திருப்புகழ் - பாடல் 94 - திருச்செந்தூர்
ராகம் -
சங்கரானந்தப்ரியா; தாளம் - அங்கதாளம் - 9
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
|
தானதன தான தானந்த தானந்த தானதன தான தானந்த தானந்த தானதன தான தானந்த தானந்த ...... தனதான |
|
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ...... யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட வாசியன லூடு போயொன்றி வானின்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல் நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...... தொருநாளே காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல் பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல் வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ...... யிளையோனே மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே. |
தீயைப் போல் மூண்டு பழைய வினைகள் ஒன்று சேர, அதனால் உயர்ந்து எழும்பிய பஞ்ச பூதங்களின் பற்பலவிதமான மாயங்கள் என் நெஞ்சில் வந்து நன்கு மூடப்பெற்று, பக்திநெறிக்குரிய அறச்செயல் ஏதும் செய்யாமல், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்களின் மீதுள்ள மிகுந்த காமநினைவால் அசுத்த போகத்தை நுகர்கின்ற நான், தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு அரிய பொருளாகிய, மெய்யுணர்வினால் ஆராய்ந்து அறியப்படுகின்றவையாக விளங்கும் முதன்மையான அனுபவ யோகத்திலே முனைந்து நின்று, அதனிடத்திலேயே அசைவற்று இருப்பதாகி, நாள்தோறும் வெகு வேகமாக எழும் பிராணவாயுவைக் கொண்டு, மூலக்கனல்* மண்டி எழுந்திருக்க, பிராணவாயுவானது அந்த அக்கினியில் சென்று பொருந்த, ஆகாயத்தில் புகழ்பெற்ற சந்திரனிலிருந்து பொழியும் அமிர்தகலை என்னும் இனிய அமுதப் பொழிவை நாடி, அச்சந்திர மண்டலத்தில் சென்று, நிலைத்த ஆநந்தப் பெருவெளியில் மீது ஏறி அமர்ந்து, நீ நான் என்ற பிரிவற்ற அத்வைத முக்தியை உணர்ந்து, இன்னும் பிற பொருள்களும் தோன்றாத மனம் நீங்கிய சுக வாழ்வில் வாழ்கின்ற ஒருநாள் எனக்கு உண்டாகுமோ? அவள் (பாற்கடலில் தோன்றிய) ஆலகால விஷத்தை அருந்தியவள், மதங்க முநிவருக்குப் பெண்ணாக அவதரித்தவள், வேதங்களால் புகழப் பெறுபவள், பெரும் தகைமையை உடைய துர்க்கை, (மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க) வந்த யமன் இறந்து விழுமாறு திருவடிகளால் உதைத்து வீழ்த்திய காளியம்மை, பூமி, நீர், தீ, வாயு, பேரொளி மிகுந்த வானம் ஆகிய பஞ்ச பூதங்களிலும் தங்கி அந்தர்யாமியாக விளங்கும் கொடியைப் போன்றவள், ஆநந்த நடனம் ஆடுபவரும், ரிஷப வாகனமாம் நந்திமேல் ஏறுபவருமான சிவபிரானின் இடப்பாகத்தில் இன்பமுடன் குலவி அமரும் மங்கை, பத்ரகாளியாக நின்று சிவதாண்டவத்துக்கு எதிர்த்தாண்டவம் செய்தவள், நாள்தோறும் மெய்யடியார்கள் அவளது சன்னிதிக்கு வந்து வழிபட்டு வணங்கப் பெறும் தாயார், சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இந்த உலகம் முழுதையும் ஆள்கின்ற, குளிர்ந்த துளசிமாலையை அணிந்த, ஒளிமயமான ரத்தின மாலையை அணிந்த மார்பினனான, திருமாலின் தங்கை, இனிமையான சொற்களை உடையவளான மாதரசி பார்வதி தேவியின் மைந்தனே, எமது பிதாவாகிய சிவபிரானின் இளைய புதல்வனே, குற்றமற்ற மெய்யடியார்கள் வாழ்கின்ற ஊர்களை நாடிச்சென்று, அவர்களைத் தேடி, பல திருவிளையாடல்களைப் புரிந்து, அத்தலங்களிலேயே நிரந்தரமாகத் தங்கும் மயில் வீரனே, திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானந்த, இதழ், கரம், வாழ்கின்ற, இந்த, வந்து, தகதகிட, என்ற, சென்று, ஒன்று, பிங்கலை, தானதன, இடைகலை, பத்து, சக்கரம், ஸஹஸ்ராரம், உடலில், சுழு, யும், பெயர்களும், உரிய, முனை, பெயர், விடும், சுவாசம், நாடிகளுள், சிவபிரானின், பெருமாளே, பஞ்ச, உடைய, யேறி, ஆநந்த, மாயங்கள், மீது, மிகுந்த, நான், மெய்யடியார்கள், அணிந்த, என்றும், நாடி, நாள்தோறும், விளங்கும், நின்று, காற்றுக்கு

