ஐஞ்சிறு காப்பியங்கள் - சூளாமணி
5.மந்திரசாலைச் சருக்கம்
அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார் | 233 |
மந்திரசாலையின் அமைப்பு
உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப் புள்ளுமல் லாதவும் புகாத நீரது வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை வள்ளறன் மந்திர சாலை வண்ணமே | 234 |
அரசன் பேசத் தொடங்குதல்
ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன் பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின் வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே | 235 |
வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப் புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே | 236 |
அமைச்சர் மாண்பு
வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம் கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும் மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர் | 237 |
அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே
சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே | 238 |
அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்
வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர் பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப் பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே | 239 |
அரசன் முகமன் பொழிதல்
அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான் கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச் செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே | 240 |
அரசனும் அமைச்சர்களும்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால் அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான் செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார் | 241 |
தோள்வலியும் சூழ்ச்சியும்
வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும் ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும் கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான் | 242 |
சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்
ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம் சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றே யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே | 243 |
சூழ்சியே அரசன் ஆற்றல்
ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும் ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும் ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே | 244 |
இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்
வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க் கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே | 245 |
சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்
சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும் மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே | 246 |
அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்
எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே | 247 |
உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்
மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான் | 248 |
அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்
கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான் தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான் சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே | 249 |
அமச்சர்கள் பதிலுரைத்தல்
இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி யறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார் | 250 |
சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்
பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித் துணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான் இணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே | 251 |
சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்
பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந் தொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும் எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே அழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே | 252 |
அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்
கோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணைய ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல் பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான் | 253 |
திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்
சூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித் நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும் வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய் | 254 |
நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்
கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு தண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான் விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே | 255 |
பொறுமையின் பெருமை
கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந் தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப் புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின் மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே | 256 |
அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்
நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ ? மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின் அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே | 257 |
இதுவுமது
மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள் விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற் கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும் தண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே | 258 |
அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை
தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற் போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே | 259 |
அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை
மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட விரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும் அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும் சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய் | 260 |
ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப் பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே | 261 |
உலகத்திற்குக் கண்கள் மூன்று
கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர் விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார் எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின் மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா | 262 |
இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்
குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ் படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார் முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி அடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே | 263 |
அரசர்களைப்போல மக்கள் இலர்
தண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய் கண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே | 264 |
அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்
அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற் பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய் | 265 |
விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்
அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின் மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல் தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான் | 266 |
அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது
மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம் உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும் அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய் இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான் | 267 |
சூழ்ச்சியின் மாண்பு
உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர் கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம் எரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான் | 268 |
இதுவுமது
பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால் வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய் | 269 |
செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்
கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள் இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக் கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே | 270 |
செவ்வி கேட்டல்
தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும் வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை யான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான் | 271 |
வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை
மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள் துஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே | 272 |
அது விண்ணுலகத்தைப் போன்றது
மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது புண்ணிய மில்லார் புகுதற் கரியது கண்ணிய கற்பகக் கானங் கலந்தது வின்ணிய லின்பம் விரவிற் றினிதே | 273 |
எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது
எல்லா விருதுவு மீனும் பொழிலின் தெல்லா நிதியு மியன்ற விடத்தின தெல்லா வமரர் கணமு மிராப்பகல் எல்லாப் புலமு நுகர்தற் கினிதே | 274 |
பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன | 275 |
அந்நாட்டுப் பொழில் முதலியன
