முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மகா கான்ஸ்டன்டைன் (கி.பி.280 - கி.பி.337)
மகா கான்ஸ்டன்டைன் (கி.பி.280 - கி.பி.337)
ரோமானியப் பேரரசை ஆண்ட முதலாவது கிறிஸ்துவப் பேரரசர் மகா கான்ஸ்டன்டைன் ஆவார். இவர் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவி, அந்தச் சமயத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு கொள்கைகளைச் செயற்படுத்தியதன் மூலமாக, அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமயப் பிரிவை ஐரோப்பாவிலேயே முதன்மை வாய்ந்த ஒரு சமயமாக மாற்றுவதில் பெரும் பங்கு கொண்டார்.
இன்று யூகோஸ்லாவியாவிலுள்ள, நிஸ் என்று இன்று வழங்கப் பெறும் நைசஸ் என்னும் ஊரில் கி.பி. 280 இல் கான்ஸ்டன்டைன் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவத்தில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். மகா கான்ஸ்டன்டைன் தமது இளமைக் காலத்தை டயாக்ளிஷியன் பேரரசரின் அரசவையில் இருந்து நிக்கோ மீடியாவில் கழித்தார்.
டயோக்களிஷியன் பேரரசர் கி.பி. 305 இல் பதவி துறந்தார். அவருக்குப் பின்னர், மகா கான்ஸ்டன்டைனின் தந்தையான மகா கான்ஸ்டன்டைனின் தந்தையான மகா கான்ஸ்டன்ஷியஸ், ரோமானியப் பேரரசின் மேற்குப் பகுதி முழுவதற்கும் பேரரசரானார்.
அடுத்த ஆண்டிலேயே மகா கான்ஸ்டன்டைனைப் பேரரசராக அறிவித்தனர். ஆனால், இவர் அரியணை ஏறியதை மற்ற தளபதிகள் எதிர்த்தனர். இதைத் தொடர்ந்து பல உள்நாட்டுப் போர்கள் மூண்டன. இந்தப் போர்களில், இறுதியாக ரோம் நகரில் அருகிலிருந்த மில்லியன் பாலத்தில் நடந்தபோரில் கடைசியாக எஞ்சியிருந்த மாக்சென்ஷியஸ் என்ற பகைவரை மகா கான்ஸ்டன்டைன் தோற்கடித்ததும் உள்றாட்டுப் போர்கள் முடிவுற்றன.
மகா கான்ஸ்டன்டைன் ரோமானியப் பேரரசின் மேற்குப் பகுதிக்கு எதிர்ப்பில்லாத அரசரானார். எனினும், லிசினியஸ் என்ற மற்றொரு தளபதி கிழக்குப் பாதியை ஆண்டு வந்தார். கி.பி. 323 ஆம் ஆண்டில் மகா கான்ஸ்டன்டைன், லிசினியஸ் மீது படையெடுத்து அவரையும் தோற்கடித்தார். அது முதற்கொண்டு, கி.பி. 387 இல் தாம் காலமாகும் வரையில் ரோமானியப் பேரரசு முழுவதற்கும் மகா கான்ஸ்டன்டைன் பேரரசராக விளங்கினார்.
கான்ஸ்டன்டைன் எப்போது கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது குறித்து வழக்கமாக ஒரு கதை கூறப்படுகிறது. மில்லியன் பாலத்துப் போருக்கு முந்திய இரவில் வானவில் செந்தீ வண்ணமான சிலுவையொன்றைக் கான்ஸ்டன்டைன் பார்த்ததாகவும், இந்தச் சின்னத்துடன் நீ வெற்றி பெறுவாய் என்னும் சொற்களும் வானத்தில் தோன்றியதாகவும் கூறுவர். கான்ஸ்டன்டைன் எப்போது எவ்வாறு கிறிஸ்துவத்திற்கு மாறினார் என்பது இங்கு முக்கியமன்று. அவர் கிறிஸ்துவத்தை முன்னேற்றுவதில் முழு ஈடுபாடு கொண்டார் என்பதே முக்கியம். கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு அவர் மேற்கொண்ட தொடக்க நடவடிக்கைகளில் ஒன்று, அவர் பிறப்பித்த மிலான் அரசாணை (Edict of Milan) ஆகும். இதன்படி, கிறிஸ்துவ சமயம் சட்டப் படியான, ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு சமயமாக ஆகியது. கிறிஸ்துவ சமயம் ஒடுக்கப்பட்டு வந்த முந்திய காலத்தின் போது, பறிமுதல் செய்யப்பட்ட திருச்சபைச் சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிடுவதற்கும் இந்த அரசாணை வகை செய்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமையை வழிப்பாட்டு நாளாகவும் இந்த ஆணை அறிவித்தது.
