சேர மன்னர் வரலாறு - முடிப்புரை
இந்த மாக்கோதை தன் மனத்துக்கினிய மங்கை ஒருத்தியை மணந்து உயிரொத்த காதலாற் பிணிப்புண்டு இனிது வாழ்ந்தான். அவள் இறந்து போகவே அவன் கொண்ட துயரத்துக்கு எல்லையில்லை. ஒருவனுக்கு மனைவியை இழப்பதால் உண்டாகும் துன்பம் மிகப் பெரிது; அதனிற் பெரியது பிறிதில்லை என அறிஞர் கூறினர். “அத்துணைப் பெரிதாயின், இங்கே என் மனைவியின் உடல் புறங்காட்டில் அடுக்கிய ஈமத்தில் எழுந்த தீயில் எரிந்து போயிற்று; அவளும் மறைந்தாள்; அதனைக் கண்டிருந்தும் என் உயிர் நீங்கவில்லை; இன்னும் யான் உயிர் வாழ்கின்றேனே! என்னே இதன் பண்பு!” என்று எண்ணினான். அந்த எண்ணம் ஒரு பாட்டாய் உருக்கொண்டது.
“யாங்குப் பெரிதாயினும் நோய் அளவு எனைத்தே! உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்; கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் போகிய விளைவிற்கு ஈமத்து ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை; இன்னும் வாழ்வல்! என் இதன் பண்பே”[13] |
என்பது அப் பாட்டு. தன் உயிரை உண்ணமாட்டாமையால், மனைவி இறந்ததால் உண்டாகிய துயரத்தை இகழ்ந்து, “யாங்குப் பெரிதாயினும் நோய் அளவு எனைத்தே” என்பது அவனது கையறவை எத்துணை மிகுத்துக் காட்டுகிறது! எனக்கும் அவட்கும் உயிர் ஒன்று என்பது உண்மையானால், அவனது உயிர் நீங்கிய போதே எனது உயிரும் நீங்க வேண்டும்; நீங்கவில்லையே, உயிர் வாழ்கின்றேனே என்பானாய், “இன்னும் வாழ்வல்” என்று இகழ்ந்தான்.
இப் பெற்றியோன் சின்னாட்கெல்லாம் உடல் நலம் குன்றக் கோட்டம்பலத்தே இருந்து இறந்து போனான், வஞ்சி நகர்க்கண் அவன் உறைந்த பகுதி மாக்கோதை என்ற பெயர் எய்திற்று. அவனைப் பள்ளிப்படுத்த இடம் மாக்கோதைப் பள்ளி என வழங்குவதாயிற்று. பின் வந்தோர் அவனைப் புத்த சமயத்தவனாக்கி அதனைப் பௌத்தப் பள்ளி என மாற்றிக் கல்லில் பொறித்து விட்டனர்.[14]
இவ்வாறே, காவிரி நாட்டிலும் பிற சமயத்தவர்க் குரிய சிராப்பள்ளி குராப்பள்ளி என்பன சைவ சமயத்துக்கு உரியவாக மாறியது காணும் வரலாற்றறி ஞர்க்கு இது புதுமையாகத் தோன்றாது.
இம் மாக்கோதை வழியில் இறுதியாக இருந்தவர் பெருமாக்கோதையாராவர். இவர் காலத்தே வஞ்சிக் களம் வஞ்சிக்குளம் எனவும், அஞ்சைக்களம் எனவும், மாக்கோதை மகோதை எனவும் மக்கள் வழக்கில் மருவத் தலைப்பட்டுவிட்டன. வஞ்சி மாநகரிடத்தே கொடுங் கோளூர் தோன்றிவிட்டது. கொடிய (வளைந்த) கடல் கொண்டவூர், கொடுங்கோளூர், முசிறித்துறைக் கடலில் மூழ்கி மறைந்தது.
