ஸ்கந்த புராணம் - பகுதி 23 - பதினெண் புராணங்கள்
ஒருமுறை திருக்கோகர்ணம் செல்லும் யாத்திரிகர்களைப் பின்தொடர்ந்தாள். அவர்கள் பிச்சை போடுவார்கள் என்று நினைத்த அவளுக்குக் கை நிறைய வில்வத்தைக் கொடுத்து விட்டனர். பலநாள் பட்டினி இருந்த அவள், மிகுந்த ஆத்திரத்துடன் அந்த வில்வத்தை எறிந்தாள். எங்கோ மறைவில் இருந்த லிங்கத்தின் மேல் வில்வம் விழுந்தது. முற்பிறவியில் சிவசிவா என்று சொன்னதாலும், இப்பிறவியில் பட்டினி கிடந்து வில்வத்தை லிங்கத்தின் மேல் போட்டதாலும் அவள் சிவலோகம் வருகிறாள் என்று சில கணங்கள் சொன்னார்கள் என்று கூறி திருக்கோகர்ணத்துப் பெருமையை கல்மிஷறனுக்குக் கெளதம முனிவர் கூறி முடித்தார்.
காசி
இன்று உள்ள ஸ்காந்தம் தொடர்ச்சியாக எழுதப்பட்ட ஒரு நூல் அன்று என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அதில் சொல்லப்பட்டுள்ள தலங்கள் அவற்றின் பெருமை ஆகியவற்றைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஊர்க்காரர்களும் தங்கள் ஊருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கதைகளை எழுதி ஸ்காந்தத்தில் சேர்த்து விட்டனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அப்படிச் சொல்லப்பட்ட பல தலங்களில் காசியின் பெருமைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.
ஸ்காந்தத்தில் உள்ள காசி மண்டபம் என்பது பதினைந்து ஆயிரம் பாடல்களை உடைய சிறந்த பகுதியாகும். காசியின் பெருமையும் அங்குள்ள பல சிவன் கோயில்கள் பற்றி இப் பகுதியில் கூறப்பெற்றுள்ளன.
சிவனே காசியின் பெருமையைப் பற்றி ஸ்கந்தனிடம் கூறுவதாகக் காசிக் காண்டம் பேசுகிறது. காசியைப் போன்ற ஒரு க்ஷேத்திரம் மூன்று உலகிலும் இல்லை. காசியில் பிறந்தவர்கள் பிறப்பு, இறப்பு என்னும் பந்தங்களிலிருந்து உடனே விடுதலை அடைகின்றனர். அதனால்தான் தேவர்கள் கூட சாகும்போது காசியில் வந்து இறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் மற்ற சாதாரண உயிர்கள் பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை.
காசியில் உள்ள மிகமிகப் புண்ணியமான இடங்களைப் பற்றிக் கூறவேண்டுமானால் மணிகர்ணிகா, ஞானவாபி, விஷ்ணுபடோடகா ஆகியவற்றோடு பஞ்சனஹர்தா என்பவை முக்கியமாகும். இந்தத் தீர்த்தங்களில் குளிப்பவர்கள் மறுபிறப்பை அடைவதில்லை. காசியில் உள்ள விஸ்வேஸ்வரரை வழிபடுபவர்கள் பிறப்பு இறப்புகளில் இருந்து விடுபடுவார்கள்.
முனிவர்கள் பலரும் அடிக்கடி காசிக்கு வருவதுண்டு. சுதா முனிவர் ஒருமுறை காசிக்கு வந்தபொழுது மற்ற முனிவர்களுக்குச் சிவபுராணத்தின் (வாயு புராணம்) சில பகுதிகளை எடுத்துக் கூறினார்.
சிவனே பார்வதியிடம் தனக்கு மிகவும் பிடித்த இடம், காசி என்று அழைக்கப்படும் வாரணாசிதான் என்றும், எப்போதும் அங்கேயே தான் தங்கியிருப்பதாகவும் கூறினார்.
சிவன் எப்போதும் காசியை விரும்பித் தங்குவதற்குக் காரணம் என்ன? என்று கேட்கத் தன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த பிரம்மனுடைய தலை கையிலிருந்து கீழே விழுந்த இடம் காசி ஆதலால், அந்த இடத்தைத் தமக்குப் பிடித்த இடமாக வைத்துக் கொண்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 23 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, காசியில், உள்ள, காசி, பற்றி, காசியின், அவள்