ஐம்பெருங் காப்பியங்கள் - மணிமேகலை
24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக் காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு 'அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார் உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும் ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் | 24-010 |
ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும் திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன் உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத் தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல் யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி! மாதர் யாரினும் பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் | 24-020 |
பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும் நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்! உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற | 24-030 |
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை தானே தமியள் ஒருத்தி தோன்ற "இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்?" என்று மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக் கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன் மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த மலர் வாய் அம்பின் வாசம் கமழப் | 24-040 |
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் பொரு அறு பூங்கொடி போயின அந் நாள் "யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி!" என்றே வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற மன்னவன் அவனை வணங்கி முன் நின்று "என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்? | 24-050 |
சொல்லுமின்" என்று தொழ அவன் உரைப்பான் "கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப் பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாசமயிலை வயிற்றுள் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் "இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய கருவொடு வரும்" எனக் கணி எடுத்து உரைத்தனன் ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது | 24-060 |
பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள் தீவகச் சாந்தி செய்யா நாள் உன் காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் மணிமேகலை தன் வாய்மொழியால் அது தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும் வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் வாசவன் விழாக் கோள் மறவேல்" என்று மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் | 24-070 |
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் தன் பெயர் மடந்தை துயருறுமாயின் மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என அஞ்சினேன் அரசன் தேவி!' என்று ஏத்தி 'நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை என் மனைத் தருக' என இராசமாதேவி 'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி | 24-080 |
நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள் என்னொடு இருக்கும்' என்று ஈங்கு இவை சொல்வுழி மணிமேகலை திறம் மாதவி கேட்டு துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல் தௌியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன் மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத் தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் | 24-090 |
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால் தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க 'அறிவு உண்டாக' என்று ஆங்கு அவன் கூறலும் இணை வளை நல்லாள் இராசமாதேவி அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின் "யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு!' என | 24-100 |
'தேவி கேளாய்! செய் தவ யாக்கையின் மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் பிறந்தார் "மூத்தார் பிணி நோய் உற்றார் இறந்தார்" என்கை இயல்பே இது கேள் பேதைமை செய்கை உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப் பயன் இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர் | 24-110 |
"பேதைமை என்பது யாது?" என வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே நல்வினை தீவினை என்று இரு வகையான் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி | 24-120 |
வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் "தீவினை என்பது யாது?" என வினவின் ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ முன்றும் பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் | 24-130 |
பத்து வகையால் பயன் தெரி புலவர் இத் திறம் படரார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் "நல்வினை என்பது யாது?" என வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி சீலம் தாங்கித்தானம் தலைநின்று மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் | 24-140 |
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்! புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின் மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ! பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும் முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்' என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி 'தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின் | 24-150 |
இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் "மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர் ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள் மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் "எனக்கு இடர் உண்டு" என்று இரங்கல் வேண்டா மனக்கு இனியீர்!" என்று அவரையும் வணங்கி வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த அந்தி மாலை ஆய் இழை போகி | 24-160 |
உலக அறவியும் முதியாள் குடிகையும் இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி 'இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும் மன்னவன் யார்?" என மாதவன் கூறும் 'நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் | 24-170 |
ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும் ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்' என தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன் அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என் | 24-176 |
25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து தருமசாவகன் தன் அடி வணங்கி அறனும் மறனும் அநித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும் சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு 'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள் கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் இங்கு இணை இல்லாள் இவள் யார்?' என்ன | 25-010 |
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் 'நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக் கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன் மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி ஈங்கு வந்தனள்' என்றலும் இளங்கொடி | 25-020 |
'நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ? மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய் ஆங்கு வருவாய் அரச! நீ' என்று அப் பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து வெய்யவன் குடபால் வீழாமுன்னர் | 25-030 |
> வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் பூ நாறு அடைகரை எங்கணும் போகி மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப் பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த 'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் | 25-040 |
'விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின் புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும் அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம் போற்றுமின் அறம்' எனச் சாற்றிக் காட்டி | 25-050 |
நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர் அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் "பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும் மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும் என்?" என்று யான் தொழ "முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது பீடிகை பொறுத்த பின்னர் அல்லது | 25-060 |
வானவன் வணங்கான் மற்று அவ் வானவன் பெருமகற்கு அமைத்து 'பிறந்தார் பிறவியைத் தரும பீடிகை சாற்றுக' என்றே அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும் இருள் அறக் காட்டும்" என்று எடுத்து உரைத்தது அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி இன்று எனக்கு' என்றே ஏத்தி வலம் கொண்டு ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு தந்தை முனியா தாய் பசு ஆக | 25-070 |
வந்த பிறவியும் மா முனி அருளால் குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் மா முனி அருளால் மக்களை இல்லோன் பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும் தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து 'செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க | 25-080 |
அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி நாடகம் கண்டு பாடல் பான்மையின் கேள்வி இன் இசை கேட்டு தேவியர் ஊடல் செவ்வி பார்த்து நீடாது பாடகத் தாமரைச் சீறடி பணிந்து தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக் கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ | 25-090 |
தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து தூ அறத் துறத்தல் நன்று' எனச் சாற்றி 'தௌிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து ஏதம் இன்றாய் இன்று விளைந்தது மணிமேகலை தான் காரணம் ஆக' என்று அணி மணி நீள் முடி அரசன் கூற 'மனம் வேறு ஆயினன் மன்' என மந்திரி சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி 'எம் கோ வாழி! என் சொல் கேண்மதி நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள் | 25-100 |
பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி தான் தனி தின்னும் தகைமையது ஆயது காய் வெங் கோடையில் கார் தோன்றியதென நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு வானம் பொய்யாது மண் வளம் பிழையாது ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம் | 25-110 |
தாய் ஒழி குழவி போலக் கூஉம் துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ! பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே! தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் மதி மாறு ஒர்ந்தனை மன்னவ!' என்றே முதுமொழி கூற முதல்வன் கேட்டு 'மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த | 25-120 |
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன்' என 'கலம் செய் கம்மியர் வருக' எனக் கூஉய் இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும் புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் | 25-130 |
தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து 'பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும் தரும பீடிகை இது' எனக் காட்ட வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை மை அறு மண்டிலம் போலக் காட்ட 'என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்! மாரி நடு நாள் வயிறு காய் பசியால் | 25-140 |
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் "நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது ஏடா! அழியல் எழுந்து இது கொள்க" என அமுதசுரபி அங்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய்! உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும் மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் | 25-150 |
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது மறந்து வாழேன் மடந்தை!' என்று ஏத்தி மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து தென் மேற்காகச் சென்று திரை உலாம் கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி 'அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு | 25-160 |
பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர் பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால் அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய | 25-170 |
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப் பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை! பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர் கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய | 25-180 |
புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத் தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து "கொற்றவன் மகன் இவன் கொள்க" எனக் கொடுத்தலும் பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத் தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் | 25-190 |
இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் நல் மணி இழந்த நாகம் போன்று கானலும் கடலும் கரையும் தேர்வுழி வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் "அணி நகர் தன்னை அலை கடல் கொள்க" என இட்டனள் சாபம் பட்டது இதுவால் | 25-200 |
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த வடி வேல் தடக் கை வானவன் போல விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க ஒரு தனி போயினன் உலக மன்னவன் அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும் வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள் உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் | 25-210 |
அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால் மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்று அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின் மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் துன்னிய தூ மணல் அகழத் தோன்றி ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித் தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து | 25-220 |
'என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்? நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும் நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் அரசர் தாமே அருளறம் பூண்டால் பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு? "அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின் மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது | 25-230 |
கண்டது இல்' எனக் காவலன் உரைக்கும் 'என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன் என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்' என 'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும் வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் | 25-239 |
26 வஞ்சி மாநகர் புக்க காதை
