முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மானி (கி.பி.216 - கி.பி.276)
மானி (கி.பி.216 - கி.பி.276)
'இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர்' என்ற கோட்பாடுடைய மானிக்கே சமயக் கிளையை நிறுவிய மூன்றாம் நூற்றாண்டுத் தீர்க்கதரிசி மானி ஆவார். இவர் நிறுவிய சமயம் இன்று அற்றுப் போய் விட்டது. எனினும், அது உச்ச அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தபோது, அது ஏராளமான மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய இந்தச் சமயம் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், கிழக்கு பசுபிக் பெருங்கடல் வரையிலும் பரவியிருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இச்சமயம் நிலைத்திருந்தது.
மானி தோற்றுவித்த இந்தச் சமயம், முந்தையச் சமயங்கள் பலவற்றினுடைய கொள்கைகளின் கூட்டிணைப்பாக விளங்கியது. ஸொராஸ்டர், புத்தர், இயேசு கிறிஸ்து ஆகியோரை உண்மையான அருட்போதகர்கள் என்று மானி கருதினார். எனினும், அவர்களில் எவரையும் விட மிக முழுமையான அருள் வெளிபாட்டுச் செய்தி தமக்குப் பின்னாளில் கிடைத்ததாக அவர் கூறினார்.
மானியின் சமயத்தில் புத்த, கிறித்தவ சமய அம்சங்களும் அடங்கியிருந்த போதிலும், அந்தக் கோட்பாடு (மேலை நாட்டினருக்காவது) கருத்தைக் கவரும் முறையில் இருந்தது. அக்கோட்பாடு நன்மை, தீமை என்ற இரு பெருள்வாதக் கோட்பாட்டைக் கொண்ட பார்சி சமய துவைதத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். 'ஒருவனே தேவன்' என்ற கொள்கை மானிக்கு உடன்பாடானதன்று. "இந்த உலகை ஒரு கடவுள் ஆளவில்லை. இரு வேறு சக்திகளுக்கிடையிலான இடைவிடாத போராட்டத்தின் களமாகவே உலகம் விளங்குகிறது. இந்த இரு சத்திகளில் ஒன்று தீயநெறி, இதனை இருளாகவும் பருப்பொருளாகவும் மானி உருவகித்துக் காட்டுகிறார். இன்னொன்று நன்னெறி, இதனை ஒளியாகவும் ஆன்மாவாகவும் அவர் காட்டுகிறார். இது ஓரளவுக்குக் கடவுள், பேய் பற்றிய கிறிஸ்துவக் கோட்பாட்டை ஒத்திருக்கிறது. ஆனால், நன்னெறியும், தீயநெறியும் அடிப்படையில் சரி நிகரான வல்லமை வாய்ந்தவை என மானிக்கே சமயம் கருதுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக கிறிஸ்துவ, யூதத் தத்துவஞானிகளை அலைக் கழித்து வந்த தீமை பற்றிய தத்துவ முரண்பாடு, மானிக்கே தத்துவஞானிகளுக்கு கவலையளிக்கவில்லை".
மானிக்கே சமய இறைமையியலை விரித்துரைக்க இங்கு இடம் போதாது. எனினும், மனிதனின் ஆன்மாவை நன்னெறியோடும், அவனது உடலை தீயநெறியோடும் அவர்கள் இணைத்துக் கண்டதன் விளைவாக இனப் பெருக்கத்திற்காகக் கூட பாலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மானிக்கே சமயவாதிகள் நம்பினார்கள். புலாலுண்ணுதல், மது அருந்துதல் ஆகியவற்றையும் அது தடை செய்கிறது.
