ஐங்குறுநூறு - 25. வெறிப்பத்து
காதலனை எண்ணிக் காதலி ஏங்குகிறாள். அவள் மேனி வாடுகிறது. அவள் நடத்தையில் மாற்றம் தெரிகிறது. தாய் இதனைக் கவனிக்கிறாள். தன் மகளின் மாற்றத்துக்குக் காரணம் என்ன என்று தாய் குறி சொல்லும் வேலனை அழைத்து வினவுகிறாள். வேலன் “முருகன் குறை” என்கிறான். “வெறியாட்டு நிகழவேண்டும்” என்கிறான். தாய் வெறியாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்கிறாள். இந்த வெறியாட்டு பற்றி இந்தப் பாடல்கள் கூறுகின்றன. வெறி பிடித்துவிட்டது என்று சொல்லி இக்காலத்தில் பெண்களை இக்காலத்தில் ஆட்டுவது போன்ற அக்கால விழா இது.
நம்முறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தா ளாயின்அவ் வேலன் வெறிகமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல செறியெயிற் றோயே. | 241 |
செவிலிக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள்... நாம் படும் துன்பத்தைப் பார்த்து நம் அன்னை வேலனை வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளாள். நமக்கும் மணம் கமழும் நாடனுக்கும் உள்ள தொடர்கு அந்த வேலனுக்குத் தெரியுமோ? நெருங்கிய பல்லழகியே, சொல்.
அறியா மையின் வெறியென மயங்கி அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் ஆய்மலர் உண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே. | 242 |
செவிலிக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள்... தாய் தன் அறியாமையால் என் நோயை வெறி என எண்ணி மயங்குகிறாள். பெரிதும் துன்புறுகிறாள். அதனால், இனி, உண்மையைச் சொல்லாமல் இருப்பது கொடியது. நிறைந்த இதழ்களைக் கொண்ட குவளை மலர் போன்ற கண்கள் பசக்கக் காரணம் சேய்மலை நாடன் நட்பு எனச் சொல்லியாகவேண்டும்.
கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி அறியா வேலன் வெறியெனக் கூறும் அதுமனம் கொள்குவை அனையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. | 243 |
செவிலியிடம் தோழி கூறுதல்... மிளகுக்கொடி வளர்ந்திலருக்கும் மலையின் தெய்வமாகிய முருகனை வாழ்த்திய பின்னர் வேலன் “வெறி” என்று கூறுகிறான். அதன் உண்மைத் தன்மையை மனத்தில் எண்ணிப் பார். புதிய மலர் போன்ற கண்ணை உடைய இவளுக்கு வந்திருக்கும் நோய் அது அன்று.
அம்ம வாழி தோழி பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழ நெடுந்தகை குன்றம் பாடான் ஆயின் என்பயஞ் செய்யுமோ வேலற்குஅவ் வெறியே. | 244 |
தலைவியிடம் தோழி கூறுதல்... அம்ம தோழி வாழ்க பல மலர்கள் செறிந்த நாட்டை உடையவன் உன் காதலன் நெடுந்தகை. வேலன் அவன் குன்றத்தைப் பாடான் ஆயின் வெறியாட்டத்தால் என்ன பயன் விளையப் போகிறது?
பொய்யா மரபின் ஊர்முகு வேலன் கலங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி முருகென மொழியும் ஆயின் கெழுதகை கொல் இவள் அணங்கி யோற்கே. | 245 |
தலைவன் மறைந்திருக்கும்போது தோழி சொல்கிறாள்... வேலன் பொய் சொல்லமாட்டான். அவனுக்கு உண்மை தெரியவில்லை. கழற்சிக் காய்களை உருட்டினான். கன்னக் கோலைத் தூக்கி நிறுத்தினான். முருகன் குறை – என்கிறான். இவளை வருத்தியது முருகனா?
வெறிசெறித் தனனே வேலன் கறிய கன்முகை வயப்புலி கலங்குமெய்ப் படூஉ புன்பலம் வித்திய புனவர் புணர்த்த மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து மன்றில் பையுள் தீரும் குன்ற நாடன் உறீஇய நோயே. | 246 |
தலைவன் மறைந்திருக்கும்போது தோழி சொல்கிறாள்... வெறி என்று சொல்லி வேலன் என்னை அடைத்து வைத்திருக்கிறான். கல்லுக் குகையில் இருக்கும் புலியைக் கழங்குக் காய்களை உருட்டி மந்திரத்தால் கட்டி வைக்க முடியுமா? குன்ற நாடன் பெண்ணைப் புணர்ந்தான். அவனால் ஏக்கத்தால் வந்த நோய் மன்றத்தில் பலர் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தால் அன்றோ தீரும்.
அன்னை தந்தது ஆகுவது அறிவன் பொன்னகர் வரைப்பின் கன்னம் தூக்கி முருகென மொழியும் ஆயின் அருவரை நாடன் பெயர்கொலோ அதுவே. | 247 |
செவிலி கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுகிறாள்... அன்னை வேலனை வீட்டுக்கு அழைத்துவந்தது அறிவேன். அவன் கன்னக் கோலைத் தூக்குகிறான். முருகன் குறை – என்கிறான். அந்த முருகன் என் தலைவன் ஆவானா?
பெய்ம் மணல் முற்றம் கவின்பெற இயற்றி மலைவான் கொண்ட சினைஇயf வேலன் கழங்கினால் அறிகுவது என்றால் நன்றால் அம்ம நின்றஇவள் நலனே. | 248 |
தோழி செவிலியிடம் கூறுகிறாள்... புது மணலை முற்றத்தில் பரப்பி இல்லத்தை அழகுபடுத்தி வைத்துள்ளனர். மலையில் இருக்கும் இலைகளை அதன் கிளைகளுடன் நாட்டி வைத்திருக்கின்றனர். வேலன் கழங்கினால் இவள் நோயை அறிந்துகொள்ளலாம் என்கின்றனர். அப்படி அறிந்துகொள்ளலாம் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?
பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு முருகென மொழியும் வேலன் மற்றவன் வாழிய விலங்கு மருவிச் சூர்மலை நாடனை அறியா தோனே. | 249 |
தோழி செவிலியிடம் கூறுகிறாள்... வேலன் மணல் பரப்பில் கழங்கை உருட்டுகிறான். முருகன் குறை – என்று அன்னையிடம் சொல்கிறான். உன் மகளின் காதலன் அருவி பாயும் அச்சம் தரும் மலைநாட்டின் தலைவன் என்பது அவனுக்குத் தெரியாது.
பொய்படு அறியாக் கழங்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம் மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன் ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள் பூண்தாங்கு இளமுலை அணங்கியோனே. | 250 |
தோழி கழங்கிடம் கூறுவது போல அறத்தொடு நிற்றல் பொய் சொல்லத் தெரியாத கழங்கே மணி நிற மலைக் கட்டுக்குள் மயில் ஆடும். வள்ளிக் கிழங்குக் காட்டில் ஆடும் அந்தக் காட்டின் தெய்வம் முருகன் அல்லன், இவளது பூண் தாங்கிய இள முலையை அணைத்தவன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வேலன், நாடன், ஆயின், முருகென, மொழியும், அறியா, தூக்கி, வரைப்பின், அம்ம, நோயே, அன்னை, கலங்குமெய்ப்