சமயச் சகிப்புணர்வின் அடிப்படையில் மிலான் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. மாறாக, கான்ஸ்டன்டைன் ஆட்சிக் காலத்திலிருந்து யூதர்களுக்கு எதிராக அரசின் அடக்கு முறை தொடங்கியது. அந்த அடக்கு முறை கிறிஸ்துவ ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகள் வரை தொடர்ந்து நீடித்தது.
கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவத்தை ஒருபோதும் அதிகார முறையான அரசுச் சமயமாக நிறுவவில்லை. ஆயினும், தாம் இயற்றிய பல்வேறு சட்டங்கள், மற்றக் கொள்கைகள் வாயிலாக அவர் கிறிஸ்துவ சமயத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுவது, அரசில் பதவி உயர்வு பெறுவதற்கு அதிக வாய்ப்பளித்தது. திருச்சபையினருக்குப் பயனுள்ள பல்வேறு சிறப்புரிமைகளையும் ஏமங்களையும் வழங்கும் பல ஆணைகளையும் இவர் பிறப்பித்தார். உலகிலே மிகவும் புகழ்பெற்ற தேவாலாயங்கள் பலவற்றையும் இவர் கட்டினார். பெத்லகமில் கட்டப்பெற்ற கிறிஸ்துமஸ் தேவாலயம் (Church of the Nativity), ஜெருசலேத்தில் எழுப்பப் பெற்ற புனிதக் கல்லறைத் தேவாலயம் (Church of the Holy Sepulchre) ஆகியவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
ரோமானியப் பேரரசின் முதலாவது கிறிஸ்துவப் பேரரசர் என்ற முறையில் கான்ஸ்டன்டைன் ஆற்றிய அரும்பணியே இந்தப் பட்டியலில் அவர் இடம் பெறுவதற்குப் போதிய தகுதியாக அமைகிறது. எனினும், நீண்ட கால விளைவுகளைக் கொண்ட வேறுபல நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். அவற்றுள் முதன்மையானது, பழைய பைசாண்டிய நகரைப் பெரிதும் விரிவுப்படுத்திப் புதிதாக உருவாக்கி, அதற்கு கான்ஸ்டான்டினோபிள் என்று பெயர் சூட்டி, அதனையே தமது தலைநகராக ஆக்கிக் கொண்டதாகும். இன்று இஸ்தான்புல் என்றழைக்கப்படும் கான்ஸ்டன்டினோபிள் நகரம், உலகப் பெருநகர்களில் ஒன்றாகப் பெரும்புகழ் பெற்றது. அந்நகரம் 1453 வரையிலும் கிழக்கு ரோமானியப் பேரரசின் தலைநகராகத் திகழ்ந்தது. அதன் பின்னர் பல நூற்றாண்டுக் காலம் ஆட்டோமான் பேரரசின் தலைநகராக விளங்கியது.
கிறிஸ்துவத் திருச்சபையில் அக வரலாற்றிலும் கான்ஸ்டன்டைன் முக்கியப் பங்காற்றினார். அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த ஏரியஸ் (Arius) என்பவர் இயேசு நாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்கும் கொள்கையை வலியுறுத்தி வந்தார். இந்தக் கொள்கையை அலெக்சாண்டிரியாவின் தலைமை குருவாகிய அதனேசியஸ் (Athanasius) என்பவர் மறுத்து வந்தார். இரு முரண்பட்ட கிறிஸ்துவ இறைமையியல் கோட்பாடுகளை வலியுறுத்தி வந்த இந்த இருவரின் ஆதரவாளிகளிடையேயும் கடும் வாக்குவாதம் நடைபெற்று வந்தது. இவ்விரு பிரிவினரிடையே பூசலைத் தீர்த்துச் சமரசம் ஏற்படுத்துவதற்காக, கான்ஸ்டன்டைன் கி.பி. 326 இல் நைசீயா (Nicaea) நகரத்தில் அனைத்துக் கிறிஸ்துவத் திருச்சபைப் பெரு மன்றத்தின் முதல் கூட்டத்தைக் கூட்டினார். இந்த மன்றக் கூட்டத்தின் நடவடிக்கையில் கான்ஸ்டன்டைன் தீவிரப் பங்கு கொண்டார். இருதரப்பினருக்குமிடையிலான பூசலைத் தீர்த்து வைத்தார். இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்ட நைசீய கோட்பாடு (Nicene Creed) என்ற சமயக் கோட்பாட்டினை இந்தப் பெருமன்றக் கூட்டம் ஏற்றுக் கொள்ளும்படி செய்தார். இந்தக் கோட்பாடு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருச்சபைக் கோட்பாடு ஆகியது.