இத்தகைய கடுமையான கட்டுத் திட்டங்களைக் கொண்ட ஒரு கோட்பாடு, செல்வாக்குப் பெறுவதும், பெருமளவு மக்களின் ஆதரவைப் பெறுவதும் கடினம் என முதலில் எண்ணத் தோன்றும். ஆனால், மானிக்கே சமயத் திருச்சபையின் பாமர உறுப்பினர்களுக்கு இந்தக் கடுமையான தடைகள் உரியன அல்ல. அவை, வீடு பேற்றுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறிய உயர் குழுவினருக்கு மட்டுமே அவை உரியவை. 'கேட்பவர்கள்' என்றழைக்கப்படும் பாமர உறுப்பினர்கள் மனைவியரை (அல்லது ஆசை நாயகியரை) வைத்துக் கொள்ளலாம்; குழந்தைகள் பெற்றும் குடும்பம் நடத்தலாம்; புலார் உண்ணலாம்; மது அருந்தலாம்; அவர்கள் பல்வேறு சமயச் சடங்குகளை அனுசரிக்க வேண்டும். "உயர் குழு"வினை ஆதரிக்க அவர்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்குச் சுமத்தப்பட்ட அறநெறிகள் அளவுக்கு மீறிக் கடுமையானவை அல்ல. (பாதிரிமார்களும், சமய குருமார்களும் திருமணம் செய்து கொள்ளலாகாது என்றும், ஆனால் பாமர ஆதரவாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் விதிக்கும் வேறு சில சமயங்களும் உண்டு). உயர் குழுவினரின் ஆன்மா இறப்புக்குப் பிறகு நேரடியாகச் சொர்க்கம் போய்ச் சேரும். ஆனால், 'கேட்பவர்கள்' சொர்க்கம் செல்லும் மார்க்கம் சற்று நீண்டது. எனினும், கேட்பவர்களும் உயர் குழுவினரைப் போலவே நேரடியாகச் சொர்க்கம் செல்ல முடியும் என மானிக்கே சமயத்தில் ஒரு கிளைப் பிரிவினராகிய கேத்தாரி போன்றவர்கள் நம்பினார்கள். அவர்கள், பாமரர்களுக்கு வாழ்க்கையில் மேலும பல சுதந்திரங்களையும் அளித்தனர்.
மானி 216 ஆம் ஆண்டில் மெசப்பட்டோமியாவில் பிறந்தார். அப்போது மெசப்பட்டோமியா, அர்சாசிட் அல்லது பார்த்தியன் அரசர்கள் ஆட்சியின் கீழிருந்த பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. மானியின் மூதாதையர் கூட பாரசீகர் தாம். அவர் அர்சாசிட் அரசர்களுக்கு உறவினர் என்பர். பெரும்பாலான பாரசீகர்கள் ஏதேனுமொரு வகைப் பார்சி மார்க்கத்தைப் பின்பற்றினர். ஆனால், கிறித்தவக் கோட்பாட்டின் தீவிரச் செல்வாக்குக்கு
ஆட்பட்டிருந்த ஒரு சிறிய சமயக் கிளையின் பின்னணியில் மானி வளர்ந்தார். அவருக்கு 12 ஆம் வயதிலேயே சமயத் திருவெளிப்பாடுகள் தோன்றின. இருபதாம் வயதிலிருந்தே அவர் தமது புதிய சமயத்தைப் போதிக்கலானார். அவரது சொந்த நாட்டில் முதலில் அவர் வெற்றி பெறவில்லை. அதனால், அவர் வடமேற்கு இந்தியாவுக்குகச் சென்றார். அங்கு ஓர் உள்நாட்டு அரசரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.
242 ஆம் ஆண்டில் மானி பாரசீகம் திரும்பினார். அங்கு முதலாம் ஷாப்பூர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஷாப்பூர் மானிக்கே சமயத்திற்கு மாறவில்லையாயினும், அவருக்கு மானியிடம் மதிப்பு ஏற்பட்டது. அதனால், பாரசீகப் பேரரசு முழுவதிலும் அவரது புதிய சமயத்தைப் போதிப்பதற்கு அரசர் அனுமதியளித்தார். இந்தப் பிற்காலப் பாரசீகப் பேரரசு 226 ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது; அது சில சமயம் சஸ்ஸானிடுப் பேரரசு என அழைக்கப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகள் வரை, முதலாம் ஷாப்பூர், முதலாம் ஹார்மிஸ்டு ஆகியோரின் ஆட்சியின் கீழ் மானி தமது சமயத்தைத் தங்கு தடையின்றிப் போதித்தார். அவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் தோன்றினர். இதே காலத்தில், அயல் நாடுகளுக்கும் அவர் சமயப் பிரச்சாரர்களை அனுப்பினார். எனினும், மானியன் வெற்றி கண்டு, சஸ்ஸானிடு அரசுகளின் ஆட்சியில் அரசுச் சமயமாக ஆகியிருந்த பார்சி சமயக் குருமார்கள் பொறாமை கொண்டனர். முதலாம் பஹ்ராம் அரசர் 276 ஆம் ஆண்டில் ஆட்சிப் பீடம் ஏறியதும் மானி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். 26 நாட்கள் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த பிறகு அவர் இறந்தார்.
மானி தம் வாழ்நாளில் ஏராளமான நூல்கள் எழுதினார். ஒரு நூலை பாரசீக மொழியிலும், மற்ற நூல்களை ஒரு செமிட்டிக் மொழியாகிய சிரியக் மொழியிலும் எழுதினார். அந்த நூல்கள் மானிக்கே சமயத்தின் வேத நூல்களாக மதிக்கப்பட்டன. மானிக்கே சமயம் அற்றுப் போனதும், இந்த வேத நூல்களும் மறைந்து போயின. ஆயினும், இவற்றுள் சில இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டன.
