தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
அவற்றிற்கீடான சரியான தமிழ்ச் சொற்களும்; 14. தெளிவுடைய தமிழ்ச் சொற்களும் அவற்றிற்கீடான கொச்சைச் சொற்களும்; 15. மக்கள், விலங்கு, புள்ளினம் முதலியவற்றின் பெயர்த்தொகுதிபோல வழங்கும் மூலிகை வகைகளைக் குறிக்குஞ் சொற்கள்; 16. மக்கள், விலங்கு, பொருள்கள் முதலியவற்றின் பெயர்த்தொகுதிபோல் வழங்கும் வானசாஸ்திரப் பொருட்களைக் குறிக்கும் சொற்கள்; 17. ரகர றகர எழுத்துக்கள் உண்மையால் பொருள் வேறுபடும் தமிழ்மொழிகள்;18. ணகர னகர எழுத்துக்கள் உண்மையால் பொருள் வேறுபடும் தமிழ்மொழிகள்; 19. லகர ளகர எழுத்துக்கள் உண்மையால் வேறுபடும் தமிழ்மொழிகள்; 20. முறையே லகரத்துக்கு ளகரத்தையும், ரகரத்திற்கு றகரத்தையும், ணகரத்துக்கு னகரத்தையும், நகரத்துக்கு னகரத்தையும் மாறுபாடாக உபயோகிக்கினும் ஒரே பொருளைத் தருபவையான தமிழ்மொழிகள்; 21. எதிரிடையான பொருள்களைத் தரும் தமிழ்ச் சொற்கள்; 22. சொல்லத்தகாத வார்த்தைகளை நயம்படவுரைக்கும் தமிழ்ச்சொற்கள்; 23. அமங்கல சந்தர்ப்பங்களையும் பொருள்களையும் மங்கலமாகக் கூறுந் தமிழ்ச்சொற்கள்; 24. பல்வேறு கூட்டத்தார் மொழியும் மறைபொருட் சொற்கள்; 25. ஓரெழுத்து மொழிகள்; 26. ஒரு சொல்லின் முதல் இடை கடைகளில் ஓரெழுத்துக்கு ஈடாக மற்றோரெழுத்துவரினும் இலக்கண முடையதாகவே வழங்குவன; 27. எழுத்துக்கள் மாறுபடினும் பொருள் வேறுபடாத சொற்களின் அட்டவணை; 28. அடிக்கடி கையாளும் பழஞ்சொற்களின் மரூஉச் சொற்கள். இவ்வாறு தமிழில் வழங்கும் சொற்களை இனம்பிரித்துத் தொகுத்துத் தருவதால் செந்தமிழ்ச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும், நடைமுறைச் சொற்களையும் பயில்வார் காண இயலும்.
சென்னை ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ் நிறுவனத்தார் இந்த வகையில் 4 பகுதிகளைக்கொண்ட 'தமிழமிழ்த அகராதி' என்னும் சிற்றகராதியையும் வடித்துத்தந்துள்ளனர். இதன் முற்பகுதி இரண்டு பொருளோ, இரண்டுக்கு மேற்பட்ட பொருளோ தரும் சொற்களின் அகராதியாகும். சொற்பொருளுடன் வழக்காட்சி காட்டும் எடுத்துக் காட்டும் உடன் தரப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதி ஒரு சொல்லைப் பிரித்தால் இரண்டு அல்லது மேற்பட்ட பொருள்களைத் தரும் சொற்களின் தொகுப்பு.
'எழுத்தியல் திரியா பொருள்திரி புணர்மொழி
இசைத்திரி பால்தெளிவு எய்தும் என்ப' - (நன். 391)
எனப் பவணந்திமுனிவர் குறிப்பிடும் தகைமையுடைய சொற்களே இவை. இசைத்திரிபாவது சொற்களை இசையறுத்துப் படித்து வேறுபாடு காண்டலாகும். 'செம்பொன்பதின்றொடி' என்பதனைச் செம்பொன் பதின் றொடி என்றும், செம்பு ஒன்பதின் தொடி என்றும் இசையறுத்துப் பிரிக்கலாம். இவ்வாறு கவர்பொருள்பட வருவனவற்றைச் சிலேடைச்சொற்கள் என்பர்.