அணி இழை அந்தரம் ஆறா எழுந்து தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடை கெழு தாதை கோவலன் தன்னையும் கடவுள் எழுதிய படிமம் காணிய வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து வணங்கி நின்று குணம் பல ஏத்தி 'அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது அருளல் வேண்டும்' என்று அழுது முன் நிற்ப ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள் | 26-010 |
'எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் மதுராபதி எனும் மா பெருந் தெய்வம் "இது நீர் முன் செய் வினையின் பயனால் காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் தாய மன்னவர் வசுவும் குமரனும் சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும் அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் மூ இரு காவதம் முன்னுநர் இன்றி யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப் | 26-020 |
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் எல் வளையாளோடு அரிபுரம் எய்தி பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக் கண்டனர் கூறத் தையல் நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன் ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி | 26-030 |
இட்ட சாபம் கட்டியது ஆகும் உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது" எனும் மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம் அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம் எவ் வகையானும் எய்துதல் ஒழியாது உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி | 26-040 |
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் "மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு ஒரு பெருந் திலகம்" என்று உரவோர் உரைக்கும் கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின் அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப் போதிமூலம் பொருந்தி வந்தருளி தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும் அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் | 26-050 |
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை பைந்தொடி! தந்தையுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் துன்பக் கதியில் தோற்றரவு இன்றி அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு துறவி உள்ளம் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் அத் திறம் ஆயினும் அநேக காலம் | 26-060 |
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும் முறைமையின் இந்த மூதூர் அகத்தே அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் இன்னது இவ் இயல்பு' எனத் தாய் எடுத்து உரைத்தலும் "இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க" என மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த | 26-070 |
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய நில நாடு எல்லை தன் மலை நாடென்ன | 26-080 |
கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க தேரும் மாவும் செறி கழல் மறவரும் கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து கனக விசயர் முதல் பல வேந்தர் அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத் தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள் திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் | 26-094 |
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
'நவை அறு நன் பொருள் உரைமினோ' என சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என 'வேத வியாதனும் கிருதகோடியும் ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர் பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் காண்டல் கருதல் உவமம் ஆகமம் ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு | 27-010 |
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால் பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி | 27-020 |
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது கிட்டிய தேசம் நாமம் சாதி குணம் கிரியையின் அறிவது ஆகும் கருத்து அளவு ஆவது குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை உணரும் தன்மையது ஆகும் மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் பொது எனப்படுவது சாதன சாத்தியம் இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் | 27-030 |
கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன் உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல் எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல் முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு "இது மழை பெய்யும் என இயம்பிடுதல் என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம் தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் | 27-040 |
உவமம் ஆவது ஒப்புமை அளவை "கவய மா ஆப் போலும்" எனக் கருதல் ஆகம அளவை அறிவன் நூலால் "போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல் அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல் இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல் | 27-050 |
அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத் தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல் மீட்சி என்பது "இராமன் வென்றான்" என மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல் எட்டு உள பிரமாண ஆபாசங்கள் சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம் தேராது தௌிதல் கண்டு உணராமை எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் | 27-060 |
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல் திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல் விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா மையல் தறியோ? மகனோ? என்றல் தேராது தௌிதல் செண்டு வௌியில் ஓராது தறியை மகன் என உணர்தல் கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று அண்டலை முதலிய கண்டும் அறியாமை | 27-070 |
இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல் உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப் புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல் நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள் பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் | 27-080 |
தாம் பிருகற்பதி சினனே கபிலன் அக்கபாதன் கணாதன் சைமினி மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம் இவையே இப்போது இயன்று உள அளவைகள்' என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் 'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன 'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க் | 27-090 |
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன் 'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர் தேவன் இட்ட முட்டை' என்றனன் காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன் 'கற்பம் கை சந்தம் கால் எண் கண் | 27-100 |
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்றுச் சார்பின் தோன்றா ஆரண வேதக்கு ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும் வேதியன் உரையின் விதியும் கேட்டு 'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என ஆசீவக நூல் அறிந்த புராணனை 'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என 'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் | 27-110 |
