மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல்
நால் வகைப் படைகளின் வலிமை
நால் வகைப் படைகளின் வலிமை
விழுச் சூழிய விளங்கோ டைய கடுஞ் சினத்த கமழ்கடா அத்து அளறு பட்ட நறுஞ் சென்னிய |
45 |
வரை மருளும் உயர் தோன்றல வினை நவின்ற பேர் யானை சினஞ் சிறந்து களனு ழக்கவும் மா வெடுத்த மலிகுரூஉத் துகள் அகல் வானத்து வெயில் கரப்பவும |
50 |
வாம் பரிய கடுந்திண் டேர் காற் றென்னக் கடிது கொட்பவும் வாள் மிகு மற மைந்தர் தோள் முறையான் வீறு முற்றவும் |
நெடியோனின் போர்த் திறமை
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் | 55 |
பொரு தவரைச் செரு வென்றும் |
யானைப்படை - போர் யானையின் முன்தலைக் கொண்டையில் முகப்படாம் என்னும் சுழி தொங்கியது. சினம் மிகுதியால் ஒழுகும் மதம் கமழ்ந்து கொண்டிருந்தது. பகைவர்களோடு மோதி அதன் தலை குருதியால் சேறுபட்டிருந்தது. யானை மலைபோல் உயர்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தது. போர்த் தொழிலைப் பிற யானைகளுக்குக் கற்றுத் தரும் பாங்கினைக் கொண்டது செழியனின் யானை. படைகளை அது காலால் துவட்டியது. மா - இதன் ஓட்டத்தால் எழுந்த செம்புழுதி வானத்து வெயிலை மேகம்போல் மறைத்தது. தேர் - குதிரை பூட்டிய தேர் காற்றைப்போல் சுழன்றது. மைந்தர் - வாளேந்திய இளம் வீரர்கள் தம் தோள் வலிமையைப் பெருமிதத்துடன் காட்டினர். இப்படிப்பட்ட நாற்படையின் துணைகொண்டு நெடுஞ்செழியன் சேர சோழரையும் வேளிரையும் வென்றான்.
இலங் கருவிய வரை நீந்திச் சுரம் போழ்ந்த இக லாற்றல் உயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின் நிலந் தந்த பே ருதவிப் |
60 |
பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல் |
உம்பல் என்பது யானை. நெடியோனின் வழித்தோன்றலாக வந்த உம்பல் நெடுஞ்செழியன். நெடியோன் அருவி பாய் மலையைக் கடந்து சென்றான். பாலை நிலத்தையும் கடந்து சென்றான். அப்போது தன்னோடு மாறுபட்டவர்களைத் தன் ஆற்றல் மிகுதியால் வென்றான். தோற்றவர்கள் தம் நிலப்பகுதியை நெடியோனுக்குக் கொடுத்தனர். அதனை அவன் தனதாக்கிக் கொள்ள வில்லை. மாறாக அவர்களின் நாட்டை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டான். இது ‘நிலம் தந்த பேருதவி’. இதனை ‘நிலந்தரு திரு’ என்றனர். ‘திரு’ என்பது பெருமை. வென்ற நிலத்தைத் தோற்றுப்போன உடையாளி அரசனுக்கே திருப்பித் தந்த நெடியோன் இவன். இந்தப் பாண்டிய அரசன் நெடியோன் தான் வென்ற நாட்டைத் தன்னிடம் தோற்ற அரசனுக்கு உதவியாக அமையும்படி திருப்பித் தந்ததால் அது ‘பேருதவி’ என்று போற்றப்பட்டது. நிலமளந்த நெடியோனின் திருவைவிட, நிலம் தந்த பேருதவியாகிய திரு மேலானதாகையால் இப் பாண்டியன் ‘நிலந்தரு திருவின் நெடியோன்’ என்று போற்றப்படுகிறான் இவன் வழி வந்த யானைக் குட்டிதான் இப் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன். நிலமளந்த நெடியோன் - மாபலியின் கொடையைக் கொன்று, அவனது மூவுலகையும் தனதாக்கிக் கொண்டான்.
மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை
மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும் நரை யுருமின் ஏற னையை அருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின் உயர்ந் தோங்கிய நிரைப் புதவின் |
65 |
நெடு மதில் நிரை ஞாயில் அம் புமிழ் அயி லருப்பந் தண் டாது தலைச் சென்று கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் |
இடியானது, பச்சை மரங்களை எரித்துத் தின்று பட்ட மரங்களாக்கும். பாறையாக உள்ள மலைகளையும் உதிரச் செய்யும். அதுபோல நெடுஞ்செழியன் பகைவர் பலரது கோட்டைகளைத் தகர்த்தான். பகைவரின் கோட்டை கடத்தற்கரிய காவற்காடுகளுக்கு இடையே இருந்தது. ஆழமான அகழிகள், மிக உயரத்தில் வீரர்கள் பதுங்கிக் கொள்ளும் புதவு, நீண்ட மதில், படைக்கருவிகளைப் பாதுகாக்கும் ஞாயில், மறைந்திருந்து அம்பெய்யவும் வேல் வீசவும் உதவும் அருப்பம் முதலானவற்றைக் கொண்டிருந்தது, பகைவரின் கோட்டை. இப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் நெடுஞ்செழியனின் படை தடையின்றி உள்ளே சென்று கோட்டையைத் தனதாக்கிக் கொண்டது. இது அவனது விழுமிய சிறப்புகளுள் ஒன்று.
