நற்றிணை - 219. நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் பழ நலம் இழந்து பசலை பாய, இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம் புலவேன் வாழி- தோழி!- சிறு கால் அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் |
5 |
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்- தானே யானே புணர்ந்தமாறே. |
10 |
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! ; என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டு; பசலைபாய இனிய என்னுயிர் இறந்து படுவதாயினும்; சிறிய காலையுடைய ஞெண்டுகளோடு பெயர்ந்தேகும் புலவு நாற்றத்தையுடைய அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின்கணுள்ள பரதமாக்கள்; மரக்கலங்களுக்குத் தெரியுமாறு இரவிலிடப்பட்ட நெருங்கிய கதிர்களையுடைய ஒள்ளிய விளக்கம்; முதிராத இளஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும்; கழிக்கரைச் சோலையையும் பெரிய கடலின் துறையையும் உடைய நங்காதலன்; தமியனாய் வந்து யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து தலையளி செய்ததனால் இனியும் அங்ஙனம் வருவான் என்னுங் கருத்தோடு; சிறிதும் அவன்மீது புலப்பேனல்லேன்காண்;
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - தாயங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 217 | 218 | 219 | 220 | 221 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, கடலின், நெருங்கிய, சிறிய