மானிக்கே சமயம், தொடக்கத்திலிருந்தே தீவிரமாக மத மாற்றம் செய்யும் ஒரு சமயமாகவே இருந்தது. அவருடைய ஆயுட் காலத்திலேயே அவரது சமயத்திற்கு இந்தியா முதல் ஐரோப்பா வரையில் ஆதரவாளர்கள் ஏற்பட்டனர். அவர் இறந்த பின்னரும் இந்தச் சமயம் தொடர்ந்து வளர்ந்து மேற்கே ஸ்பெயின் வரையிலும், கிழக்கே சீனா வரையிலும் பரவியது. மேற்கில் நான்காம் நூற்றாண்டில், அது செல்வாக்கின் உச்சக் கட்டத்தை எட்டி கிறிஸ்தவத்திற்கு ஒரு போட்டிச் சமயமாக உருவாகியது. (புனித அகஸ்டைன் ஒன்பது ஆண்டுக் காலம் மானிக்கே சமயத்தைச் சார்ந்திருந்தார்). ஆனால், கிறிஸ்தவ சமயம ரோமானியப் பேரரசின் அரசுச் சமயமாக ஆனதும், மானிக்கே சமயம் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. 600 ஆம் ஆண்டு வாக்கில், மேலை நாடுகளிலிருந்து மானிக்கே சமயம் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டது.
ஆனால், மொசப்பட்டோமியாவிலும், ஈரானிலும் மானிக்கே சமயம் தொடர்ந்து வலுவாகவே இருந்தது. அங்கிருந்து அது மத்திய ஆசியாவுக்கம், துருக்கிஸ்தானுக்கும், மேற்குச் சீனாவுக்கும் பரவியது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மேற்குச் சீனாவின் ஒரு கணிசமனா பகுதியையும், மங்கோலியாவையும் ஆண்டு வந்த "உய்கூர்"களின் அரசுச் சமயமாகவும் ஆகியது. இந்தச் சமயம் சீனாவிலும் நுழைந்து, கடற்கரை வரைப் பரவி, அங்கிருந்து தைவான் தீவையும் எட்டியது. ஆனால், ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றியதும், மானிக்கே சமயம் வீழ்ச்சியடையலாயிற்று. எட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு, பாக்தாத்திலிருந்த அப்பாசித் அரசர்கள், மானிக்கே சமயத்தினரைக் கொடூரமாக அடக்கித் துன்புறுத்தினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு இந்தச் சமயம் மெசபட்டோமியாவிலும், ஈரானிலும் மாண்டு போயிற்று. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து மத்திய ஆசியாவிலும் இந்தச் சமய வீழ்ச்சியடையலாயிற்று. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்புகளுக்குப் பிறகு அங்கும் அது அடியோடு அழிந்தது. எனினும், 1300 ஆம் ஆண்டில் கிழக்குச் சீனாவில் மானிக்கே சமயச் சமூகங்களைத் தாம் சந்தித்தாக மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐரோப்பாவில், மானிக்கே சமயத்திலிருந்து தோன்றி பல்வேறு கிளைச் சமயங்கள் எழுந்தன. ஏழாம் நூற்றாண்டில் பைசாண்டியப் பேரரசின் பாலிசியன்கள் தோன்றினர். பத்தாம் நூற்றாண்டில் பால்கன் நாடுகளில் போகோகமில்கள் செல்வாக்குப் பெற்றனர். ஆனால், இந்தக் கிழக்கு ஐரோப்பியக் கி€ள்ச் சமயங்களில் மிக முக்கியமானது கேத்தாரி என்ற பிரிவாகும். இது பிரெஞ்சு நகராகிய ஆல்பியில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதனால், இந்தக் கிளைச் சமயத்தினரை ஆல்பிஜென்சியர்கள் கோட்பாடு மானிக்கே சமயக் கோட்பாட்டை பெரிதும் ஒத்திருந்த போதிலும் அவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். ஆனால், கிறிஸ்தவ மரபுத் திருச்சபையினர் அவர்களைப் புறச் சமயத்தினர் என ஒதுக்கினர். இறுதியாக மத்தியக் காலத்துப் போப்பாண்டவர்களிலேயே சமயச் சகிப்புணர்வு மிகக் குறைந்தவர் எனக் கருதப்பட்ட மூன்றாம் இன்னசன்ட் போப்பாண்டவர் இந்தச் சமயத்தினருக்கு எதிராகச் சிலுவைப் போர் தொடுக்கும் படி ஆணையிட்டார். 1209 ஆம் ஆண்டில், பயங்கர உயிரிப் பலிக்கும், தென் பிரான்சின் பெரும்பகுதியின் நாசத்திற்கும் பிறகு ஆல்பிஜென்சியர்கள் அடியோடு ஒடுக்கப்பட்டனர். எனினும், கேத்தாரி சமயம் இத்தாலியில் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.
