தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
லிப்கோ-தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி:
லிப்கோ நூல் வெளியீட்டு நிறுவனம் பள்ளிகளுக்கான பாடநூல் , உரைநூல் , பொது மக்களுக்கான பலவகை நூல்களை வெளியிட்டு வருவது . இதன் சார்பில் அமைந்த இந்த அகராதியில் தமிழ்-தமிழ்ப் பொருளோடு ஆங்கிலப் பொருளும் சேர்த்துத் தரப்பட்டிருக்கிறது . இது பள்ளி மாணவரைக் குறியாகக்கொண்டு வெளியிடப்பெற்ற ஒரு சிற்றகராதி.
மணிமேகலைத் தமிழகராதி:
'கல்கண்டு' என்னும் வார இதழை வெளியிட்டுவந்த தமிழ்வாணனார் முயற்சியில் முகிழ்த்தது இந்த அகராதி. அவர் தாம் படைத்த பல நூல்களையும் 'மணிமேகலைப் பிரசுரம்' என்னும் பெயரில் அமைந்துள்ள தம் பதிப்பகத்தின் வழியே வெளியிட்டுவந்தார். இப் பதிப்பகத்தில் அதன் பெயரைத் தாங்கி 1979-ல் வெளிவந்தது இந்த அகராதி. இது தோற்றத்தில் ஓரளவு கோனார் தமிழ்க் கையகராதிபோலக் காணப்படுகிறது. என்றாலும் இதில் அதைவிடவும் அதிகமான சொற்பொருள்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
நடுத்தர அகராதிகள்:
தொடக்கநிலைச் சிற்றகராதி, கையகராதி, சிற்றகராதி போலாது நடுத்தர அளவிலான அகராதிகள் சிலவும் உருவாகி வெளிவந்து உலவின. செந்தமிழ் அகராதி, கம்பர் தமிழ் அகராதி என்னும் இரண்டும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.' செந்தமிழ் அகராதி ' ந.சி. கந்தையாப் பிள்ளையால் தொகுக்கப்பெற்று ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தாரால் 1950-ல் வெளியிடப் பெற்றது. இதனை அடுத்து 1951-ல் வந்த கம்பர் தமிழ் அகராதியைத்தொகுத்தவர் வே. இராமச்சந்திர சர்மா என்பவராவார் . இவை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்க்கு ஏற்றவகையில் திட்டமிட்டுத் தொகுக்கப்பெற்றன.
கழகத் தமிழ் அகராதி:
மேலே சுட்டிய இரண்டு அகராதிகளினும் இருமடங்கு பெருக்கமுற்றுத் தோன்றிய அகராதி கழகத் தமிழ் அகராதி . இது திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் 1964-ல் வெளியிடப்பெற்றது . இதனைக் கழகப் புலவர் குழுவினர் தொகுத்துச் சீர்தூக்கிச் செம்மைப்படுத்தி அமைத்துள்ளனர் . இதனை நடுத்தர அகராதிகளினும் விரிவுபெற்ற சிறப்பகராதி என்னலாம். பள்ளி , கல்லூரிகளில் பயில்வார்க்கும் புலவர்களுக்கும் பயன்படும் வகையில் இது காணப்படுகிறது .
சுருக்கத் தமிழ் அகராதி:
சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி உலகமறிந்த ஒரு பெரும் பேரகராதி. 1913-ல் தொடங்கித் தக்க அறிஞர் பெருமக்கள் பலரால் வளர்க்கப்பெற்று, 1932-ல் முற்றுவிக்கப்பெற்றது . ஆறு பெருந்தொகுதிகளையும் இணைப்புத் தொகுதி ஒன்றையும் கொண்டுள்ளது . அண்மையில் இது நிழற்பட அச்சில் மறுபதிப்புப் பெற்றுள்ளது. இந்தப் பேரகராதியின் சுருக்கமே ' சுருக்கத் தமிழ் அகராதி ' (Concise Tamil Lexicon) என்னும் பெயரில் வெளியிடப்பெற்றது. தமிழ்ப் பேரகராதியை அச்சிட்ட சென்னை லா-ஜர்னல் பிரஸ் அதிபரே இச் சுருக்க அகராதியையும் பதிப்பிக்க முன்வந்தார் . சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையினரின் மேற்பார்வையில் சுருக்க அகராதி வேலை நடைபெறலாயிற்று.
