நற்றிணை - 158. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! நம்வயின், யானோ காணேன்- அதுதான் கரந்தே, கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே; கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே- விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி |
5 |
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி, குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய் வேங்கை முதலொடு துடைக்கும் ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே. |
தோழீ! வாழி! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக!; மலையின்கண்ணுள்ள பிளந்த முழையிலே பதுங்கியிருந்த வெய்ய சினத்தையுடைய கரிய புலியானது புள்ளிகள் அமைந்த முகத்தையுடைய யானை வருந்தும்படி மோதி; அதன் இரத்தத்தைப் பருகிய கொழுவிய கவுளையுடைய பெரிய வாயை வேங்கையின் அடி மரத்தில் உரிஞ்சித் துடைக்கின்ற; உயர்ந்த மலைநாடன் வருகிற நெறியை இன்றளவும் நான் கண்டதேயில்லை; அங்ஙனமிருந்தும் அந் நெறியானது மறைவாக என்பால் வந்து மலைவழியிலே பொருந்தியிருக்கின்ற காட்டின் வடிவங்கொண்டு என்முன் நின்று இதுதான் அவன் வருகின்ற காடென்பதனை நீ காண் என்று என்னைக் கொல்லாநிற்கும்; மிக்க இருள் வடிவமாய் நின்று இதுதான் அவன் வருகின்ற இருட்பொழுதென்று என் கண்களைக் கொல்லா நிற்கும்; இத்தகைய காட்டின்கண் இருட்பொழுதில் அவன் வருவதனைக் குறித்து யான் யாது செய்யமாட்டுவேன் ?
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது. - வெள்ளைக்குடி நாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 156 | 157 | 158 | 159 | 160 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அவன், நின்று, இதுதான், யான், வருகின்ற, பருகிய, மன்னும், கொல்லும்மே, இருள், வாழி