உண்மையான சமயப் பற்றுக் கொண்டவர்களின் மீது எந்தச் சமயமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது இயற்கை. இந்தக் காரணத்தினாலேயே, ஒரு சிறிய சமயத்தை நிறுவியவர் கூட பெருஞ்செல்வாக்குப் பெற்றுவிடுகிறார். மானிக்கே சமயம் இன்று அற்றுப் போய்விட்ட போதிலும், ஒரு கால அளவின் போது அது மாபெருஞ் சமயமாகத் திகழ்ந்தது. எனவே, மானியும் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். (நிலை பெற்றிருந்த மற்றச் சமயங்கள், மானிக்கே சமயத்தை ஒடுக்க அடுத்தடுத்து அடக்கு முறைகளைக் கையாண்டுது. தீவினைப் பயனாயினும், மானியின் சோதனைகளினால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத விளைவேயாகும்).
இந்தப் புதிய சமயத்தைத் தோற்றுவித்ததில் மானி தனிப்பட்ட முறையில் கொண்ட பங்கு மிகப் பெரியதாகும். அந்தச் சமயத்தை அவர் நிறுவினார்; அதன் இறைமையியலை அவரே உருவாக்கினார்; அதன் அறநெறி விதிகளை வகுத்தமைத்தார். அவருடைய கொள்கைகளில் பெரும்பாலானவை முந்தையச் சிந்தனையாளர்களிடமிருந்து பெற்றவை. ஆனால், இந்தத் தனித்தனிச் சிந்தனைத் துணுக்குகளை நிரல்படத் தொகுத்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய முறையாக உருவாக்கியவர் மானியேயாவார். அவர் தம் போதனைகளினால், ஏராளமானோரைத் தம் சமயத்துக்கு மாற்றினார்; அதன் திருச்சபை அமைப்பு முறைகளையும் திட்டமிட்டு அமைத்தார். ஒரு முக்கியமான பொதுமக்கள் இயக்கம், ஒரு தனி நிறுவனரினால் தோற்றுவிக்கப்பட்டது ஓர் அருஞ்சாதனையேயாகும். அவர் இல்லாமல், அவருடைய சமயம் தோன்றியிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை. இந்த வகையில், பெரும்பாலான சமயத் தலைவர்களைப் போலவே, மானியும் பெரும்பாலான விஞ்ஞானிகளையும் புத்தமைப்பாளர்களையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகிறார்.
எனவே, இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு மானி முற்றிலும் தகுதியுடையவரேயாகும். எங்கே என்பதுதான் கேள்வி. கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் ஆகிய மூன்று முக்கிய உலகச் சமயங்களை நிறுவியவர்களுக்கு வெகுவாகப் பிற்பட்டுத்தான் அவருக்கு இடமளிக்க வேண்டும் என்பது தெளிவு. ஏனெனில், இந்த நிறுவனர்களின் ஆதரவாளர்கள் அவர்களுக்குப் பின்பு கோடிக்கணக்கில் பெருகி விட்டார்கள். மாறாக, பார்சி சமயமும் சமண சமயமும் இன்றும் உயிர் வாழ்கிறது என்றாலும், மானிக்கே சமயம் அதன் உச்ச நிலையில் இருந்தபோது அந்த இரு சமயங்களை விட மிகப் பெருமளவுக்கு ஆதரவாளர்களைக் கொண்டிருந்தது. இன்று மறைந்துவிட்ட போதிலும், அவ்விரு சமயங்களையும் விட உலகின் மீது ஒட்டு மொத்தமாக மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. அந்தக் காரணத்தினாலேயே அவர் சொராஸ்டிரருக்கு அல்லது மகா வீரருக்கு முற்பட்டு இடமளிக்கப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மானி (கி.பி.216 - கி.பி.276), மானிக்கே, சமயம், அவர், மானி, எனினும், இந்தச், ஆண்டில், நூற்றாண்டில், பிறகு, பார்சி, இந்தக், அவருக்கு, ஆதரவாளர்கள், போதிலும், முதலாம், உயர், சமயக், வரையிலும், செல்வாக்குப், இன்று, சமயத்திற்கு, அதனால், வெற்றி, அற்றுப், அவரது, ஷாப்பூர், இந்தப், சமயமும், சமயத்தை, மிகப், அவருடைய, சமயமாக, பெரும்பாலான, அரசுச், பேரரசு, பாரசீகப், வேண்டும், சமயத், பாமர, ", சமயங்கள், கோட்பாடு, கொண்ட, சிறிய, கிழக்கு, சொர்க்கம், கேத்தாரி, மானியின், ஏராளமான, மத்திய, அல்லது, சமயச், பேரரசின், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்