனைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் 1969-ல் தமது 1354ஆம் வெளியீடாகத் தமிழுலகுக்கு அளித்தனர். நாலடியார் உரைவளப் பதிப்பில் சொல்லடைவும் சேர்ந்திருக்கக் காணலாம்.
திவ்வியப் பிரபந்தத்தில் வரும் சொற்பொருள்களை விளக்கும் 'திவ்வியப் பிரபந்தச் சிற்றகராதி' ஒன்றை அரசாங்கக் கீழ்த்திசைச் சுவடிநிலையம் வெளியிட்டுள்ளது. திருவரங்கத்திலிருந்து 'தேவஸ்தான பத்திரிகை' என்பதனை முன்பு வெளியிட்டு வந்த பார்த்தசாரதி ஐயங்கார் திவ்வியப் பிரபந்தச் சொற்கள் , வியாக்கியானங்களில் இடம்பெற்ற அருஞ்சொற்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஏற்ற விளக்கங்களுடன் வெளியிட்டுள்ள 'திவ்வியப் பிரபந்த அகராதி' (1963), இத் தொகைநூலுக்கு அமைந்த பெரிய அகராதியாகும்.
கம்பராமாயணம் என்னும் தமிழ் பெருங்கடலுக்குச் சொற்பொருளகராதி தொகுத்து முற்றுவித்தவர் அ. சே. சுந்தரராஜன் என்பவராவர். இவர்தம் தொகுப்பிற்கு 'ஸ்ரீ மத் கம்பராமாயண அகராதி' என்பது பெயர்.
தமிழ் விவிலிய நூலுக்கு விளக்க அகராதி ஒன்றை ஏ. சி. கிலேற்றன் ஐயர் தொகுத்துத் தந்துள்ளார். வேத அகராதி என்னும் பெயரில் ஐந்து பாகங்கள் கொண்டதாய் இது உள்ளது. இதனைக் கிறித்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் முதுகலை, எம். பில்., டாக்டர் பட்டங்களுக்கான ஆய்வேடுகள் தரபட்டுவருகின்றன. இங்கெல்லாம் ஆய்வுப்பொருளாகத் தமிழ்நூல்கள் பலவற்றை எடுத்துக்கொண்டு ஆய்ந்தவர்கள் அந்தந்த நூல்களுக்கான அகராதிகளும் தொகுத்து அமைத்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
மொழியியல் அகராதிகள்:
சிற்சில மொழிக்கூறுகளை தனிப்படப் பிரித்துத் தொகுத்து அடைவுபடுத்த முயன்றனர் பலர். 1883-ல் வெளிவந்த அகராதிச் சுருக்கம் என்னும் நூலில் 'பெயரும் வினையுமாய்ப் பொருள்தரு சொற்களின் அகராதி' பின் இணைப்பாகக் காணப்படுகிறது. தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியில் இந்துஸ்தானிச் சொற்கள் முதலியன தனித்தனி பின்னிணைப்புகளாகக் காணப்படுகின்றன. 1939-ல் வெளிவந்த 'தமிழறிஞர் அகராதி' என்பதில் பின்வரும் தனித்தொகுப்பு அகராதிகள் காணப்படுகின்றன. 1. சமஸ்கிருத வழக்கில் வரும் பொருளும் வேறுபாடான பொருளும் தரும் தமிழ் வழக்காற்றுச் சொற்கள்; 2. தமிழ் இலக்கிய வழக்கில் அருகியும் பேச்சுவழக்கில் மலிந்தும்வரும் தெலுங்குச் சொற்கள்; 3. தென்னிந்தியாவில் முகம்மதியர் வருகைக்குப் பிறகு தமிழில் வழங்கிவரும் உருது, இந்துஸ்தானி, பாரசீகம், அரபுச் சொற்கள்; 4. தமிழ்மக்கள் தற்காலத்திய நாகரிகத்தின் வன்மையால் பெரும்பாலும் பேச்சுவழக்கில் உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்கள்; 5. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் போர்த்துகீசிய மொழிகள்; 6. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் பிரென்சு மொழிகள்; 7. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் டச்சுச் சொற்கள்; 8. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் கிரீக் மொழிகள்; 9. தமிழ்ப் பேச்சுவழக்கில் சொற்பமாக வழங்கும் டர்க்கிச் சொற்கள்; 10. தமிழப் பேச்சுவழக்கில் சொற்ப மாறுபாடுடன் வழங்கிவரும் இந்துஸ்தானி மொழிகள்; 11. பேச்சுவழக்கிலும் இலக்கியவழக்கிலும் ஆங்கிலத்தில் வழங்கும் சில தமிழ்மொழிகள்; 12. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாறுதலான பொருள்களைத் தரும் தமிழ்மொழிகள்; 13. கொச்சை மொழிகளும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அகராதி, என்னும், சொற்கள், தொகுத்து, பேச்சுவழக்கில், வழங்கிவரும், திருக்குறள், அமைந்த, தமிழ், அகராதிகள், சிறப்புப், தமிழப், அமைத்தார், நூற்பதிப்புக், வெளியிட்ட, பெயரில், திவ்வியப், பெயர், அபிதான, விளக்கங்களுடன், வந்த, முதலிய, இவர், மொழிகள், என்பது, தமிழ்ப், சிறுபான்மை, பொருள், நூல், வரும், மதுரைத், தனித்தனி, வெளியிட்டுள்ளார், வழங்கும், வெளியிட்டுள்ளது, கோசம், அகராதிகளும், சைவசித்தாந்த, சங்க, டாக்டர், நூல்களில், கலைமகள், வெளிவந்த, அருட்செல்வம், திரு, வெளிவந்தது