நற்றிணை - 122. குறிஞ்சி
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத கருங் கால் செந்தினை கடியுமுண்டென; கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின; 'நரை உரும் உரறும் நாம நள் இருள் |
5 |
வரையக நாடன் வரூஉம் என்பது உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி, அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும்- |
10 |
பூ வேய் கண்ணி!- அது பொருந்துமாறே. |
நீலமலர் போலுங் கண்ணையுடையாய்! இருங் கல் அடுக்கத்து என்னையார் உழுத கருங் கால் செந்தினை கடியும் உண்டன பெரிய மலையின் பக்கத்தில் என்னையன்மார் உழுது விதைத்த கரிய அடித் தண்டினையுடைய செவ்விய தினைக்கதிரெல்லாங் கொய்யப்பட்டன; மலைசூழ்ந்த இடத்திலிருக்கின்ற கானகத்தே பொருந்திய சிறுகுடியின் வளப்பத்தையுடைய பக்கங்களிலுள்ள மல்லிகையும் அரும்புண்டாயின; இன்னதொரு மின்னொளியுடன் கூடிய இடி முழங்குகின்ற அச்சத்தையுடைய இரவு நடு யாமத்து இருளில் மலைசூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது உண்மையோ ? இல்லையோ ? வேறுயாதோ ? என நின்று ஆராயவல்ல உள்ளத்துடனே; அயலார்க்குத் தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு அன்னையும் விரும்பாத கொடுமை தோன்றிய முகத்தினளா யிராநின்றாள்; ஆதலால் அவனோடுண்டாகிய களவொழுக்கம் இனி நிகழுமா ? என்பதனை நின் உள்ளத்தாலே நீயே ஆராய்ந்தறியவேண்டுங்காண்!;
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது. - செங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்னையும், நின்று, நீயே, மலைசூழ்ந்த, தலைவன், என்பது, செந்தினை, அடுக்கத்து, உழுத, கருங், கால், இருங்