அப்பொழுது தமிழ் ஆராயச்சித்துறைத் தலைவராயிருந்த பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்கள் சுருக்கத் தமிழ் அகராதிக்கு உரிய திட்டமொன்றை வகுத்து அளித்தார் . சுருக்கப் பதிப்பில் பேரகராதியில் உள்ள சொற்களுள் பின்வரும் வகையிலான சொற்கள் விடுபட வேண்டியவை எனத் திட்டம் செய்தார்:
1. கலைச்சொற்கள் (Scientific and Technical Terms).
2. இலக்கண பரிபாஷைச் சொற்கள் (Terms relating to grammar).
3. எளிதில் பொருள்விளங்கும் சொற்கள்(Common words).
4. பேச்சுவழக்குச் சொற்களும் கொச்சைச் சொற்களும் (Colloquialisms and slangs). 5. இலக்கியத்தில் பயின்று வழங்காத வடசொற்கள்.
6. சிறப்புப் பெயர்கள் (Proper names).
7. தொடர்மொழிகள் (Compound words).
8. சிதைவுச் சொற்களும் குறிப்புமொழிகளும்.
9. இலக்கியத்தில் பயின்றுவராத நிகண்டுச் சொற்கள்.
இத் திட்டத்தின்படி பேரகராதியின் சொற்களைப் பார்வையிட்டபோது சமய பரிபாஷைச் சொற்களையும் நவீனமாக ஆக்கப்பெற்ற சொற்களையும் விட்டுவிடலாம் என்று பின்னர் முடிவுசெய்தனர்.
இம் முடிவுகளின்படி சுருக்க அகராதியின் பதிப்பாசிரியராய்த் திரு. மொ. ஸ்ரீ செல்வம் ஐயர்,எம்.ஏ., எல்.டி. பேரகராதியிலிருந்து சொற்களைத் தெரிந்தெடுத்தார் . தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களும் தமிழாராய்ச்சித் துறையின் தலைமைத் தமிழ் விரிவுரையாளர் திரு.மோ.அ துரை அரங்கசாமி அவர்களும் பதிப்பாசிரியருடனிருந்து ஆராயந்து திட்டமிட்டபடி விலக்க வேண்டியவற்றை விலக்கிச் சுருக்கத் தமிழகராதியை உருவாக்கினர் . 1955-ல் வெளிவந்த இந்தச் சுருக்க அகராதி மாணவர்க்கும் பொது மக்களுக்கும் பயனுடையதாகும் என்று கருதப்படுகிறது.
ஆனால் , இந்த அகராதி ஏழு தொகுதிகளில் அமைந்த பேரகராதிக்கு ஏற்புடைய சுருக்க அகராதியாக அமையவில்லை ; 154 பக்கம் கொண்டதொரு சிற்றகராதியாகப்போயிற்று. இதனால்தான் இது மிகுதியாக அறிஞரிடையே வழங்கப்பெறாமல் முதற்பதிப்புடனேயே நின்றுபோயிற்று.
விக்டோரியா தமிழ் அகராதி:
இது ஏனைய தமிழ் அகராதிகள்போலாது தனி நோக்குடன் சொற்களைப் பாகுபடுத்தித் தொகுத்துத் தருவது. பத்திரிகைகளும் பருவ இதழ்களும் போட்டிப் பரிசுக்கான நுண்பொருள்களைத் தாங்கிவரும் நிலை தோன்றியது. அத்தகைய போட்டிகளுக்கு விடை கண்டறிவதற்கு ஏற்புடைய சொற்களைக் கொண்ட அகராதி அவசியமாயிற்று. இந்த அகராதியை ஆக்கியவர் எஸ் . குப்புஸ்வாமி என்பவராவார்.
இவ் வகராதியை ஆக்க ஆசிரியருக்குத் தூண்டுகோலாயிருந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியான ஆங்கிலப் பரிசுச் சொற்போட்டியே யாகும். மேலும், அந்நாளில் ஆனந்தவிகடனில் வெளிவந்த போட்டிப் பந்தயக் குறிப்புகளும் சித்திரங்களும் இந்த அகராதிக்கு உதவியுள்ளன . போட்டிப் பந்தயங்களுக்குப் பயன்படும் வகையில் அகராதி ஒன்று தமிழ்மொழிக்கு இன்றியமையாதது என இவர் கண்டார்.
