ஐஞ்சிறு காப்பியங்கள் - சூளாமணி
6.தூதுவிடு சருக்கம்
பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன
மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம் திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம் பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே | 425 |
சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்
நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம் எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம் குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம் அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம் | 426 |
இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை
எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம் இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம் கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை | 427 |
மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு
வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல் நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம் குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை | 428 |
கோங்கு முதலியன
குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம் புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம் கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம் இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே | 429 |
பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு
மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள் புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே | 430 |
மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்
அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப் பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான் | 431 |
பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்
புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத் துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே | 432 |
விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்
புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல் மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண் கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின் அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான் | 433 |
மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி
திகைத்தல்
திகைத்தல்
அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான் பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட இதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் | 434 |
வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்
மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும் புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய் நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல் மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான் | 435 |
இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்
அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம் நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன் பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென் றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான் | 436 |
துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்
நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும் சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர் உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான் | 437 |
அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்
என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின் நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித் தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப் பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான் | 438 |
தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்
மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும் வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான் | 439 |
அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்
மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய் அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான் உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால் நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான் | 440 |
தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்
ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான் தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன நீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான் | 441 |
மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச் சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர் பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான் | 442 |
பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்
பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச் சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர அன்னமென வல்லவென வன்னண நடந்தார் | 443 |
நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் | 444 |
அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும் கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல் முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம் மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல் | 445 |
வண்டுகள் ஒலித்தல்
கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல் சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய் வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற் கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே | 446 |
இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க
முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும் நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக் கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம் கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர் | 447 |
துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம் பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார் வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார் | 448 |
வண்டுகள் மயக்கம்
பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண் காவியென வூதுவன கைத்தலம் விலங்க மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார் | 449 |
சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண் நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர் அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே | 450 |
கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண் அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ் வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும் | 451 |
மைந்தர்கள் கலங்கி மெலிதல்
நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார் மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார் தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின் உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார் | 452 |
வேறு
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம் தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார் வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார் காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார் | 453 |
அம்மாதர்களின் தன்மை
இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார் பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார் கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார் முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் | 454 |
புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே | 455 |
மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான் தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார் என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால் பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே. | 456 |
வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே | 457 |
சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்
சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய் வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல் தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர் | 458 |
தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும் தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும் யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ | 459 |
மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்
என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற் சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார் இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த வென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த | 460 |
வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்
ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன் மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம் சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங் கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே | 461 |
மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்
வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங் கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ் சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார் | 462 |
மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்
தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ டுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த் துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே | 463 |
மரீசிக்கு வேண்டுவன புரிதல்
துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச் சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார் | 464 |
மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்
ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர் தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச் சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில் ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான் | 465 |
மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்
வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார் வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும் இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான் | 466 |
வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்
ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார் வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப் பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந் தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான் | 467 |
யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான் செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம் வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான் | 468 |
விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்
ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம் தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம் போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம் வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம் | 469 |
விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்
பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார் ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின் சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும் மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார் | 470 |
கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார் மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம் குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே | 471 |
கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந் தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய் மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார் ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார் | 472 |
தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம் கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம் வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக் கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே | 473 |
விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்
மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார் வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால் சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே | 474 |
சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார் வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார் நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார் | 475 |
பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும் ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும் சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண் நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார் | 476 |
இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும் விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச் சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள் பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம் | 477 |
அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார் கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான் மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம் | 478 |
பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும் சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும் ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய் நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார் | 479 |
மாதர்கள் மயக்கம்
மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும் சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும் நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார் | 480 |
வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த் தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப் பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த் தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார் | 481 |
விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்
கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய் மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும் தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே | 482 |
விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்
மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும் கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத் தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே | 483 |
விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்
செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின் கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென் றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே | 484 |
பொழிலின் காட்சி
தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால் போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே | 485 |
பூங்காவின் பொதுக்காட்சி
போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன் கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத் தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே | 486 |
தென்றல் வீசுதல்
போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால் தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல் மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக் காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே | 487 |
விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர் வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார் | 488 |
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்
பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய் மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும் விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக் கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான் | 489 |
நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்
ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப் பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான் நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில் ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான் | 490 |
விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்
பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும் நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும் வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன் நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான் | 491 |
மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்
வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள் நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன் கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண் மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான் | 492 |
மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்
வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந் தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச் சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான் | 493 |
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்
செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார் அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே | 494 |
திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண் டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும் தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால் எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான் | 495 |
தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்
இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம் சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர் சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார் | 496 |
மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்
அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய் வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப் பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச் செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார் | 497 |
மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்
கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப் புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும் எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார் | 498 |
மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை
விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும் வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர் எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார் | 499 |
தெருவிற் செல்லுதல்
வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட ஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக் கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் | 500 |
அரண்மனையின் வாயிலை அடைதல்
தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன் தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார் ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக் குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார் | 501 |
பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்
மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக் கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான் | 502 |
பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்
மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத் தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக் கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான் அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான் | 503 |
பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி
வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும் காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக் தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன் | 504 |
மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்
அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான் மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் | 505 |
மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்
விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி | 506 |
மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்
நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப் புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா மகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான் | 507 |
இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி
போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும் காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும் ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம் தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே | 508 |
அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர் வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள் மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ | 509 |
திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்
என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார் இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித் தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான் | 510 |
மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்
தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான் மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென் றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான் | 511 |
மருசி சினந்து கூறுவன
முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால் என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம் அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம் மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே | 512 |
பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித் தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில் ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான் | 513 |
வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச் சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும் நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ | 514 |
அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப் பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ | 515 |
அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல் மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும் வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா | 516 |
உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர் ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம் வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான் | 517 |
பயாபதி மன்னன் பதில் உரைத்தல்
ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித் தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான் | 518 |
வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார் செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ | 519 |
ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான் மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ | 520 |
இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால் பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய துன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான் | 521 |
மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க் கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம் எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான் | 522 |
விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்
இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக் கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன் பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான் | 523 |
பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்
கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல் வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென் றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங் குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும் | 524 |
விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்
மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும் விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால் அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும் வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100 | 525 |
விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்
மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன் பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான் | 526 |
மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன் அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான் பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான் கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான் | 527 |
அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம் உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத் திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான் | 528 |
மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்
ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித் தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான் | 529 |
முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக் காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான் மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய் | 530 |
வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம் போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல் வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் | 531 |
அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன் பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப் பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான் | 532 |
அருகக் கடவுள் வணக்கம்
அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே | 533 |
அழனாறும் வெங்கதிரோ னாண வலராது நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட் சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே | 534 |
நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங் குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய் விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே | 535 |
நமிபாடிய இசையின் தன்மை
என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார் வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே | 536 |
நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்
மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன் குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக் கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே | 537 |
நமியை வணங்குதல்
பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான் தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம் மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான் | 538 |
நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை
தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத் தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப் பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே | 539 |
ஆதிசேடன் நமியரசனை வினவுதல்
மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித் தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ லீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய் வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே | 540 |
நமியரசன் விடையிறுத்தல்
பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத் துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ மண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான் | 541 |
ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்
இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும் வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய் நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே | 542 |
நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்
ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான் | 543 |
பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்
தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான் | 544 |
அங்கனிமித்திகன் கூறுதல்
யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் | 545 |
மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச் சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக் கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம் | 546 |
வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்
கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான் இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து கடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள் முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால் | 547 |
கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்
விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக் கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப் புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித் திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான் | 548 |
வாகுவலியின் தவநிலைமை
கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத் தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம் பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன் குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம் | 549 |
அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக் கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத் திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ | 550 |
வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக் கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய் | 551 |
அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய் வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில் தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர் கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன் | 552 |
புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான் | 553 |
வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்
ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித் தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக் கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான் | 554 |
வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்
எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர் தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார் அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் | 555 |
மருசி மேலுங் கூறத்தொடங்குதல்
குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள் பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர் அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங் கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான் | 556 |
வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்
இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென் றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான் | 557 |
மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப் பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய் முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட் டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் | 558 |
அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்
மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச் சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார் | 559 |
சிறந்த தூதுவன் சிறப்பு
ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான் தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற் கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான் | 560 |
பயாபதி மரிசியைப் பாராட்டல்
மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன் எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச் சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப் பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான் | 561 |
பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்
இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ | 562 |
கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான் மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான் | 563 |
மருசிக்குச் சிறப்புச் செய்தல்
தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல் ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப் போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச் சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான் | 564 |
மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்
அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப் பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான் | 565 |
மருசி தனது நகரத்தை அடைதல்
உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச் சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன் குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே | 566 |
7.சீயவதைச் சருக்கம்
மரீசி சடி மன்னனைக் காண்டல்
மற்ற மாநகர் மருசி புக்கபின் கொற்ற வேலவன் கோயின் மாநெதி முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன் சுற்று வார்கழ றெழுது துன்னினான் | 567 |
விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக் கலந்து மாமணிக் கடக மின்செய அலங்கல் வேலினா னங்கை யாலவற் கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான் | 568 |
சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்
தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன் வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத் தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன் முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான் | 569 |
இதுவுமது
தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க் காது வேலினான் கரும முற்றுற ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது கோதில் கேள்வியான் றொழுது கூறினான் | 570 |
இதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று
வெல்க வாழிநின் வென்றிவார்கழல் செல்க தீயன சிறக்க நின்புகழ் மல்க நின்பணி முடித்து வந்தனன் பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய் | 571 |
இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும் அங்கு வேந்தனை யணைந்த வாயிலும் பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந் தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா | 572 |
அள்ளி லைச்செழும் பலவி னார்சுளை முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக் கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும் | 573 |
முள்ள ரைப்பசு முளரி யந்தடத் துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம் கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப் புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும் | 574 |
நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய் பத்தி சித்திரப் பலகை வேதிகை சித்தி ரங்களிற் செறிந்து காமனார் அத்தி ரம்மென அசோகங் கண்டதும் | 575 |
தன்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான் மன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங் கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும் | 576 |
சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன் எரிந்த பூணின னிலங்கு தாரினன் வரிந்த கச்சைய னொருவன் வந்துவண் டிரிந்து பாயவிங் கேறு கென்றதும் | 577 |
மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங் கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர் உற்ற மங்கலக் கலங்க ளோடுடன் முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும் | 578 |
பங்கய யத்தலர்ச் செங்கண் மாமுடித் திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும் அங்கு வந்தது மவர்கள் சொற்றதும் | 579 |
நற்பு றத்தன நாற்ப தாம்வய திப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ டப்பு றத்தர சவைய டைந்ததும் | 580 |
மன்ன வன்கழல் வணங்கி நின்றதும் பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும் பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந் துன்னி வாசகந் தொழுது கொண்டதும் | 581 |
ஓட்டி றானையா னோலை வாசகங் கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா யீட்டு மோனியா யிருந்த பெற்றியும் | 582 |
இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும் வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும் புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு மருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும் | 583 |
பின்னை மன்னவன் பேணி நன்மொழி சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும் பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள வின்ன கைச்சிறப் பருளி யீந்ததும் | 584 |
அருங்கல லக்குழாத் தரசன் றேவிமார் பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது மொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ் சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான் | 585 |
இதுமுதல் எட்டுச் செய்யுள்கள், பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்
சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ தின்ன மொன்றுள வடிகள் யான்பல மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டன னன்ன னீர்மையா ரரச ரில்லையே | 586 |
கற்ற நூல்பிறர் கற்ற நூலெலா முற்ற நோக்கினு முற்ற நோக்கல வுற்ற நூலெலா முற்ற நூல்களாய்ப் பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே | 587 |
எரியு மாணையான் குளிரு மீகையான் பெரியன் பெற்றியாற் சிறிய னண்பினா னரியன் வேந்தர்கட் கெளிய னாண்டையார்க் குரிய னோங்குதற் கோடை யானையான் | 588 |
எல்லை நீருல கினிது கண்பட வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி யில்லை யேலுல கில்லை யாமென நல்ல னேயவ னாம வேலினாய் | 589 |
கற்ற நூலினார் கலந்த காதலா லுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற் கொற்ற வேலவன் குடையி னீழலார் சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய் | 590 |
கோதிலார் குல மக்கண் மாக்கண்மற் றேதி லாரென வியைந்த தின்மையார் ஆத லாற்றமர் பிறர்க ளாவதங் கோதி லாரவர்க் குள்ளஃ தில்லையே | 591 |
வைய மின்புறின் மன்ன னின்புறும் வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ் செய்ய கோலினாய் செப்ப லாவதன் றைய தாரினா னருளின் வண்ணமே | 592 |
வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க் காவி யாபவ ரரச ராதலாற் காவ லோவுங்கொ லென்று கண்படான் மாவ றானையம் மன்னர் மன்னனே | 593 |
இதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன
மங்குல் மாமழை மாரி வண்கையான் பொங்கு காதலால் புதல்வர் தாமுமற் றிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன் சிங்க வேறெனச் செப்பு நீரரே | 594 |
கைய வாச்சிலைக் காம னிங்கிரு மெய்யி னால் வெளிப் பட்ட நீரதால் வைய மாள்பவன் புதல்வர் வார்கழ லையன் மார்கடம் மழகின் வண்ணமே | 595 |
சங்க வண்ணனார் தம்பி தானுநீர் பொங்கு கார்முகில் புரையு மேனிய னங்க ணிவ்வுல காள நாட்டிய மங்க லப்பொறி மன்ன காண்டியால் | 596 |
செங்கண் மாலவன் தெய்வ மார்பகம் பங்க யத்துமேற் பாவை தன்னுட னங்கு லக்கொடி நங்கை சேர்வதற் கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே | 597 |
மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்
நங்கை யங்கவ னலத்திற் கொப்பவ ளிங்கி வட்குவ றேந்த லில்லிவர் பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது வெங்கண் யனையாய் வியக்கு நீரதே | 598 |
சடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்
என்று கூறலு மேந்து நீண்முடி வென்றி நீள்புகழ் வேக யானையா னன்று மற்றவற் கருளி யீந்தன னின்று மின்சுடர் நிதியின் நீத்தமே | 599 |
சடிமன்னன் அமைச்சரை வினாதல்
மற்ற வன்றனை மனைபு கப்பணித் துற்ற மந்திரத்தவர்க ளோடிருந் தெற்று நாமினிச் செய்வ தென்றனன் வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே | 600 |
அமைச்சரின் விடை
செங்க ணீன்முடிச் செல்வ சென்றொரு திங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொரு சிங்கம் வாய் பகத் தெறுவ னென்பது தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே | 601 |
இதுவுமது
ஆதலா லஃதறியும் வாயிலா வோது மாண்பினா னொருவ னெற்றனாய்த் தீதி றானையாய் செல்ல வைப்பதே நீதி யாமென நிகழ்த்தி னாரரோ | 602 |
மன்னன் ஒற்றாய்தல்
உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல் வைத்த வொற்றினன் மன்ன னானபி னத்தி றத்தனே யமர்ந்த சிந்தைய னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான் | 603 |
இனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்
இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா ளத்தி சைக்கணஞ் சப்படு மாழியா னெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுற வைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம் | 604 |
இதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன
பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத் துஞ்ச லோவுந் தொழிலின னாயினான் | 605 |
முத்த வாணகை மோய்பவ ளத்துணி யொத்த வாயமு தொண்கடி கைத்திரள் வைத்த வாயின னாய்மட வார்கடஞ் சித்த வாரிக ளுட்சென்று தங்கினான் | 606 |
ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க் காருங் கொம்பனை யாருங் கலந்துழித் தாருங் கொங்கை ளும்பொரத் தாஞ்சில வாரம் பட்டணி வண்டின மார்த்தவே | 607 |
வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட் கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித் தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான் | 608 |
தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந் தேம யங்கிய செங்கழு நீரணி காம மென்பதொர் கள்ளது வுண்டரோ யாம மும்பக லும்மயர் வெய்தினான் | 609 |
சுற்று வார்முலை யார்தந் துகிற்றட முற்று மூழ்கும் பொழுது முனிவவ ருற்றபோழ் துணர்த் தும்பொழு தும்மலான் மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான் | 610 |
மண்க னிந்த முழவின் மடந்தையர் கண்க னிந்திடு நாடகக் காட்சியும் பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும் விண்க னிந்திட வேவிழை வேய்தினான் | 611 |
வாவி யும்மது மண்டபச் சோலையுந் தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும் பாவும் வெண்மண லும்புனற் பட்டமு மேவு நீர்மைய னாய்விளை யாடினான் | 612 |
மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி துன்னுஞ் திங்கட் பனிச்சுடர் தண்ணிது என்னு மித்துணை யும்மறி யான்களித் தன்ன னாயின னச்சுவ கண்டனே | 613 |
அச்சுவக்கண்டனின் அரசியல்
சீறிற் றேந்துணர் வின்றிச் செகுத்திடு மாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மனந் தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ் வாறு சென்ற தவற்கர சென்பவே | 614 |
பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்
தோடு மல்கு சுரும்பணி கோதையர் கோடி மென்றுகிற் குய்யத் தடம்படித் தாடித் தன்னணை யாமையிற் பூமகள் ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள் | 615 |
சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்
ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல் தாங்கி னான்சத விந்துவென் பானுளன் நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன் வீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் | 616 |
அரசர்க்குரிய அறுவகைப் பகைகள்
மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந் தன்னை யாள்பவர்க் கோதின் தங்கணே பன்னி னாறு பகைக்குல மாமவை முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான் | 617 |
தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப் பின்னை வேறல பிறர்க்கரி தாதலான் மன்ன மற்றவ னாளும் வரைப்பகம் பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ | 618 |
மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ னேசி றண்டம் பரவவின் வையக மாசி றண்டத்த னாயினி தாளுமே | 619 |
பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ் சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென் றுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங் கற்ற வன்பிறர் காவல னாகுவான் | 620 |
அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த் திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல் முருக்கு மற்றத னைமுகத் தாரினாய் | 621 |
இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப் புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட் டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே | 622 |
அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்
நெறியி னீதிக்க னேரிவை யொப்பவு மறிதி நீயவை நிற்க வழன்று நீ செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர் உறுதி யானுரைப் பானுறு கின்றதே | 623 |
அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்
என்ற லும்மிணர் வேய்முடி மாலையா னன்று சொல்லுக வென்று நகைமணிக் குன்ற மன்னதிண் டோ ண்மிசைக் குண்டலஞ் சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான் | 624 |
நிமித்திகன் கூறல்
பூமி மேற்புரி சைம்மதிற் போதன நாம நன்னக ராளு நகைமலர்த் தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள் காம வேளனை யாருளர் காண்டியால் | 625 |
