மார்க்கண்டேய புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
அவன் மனைவி அதை எதிர்த்து, இவை அனைத்துமே மாயை. அரசன் என்று ஒருவனுமில்லை. அவனுக்குப் பகை என்று ஒன்றுமில்லை. ஒர் ஆத்மாவிற்கு நண்பன் என்றோ, பகைவன் என்றோ யாருமில்லை. எனவே போர் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறினாள்.
அலார்க்காவின் துறவு
ரிதத்துவஜாவின் நான்காவது பிள்ளையாகிய அலார்க்கா, சத்திரியர்களுக்குரிய கல்வி கற்று அரசை ஏற்றுக்கொண்டான் அவன் தாய் மதலசா காட்டுக்குப் போகும்போது மகனிடம் ஒரு மோதிரத்தைத் தந்தாள். 'மகனே! இதற்குள் ஒரு கடிதம் இருக்கிறது. எப்பொழுதாவது உனக்குப் பெரும் துன்பம் வந்து செய்வதறியாது மனம் பேதலித்தால், அந்த நேரத்தில் இதனுள் இருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்” என்று சொல்லிவிட்டுக் கணவனுடன் காட்டுக்குப் போய்விட்டாள்.
மிக்க பலவானும், அறிவாளனும் ஆகிய அலார்க்கா, மிக்க நேர்மையாகவும் மகிழ்ச்சியுடனும் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய மூத்த அண்ணன் சுவாகு காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்தான். தன் தம்பி உலக இன்பங்களில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறான் என்பதறிந்து அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினான். நேரே காசிராஜாவிடம் சென்று, அலார்க்காவின் ராஜ்ஜியத்தைத் தனக்குத் தருமாறு ராஜாவைச் சொல்ல வைத்தான். அலார்க்காவிற்கு சுகபோகங்களை விட்டுக் கொடுக்க மனமில்லை. எனவே மறுத்து விட்டான். இப்பொழுது காசிராஜா அலார்க்காவின் ராஜ்ஜியத்தின்மீது படையெடுத்தான். தோல்வி அடைந்த போது தாய் தந்த மோதிரம் நினைவுக்கு வர, அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தான். 'ஆத்மாவின் இலக்கணம் பற்றியும், ராஜ்ஜியம், யானைப் படை, குதிரைப் படை இவையெல்லாம் மனத்தின் ஆசாபாசங்களைப் பொறுத்ததே என்றும், ஆத்மா இந்த எதனோடும் தொடர்பில்லாதது என்பதை அறிய வேண்டும் என்றும் எழுதி இருந்தது. உண்மையறிவு பெற்ற அலார்க்கா, காசிராஜாவிடம் சென்று தமயன் சுவாகுவே ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினான்.
சுவாகு சிரித்துக் கொண்டே என்றுமே தனக்கு இம்மாதிரி பற்றுக்கள் இல்லை என்றும், தம்பியின் போக்கைத் திருத்தவே இந்த நாடகம் ஆடியதாகவும், தம்பி மனம் திருந்தியது கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறிவிட்டுக் காட்டிற்குப் போய் விட்டான்.
காசிராஜாவும் சிரித்துக் கொண்டே, சுவாகுவும் தானும் சேர்ந்து ஆடிய நாடகம் இது என்று கூறிவிட்டு, அலார்க்காவின் ராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.
தன் நாட்டிற்குத் திரும்பி வந்த அலார்க்கா நல்ல ஞானம் கைவரப் பெற்றவனாய்ப் பந்த பாசம், அதிகார ஆசை என்பவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாய் ஆகிவிட்டான். மறுபடியும் அரசனாகும் விருப்பம் ஒருசிறிதும் இல்லாத அலார்க்கா, தன் மூத்த மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டுத் தவம் செய்யக் காட்டிற்குப் போய் விட்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 12 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அலார்க்கா, விட்டான், அலார்க்காவின், என்றும், வேண்டும், அவன், சுவாகு