மூன்றாவது பகுதி பெயரும் வினையுமாக வழங்கிவருகின்ற தமிழ்ச் சொற்களின் தொகுப்பு ஆகும்.
நான்காவது பகுதி அகக்கூத்து இரண்டு, அரண் நான்கு என்றாற்போல வரும் தொகைப் பெயர் விளக்கம் தருவது.
இங்ஙனமாகச் சொற்பொருள்களை நான்கு கூறுபடுத்தி உரைக்கும் இந்தச்சிற்றகராதியைச் சதுரகராதி என்றாற்போல 'நான்மைச் சொல்லகராதி' என்று குறிப்பிடலாம்.
இவ்வகையிலேயே சிற்சில மொழிக்கூறுகளைத் தனித்தனியாகத் தொகுத்து அகராதியாக அமைந்த நூல்களும் சில உள. எஸ். நடராசன் என்பார் தொகுத்த 'கார்த்திகேயினி புதுமுறை அகராதி' ண, ன பேதங்கள், ர, ற பேதங்கள், ல, ழ, ள பேதங்கள் என்னும் முத்திறப் பகுப்பின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் சிறப்பு அகராதியாகும். அறிஞர் மு. சதாசிவம் என்பார் எதிர்ப்பத அகராதி, ஒலிக்குறிப்பு அகராதி, அடுக்குமொழி அகராதி, ஐம்பொறி அகராதி முதலியவற்றை வெளியிட்டுள்ளார். திருமதி நீலாம்பிகை அம்மையாரின் 'வடசொற் றமிழ் அகரவரிசை' வழக்கில் நடையாடும் வடசொற்களுக்கு இணையான தூய தமிழ்ச்சொற்களைக் கொண்டதொரு சிற்றகராதியாம்.
மொழிமரபு சொற்பொருள் மரபுகளை விளக்கும் நூல்கள் சிலவற்றையும் அறிஞர்கள் அவ்வப்போது வழங்கியுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளராய் முன்பு விளங்கிய கே. என். சிவராஜபிள்ளை புறநானூற்றில் வரும் 79 சொற்களின் உண்மைப்பொருளை விளக்கிய 'சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி' என்னும் நூல் முற்படக்குறிக்கத்தக்கது (1968). சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராயிருந்த வே. வேங்கடராஜுலு ரெட்டியார் 'நுண்பொருள் விளக்கம்' என்னும் சொல்லிலக்கணநூலைத் தந்துள்ளார் (1963).
பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளையவர்களின் 'சொற்களின் சரிதம்' என்னும் நூல் சிற்சில சொற்களின் உருமாற்றம், பொருள் வளர்ச்சி, பொருள் மாற்றம் முதலியவற்றை விவரிக்கிறது. ஒரு சொல்லின் பிறப்புத் தொடங்கி மொழியில் அது வளர்ந்துவந்த சரிதம் அறிதற்கான வழிகாட்டும் முன்னோடி நூலாக இது திகழ்கிறது (1956).
புலவர் பூந்துறையான் என்பவர் 'மரபுத் தொடர்களும் சொற்றொடர்களும்' என ஓர் அகராதியைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் அமைத்துத் தந்துள்ளார் (1977).
அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வரிசையில் தந்துள்ளார். இவர் தாம் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி செய்த காலத்தில் கண்ட சில மொழி வரலாற்றுச் செய்திகளை அகரவரிசையில் அமைத்துச் 'சொற்சுவை' என்னும் நூலாகத் தந்துள்ளார் (1978). இதனுள் 133 சொற்கள் ஆராயப்பட்டுள்ளன.
இலக்கிய வரலாற்று அகராதி:
தமிழில் பல நூல்களை ஆக்கி வெளிப்படுத்திய ந.சி. கந்தையாப்பிள்ளை 'தமிழ் இலக்கிய அகராதி' (1952), 'தமிழ்ப் புலவர் அகராதி' (1960) என்னும் இரு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவை தமிழிலக்கியப் பரப்பினையும் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றையும் அறியத் துணைநிற்கும் கருவி நூல்களாகும். இவரே 'காலக் குறிப்பகராதி' என்னும் வரலாற்றுச் சிறுநூல் ஒன்றும் ஆக்கியளித்துள்ளார். ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தின்வழி மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்கள் 'இலக்கிய வரலாற்றுப் பொருட் குறிப்பகராதி' என்னும் நூலை 1956-ல் வெளியிட்டார். இது பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்களின் 'இலக்கிய வரலாறு' என்னும் நூலுக்கான அகராதியாகும்.