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும் நிலம் நீர் தீ காற்று என நால் வகையின மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து | 27-120 |
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத் தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் ஆதி இல்லாப் பரமாணுக்கள் தீதுற்று யாவதும் சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா முது நீர் அணு நில அணுவாய்த் திரியா ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா | 27-130 |
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் குலாம் மலை பிறவாக் கூடும் பலவும் பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும் மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம் வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின் குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும் | 27-140 |
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச் சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆய தொழிலை அடைந்திடமாட்டா ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் மாலைப் போதில் ஒரு மயிர் அறியார் சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும் கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும் | 27-150 |
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர் கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் அழியல் வேண்டார் அது உறற்பாலார் இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் அது மண்டலம் என்று அறியல் வேண்டும் பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் | 27-160 |
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் கருவில் பட்ட பொழுதே கலக்கும் இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும் முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது மற்கலி நூலின் வகை இது' என்ன சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால் புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை, அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன் | 27-170 |
'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும் தீது இல் சீவனும் பரமாணுக்களும் நல்வினையும் தீவினையும் அவ் வினையால் செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும் தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் அநித்தமும் நித்தமும் ஆகி நின்று நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே | 27-180 |
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம் பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத் தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா அப்படித்தாகி அதன் மாத்திகாயமும் எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2 | 27-190 |
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும் பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் சீவன் உடம்போடு ஒத்துக் கூடி தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் சீர்சால் நல்வினை தீவினை அவை செயும் வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய் அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல் | 27-200 |
அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின் 'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன் 'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய் மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச் சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண் வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின் | 27-210 |
தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என | 27-220 |
ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த பூத விகாரத்தால் மலை மரம் முதல் ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து வந்த வழியே இவை சென்று அடங்கி அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் | 27-230 |
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே மெய் வாய் கண் மூக்கு செவி தாமே உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச் செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு | 27-240 |
'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன 'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் சாமானியமும் விசேடமும் கூட்டமும் ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப் பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான் ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் | 27-250 |
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை மாசு இல் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம் கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின் சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை | 27-260 |
ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும் உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் | 27-270 |
அவ் அப் பூத வழி அவை பிறக்கும் மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்' என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு 'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின் அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும் | 27-280 |
'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின் தந்தை தாயரை அனுமானத்தால் அலது இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்? மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என் | 27-289 |
28. கச்சி மாநகர் புக்க காதை
ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர் கருங் குழல் கழீஇய கலவை நீரும் எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும் புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் | 28-010 |
மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல உபாசகர் செங் கை நறு நீரும் அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும் என்று இந் நீரே எங்கும் பாய்தலின் கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி தாமரை குவளை கழுநீர் ஆம்பல் | 28-020 |
பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும் கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு கடை காப்பு அமைந்த காவலாளர் மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் | 28-030 |
பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும் செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும் பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும் மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் மாலைக்காரரும் காலக் கணிதரும் | 28-040 |
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர் என்று இவர் பல் வகை மறுகும் விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும் வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் பால் வேறு ஆக எண் வகைப் பட்ட கூலம் குவைஇய கூல மறுகும் மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் | 28-050 |
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் மறையோர் அருந் தொழில் குறையா மறுகும் அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும் மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும் | 28-060 |
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் வேணவா மிகுக்கும் விரை மரக் காவும் விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் கோலம் குயின்ற கொள்கை இடங்களும் கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் இந்திர விகாரம் என எழில் பெற்று | 28-070 |