இந்த அகராதியில் ஓரெழுத்து முதல் ஆறெழுத்து வரையில் உள்ள சொற்களைத் தொகுத்து அகராதியாக்கித் தந்துள்ளார் . அபிதான கோசம், அபதான சிந்தாமணி, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, சொல்லகராதி, பொருளகராதி முதலிய நூல்களின் துணை கொண்டு ஒத்திட்டு இதனைத் தொகுத்ததாக ஆசிரியர் தெரிவித்துள்ளார் .
ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களையும் ஒருசேரத் திரட்டி ஓரிடத்தில் காணுமாறும் அமைத்துள்ளார். இதனுள் ஆங்காங்குச் சொற்களுக்கு ஏற்றவாறு 300 விளக்கப் படங்களையும் இனைத்துள்ளார். இந்த அகராதியின் முகவுரையில் தொகுப்பாசிரியர்.
" இது தமிழ்மொழி வளர்ச்சியில் விருப்புற்றவர்களுக்குத் தமிழ்த் தினசரி முதலிய சஞ்சிகைகளில் வெளிவரும் விடுகதை, பந்தனம், சித்திரப் போட்டிகள் முதலிய மனம் குதூகலமடையக்கூடிய போட்டிப் பந்தயங்களில் கவர்ச்சியுள்ளவர்களுக்கும் இலகுவாக விடைகளைத் தெரிந்துகொள்வதற்குத் தகுந்த சாதனமளிக்கக்கூடிய தமிழ் அகராதியாகும் . இதுகாறும் இவ்விதமான அகராதிகள் வெளிவராமல் தமிழ்ப் போட்டிப் பந்தயங்களில் வெற்றி பெறுவதற்குத் தமிழன்புடையோர் பட்ட கவலைகள் இதனால் நிவர்த்திக்கப்படும் . ஆதலால் , தமிழ்ப்பற்றுடைய அன்பர்கள் ஒவ்வொருவரும் இவ்வரிய தமிழ்ப் போட்டிப் பந்தய நூதன அகராதியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம் ." என்று தெரிவித்துள்ளார். இந்த அகராதி வெளிவந்த ஆண்டு தெரியவில்லை. ஆனந்தவிகடன் முதலிய பருவ இதழ்களில் போட்டிப் பந்தயங்கள் வந்த காலத்தை ஒட்டியதாய் இருத்தல் வேண்டும்.
பலதுறை அகராதி:
சோதிடமும் மருத்துவமும் தமிழ்ச் சமுதாயத்தோடு இணைந்துவருவன.அந்நாளில் தமிழ்ப் புலவர்களுள் பலர் சோதிடம், மருத்துவம் ஆகியவற்றிலும் வல்லவராயிருந்தனர். சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றனார், மருத்துவன் தாமோதரனார் என்னும் பெயர்கள் இவ்விரு கலைகளிலும் முறையே சிறந்தமைபற்றி வந்த சிறப்புப் பெயர்களாகும். மருத்துவத்தில் ஈடுபட்டாரையும் 'பண்டிதர்' என்றே வழங்கத் தலைப்பட்டனர். எனவே, இவைபற்றிய கருவிநூல்களும் அகராதிகளும் சென்ற நூற்றாண்டில் தோன்றலாயின. கால நிகண்டு, பதார்த்தகுண சிந்தாமணி, அறுபது வருட பலன், காலசக்கரம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. சோதிடம் தொடர்பான சொற்கோவைகளையும் செய்திகளையும் விளக்கிச் 'சோதிடக்கட லகராதி' என ஓர் அகராதி நூல் சென்ற நூற்றாண்டில் அச்சில் வந்தது. வடலூர் இராமலிங்க வள்ளலார் 'ஒளஷதகுண அகராதி' என்னும் நூலை இயற்றியுள்ளார். ஏமதத்துவம் என்னும் பஞ்சகாவிய 'நிகண்டு' என்னும் ஒரு மருத்துவ நிகண்டும் உள்ளது. 'தட்சநாயனார் வைத்திய அட்டவணை', 'வைத்திய மலையகராதி', 'மூலிகையகராதி', 'வாகட அகராதி' என்பன மருத்துவம்பற்றிய அகராதிகளாகும்.