இதுவுமது
ஏந்து தோளவ ருள்ளிளை யானமக் காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப் போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ | 626 |
அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்
முத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற் கொத்த வாறுணர்ந் தீயென வென்செயு மைத்த கைமனத் தன்மணித் தன்னெனக் கைத்த லங்கதிர் வீச மறித்தனன் | 627 |
அச்சுவக்கண்டன் கூறுதல்
மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந் தொகையை வென்றவென் றோளுள வாப்பிற பகையி னிப்படர்ந் தென்செயு மென்றன னகைகொ ணீண்முடி நச்சர வம்மனான் | 628 |
அச்சுவக்கண்டனின் சினமொழிகள்
மாசி லாலவட் டத்தெழு மாதரும் வீச விண்டொடு மேருத் துளங்குமோ பேசின் மானிடப் பேதைக ளாற்றலா லாசி றோளிவை தாமசை வெய்துமோ | 629 |
இதுவுமது
வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ வாழித் தானவர் தானையை யட்டவென் பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ | 630 |
வேக மாருதம் வீசவிண் பாற்சிறு மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ வேக மாயவென் சீற்றமஞ் சாதெதி ராக மானுடர் தாமசை கிற்பவோ | 631 |
குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன் மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற் றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே | 632 |
விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே யச்ச மின்றி நிற் பாரந் நிமித்த நூல் பொச்ச லாங்கொல் புலந் தெழு நீர்மையாய் | 633 |
புலவர் சொல்வழி போற்றில னென்பதோ ரலகிற் புன்சொலுக் கெஞ்சுவ னல்லதே லுலக மொப்ப வுடன்றெழு மாயினு மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே | 634 |
ஆத லாலாதற் கேற்ற தமைச்சர்க ளோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான் யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோ ரேத முண்டெனு மெண்ணமில் லாதவன் | 635 |
அச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்
அலங்க லாழியி னானது கூறலுங் கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம் புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார் | 636 |
எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங் கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற் றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும் விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே | 637 |
முட்கொணச்சு மரமுளை யாகவே யுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம் வட்கி நீண்டதற் பின் மழு வுந்தறு கட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ | 638 |
சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென் றறிய லாவவன் றாலணி மாமலர் வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன் செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே | 639 |
அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்
அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன் செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண் டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம் | 640 |
இதுவுமது
பகைய லாதவ ரைப்பகை யாக்கலும் நகையி றீமனத் தாமரை நண் பெண்ணலு முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய் மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே | 641 |
அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி
அறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற் றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர் குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே | 642 |
அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்
என்ற லும்மிது நன்றென வேந்தொளி நின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான் சென்று தூதுவர் தாந்திறை கொள்கென வென்றி வேலவன் மேல்விடை யேயினான் | 643 |
அத்தூதர்களின் பண்பு
ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த ரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர் நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண் மோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார் | 644 |
வேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்
தீதறு தென்மலை மாதிர முன்னுபு தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை யோதின ரோதி யுலப்பற வோங்கிய போதன மாநகர் புக்கன ரன்றே | 645 |
அந்நகரச் சிறப்பு
செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம் விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே | 646 |
இதுவுமது
முரி முழாவொலி விம்மி முரன்றெழு காரி மிழார்கலி யான் மயி லாலுவ சோரி முழாவிழ விற்றெரு துற்றபின் சீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே | 647 |
சூளிகை சூடிய சூல விலைத்தலை மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின் னீளிய நீரரு வித்திரள் வீழ்வன காளைக டாதைந கர்ப்பல கண்டார் | 648 |
கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு மூடு செலற்கரி தாயிட ருற்றார் | 649 |
மூரிநடைக்களி யானை மதத்தினொ டேரி னடைக்கலி மாதம் விலாழியு மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை வேரி வெறிக்கள மொப்பது கண்டார் | 650 |
தூதர்கள் அரண்மனையை அடைதல்
வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர் விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர் கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர் மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார் | 651 |
கோயின் முகத்தது கோடுயர் சூளிகை வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி வாயின் முகத்து மடுத்திது சொன்னார் | 652 |
தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்
வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர் வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன் நீதலை சென்றுரை நீள்கடை காப்போய் | 653 |
பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்
என்றவர் கூற விருங்கடை யானடி னான்றென நாறொளி நீண்முடி யானடி மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும் ஒன்றிய போதக என்ப துரைத்தான் | 654 |
தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்
பொன்னவிர் நீள்கடை காவலன் போதக வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி மன்னவன் வார்கழல் வாழ்த்திமடக்கிய சொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார் | 655 |
அந்த ஓலையைப் படித்தல்
வாசகன் மற்றது வாசினை செய்தபின் மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை தேசக மூசிய வாழியன் சீர்த்தம ரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர் | 656 |
இதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி
ஊடக மோடி யெரிந்தொளி முந்தூறு மாடக மாயிர கோடியு மல்லது சூடக முன்கையர் தோடக மெல்லடி நாடக ராயிர நாரியர் தம்மையும் | 657 |
தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி ரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும் கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில் பண்டரு நீரன வும்பல் பண்டமும் | 658 |
வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம் தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமி தொண்சுட ராழியி னானுரை யென்றார் | 659 |
வேறு - பயாபதியின் மனநிலை
வேந்தன்மற் றதனைக் கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லைக் காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிரு போலச் சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான் | 660 |
இதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை
கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில் பொருத்தினாற் பழிக்க லாகாப் புலைமைமிக் குடைய ரேனு மொருத்தனுக் கொருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து வாழத் திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான் | 661 |
மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட நிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற் பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார் | 662 |
ஓளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம் தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா மளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண் | 663 |
அன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானா லின்று நா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்ல வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்த ரொன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே | 664 |
பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்
என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர்க் கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு சென்றுறு மிறவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான் | 665 |
பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்
ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற் காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னே மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் | 666 |
இதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல்
செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்கு லையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான் | 667 |
அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின் மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண் குணிமுழாப் பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்ட கணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார் | 668 |
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண் வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச் செஞ்சுடர் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார் | 669 |
மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற் றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார் பாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீரா ராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான் | 670 |
காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப் பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக்கோவை யேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை யாய்ந்தொழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான் | 671 |
பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்
அஞ்சுடர் வயிரப் பூணா னருளினான் விடுப்ப வாங்கண் விஞ்சையர் விமானத் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச் செஞ்சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக் கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார் | 672 |
திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்
என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ணன் வினவ யாரும் சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர் கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான் | 673 |
குறளன் கூற்று
அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான் திறைதர வேண்டும் என்று விடுதரச் செருவந் தானை யிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான் | 674 |
இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்
வேறு
திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீக்கலுண் முறைகெட முளைப்பதோர் முனிவி னொள்ளெரி கரைப்படு படையவன் கனல் மூட்டினான் | 675 |
முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேல் பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி யடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி கடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே | 676 |
படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி கடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோ டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை யெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே | 677 |
இதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்
உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ லெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே லழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே | 678 |
நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா டாளுது மன்றெனி லொழிது மேலெம தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ் வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள் | 679 |
விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை யடைலுடைக் கடுந்தொழி லரவி னாரழற் படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர் மடமுடை மனத்தனும் மயரி மன்னனே | 680 |
இருங்கலிப் படையினு மிகலி னாலுமெம் மருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர் மருங்குள தெனினது மகளி ராற்சில பெருங்கலத் தாங்கினாற் பெறலு மாகுமே | 681 |
பாழியான் மெலிந்தவற் திறத்துப் பண்டெலா மாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃ தேழைகா ளினியொழித் திட்டுச் செவ்வனே வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே | 682 |
அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொடு குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையா னின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன வென்றியாம் பகழியும் விசும்பு மீவனே | 683 |
இறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங் குறையிது கூறுமின் சென்று தூதிர்காள் திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர் முறையுள தெனினது முயன்று கொள்கவே | 684 |
உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங் கட்கமழ் கோதையர் கணமு மீண்டது வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத் துட்கெனு மனத்தினர் தூத ரேகினார் | 685 |
தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்
போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சி யாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனைக் கண்டே யேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி | 686 |
இதுவுமது
மீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு மோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கி யூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம் தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார் | 687 |
அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்
அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டே பெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா னிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானே சுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான் | 688 |
இதுவுமது
மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா னன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யா னொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக் குன்றிடைச் சீயந் தன்மேற் கொளப்புணர்த் திடுவனென்றான் | 689 |
அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்
அன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னு மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் றன்னைக் கூவிக் கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான் | 690 |
அம்மாயச்சிங்கத்தின் தன்மை
ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும் வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க் கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் | 691 |
அவ்வரிமாவின் செயல்
இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து மலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீ ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான் | 692 |
அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்
பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப் புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார் | 693 |
அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்
அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண் மெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே யிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக் கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான் | 694 |
ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து பூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர் வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர் ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார் | 695 |
தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்
திரையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும் குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற வரையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைச னறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான் | 696 |
இதுவுமது
தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப விளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவ னொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா னளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான் | 697 |
தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு ளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுந் திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன் | 698 |
திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்
என்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தா னென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே சென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலறக் கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான் | 699 |
அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்
உனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற் களைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றி னுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி அளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார் | 700 |
திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்
ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற வாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவ னேயிப் பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன் பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான் | 701 |
இதுவுமது
புழற்கைத் திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதா நிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுக வழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத் தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான் | 702 |
இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித் தேர் காலாட் கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக வெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே ருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான் | 703 |
விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்
நகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர்ப் பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச் சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின் மகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான் | 704 |
இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்
புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான் தொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார் | 705 |
அம்மாய அரிமாவின் முழக்கம்
அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா வுடைந்த போகவோ ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே பொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா | 706 |
அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்
காளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத் தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச் சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா ஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே | 707 |
அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்
எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப் பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச் செங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான் | 708 |
திவிட்டன் ஓடும் தன்மை
சுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்கா அழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு மெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே | 709 |
இதுவும் அது
மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்த நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த வரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதா முரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடைந் தொழிந்த | 710 |
அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்
மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க் கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங் காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா னோடி யிட்டன னொளிவரை முழையகத் தொளிந்தான் | 711 |
அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்
உலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின் நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப் பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே | 712 |
திவிட்டன் முழக்கம்
ஏங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தா யோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைந் துரவோ னாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான் வீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே | 713 |
அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்
அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த கதிருங் கண்களிற் கனலெனச் சுடர்களுங் கனல முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே | 714 |
எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும் விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள் சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா விரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே | 715 |
அவ்வரிமா வெளிப்படுதல்
தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை வாரித் தீட்டிவண் வந்ததோ ரரியென மதியாப் பூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப் பாரித் திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார் | 716 |
திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்
அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான் பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே | 717 |
அமரர்களின் வியப்பு
சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா வாய வாயிர மாயிர மடுதிற லரிமா ஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம் வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார் | 718 |
அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும் பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே | 719 |
திவிட்டனின் சால்புடைமை
யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி யேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள் போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன் | 720 |
தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால் வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா னம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லா லிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே | 721 |
இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்
ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும் வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச் வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின் வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் | 722 |
புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய கள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர் வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய் | 723 |
காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற் றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று ளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய் | 724 |
மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு துன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய் | 725 |
உவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிர அவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகி இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய் | 726 |
வேறு
துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத் துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப் பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே | 727 |
வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங் கழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கரு முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின திழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே | 728 |
பருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந் திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித் தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே | 729 |
சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில் வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார் ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால் சாரலா காதன சாதிசா லப்பல | 730 |
பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந் திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக் குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப் பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே | 731 |
அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன இவைகள்கண் டய்சில வேழவீட் டம்பல நவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம் | 732 |
குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும் எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின் கடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம் பொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே | 733 |
ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற் காக்கலா காகளி றாழவா ழும்புறந் தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே | 734 |
இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல மதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை நிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக் கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே | 735 |
வேறு
இருது வேற்றுமை யின்மையாற் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய் | 736 |
தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய் மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு மெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே | 737 |
திரைத்த சாலிகை நிரைத்த போனிரந் திரைப்ப தேன்களே விரைகொண் மாலையாய் | 738 |
வரைவாய் நிவத்த வடுமா வடுமா விரைவாய் நிவந்து விரியா விரியா புரைவா யசும்பு புலரா புலரா இரவா யிருள்செ யிடமே யிடமே | 739 |
இளையா ரிளையா ருடனாய் முலையின் வளையார் வளையார் மனம்வேண் டுருவம் விளையா விளையாட் டயருந் தொழிறான் றளையார் தளையார் பொழிலின் றடமே | 740 |
அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா விளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும் வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ இளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம் | 741 |
தமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த் தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த் தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம் தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே | 742 |
நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே | 743 |
நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம் தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம் மகமலரன வசோகம் மவைதருவ வசோகம் பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர் | 744 |
அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல் வணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றி இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி மணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம் | 745 |
சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க் கேந்தி நின்றன விம்மலை யாரமே வாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியு மீந்த சாகைய விம்மலை யாரமே | 746 |
இயங்கு கின்னர ரின்புறு நீரவே தயங்கு கின்றன தானமந் தாரமே பயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும் தயங்கு கின்றன தானமந் தாரமே | 747 |
வேறு
பொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையு முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன் வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே | 748 |
நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள் பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ தழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர் குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே | 749 |
மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம் தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப் பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே | 750 |
வேறு
அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம் குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே | 751 |
இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை தணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே | 752 |
காரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக் கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல் பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற் சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம் | 753 |
வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக் காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண் நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார் | 754 |
மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர் ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம் நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே | 755 |
ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து நாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார் காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய் பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார் | 756 |
அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய் விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம் இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய் நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம் | 757 |
போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ டாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய் சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம் | 758 |
எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய் முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற் செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம் | 759 |
தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால் வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய் | 760 |
பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக் கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டி மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால் இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார் | 761 |
பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர் மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம் காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி யோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான் | 762 |
வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங் கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து குலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய் | 763 |
இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்
வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச் கம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம் நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல் வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ | 764 |
ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே னோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன் | 765 |
குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே | 766 |
அரசரின் முதற் கடமை
உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால் வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார் திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்ட அரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ | 767 |
யாக்கையால் எய்தும் பயன்
கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க் குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில் பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா | 768 |
இறவாது நிற்போர் இவர் எனல்
மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும் நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார் | 769 |
ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்
ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே | 770 |
வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்
என்று தங்கதை யோடிரு நீண்முகிற் குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம் சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான் | 771 |
இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர், விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்
ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா ணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென ஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம் வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான் | 772 |
முழையு டைந்தழல் காலு முரம்பயற் கழையு டைந்துகு கண்கவர் நித்திலம் மழையு டைந்துகு நீரென வாய்மடுத் துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம் | 773 |
மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ லொக்க வோடி யுறைத்தலி னான்மிசை உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம் தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே | 774 |
ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல் வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர் பாங்க லார்மனை போலப் பறைந்தரோ ஓங்கி நின்றுல வுற்றன வோமையே | 775 |
அற்ற நீரழு வத்திடை நெல்லியின் வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ லுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம் | 776 |
பைத்த லைப்பட நாக மழன்றுதம் பொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான் கைத்த லம்முகிற் கின்றன காந்தளென் றத்த லைச்சிலை மானயர் வெய்துமே | 777 |
விசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர் தசையி னோடிய நவ்வி யிருங்குழா மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய வசையின் மேன்மகன் போல வருந்துமே | 778 |
துடியர் தொண்டகப் பாணியர் வாளியர் கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங் கடிய நீர்மையர் கானகங் காக்குநி னடிய ரல்லதல் லாரவ ணில்லையே | 779 |
வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்
அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண் சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத் திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந் திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான் | 780 |
முல்லை நிலத்தின் மாண்பு
மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம் காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே | 781 |
கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால் விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர் வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங் கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே | 782 |
கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை மைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு மொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும் கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும் | 783 |
தொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும் வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங் கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால் விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே | 784 |
தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந் தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற் பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம் | 785 |
தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற் றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற் கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே | 786 |
வாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்து தூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின் பாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற் சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே | 787 |
ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக் கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந் தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம் | 788 |
பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந் தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே | 789 |
ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன் மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற் றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து சாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம் | 790 |
கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ் வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து தார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே | 791 |
கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன் புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப் பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே | 792 |
விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்
வேரல்வேலி மால்வரைக் கவானின் வேய் விலங்கலிற் சாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால் மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய் நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார் | 793 |
விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
புதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியு மதுநா றுபுனன் மருதத் தினைமற் றிதுகா ணெனவின் னனசொல் லினனே விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான் | 794 |
அயலோ தமிரட் டவலம் பொலிநீர் வயலோ தமயங் கமயங் கவதிர்ந் தியலோ தையிளஞ் சிறையன் னமெழக் கயலோ டியொளிப் பனகாண் கழலோய் | 795 |
வளவா சநிலப் பலவின் சுளையு மிளவா ழையினின் னெழிலங் கனியும் களமாங் கனியின் றிரளுங் கலவிக் குளமா யினயோ சனை கொண் டனவே | 796 |
வனமா வினிருங் கனியுண் டுமதர்த் தினவா ளையிரைத் தெழுகின் றனகாண் கனவா ழைமடற் கடுவன் மறையப் புனவா னரமந் திபுலம் புவகாண் | 797 |
வளமா நிலையே திமருப் பினிட விளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக் குளமார் குளிர்தா மரைக்கொண் டநகைத் தளவா யுகுகின் றனகாண் டகவோய் | 798 |
இவைசெந் நெலிடை கருநீ லவன மவையந் நெலிடை கழுநீ ரழுவ முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு நகைவென் றனதா மரைநாண் மலரே | 799 |
கழையா டுகரும் பினறைக் கடிகைப் பொழிசா றடுவெம் புகைபொங் கியயற் றழையோ டுயர்சோ லைகடாம் விரவி மழையோ டுமலைத் தடமொத் துளவே | 800 |
இதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர், மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்
கருநீ லமணிந் தகதுப் பினயற் கருநீ லமணிந் தனகண் ணிணைகள் கருநீ லமணிக் கதிர்கட் டியெனக் கருநீ லமணிந் தகருங் குழலே | 801 |
வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல் வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய் வளர்செங் கிடையின் வளையா டும்வயல் வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை | 802 |
வயலாம் பனெறித் தவகைத் தழையன் வயலாம் பன்மிலைத் தவடிச் சவியன் வயலாம் பன்மலிந் தபரப் புடையன் வயலாம் பன்மலர்த் தொகைமா லையினாள் | 803 |
வளர்தா மரையல் லிமலர்த் தியகை வளர்தா மரையல் லிமயக் குமொளி வளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல் வளர்தா மரையல் லிவனத் திடையாள் | 804 |
நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந் தொளிர்வார் குழலா ளொருமா தவளு ளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழத் கிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள் | 805 |
மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர நுதிமா ளிகைமேல நுடங் குகொடி கதிரோ ணொளிமாழ் கவெழுந் துகலந் ததுகா ணமதா ரொளிமா நகரே | 806 |
அறவே தியரா குதியம் புகையார் உறவே திகைவிம் மியவொண் புறவ நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற் புரவே திகையே றுவகாண் புகழோய் | 807 |
விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்
இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட் பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய மன்னவ குமரரும் வறுமை நீங்கினார் | 808 |
இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம் துளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லைய வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே | 809 |
துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற் கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன் பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார் | 810 |
காவியங் கருங்கணார் கமழ வூட்டிய வாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க் கோவையங் குழுநிலை மாடம் யாவையும் பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே | 811 |
மல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையு முல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடை எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே | 812 |
பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்
செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட் கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலு நம்பிமார் வருகென நாறு நீரொளி அம்பொன்மா மணிமுடி யரச னேயினான் | 813 |
விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்
அருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர் இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச் சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர் மருளுறு மனத்தினன் மன்னன் னாயினான் | 814 |
பயாபதி மக்களைத் தழுவுதல்
திருவரை யனையதோட் சிழ்ருவர் தம்மையக் கருவரை யனையவெங் களிதல் யானையா னிருவரும் வருகென விரண்டு தோளினு மொருவரை யகலத்தி னெடுங்கப் புல்லினான் | 815 |
மானவா மதகளிற் றுழவன் மக்கடந் தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட் கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன வானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான் | 816 |
என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித் துன்னிய வனத்துக டுதைந்த வாறென மன்னவ னருளலு மகர வார்குழை மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான் | 817 |
விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்
போற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான் சீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்தது வேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ் வாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான் | 818 |
பயாபதியின் கழி பேருவகை
யானுமங் கிவனொடு மடிக ளேகினேன் வானுய ரிமகரி மருங்கி லென்றுபூந் தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந் தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான் | 819 |
சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம் அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத் தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப் படரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் | 820 |
சூளாமணி முதல் பாகம் முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூளாமணி - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள் - பயாபதி, மன்னன், இதுமுதல், திவிட்டன், விளங்கு, இதுவுமது, நோக்கி, கூறுதல், திவிட்டர்கள், சென்று, விஞ்சையர், அடைதல், விசயன், மன்னவன், செய்யுள்கள், கொண்டு, அரிமஞ்சு, மகளிர், சிறப்பு, கண்டாய், நீண்முடி, மாட்டா, செஞ்சுடர், வீங்கு, விஞ்சையன், தூதர்கள், விசயதிவிட்டர்கள், தாமரைத், தெழுந்த, கேட்டே, பயாபதியின், பின்னை, றிருந்த, காட்டி, பொங்கு, வாழும், தூதுவர், மகிழ்ந்து, போழ்தி, படைக்கப், கிழவர், அச்சுவக்கண்டன், தோன்றி, விடுசுடர், வெஞ்சுடர், யாக்கை, மருங்கு, பெருமை, வேலவன், திருந்த, நமியின், எய்துதல், வளர்செங், வயலாம், விடுத்த, புறப்படுதல், கின்றன, கூறத்தொடங்குதல், நிமித்திகன், மரையல், மரீசியை, வளர்தா, வேண்டா, மால்வரை, யிட்டன, கதிர்நகைக், திலங்கு, விசயதிவிட்டர்களை, சூளிகை, வயங்கு, ஒருதொடர், கொற்றவ, மன்னர், வினாதல், வயிரத், குஞ்சி, வேந்தர், மனத்தி, வணங்கி, திண்டோ, போழ்திற், லமணிந், முழக்கம், விம்மி, பைம்பூண், அவ்வரிமா, ருரைத்த, பிளந்து, திங்கள், மலையின், கேள்வியான், டைந்துகு, செய்யுள், ரிடங்கள், புதல்வர், செய்யுட்கள், தொடர்ச்சி, ணிறைந்தன, மாதர்கள், சந்தங்க, வென்றி, வீங்கிய, தூதுவன், வணங்குதல், செய்தல், செல்லுதல், மாளிகை, வியந்து, விச்சை, கலங்கி, மின்னவிர், சொல்லுதல், தாரோய், பொய்கைக்கரை, வேண்டி, நோக்கிப், மயக்கம், வண்டுகள், மடந்தையர், பொன்னவிர், கன்னவில், தொழுது, காத்து, றுளும்பு, வேற்றுமை, னென்று, காவலன், விலங்கு, ஆதிசேடன், குலத்து, நிலத்தின், லென்றான், நிலைமை, குரைத்த, மெல்லாம், றுரைக்க, வென்று, முகமன், நின்றான், கூறுவன, யிலங்கு, தன்னாற், மணிமுடி, மரங்கள், கண்ணித், வாகுவலி