நற்றிணை - 285. குறிஞ்சி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள் இரவின் வருதல் அன்றியும்- உரவுக் கணை வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி, உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு, மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, |
5 |
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும் குன்ற நாடன் கேண்மை நமக்கே நன்றால் வாழி- தோழி!- என்றும், அயலோர் அம்பலின் அகலான், |
10 |
பகலின் வரூஉம், எறி புனத்தானே. |
தோழீ! வாழ்வாயாக!; திண்ணிய கையையுடைய கானவன் தனது வெய்ய வில்லை வளைத்து வலிய கணையை எய்து நெஞ்சிலே பாய்த்திக் கொன்ற முட்பன்றியேற்றையைக் கைக்கொண்டு; வேட்டையிலே தான் பெற்ற வென்றியாலாய உவகையுடையவனாகி; மனையகத்துள்ள நாய்கள் எல்லாம் ஒரு சேரப் பக்கத்திலே வந்து குரைத்து விளையாட; காட்டகத்துள்ள நட்டகாலிலே கை சேர்த்துப் பிணித்த தானிருக்கும் குடிசையையுடைய சேரியின்கண்ணே செல்லாநிற்குங் குன்ற நாடன்; பாம்புகள் தமக்கு வேண்டிய இரையைத் தேடி உழலாநின்ற இயங்குதற்கரிய இருள்மிக்க இரவு நடுயாமத்தில்; நம்பால் வருவதல்லாமலும்; எப்பொழுதும் அயலவர் கூறும் பழிச்சொல்லைக் கேட்டும் அகன்றுபோகானாகி; வெட்டியுழுது விதைத்த தினைப்புனத்தின் கண்ணே பகற் பொழுதினும் வாராநின்றான்; ஆதலின் அவனுடைய நட்பானது நமக்கு நல்லதோ? நல்லதன்றாயிற்றுக் காண்;
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, 'அம்ப லும் அலரும் ஆயிற்று' என்று சொல்லியது. - மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 283 | 284 | 285 | 286 | 287 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, நாடன், குன்ற, கானவன்