தமிழில் அச்சில் வந்த நூல்களுக்கான விளக்கக் குறிப்புகளுடன்கூடிய ஒரு தொகுப்பை ஆங்கிலத்தில் ஜான் மர்டாக் என்பவர் 1865-ல் வெளியிட்டார். இந்தத் தொகுப்பிலிருந்து அந்த ஆண்டுவரையில் அச்சேறிய பல்துறை நூல்களைப்பற்றிய விவரங்கள் தெரியவருகின்றன.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ்நூல் விவர அட்டவணைகளின் தொகுப்பாசிரியனாய் நான் பணிபுரிந்தபோது அத் துறை வெளியீடாக மர்டாக்கின் இந் நூலட்டவணையை 1968-ல் மறுபதிப்பாகக் கொண்டுவந்தேன். இதில் பல்வேறு நூல் தொகுப்புகளைப்பற்றிய விவரங்களை உடன் இணைத்துத் தரலானேன். 1900 ஆண்டுவரை வந்த தமிழ்நூல் விவரங்களையும் உடன் இணைத்தேன். எனவே, இந்த இரண்டாம் பதிப்புச் சென்ற நூற்றாண்டுவரை அச்சான தமிழ்நூல் விவரங்களை அறியக் கருவி நூலாயிற்று.
தமிழ் வளர்ச்சித் துறை 1867-ல் முதல் அச்சான தமிழ் நூல்களுக்கு விவர அட்டவணைகள் தொகுத்துப் பல தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றது. இத்தொகுதிகளின் வாயிலாக நூல்கள்பற்றியும் நூலாசிரியர்பற்றியும் பலவகை இலக்கிய இலக்கண வரலாற்றுச் செய்திகள் குறித்தும் அரிய பல செய்திகள் தெரியவருகின்றன. இலக்கிய வரலாற்று ஆய்வாளருக்கு இவை மிகவும் பயனுடையன ஆகும். கலைச்சொல் அகராதிகள்:நம் பாரதநாடு விடுதலை பெற்றபின் பல்வேறு துறைகளிலும் புத்தெழுச்சியும் புத்தாக்கங்களும் மலர்வதாயின. பாரதநாட்டு மொழிகள் உயிர்பெற்று எழலாயின. மொழிவழி நாட்டுப் பிரிவினைமூலம் அந்தந்த மொழிபேசும் மக்கள் வாழும் நிலப்பரப்புகள் எல்லைகோலப்பட்டன. நாட்டு மொழிகளை வளப்படுத்த ஒவ்வொரு மொழியாளரும் முற்படலாயினர்.
தமிழ்நாட்டிலே 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்னும் கொள்கை வரவர வளர்ந்து வளம்பெற்றுக் கொண்டிருக்கிறது. கல்விநிலையங்களிலும் ஆட்சிமுறையிலும் தமிழ் தனக்குரிய சிறப்பிடத்தை அடையலாயிற்று. நீதிமன்றங்களிலும் அரியணை வீற்றிருக்கத் தமிழன்னை புகுந்துவிட்டாள். இந்நிலையில் ஒவ்வொரு துறைக்கும் வேண்டிய தமிழ்ச்சொற் கருவூலங்களைத் தொகுத்துப் போற்றும் முனைப்புத் தோன்றலாயிற்று.
அறிவியல் முதலிய கலைகளையும் தமிழில் பயிற்றுவிக்கலாயினர். அப்பொழுது கலைகளுக்கு ஏற்புடைய சொல்லாக்கங்களைத் தொகுத்து வெளியிட அரசு ஆவன செய்து வந்துள்ளது. இதன் விளைவாகக் கலைச்சொல் லகராதிகள் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனி ஆக்கப்பெற்றன.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1971-ல் வேதியல், பொருளாதாரம், உளவியல், விலங்கியல், அரசியல், வரலாறு, புள்ளியியல், கணிதம், இயற்பியல், வாணிகவியல், தாவரவியல் ஆகிய துறைகளுக்குரிய கலைச்சொல் தொகுதிகளையும் 1973-ல் புவியியல், பொறியியல், தொழில்நுட்பவியல், வேதியியல் ஆகிய துறைகளுக்குரிய அகராதிகளையும் தனித்தனி வெளியிட்டுப் பரப்பியுள்ளது. பள்ளிகளுக்கான பாடநூல்களோடு கல்லூரிகளுக்கும் பயன்படத்தக்க பற்பல நூல்களையும் வெளியிட்டுப் பெரும்பணி புரிந்துவருகின்றது.