இவர் இயற்றிய குடியியல் சட்டங்கள் இவரது இந்தச் சாதனையை விட முக்கியம் வாய்ந்தனவாகும். இறைச்சிக் கடைக்காரர்கள், ரொட்டி தயாரிப்பவர்கள் போன்றோரின் தொழில்களைப் பரம்பரைத் தொழில்களாக்கும் சட்டங்களை இவர் கொண்டு வந்தார். ஒருவகைக் குத்தகைக் குடியானவர்கள் (Coloni) தங்கள் நிலத்தை விட்டுச் செல்வத்தைத் தடைச் செய்யும் ஓர் ஆணையையும் இவர் பிறப்பித்தார். இந்த ஆணை, இந்தக் குடியானவர்களை, நிலத்தில் நிரந்தரமாகப் பாடுபடும் பண்ணையாட்களாக மாற்றியது. இச்சட்டமும், இது போன்ற வேறுபல சட்டங்களும் மத்தியகால ஐரோப்பாவின் சமூகக் கட்டமைப்பு முழுவதற்கும் அடித்தளங்கள் அமைக்க உதவின.
கான்ஸ்டன்டைன் மரணப்படுக்கையை அடையும் வரையில் ஞான ஸ்நானம் செய்து கொள்ளாமலே இருந்தார். எனினும், அதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே அவர் கிறிஸ்துவ சமயத்திற்கு மாறிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. கிறிஸ்துவத்தின் ஆன்மீக நோக்கம் அவரை முற்றிலுமாக ஆட்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகப் புலனாகின்றது. இன்றையத் தரநிலைகளை வைத்துப் பார்த்தாலும், அவர் பகைவர்களிடம் மட்டுமின்றி எல்லோரிடமும் ஈவிரக்கமின்றியும், கொடூரமாகவும் நடந்து கொண்டிருக்கிறார். அவர் கி.பி. 326 இல் தம் மனைவியையும், மூத்தமகனையும் கொன்றுவிடும்படி செய்திருக்கிறார். இதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை.
கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவத்தைத் தழுவியதால், வரலாற்றின் போக்கு உண்மையில் மாறிவிடவில்லை என்றும், தவிர்க்க முடியாதிருந்த நிகழ்வுகளைச் செல்லுபடியாக்கியது மட்டுமே நிகழ்ந்தது என்றும் சிலர் வாதிடுவர். கி.பி. 284 முதல் 305 வரையிலும் ஆண்ட பேரரசர் டயோக்ளீஷியன், கிறிஸ்துவத்தை அடக்கி ஒடுக்குவதில் மிகத் தீவிரமான முனைப்புக் காட்டினார். கிறிஸ்துவ சமயத்தை ஒடுக்கிவிட அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவர் மேற்கொண்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளினால் கூட அழிக்க முடியாத அளவுக்குக் கிறிஸ்துவ சமயம் வலுப்பெற்றிருந்தது. கிறிஸ்துவத்தை அழிப்பதற்கு டயோக்ளீஷியஸ் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் தோல்வியுற்றத்தைக் கருதும் போது, கான்ஸ்டன்டைன் தோன்றியிராவிட்டாலூங் கூட இறுதியில் கிறிஸ்துவ சமயம் வெற்றியடைந்திருக்கும் என்றுதான் ஊகிக்க தோன்றும்.
ஆனால், இந்த ஊகங்கள் அனைத்தும் சுவையானவையேயன்றி முடிவானவை அல்ல. கான்ஸ்டன்டைன் தோன்றாமலிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அவர் அளித்த ஊகத்தின் காரணமாகக் கிறிஸ்துவம் எண்ணிக்கையிலும், செல்வாக்கிலும் விரைவாகப் பெருக்கமடைந்தது. ஒரு சிறிய சிறுபான்மையினரின் சமயமாக இருந்த கிறிஸ்துவம், ஒரு நூற்றாண்டுக்குள் உலகிலேயே மிகப் பெரியதொரு பேரரசின் முதன்மையான நிலைபெற்ற சமயமாக வளர்ச்சியடைந்தது.
ஐரோப்பிய வரலாற்றில் தலைமை சான்ற பெரியார்களில் ஒருவர் கான்ஸ்டன்டைன் என்பதில் ஐயமேதுமில்லை. மகா அலெக்சாந்தர், நெப்போலியன், இட்லர் போன்ற நன்கறிந்த புள்ளிகளுக்கு முன்னதாக இவருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு இவருடைய கொள்கைகளில் நீடித்து நிலை பெற்ற செல்வாக்கே காரணமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகா கான்ஸ்டன்டைன் (கி.பி.280 - கி.பி.337), கான்ஸ்டன்டைன், அவர், கிறிஸ்துவ, இவர், ரோமானியப், பேரரசின், சமயமாக, வந்தார், மேற்கொண்ட, கிறிஸ்துவத்தை, சமயம், ஏற்றுக், பேரரசர், இந்தக், அதற்கு, அரசாணை, கோட்பாடு, எனினும், இவருடைய, இன்று, கொண்டார், பல்வேறு, முழுவதற்கும், வந்த, இந்தப், என்பது, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்