கானங்க ளாவன கற்பகங் காமுகர் தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில் நானங்க ளாவன நாவி நருவிரை வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ ? | 276 |
மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன் குணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம் கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம் பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால் | 277 |
வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்
ஆங்கதன் மேல வறுபது மாநகர் தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந் தோங்கிய சூளா மணியி னொளிர்வது | 278 |
இரத்தின பல்லவம்
மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும் திருத்தின வில்லது செம்பொ னுலகில் புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண் ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே | 279 |
அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது
வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி முளைத்தெழு காம முடிவில ராகித் திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம் களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே | 280 |
அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்
ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர் பாடக மெல்லோர் பரவிய சீறடி தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத் தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே | 281 |
வருத்தமுள்ள நகர்
சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார் முலைத்தடம் பாய முரிந்து முடவண் டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே | 282 |
முரிவன பல
வனைத்தன போலும் வளர்ந்த முலையார் இனைந்துதங் காதல ரின்பக் கனிகள் கனிந்து களித்தகங் காமங் கலந்துண முனிந்து புருவ முரிவ பலவே | 283 |
அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்
செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும் அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர் ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே | 284 |
அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது
வளர்வன போலு மருங்குல்க ணோவத் தளர்வன போல்பவர் தாமக் குழன்மேற் கிளர்வன போதிள வாசங் கிளைத்துண் டுளர்வன போதரு மூதை யுளதே | 285 |
அந்நகரத்தே அஞ்சி மறைவன
பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச் செங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற் கஞ்சா வொளிக்கு மயல ததுவே | 286 |
இன்றமிழியற்கை யின்பம்
பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர் தூசினு ணின்று சொரிமணிக் கோவையும் பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை மூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம் | 287 |
காதல் தூது
காம விலேகையுங் கற்பக மாலையும் சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு தூமக் குழலவர் தூது திரிபவர் தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய் | 288 |
காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்
தாமத் தொடையல் பரிந்து தமனிய வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள் காமக் கடலைக் கலக்குங் கழலவர் தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே | 289 |
வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்
பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின் மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள் மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான் | 290 |
அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது
அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும் பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும் கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே | 291 |
அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்
சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங் கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங் சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும் வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே | 292 |
அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்
தம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன் வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும் தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய் | 293 |
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார் அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்
படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண் புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே விடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும் நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான் | 294 |
அமைச்சனும் நிமித்திகனும்
ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல் கோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான் பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான் காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய் | 295 |
அச்சுவக்கிரீவன் தன்மை
தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க் கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான் பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா | 296 |
அச்சுவக்கண்டனது தோள்வன்மை
குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே களிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால் ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார் | 297 |
அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்
முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம் மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம் | 298 |
சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்
ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித் தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான் | 299 |
சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்
மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு முற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும் வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண் கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான் | 300 |
பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்
சுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானை யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித் தொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான் | 301 |
வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்
நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான் மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான் தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம் வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ | 302 |
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்
தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்! யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ ரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன் | 303 |
பிறந்த நாட் குறிப்புக் கூறல்
மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி நானக் கோதை நங்கை பிறந்த நாளானே வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத் தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார் | 304 |
காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன் மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால் ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும் தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள் | 305 |
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்
நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான் தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான் எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால் செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன் | 306 |
என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால் குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய் நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால் நின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான் | 307 |
சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்
ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே ஊழிக் கால மோடின வென்னு முரையாலும் தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய் | 308 |
அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்
கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர் மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின் றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள் பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம் | 309 |
இரத்தின கண்டன் இளவரசன்
வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள் ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான் ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான் ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய் | 310 |
மன்னன் வினாதல்
அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால் என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும் இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான் | 311 |
சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்
மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற் கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக் கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் | 312 |
வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று
பவனஞ்சன் மாண்பு
கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும் தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல் பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித் தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான் | 313 |
அமிழ்தபதி நாட்டு வேகரதன்
அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும் வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார் விளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றே இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான் | 314 |
மேகபுரத்துப் பதுமரதன்
வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும் ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப் பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய் | 315 |
இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்
இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும் உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல் அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன் குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான் | 316 |
கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்
நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும் திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல் அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல் செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய் | 317 |
திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்
சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும் வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன் காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான் | 318 |
சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்
செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும் அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார் இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம் மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா | 319 |
அச்சுவபுரத்துக் கனக சித்திரன்
அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும் திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும் கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே ஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான் | 320 |
சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்
சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும் காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான் தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான் | 321 |
கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது
கற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும் கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான் செற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் | 322 |
இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்
இஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச் சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம் அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண் மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா! | 323 |
எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க் கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான் வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான் | 324 |
வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்
மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும் அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார் | 325 |
சுதசாகரன் என்பவன் சொல்லுதல்
அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும் வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய் மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை சொல்லி னான்சுத சாகர னென்பவே | 326 |
பவச்சுதன் கூறியது உண்மை என்றல்
ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல் பாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன் சூழி யானையி னாய் சொலப் பட்டன ஊழி யாருரை யும்மொத் துள கண்டாய் | 327 |
பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்
ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம் பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன் வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர் தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய் | 328 |
அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்
வண்ட வாமுடி மன்னருண் மற்றவன் தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி துண்டி யானுரைப் பானுறு கின்றது விண்டு வாழுநர் மேனகு வேலினாய் | 329 |
சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்
போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க் கேக நாயக னாயினி தாள்பவன் மேக வாகன னென்றுளன் வீழ்மத வேக மால்களி றும்மிகு வேலினான் | 330 |
மேகவாகனன் மனைவி மேகமாலினி
நாக மாலைகண் மேனகு வண்டினம் ஏக மாலைய வாயிசை கைவிடாத் தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள் மேக மாலினி யென்றுரை மிக்குளாள் | 331 |
அவர்களுடைய மகன் விச்சுவன்
தேவி மற்றவ டெய்வம் வழிபட மேவி வந்தனன் விச்சுவ னென்பவன் ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும் ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் | 332 |
விச்சுவன் பெருமை
மையில் வானுல காண்டுமண் ணோர்களுக் குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய ஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ் வைய மாயதெல் லாம்வளர் கின்றதே | 333 |
இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்
மங்குல் வானுல காண்டு வரத்தினால் இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின் திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த் தங்கு வானுல கிற்றகை சான்றதே | 334 |
தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த் தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ டன்ன னாதலி னாலவன் மேற்பிறர் என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார் | 335 |
சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்
காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன் தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல் ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும் தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ | 336 |
விச்சுவன் தங்கை
நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக் கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள் அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல் வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள் | 337 |
அவளுடைய பெயர் சோதிமாலை
கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு கீத மாலைய கின்னர வண்டினம் ஊதி மாலைய வாயுறை யுங்குழல் சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள் | 338 |
சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்
வெம்பு மால்களி யானை விலக்குநீர் நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள் வம்பு சேர்முலை வாரி வளாகமே | 339 |
சுதசாகரன் முடிவுரை
இன்ன வாறிசை யப்பெறின் யாவரும் என்ன வாறு மிகப்பவ ரின்மையால் அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான் சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய் | 340 |
சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்
கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம் அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான் தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான் | 341 |
எல்லோரையும் விலக்கிக் கூறுதல்
அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற் கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக் கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால் பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே | 342 |
விச்சுவனை விலக்கிக் கூறுதல்
சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும் தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன் போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்ய தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய் | 343 |
விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்
மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண் பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும் தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான் | 344 |
விச்சுவன் இயல்பு
மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும் பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான் விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான் கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய் | 345 |
மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்
செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும் அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான் | 346 |
அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்
பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார் தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே | 347 |
இதுவுமது
மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும் தந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும் இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர் அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான் | 348 |
ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம் போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான் தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக் கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம் | 349 |
இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்
அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும் இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும் செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே | 350 |
சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்
வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத் தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும் ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா காரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான் | 351 |
ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்
ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே கன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும் என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய் இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் | 352 |
சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்
வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட் கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான் தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால் யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான் | 353 |
சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்
என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும் சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன் நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான் | 354 |
அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்
இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார் | 355 |
அரசன் அரண்மனையை அடைதல்
மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன் சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான் | 356 |
வேறு - நண்பகலாதல்
மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந் துகுகதிர் மண்டப மொளிர வேறலும் தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி நகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே | 357 |
கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத் தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே | 358 |
ஒலிவிழா வண்டின மூத வூறுதேன் மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும் பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார் கலிவிழாக் கழுமின கடவுட் டானமே | 359 |
குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும் மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும் கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே | 360 |
பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை மங்கையர் முலையொடு பொருத வாவிகள் அங்கவ ரரிசன மழித்த சேற்றினும் குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே | 361 |
அங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப் பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன திங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே | 362 |
மாயிரும் பனித்தடம் படிந்து மையழி சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத் தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன் பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே | 363 |
ஈரணிப்பள்ளி வண்ணனை
சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந் தந்தரத் தசைப்பன வால வட்டமு மெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல் பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார் | 364 |
குருமணித் தாமரைக் கொட்டை சூடிய திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும் பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார் | 365 |
பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்
அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப் பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக் கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார் | 366 |
மன்னன் உண்ணுதல்
வாரணி முலையவர் பரவ மன்னவன் ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந் தோரணி யின்னிய மிசைத்த வின்பமோ டாரணி தெரியலா னமிர்த மேயினான் | 367 |
அரசன் தெருவில் நடந்து செல்லுதல்
வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன் வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான் அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல் கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான் | 368 |
அரசன் நடந்து செல்லுதல்
பொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம் துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ மன்னவன் னடத்தொறு மகர குண்டலம் மின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே | 369 |
மெய்காவலர் வேந்தனைச் சூழ்தல்
நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர் கையிலங் கீட்டியர் கழித்த வாளினர் மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர் வையகங் காவலன் மருங்கு சுற்றினார் | 370 |
அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்
சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும் கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான் | 371 |
நிமித்திகன் அரசனை வரவேற்றல்
எங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங் கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக் கங்கலர் கேள்வியா னாசி கூறினான் | 372 |
அரசன் மண்டபத்தை அடைதல்
கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய் விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய் வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர் மண்டப மணித்தல மன்ன னெய்தினான் | 373 |
அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்
தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந் துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க் குழையவன் குமரிதன் கரும மென்னினான் | 374 |
நிமித்திகன் பேசத் தொடங்குதல்
கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய பனைத்திர ளனையதோட் படலை மாலையான் மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான் | 375 |
அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்
மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல் வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங் கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன் அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான் | 376 |
தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்
வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள் கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள் எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே | 377 |
பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம் என்சொலா லின்றியா னியம்பு நீரதோ மன்சுலா வகலநின் றலரும் வாளினாய் | 378 |
சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்
ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால் போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம் மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே | 379 |
சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்
அம்மயி லனையவ டிறத்தி னாரியன் செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும் மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன் பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான் | 380 |
மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்
முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான் மன்னிய திருமொழி யகத்து மாதராள் என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக் கன்னவ னாதிமா புராண மோதினான் | 381 |
உலகங்கள் எண்ணிறந்தன என்றல்
மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த் தீவின தகலமுஞ் சிந்து வட்டமும் ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே | 382 |
உலக அமைப்பு உரைத்தல்
மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது நந்திய நளிசினை நாவன் மாமரம் அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே | 383 |
உலகில் உள்ளன
குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய் மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க் கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ் வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே | 384 |
மாற்றறு மண்டில மதனு ளூழியால் ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம் தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது பாற்றரும் புகழினாய் பரத கண்டமே | 385 |
பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது
மற்றது மணிமய மாகிக் கற்பகம் பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய் முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப் பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார் | 386 |
போக காலம் கழிதல்
வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி அங்கதிர் வளையமு மாதி யாயின இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை பொங்கிய புரவியாய் போக காலமே | 387 |
அருகக் கடவுள் தோற்றம்
ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர் சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய் ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள் ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய் | 388 |
உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது
ஆரரு டழழுவிய வாழிக் காதியாம் பேரருண் மருவிய பிரான்றன் சேவடி காரிருள் கழிதரக் கண்க வின்றரோ சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே | 389 |
அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்
அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும் குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான் புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன் நலங்கிளர் திருமொழி நாத னென்பவே | 390 |