தமிழக அரசு தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி, ஆட்சிச்சொல் லகராதி, சட்டச்சொல் அகராதி என்னும் முப்பெருந் தொகுப்புகளை வெளியிட்டு ஆட்சித் துறையினருக்குப் பயன்பட வழங்கியுள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மைத் தொடர்பான சொல்லகராதிகளை வெளியிட்டுள்ளது. பொறியியல், மருத்துவவியல் போன்ற அறிவியல் துறைக்கான சொற்களும் அவ்வத்துறை வாயிலாகவும் துறை வல்லுநர்களாலும் தொகுத்துப் பயன்படுத்தும் நிலை தோன்றி வளர்ந்துவருகிறது. முத்தமிழாயிருந்துவந்த நம் முன்னைத் தமிழ் இன்று பல்வேறு கலைத் துறைகளிலும் அறிவுத்துறைகளிலும் வளம்பெற்று வருவதால் தமிழ்ச்சொற் கருவூலம் மிகமிக நாள்தோறும் பெருகி வந்து கொண்டே யிருக்கிறது.
சொற்பிறப்பு அகராதி:
தமிழ்ச்சொற்களின் மூலங்களை ஆராய்ந்து விளக்கம் தரும் அகராதி முயற்சிகளும் தோன்றியதுண்டு. யாழ்ப்பாணம் எஸ். ஞானப்பிரகாசம் பாதிரியார் 'சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி' ஒன்றை ஆக்க முனைந்தார். அகரவருக்கத்தில் சில சொற்களுக்கு மாதிரிப்படிவம் ஒன்றையும் அச்சிட்டு (1939) வெளியிட்டார். ஆனால், இவர் முயற்சி வளர்ச்சியுறாது நின்று போயிற்று. இதே வகையில் வேறு சிலர் தொடங்கிய முயற்சியும் உருப்பெறவில்லை. பேராசிரியர் பரோவும் எமனோவும் சேர்ந்து ஆக்கிய திராவிட மொழிச் சொற்பிறப்பகராதி இங்குக் குறிப்பிடத்தக்கது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி:
தமிழ்ச்சொல் மூலங்காண்பதில் முனைந்துநின்றவர் ஞா. தேவநேயப் பாவாணராவார். இவர் வேர்ச்சொற்கள் பற்றிய கட்டுரைகளும் நூல்களும் வெளியிட்டுள்ளார். இவர் தலைமையில் அரசாங்கம் அமைத்த 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' ஆக்கம் அவர் காலத்திற்குப் பின்பும் நடந்துவருகிறது. அதில் முதற்பகுதி வெளிவந்துள்ளது.
தமிழ் - ஆங்கிலம் அகராதிகளும் சில உள. இந்த வகையில் போப்புப் பாதிரியார் 1859-ல் வெளியிட்ட அகராதி 'Pope's Compendious Tamil-English Dictionary' முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அகராதி, தமிழ், என்னும், இலக்கிய, சொற்களின், சொற்கள், தமிழ்ச், பல்வேறு, பொருள், எழுத்துக்கள், இவர், தமிழில், தந்துள்ளார், தரும், சொற்களும், தமிழ்மொழிகள், நூல், பேராசிரியர், வெளியிட்டார், தமிழ்நூல், துறை, வரலாற்றுச், வரலாற்று, தொகுத்துப், கலைச்சொல், இரண்டு, வேறுபடும், செந்தமிழ்ச், உண்மையால், வழங்கும், மக்கள், சொற்களையும், வகையில், விளக்கம், பேதங்கள், பகுதி, உடன், அகராதியாகும், வெளியிட்டுள்ளார்