தென் குமரி வட பெருங்கல் | 70 |
குண குட கடலா வெல்லைத் தொன்று மொழிந்து தொழில் கேட்ப வெற்ற மொடு வெறுத் தொழுகிய கொற்ற வர்தங் கோனா குவை |
தெற்கில் குமரிமுனை, வடக்கில் வேங்கடமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல், இந்த எல்லைப் பகுதிக்குள் ஆண்ட மன்னர்கள் அனைவரும் வழிவழியாகத் தனது ஆணைக்குட்பட்டு நடக்கும்படி செய்த அரசர்க்கரசன் நெடுஞ்செழியன். வெற்றம் = வெறுப்பு, வேறு வழி இல்லையே என்னும் வெறுப்போடு இவனுக்கு அடிபணிந்து ஒழுகினர். கொற்றம் = பிறர் பணியும் வெற்றி.
கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி
வானி யைந்த இரு முந்நீர்ப் | 75 |
பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக் கொடும் புணரி விலங்கு போழக் கடுங் காலொடு கரை சேர நெடுங் கொடிமிசை இதை யெடுத்து இன் னிசைய முரச முழங்கப |
80 |
பொன் மலிந்த விழுப் பண்டம் நா டார நன் கிழிதரும் ஆடி யற் பெரு நாவாய் மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங் கிருக்கைத் |
85 |
தெண் கடற் குண் டகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ! |
‘நெல்லின் ஊர்’ என்பது சாலியூர். நெடுஞ்செழியன் இவ்வூரை வென்று தனதாக்கிக் கொண்டான். ‘விலங்கு’என்றால் வளைவு. சாலியூரில் கடல் வளைந்திருந்தது. காற்றால் செலுத்தப்படும் பெரும்பெரும் நாவாய்க் கப்பல்கள் இங்குப் பொன்னை இறக்கின. பொருள்களை ஏற்றின. அப்போதெல்லாம் முரசு முழங்கிற்று. நாவாயின் பாய்மரம் ‘இதை‘. இதில் நாட்டின் அடையாளக் கொடி கட்டப்பட்டிருந்தது. நாவாய் கடலலையில் ஆடியது. நாவாய் மலை போலவும், அதன் பாய்மரம் மலையில் மேயும் மழைமேகம் போலவும் தோன்றியது. இப்படிப் பல நாவாய்கள். இந்தத் துறைமுக நகரைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் இருந்தன. வானத்தைத் தொடுவது போன்ற பெருங்கடல். மேகங்கள் போல் நுரைதள்ளும் பேரலைகள். இந்த வளைந்த புணரிக் கடல்தான் உட்குழிவாக நிலப்பகுதியில் நுழைந்திருந்தது. (இந்தச் சாலியூர் இக்காலத்துத் தனுஷ்கோடியின் ஒரு பகுதியாய் இருந்து கடலால் கொள்ளப்பட்டது.) ‘புணரி’ என்று இங்குக் குறிப்பிடப்படுவது இராமேஸ்வரத்துக்கு மேற்கில் வடபால் தென்பால் கடல்நீர்கள் புணர்வதை உணர்த்துகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, நெடுஞ்செழியன், தந்த, யானை, நெடியோன், இலக்கியங்கள், தனதாக்கிக், நாவாய், உம்பல், மதுரைக்காஞ்சி, கொண்டிருந்தது, என்பது, பத்துப்பாட்டு, விழுச், நெடியோனின், உயர், ஞாயில், மதில், கொண்டான், அவனது, திருப்பித், இவன், நிலமளந்த, சென்று, கோட்டை, முற்றிய, சாலியூர், பாய்மரம், போலவும், வெற்றி, கடல், வென்ற, ஆழமான, அகழிகள், பகைவரின், ‘நிலந்தரு, இப்படிப்பட்ட, மைந்தர், வென்றான், வீரர்கள், தேர், என்னும், மிகுதியால், கொண்டது, உயர்ந், தோங்கிய, சென்றான், சங்க, போர்த், கடந்து, வந்த, சிறப்பின், வானத்து, பட்ட, பெருமை