பரதன் என்னும் அரசன்
ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய வீங்கிய விரிதிரை வேலி காவலன் ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான் பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே | 391 |
பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்
ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன் பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள் ஊ ழியா னொளிமல ருருவச் சேவடி சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான் | 392 |
பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்
கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன் எதிரது வினவினா னிறைவன் செப்பினான் அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர் முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே | 393 |
அருகக் கடவுள் கூறுதல்
என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள் நின்முத லீரறு வகையர் நேமியர் மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர் தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே | 394 |
முதல் வாசுதேவனை மொழிதல்
மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப் பொன்னவிர் போதன முடைய பூங்கழல் கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான் அன்னவன் கேசவர்க் காதி யாகுமே | 395 |
அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்
கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை காசறு வனப்பினோர் கன்னி யேதுவால் ஆசர வச்சுவக் கிரீவ னாவியும் தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே | 396 |
பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்
தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின் ஆரணி யறக்கதி ராழி நாதனாம் பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன் சீரணி திருமொழித் தெய்வத் தேவனே | 397 |
அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்
ஆதியு மந்தமு நடுவு நம்மதே ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே | 398 |
மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்
அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய கன்னவி விலங்குதோட் காளை யானவன் மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர் மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான் | 399 |
இதுவுமது
திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால் பொருவரு போதன முடைய பூங்கழல் செருவமர் தோளினான் சிறுவ ராகிய இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே | 400 |
அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்
கானுடை விரிதிரை வையங் காக்கிய மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத் தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம் தானடைந் தமர்வதற் குரிய டையலே | 401 |
திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்
ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும் தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும் வீங்கிய வுவகையன் வேந்த னாயினான் | 402 |
சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்
கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர் திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே | 403 |
நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான் உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண் இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச் சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான் | 404 |
சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்
இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல் திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச் சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென் றருநிதி வளங்கொணா டாள நல்கினான் | 405 |
அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்
மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன் பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும் அன்னமென் னடையவட் கறியக் கூறினான் | 406 |
மக்கட்பேற்றின் மாண்பு கூறல்
தொக்கின மலர்த்துதை விலாத சோலையும் புக்கிளந் தாமரை நகாத பொய்கையும் மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும் மக்களை யிலாததோர் மனையு மொக்குமே | 407 |
குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்
தலைமகள் றாடனக் காகச் சாகைய நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர் நலமிகு மக்களா முதியர் தேன்களாக் குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே | 408 |
நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்
சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால் வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க் காழிநீர் வையகத் தரிய தாவதே | 409 |
நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்
தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள் நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய் மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள் | 410 |
மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி நலம்புரி பவித்திர மாகு நாமநீர் பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே | 411 |
நீ சிறப்படைந்தாய் எனல்
மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென் றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர் நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச் செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய் | 412 |
சுயம்பிரபையின் பெருமை
மாவினை மருட்டிய நோக்கி நின்மகள் பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித் தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென ஓவினூற் புரோகித னுணர வோதினான் | 413 |
வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்
மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல் தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள் | 414 |
சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்
மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக் கன்னிநின் னருளினே கருதப் பட்டனள் மன்னவ ரருளில ராயின் மக்களும் பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே | 415 |
இதுவும் அது
பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர் முடிகளின் மணிபொர முரலு மொய்கழல் அடிகள தருளினா லம்பொன் சாயலிக் கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள் | 416 |
அரசன் இன்புற்றிருத்தல்
திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள் பருமணிப் பூண்முலை பாய மார்பிடை அருமணித் தெரியறே னழிய வைகினான் | 417 |
மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்
மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும் கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந் திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல் கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான் | 418 |
சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்
வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக் கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந் தாங்கிய புகழவன் மொழியத் தாரவர் தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார் | 419 |
பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்
தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற் கையமே யொழிந்தன மனலும் வேலினாய் செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம் வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே | 420 |
மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்
கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக் குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான் மற்றவன் மருசியே யவனை நாம்விடச் சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே | 421 |
மரீசியைத் தூது அனுப்புதல்
காரியந் துணிந்தவர் மொழியக் காவலன் மாரியந் தடக்கையான் வருக வென்றொரு சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன் ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான் | 422 |
மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்
மன்னவன் பணியொடு மருசி வானிடை மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த் துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே | 423 |
வண்டினம் களியாட்டயர்தல்
புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப் பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென மதுமலர் பொழிதர மழலை வண்டினம் கதுமல ரினையொடு கலவி யார்த்தவே. | 424 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூளாமணி - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள் - என்றல், கூறுதல், கண்டாய், மன்னவன், பவச்சுதன், மன்னன், விளங்கு, வேந்தே, றில்லை, சச்சுதன், சூழ்ச்சி, யாளும், வேலோய், சதவிந்து, பெருமை, விச்சுவன், கடவுள், தென்றான், மாண்பு, மற்றவன், மெல்லாம், தொடங்குதல், அருகக், பிறந்த, அமைச்சர், கேட்டல், மொழிந்த, காவலன், கண்டன், வண்டினம், பொன்னகர், மென்றான், பொன்னிதழ்த், சுயம்பிரபை, திவிட்டன், மந்திர, வேந்தன், மென்னும், இதுவுமது, காக்கு, அச்சுவக்கிரீவன், இந்திர, தில்லை, நிமித்திகன், நோக்கி, வேந்தர், செய்கை, அடைதல், வென்றான், தாங்கிய, ருட்கு, செம்பொன், மருங்கு, மின்னவிர், கொங்கலர், தாளும், மேகவாகனன், துளும்பு, வீங்கிய, திண்டோ, செம்மல், பைம்பூண், என்பவன், மங்கையர், மாளும், யாலுங், மாயிற், கற்றவர், நின்றான், தெரிந்து, தடக்கை, வேண்டும், ஆற்றல், தயங்கு, காக்கும், மண்ணியல், தெரியலா, புண்ணிய, மணிமுடி, ரமைச்ச, தந்திரந், சுயம்பிரபைக்கு, னென்னும், மூன்று, கூற்றமும், கருதிய, கருமச், திளைப்ப, அமைச்சர்கள், என்னும், லென்றான், லுற்றான், திங்கள், மயங்கி, விஞ்சையர்