இந்த நூற்றாண்டில் தோன்றிய மருத்துவ அகராதிகளுள் மிகப் பெரியது டி. வி. சாம்பசிவம் பிள்ளை என்பார் தொகுத்து வெளியிட்ட மருத்துவக் கலைச்சொல் அகராதி. இஃது ஐந்து பெருந்தொகுதிகளாக உள்ளது. இதில் தமிழ் மருத்துவ நூல்களுள் வரும் சொற்கள், மருத்துவப்பெயர்களை எல்லாம் அகரவரிசையில் தந்து அவைபற்றிய விளக்கம் எழுதியுள்ளார். இரண்டு பத்தியாக நூலை அமைத்துத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அடுத்தடுத்து விளக்கம் அமைத்துத் தந்துள்ளார். தமிழ் மருத்துவ நூல்களை ஆராய்வார்க்கு இந்த அகராதி கலங்கரைவிளக்கமாய்க் காட்சி தருகிறது. சம்பிரதாய அகராதி என்பது வைணவ சமூகத்தினரிடையே வழங்கப்பெறுகிற சொற்களின் பொருள்களை விளக்கும் ஓரகராதியாகும். மேலும், குழுஉக்குறி போன்ற குறியீடுகளை உள்ளடக்கிப் பரிபாஷையகராதி என ஓரகராதியும் வெளிவந்ததாகத் தெரியவருகிறது. கிறித்தவ சமயச் சார்பாக வந்துள்ள 'கிறிஸ்துவ சமய பரிபாஷை', 'இறையியல் சொல்லகராதி' என்பனவும் குறிபிடத்தக்கன.
பழமொழி அகராதி:
தமிழ்நாட்டில் சங்ககாலம் தொடங்கி இந்நாள்வரை மக்களின் வாய்ப்பிறப்பாக வழிவழி வழங்கிவரும் பழமொழிகள் பல்லாயிரக்கணக்கானவை. பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகிய முன்றுறையரையனார் இயற்றிய பழமொழி நானூறு, நானூறு பழமொழிகளின் விளக்கமாய் அமைந்ததே. திருநாவுக்கரசர் அருளிய பழமொழித் திருநேரிசைப் பதிகத்துள் ( 4 : 5 ) பத்துப்பாடல்களிலும் பழமொழிகளை அமைத்துப் பாடியுள்ளார். தண்டலையார் சதகம் என்னும் பின்னாளைய நூறு பாக்கள்கொண்ட நீதிசதகமும் பழமொழி விளக்க நூலே. பெரும்புலவர் காவியங்களில் பழமொழிகளும் ஆங்காங்கே பயிலக் காண்கிறோம்.
ஜான் லாசரஸ் என்பார் தமிழகப் பழமொழிகளைத் தொகுத்து அகராதி அடைவில் தந்து ஆங்கில விளக்கமும் உடன்சேர்த்து 1894-ல் வெளியிட்டார். இந்தத் 'தமிழ்ப் பழமொழி அகராதி' ஒரு பழமொழிக் களஞ்சியமாகும்.
இதன்பின் ஹெர்மன் ஜான்ஸர் என்பார் பழமொழிகளைப் பொருள் அடைவில் வகைப்படுத்தித் தொகுத்து வெளியிட்ட தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூல் 1897-ல் வெளிவந்தது.
திருமணம் செல்வக்கேசவராய முதலியார் 'உவமச்சொல் அகராதி' என்னும் பெயரில் சிறப்பான பழமொழிகளைத் தொகுத்து அவற்றிற்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளுடன் சிற்றகராதி ஒன்றைத் தந்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராய் விளங்கிய எஸ்.அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் பன்னீராயிரம் பழமொழிகள் கொண்ட
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அகராதி, தமிழ், என்னும், தமிழ்ப், போட்டிப், சொற்கள், தொகுத்து, சுருக்க, நிகண்டு, சுருக்கத், மருத்துவ, பழமொழி, முதலிய, சிற்றகராதி, பழமொழிகள், தந்துள்ளார், நூற்றாண்டில், என்பார், வெளியிட்ட, பெயரில், ஆங்கிலப், நூல், நடுத்தர, அகராதிகள், சொற்களும், சென்னைப், வந்த, வெளிவந்த