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள | 28-080 |
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும் சாவக மன்னன் தன் நாடு எய்த தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும் புக்க பின் அந்தப் பொய் உருவுடனே தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் | 28-090 |
சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என் நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத் 'தையல்' கேள் நின் தாதையும் தாயும் செய்த தீவினையின் செழு நகர் கேடுற துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் | 28-100 |
புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம் திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும் இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் | 28-110 |
அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின் புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப் பங்கயச் சேவடி விளக்கி பான்மையின் அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை | 28-120 |
இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல் துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள் நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு நீங்காக் காதல் பாங்கன் ஆதலின் தாங்க நல் அறம் தானும் கேட்டு முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி தன்னான் இயன்ற தனம் பல கோடி எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய | 28-130 |
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத் தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக் "காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத் தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது இன்னும் கேளாய் நல் நெறி மாதே! "தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும் தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால் ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப் | 28-140 |
பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக் காதலி தன்னொடு கபிலை அம் பதியில் நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்று அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும் அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ? தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன் | 28-150 |
ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின் மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள் பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய் பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின் | 28-160 |
கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' என அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித் திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக் கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி வட திசை மருங்கின் வானத்து இயங்கித் தேவர் கோமான் காவல் மாநகர் மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு | 28-170 |
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப் பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது தென்மேற்கு ஆக தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும் வையம் காவலன் தன் பால் சென்று கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் 'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் | 28-180 |
> அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு தங்காது இப் பதித் தருமதவனத்தே வந்து தோன்றினள் மா மழை போல்' என மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி 'கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று 'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம் | 28-190 |
அலத்தல்காலை ஆகியது அறியேன் மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி "உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் தாங்கா மாரியும் தான் நனி பொழியும் அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது | 28-200 |
பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என பொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத் தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத் தீவகம் போன்ற காஅகம் பொருந்திக் கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் 'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய அங்கு அப் பீடிகை இது என' அறவோன் | 28-210 |
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து தீவதிலகையும் திரு மணிமேகலா மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப் பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும் அங்கையின் ஏந்திய அமுதசுரபியை வைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' என பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் | 28-220 |
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் காணார் கேளார் கால் முடம் ஆனோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் | 28-230 |
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப வசித் தொழில் உதவி வளம் தந்தது என பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லும்காலை தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண அடிகளும் மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி 'நன்று' என விரும்பி நல் அடி கழுவி | 28-240 |
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப் போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து 'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் | 28-245 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை - Impernm Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - பொருள், கேட்டு, மறுகும், மன்னவன், கொண்டு, பீடிகை, என்பது, எல்லாம், மாதவன், அல்லது, பிறப்பு, சென்று, பெருந், வௌிப்பட்டு, ஆயினும், ஆதலின், தெய்வம், தொழுது, நின்று, எழுந்து, கேளாய், என்னும், மணிமேகலை, இயல்பு, வணங்கி, பூங்கொடி, தொழில், நீரும், உணர்தல், தீவினை, பிறப்பும், பிறந்த, விகாரமும், விட்டு, தோன்றிய, வானவன், காவலன், பொருளும், இறைவன், பாத்திரம், யாவரும், எங்கும், இழிந்து, பூம்பொழில், பரந்து, இலங்கு, தோன்றி, உணர்வு, நல்வினை, எடுத்து, பான்மையின், மடந்தை, செய்யும், மலர்ப், வண்ணமும், கோவலன், காரணம், எனப்படுவது, உரைத்தனன், செய்யா, நல்லாள், இந்திர, குணமும், உயிர்க்கு, வினைப், அதன்கண், தீவகம், மாக்கள், பின்னர், வழக்கு, உலாவும், பணிந்து, தௌிதல், வஞ்சியுள், பெரும், மணிபல்லவம், மருந்து, புக்கு, ஏந்திய, நின்னை, கிள்ளி, மணிமேகலா, கடவுள், தாயரும், மூக்கு, எய்தும், என்றல், தன்மையது, நூற்பொருள், நிறைந்த, விரும்பி, ஆகாயம், உயிரும், அபாவம், வேண்டும், மாநகர், வேற்று, வேந்தன், கருதல், காண்டல், நாட்டு, அங்கையில், பிரமரும், தேவரும், மக்களும், மறந்து, நரகரும், விலங்கும், நல்லாய், காட்டும், இன்பமும், கண்டது, வினவின், அன்றியும், மாதவர், ஓங்கிய, இளங்கொடி, காரிகை, வேட்கை, திருந்து, உரைத்து, காட்சி, பொழில், முதல்வன், காத்தல், அருளால், தானும், சார்ந்து, பொருந்தி, இருந்தது, காணாய், செய்து, ஆக்கும், எங்கணும், தோற்றமும், சார்பின், புகுந்து, உரைப்போன், அறவணன், அடைகரை, பிறவியின், என்றலும், தெய்வதம்