மார்க்கண்டேய புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
ஒருமுறை நாரதர் நந்தன கானகம் என்ற பூந்தோட்டத்திற்குச் சென்றார். அங்கே பல அப்ஸ்ரஸ்கள் நாட்டியம் ஆட இந்திரன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டவுடன் அவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். அப்பொழுது இந்திரன் “இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த நாட்டியக் கலைஞர்கள். யாருடைய நாட்டியத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். நாரதர், “நான் வேண்டுவது மிகச் சிறந்த அழகும், நாட்டியக் கலையில் வன்மையும் உடைய ஒரு அப்ஸரஸைத் தேடுகிறேன். உங்களில் யார் இரண்டிலும் சிறந்தவர்கள்?" என்று கேட்க, அவர்கள் அனைவரும் தாம் தாம் என்று வாதிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த நாரதர் அவர்களைப் பார்த்து, நல்லது, உங்களுக்குள் முடிவு செய்ய முடியாத பொழுது நான் சொல்லும் காரியத்தை யார் நிறைவேற்றுகிறீர்களோ, அவர்கள் தான் இரண்டிலும் சிறந்தவர்கள் என்ற முடிவிற்கு வரலாம்' என்றார். அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே நாரதர் பேசலானார். "இமயமலையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருக்கிறார். உங்களில் யார் சென்று அவருடைய தவத்தைக் கலைக்க முடியும்” என்றார். துர்வாசர் பெயரைக் கேட்டவுடன் எல்லாரும் பின்வாங்கி விட்டனர். வட என்ற அப்ஸரஸ் மட்டும் துணிந்து முன்வந்து, “நீங்கள் சொன்ன காரியத்தை நான் செய்கிறேன்" என்று சொன்னாள். அனைவரும் ஒப்புக் கொள்ளவே வட இமயமலைக்குச் சென்று துர்வாசர் தவம் செய்யும் இடத்திற்கு நேரே செல்லாமல் சற்று எட்டி இருந்து கொண்டு குயில்போல் கூவ ஆரம்பித்தாள். அந்தக் குயிலோசையைக் கேட்ட துர்வாசர் அந்தக் குரலில் ஐயம் கொண்டு பார்க்க வந்தார். வட நிற்பதையும், குயில்போல் பாடுவதையும் கண்ட அவர், “என் தவத்தைக் கலைப்பதற்காகவே நீ வந்துள்ளாய் என்று தெரிகிறது. பறவைபோல் பாடியதால் நீ பறவையாகப் போவாய்! பதினாறு ஆண்டுகள் கழித்து, ஒரு வேடன் உன்னைக் கொல்வான். பிறகு தேவலோகம் திரும்பி வருவாய்!” என்று சாபமிட்டார்.
கருடனின் பரம்பரையில் தோன்றிய கன்கா, காந்தாரா என்ற இரு சகோதரப் பறவைகள் இருந்தன! முதலில் கன்கா என்ற பறவை இமயமலை நோக்கிப் பறந்து சென்றது. அங்கே குபேரனின் பணியாளன் ஆகிய ‘வித்யுத்’ என்ற அரக்கன் மதனிகா என்ற தன் மனைவியுடன் தனியே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். கன்கா அங்கே சென்றதும் தங்கள் சல்லாபத்திற்கு இடையூறாக இருந்ததால், வித்யுத் அப்பறவையைக் கொன்று விட்டான். தன் சகோதரப் பறவை இறந்ததை அறிந்த காந்தாரா, வித்யுத் இருக்குமிடம் வந்து பழி வாங்கும் நோக்கத்துடன் அவனுடன் போரிட்டு அவனைக் கொன்று விட்டது. உடனே அவன் மனைவியாகிய மதனிகா ராட்சசி ஆகையால், பறவை வடிவம் எடுத்துக் கொண்டு காந்தாராவை மணந்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் துர்வாசரால் சபிக்கப்பட்ட வட என்ற அப்ஸரஸ் தர்ஷி என்ற பெயருடன் பெண்ணாகப் பிறந்தது. இந்த தர்ஷி என்ற பெண்ணையே துரோணர் என்ற பிராமணர் மணந்து கொண்டார். ஒருமுறை குருக்ஷேத்திரப் போர் நடைபெறும் பொழுது தர்ஷி அங்கே சென்றது. எதிர்பாராமல் அர்ச்சுனன் அம்புபட்டு தர்ஷி இறக்க நேரிட்டது. அது இறப்பதற்குள் அதன் வயிற்றில் இருந்து நான்கு முட்டைகள் பூமியில் விழுந்தன. பகுதத்தன் என்ற அரசனுடைய சுப்ரதிகா என்ற யானை அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. யானையின் கழுத்தில் கட்டி இருந்த பெரிய மணி எதிர் பாராதவிதமாக ஒர் அம்பு பட்டதால் அறுந்து கீழே விழுகையில் இந்த நான்கு முட்டைகளையும் மூடி மறைத்துக் கொண்டது.
பாரதப் போர் முடிந்து பல காலம் ஆன பிறகு, ஷமிகா என்ற முனிவர் அவ்விடத்தில் நடக்கையில் இந்தப் பெரிய மணிக்குள் பறவைகளின் சப்தத்தைக் கேட்டு மூடியிருந்த மணியை அகற்றினார். நான்கு குஞ்சுகள் உயிருடன் இருப்பதை அறிந்தார். அவற்றை எடுத்துக்கொண்டு தம் ஆசிரமம் சென்று எவ்வித ஆபத்தும் வராதபடி பாதுகாப்பான இடத்தில் வைத்து இக் குஞ்சுகளை வளர்த்தார். அவை பெரிய பறவைகள் ஆனதும், காட்டில் சுதந்திரமான பறவைகளாய்த் திரிந்தன. இருந்தாலும் இரவானதும் ஆசிரமத்தில் வந்து தங்கிவிட்டன. அப்படித் தங்கி இருக்கும் பொழுது அங்கு விவாதிக்கப்படும் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை ஒரளவு புரிந்து கொண்டன. ஒருநாள் இந்தப் பறவைகள் நான்கும் ஷமிகா முனிவர் எதிரே சென்று மிக்க வணக்கத்துடன், “முனிவரே! நாங்கள் நால்வரும் இந்த உடம்புடன், உயிருடன் இருப்பது தங்கள் கருணையால்தான். அது மட்டுமல்ல; தாங்கள் எங்களுக்கு இங்கே இடம் தந்ததால்தான் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்” என்று கூறின.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 2 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பறவைகள், தர்ஷி, துர்வாசர், சென்று, நாரதர், அங்கே, அனைவரும், பெரிய, நான்கு, வந்து, கன்கா, பொழுது, கொண்டு, யார், பறவை