மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
நன்னனது கொடைச் சிறப்பு
இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம் எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து |
565 |
பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள் |
உடுக்க ஆடை, உண்ணக் கறிச்சோறு பலநாள் தங்கினும் தருவான். இப்படித்தான் நன்னன் விருந்து இருக்கும். புத்தாடை - இழை தெரியாத மெல்லிய நூலால் உடல் தெரியாத அளவுக்கு நெருக்கமாக நெய்யப்பட்ட , பழிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பினைக் கொண்ட புத்தாடையை முதலில் அணிந்துகொள்ளச் செய்வான். (வெள் அரை = அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டிருந்த இடை) விருந்து - முடுவல் என்னும் வேட்டை நாய் முடுக்கித் தான் கொண்டுவந்த விலங்கினக் கறியோடு நீண்ட அரிசியைக் கொண்ட நெல்லஞ் சோற்றை விருந்தாகப் படைப்பான். பலநாள் தங்கினாலும் முதல் நாளில் காட்டிய அதே விருப்பத்தோடு வழங்குவான். செல்வேம் தில்ல - நாங்கள் எங்கள் பழைய ஊருக்குச் செல்ல விரும்புகிறோம் – என்று மெல்ல, செய்தி சொல்லி அனுப்பினால் போதும். அவன் முந்திக் கொள்வான்.
தலைவன் தாமரை மலைய விறலியர் சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய |
570 |
நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர் வாரிக் கொள்ளா வரைமருள் வேழம் கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி நிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும் |
575 |
தாமரை – தலைவன் தலையில் அணியத் தாமரை என்னும் அணிகல-முடி இழை – விறலியர் மார்பில் அணிய ஒளிவீசும் அணிகலன்கள் தேர் – தண்ணீர் பாய்வது போல் நிறைவுடன் குளுமையாகச் செல்லும் தேர் வேழம் – ஆற்றுவாரி கொள்ளாத அளவுள்ள குன்று போன்ற யானை ஆனிரை - காளைகளுடன் கழுத்தில் மணி கட்டிய மாட்டு மந்தை புரவி - காலில் லாடம் கட்டிய குதிரைகள். நிதியம் - ஏற்றிச் செல்ல முடியாமல் நிலம் தின்னட்டும் என்று எறிந்துவிட்டுச் செல்லக் கூடிய அளவில் பேரளவு நிதியம்
இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக் கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின் வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக் கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென மழைசுரந் தன்ன ஈகை நல்கித் |
580 |
தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர் வென்றெழு கொடியிற் றோன்றும் குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே. |
மூங்கிலடர்ந்த நவிரமலையில் பொழியும் மழை போல வழங்குவான். தலைநாள் போல் வழங்குவான். வழங்கும் கை - வறுமையால் வாடிக் கையேந்தும் புலவர்களுக்குக் கைநிறையத் தருவான். வாய்வளம் - பொருள் வளத்தை வாய்வளம் பழுக்க இனிய கூறித் தருவான். நவிரம் - அவனது நவிர மலைமேல் திடீர் திடீரென்று மழை கொட்டுவது போல் கொடைப் பொருள்களைக் கொட்டுவான். தலைநாள் - வாழ்நாளிலேயே தமக்கு வாய்த்த தலைமையான நாள் என்று எண்ணிக்கொண்டு, ஏற்போர் அவர்களது வாழ்நாளில் தலைமையான நாள் என்று கருதும்படிப் பரிசில் வழங்குவான். அருவி - நவிர மலையில் இறங்கிவரும் அருவியானது நன்னன் தன் பகைவர்களை வென்று மீளும்போது பிடித்துக்கொண்டு வரும் கொடிபோல் தோன்றும். குன்று சூழ் இருக்கை - நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு பல குன்றுகளைத் தன்னகத்தே கொண்டதாக விளங்கிற்று. இந்த நாட்டின் கிழவன் அவன். இந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன் இந்த நன்னன்.
தனிப் பாடல்
பிற்காலத்தில் இந்த நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல் வெண்பா இரங்கல் பாடலாக அமைந்துள்ளது.
தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்? பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்? மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார் மாஅமை எல்லாம் பசப்பு! |
நன்னன் ஏதோ ஒரு போரில் மாண்டது போன்ற மாய எண்ணத்தைச் சூரியன் பாம்பின் வாய்ப் பட்டானோ என்று பாடலில் பயின்று வரும் பிறிது மொழிதல் அணி தோற்றுவிக்கிறது. (இராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்கி உமிழும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது என்பது அக்காலத்துக் கற்பனை) சூரியன் தெரியவில்லை. ஏன்? (அவனது அரண்மனையில், வந்தவர்களுக்கெல்லாம் விருந்து படைக்க) உணவு மிகப் பேரளவில் சமைக்கும்போது எழும் புகை வானத்தைப் போர்த்திச் சூரியனை மறைத்துள்ளதோ? சூரியனைப் பாம்பு விழுங்கி விட்டதோ? அன்ன நடையும் அழகிய முகமும் கொண்ட மகளிரின் மாந்தளிர் போன்ற நிறம் பசுமை பூத்துக் கிடக்கிறதே! காரணம் என்ன? நன்னன் வானுலகம் சென்றுவிட்டானோ? அவன் இல்லாததால் மகளிர் மேனியில் பசலை பூத்துக் கிடக்கிறதோ? இப்படிப் பார்க்கும்போது இது அகப்பொருள் பற்றிய பாடல்.
மலைபடுகடாம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, நன்னன், வழங்குவான், தலைநாள், மலைபடுகடாம், இலக்கியங்கள், என்னும், அவன், தாமரை, வாய்வளம், போல், விருந்து, கொண்ட, பலநாள், தருவான், பத்துப்பாட்டு, நவிர, தலைமையான, அவனது, பூத்துக், விழுங்கி, இருக்கை, நாள், நிதியம், புகை, பாடல், வரும், சூரியன், பாம்பு, சூரியனை, விறலியர், தெரியாத, அளவுக்கு, அன்ன, முடுவல், சங்க, சிறப்பின், செய்வான், செல்ல, தேர், குன்று, புரவி, வேழம், தலைவன், அணிய, கட்டிய