மார்க்கண்டேய புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
இந்தக் கதைகளை எல்லாம் ஜெய்மினி முனிவருக்கு எடுத்துக் கூறிய நான்கு பறவைகளும் அமைதி அடைந்து விட்டன. ஜெய்மினியின் ஐயங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன.
படைப்பின் கதை
ஜெய்மினி முனிவர், பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்த அந்தப் பறவைகளைப் பார்த்து, பிரபஞ்சப் படைப்பின் வரலாற்றை விளக்கமாகக் கூறுங்கள் என்று கேட்க, பறவைகள் சொல்ல ஆரம்பித்தன.
(பறவைகள் சொல்லிய படைப்பு வரலாறு, பிரம்ம புராணம் முதலியவற்றில் கூறியதை அப்படியே திருப்பிச் சொல்கின்றன. ஆதலின் அதனை விரிவாகச் சொல்லாமல், கருத்தை மட்டும் தந்துள்ளோம்)
பரப்பிரம்மம் வாக்கு, மனம், கற்பனை ஆகியவற்றைக் கடந்திருப்பது. வடிவோ உருவோ இல்லாமல் எங்கும், எல்லாவற்றிலும், எப்பொழுதும் ஊடுருவி நிற்பது. தொடக்கமோ முடிவோ இல்லாதது. குணம், குறி கடந்தது.
தொடக்கத்தில் எங்கும் தண்ணிர்- அதில் ஒரு பெரிய முட்டை வளர்ந்து கொண்டே வருதல்- அதனுள் பிரம்மன் தோன்றுதல்- பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் அதனுள் இருத்தல்- முட்டையினுள் இருந்து வெளியே வந்த பிரம்மன் புல் பூண்டு முதல் ஜடப் பொருள்களையும், புழு, பறவை, பாம்பு, மிருகங்கள் அனைத்தையும் படைத்தல்-இச்சா மாத்திரையாய் பிருகு, அத்ரி முதலிய ஒன்பது முனிவர்களைப் படைத்தார். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றைத் தமது நான்கு முகங்களாகப் படைத்தார்- நீரில் உறங்குவதால் நாராயணன் என்ற பெயர் பெறுதல்- ருத்ரன் பிரம்மன் மடியில் தோன்றுதல், பெயர் வேண்டி அழுதல், ருத்ரன் என்று பெயர் பெறுதல்.
வருதினியின் கதை
வருணா நதிக் கரையில் உள்ள அருணஸ்பதா என்ற ஊரில் ஒரு பிராமண இளைஞன் இருந்தான். வேத சாஸ்திரங்களில் வல்லவனாய் இருந்ததோடு, அழகிய அஸ்வினிகளைவிட அழகனாக இருந்தான். இவ்வளவு இருந்தும் அந்த இளைஞன் மனத்தில் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுதியாக இருந்தது- அந்த இளைஞனை நாடி மற்றொரு பிராமணன் விருந்தினனாக வந்தான். வந்தவன் உலகின் பல்வேறு பாகங்களில் தான் கண்ட காட்சிகளை எல்லாம் வருணித்தான். அதைக்கேட்ட இந்த இளைஞன், “உன்னைப் பார்த்தால் இளைஞனாகத்தானே தெரிகிறாய்! அப்படி இருக்க இந்த வயதிற்குள் எப்படி உன்னால் இத்தனை இடங்களையும் பார்க்க முடிந்தது?” என்று கேட்டான். வந்தவன் மூலிகைகள், மந்திர உச்சாடனம் என்பவற்றில் தான் கைதேர்ந்தவன் என்றும், குறிப்பிட்ட சில மூலிகைகளைக் காலில் தடவிக் கொண்டால் ஒரு விநாடி நேரத்தில் எத்தனை தூரமாக இருந்தாலும், விரும்பிய இடத்திற்குப் போய்ச் சேரலாம் என்றும் கூறினான். அவ்வாறு சொல்லியதோடு மட்டுமல்லாமல், விருந்தினனாக வந்த அவன் இந்த இளைஞன் காலில் பல மூலிகைகளைத் தேய்த்து விட்டான். இந்த இளைஞன் இமய மலைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில், தான் இமயத்தின் உச்சியில் நிற்பதைக் கண்டான். அங்குள்ள செடி, கொடிகள், மரங்கள், அருவிகள், ஓடைகள் என்பவற்றைப் பார்த்துத் தன்னை மறந்து நின்றான். நின்ற இடம் பனிக் கட்டியும் ஈரமும் இருந்த இடம் ஆதலின், மெல்ல அவன் காலில் தேய்த்திருந்த மூலிகைகள் கரைந்து ஒடிவிட்டன. அதை அறியாத இளைஞன் மாலை நேரத்தில் தன் ஊருக்கு வரவேண்டும் என்று நினைத்தான். காலில் மூலிகை இல்லாததால் அவனால் எங்கும் செல்ல முடியவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 13 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இளைஞன், காலில், தான், பெயர், எங்கும், பிரம்மன், அவன்