இப் பெருமாக்கோதையார், சைவசமயக் குரவருள் ஒருவராகிய நம்பியாரூரர் காலத்தில் இருந்து சிவ நெறியிற் சிறந்த சேரமான் பெருமான் நாயனாராவர். இப் பெருந்தகை பாடியருளிய நூல்கள் சில சைவத் திருமுறைகளில் தொகுக்கப்பட்டிருப்பதையும் அவரது வரலாறு சேக்கிழாரால் செந்தமிழாற் பாடப்பட்டிருப் பதையும் அறியாமையால் மிக்க பிற்காலத்தே தோன்றிய கேரள மான்மியம் கேரளோற்பத்தி என்று நூல்கள் அவர் முகமதியராகி மெக்காவுக்குப் போய்விட்டார் எனப் பொய்யெழுதிவிட்டன. பிற்காலக் கல்வெட்டுகள் அவர்கள் கண்ட மகோதையை மகோதையார் பட்டினம்[15] எனச் சிறிது மாற்ற . அதன்பிறகு அது மகாதேவர் பட்டணமாக்கப்பட்டது.[16] எல்லாவற்றிற்கும் முடிவில், மகாதேவர் என்ற பெயரும் போய் மகோத்தியா பட்டினமாகி இதிகாசத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படுவதாயிற்று.
டாக்டர் சேய்சு, (Dr. Sayee), ஈவிட் (Hewitt) என்பார் கூறுவது[17]போலக் கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சால்டியர், கிரேக்கர், யவனர், எகிப்தியர், சிரியர், பாபிலோனியர், கோசியர், பாரசிகர் முதலிய மேனாட்டவரும் வடபுல ஆரியரும் வந்து மக்களிடையே கலந்து கொண்டதனால் சேர நாட்டவர்களுடைய மொழியும் நடையும் உடற்கூறும் திரிந்து, தமிழ்நாட்டின்கூறு என்ற குறிப்பே தோன்றாதவாறு பெரிதும் மாறிவிட்டன.
இதுகாறும் கூறியவற்றால் பண்டை நாளைச் சேர மன்னர்கள், அறிவு, ஆண்மை , புலமை நலம் பெற்றுப் புலவர் பாடும் புகழ் பெற்று விளங்கியதும், நாடு காவல் புரிந்து நல்லிசை நிறுவியதும் ஒருவாறு காட்டப் பட்டமை விளங்கும். அவ்வேந்தர் செயல்வகைகளில் தமிழ் மொழியால் அவர்களுக்கிருந்த பற்று மிகுதி நன்கு விளங்குகிறது. அரசுக்குரிய வெற்றி முரசு இருக்கும் கட்டிலில் பிறர் யாரும் ஏறியிருத்தல் கூடாது; அஃது அரசைக் கைப்பற்றியது போலும் செயலாகும் எனவும், அப்படிச் செய்வோர் கொலைத் தண்டத்துக்கு உரியர் எனவும் தமிழரசு கருதியிருந்தது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் மோசிகீரனார் என்ற தமிழ்ச் சான்றோர் முறைமை தெரியாமல் முரசு கட்டிலில் கிடந்து உறங்கிவிட்டார். செய்தி தெரிந்ததும் வேந்தன் சினத்துடன் அவரை நெருங்கினான். தமிழ் முழுதறிந்த சான்றோர் என்பது தெரிந்து அவருக்கு அவன் தன் கையில் விசிறி கொண்டு வீசலுற்றான். சான்றோர் விழித்தெழுத்து அவனுடைய தமிழன்பை வியந்து பாராட்டி அரசியல் அறிவுரை பல வழங்கினார் என்ற வரலாறு நாடறிந்ததொன்று. இதனால் சேர வேந்தரின் செந்தமிழ்ப் பற்று எத்துணைச் சிறந்திருந்தது என்பது தெற்றென விளங்கும். சங்கத் தொகை நூல்களில் காணப்படும் சான்றோர் நிரலில் சேர நாட்டுச் சான்றோர் பலர் இருப்பதே மேலே கூறிய தமிழ் வளத்துக்குச் சான்று பகரும்.
இவ்வேந்தர் காலத்து அரசியல், வாணிகம், சமயம், சமுதாயம் முதலிய கூறுகள் தனித் தனியே ஆராயத் தகுவன. இவ்வரசர் பெருந்தகைகளின் வரலாற்றுக் குறிப்பும், அவை வழங்கும் கருத்துகளும் நுணுகி நோக்கின, சேரநாட்டு அரசின் கீழ் வாழ்ந்த செந்தமிழ்க் குடிகளின் சிறப்பு நமக்குப் புலனாகாது மறையவில்லை . விரிவஞ்சிப் பரிபாடல் கூறும் பாட்டொன்றைக் காட்டி அமைவாம்:
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீரூர்; பூவின் இதழகத் தனைய தெருவும்; இதழகத்து அரும்பொருட்டு அனைத்தே அண்ணல் கோயில்; தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்.” |
- ↑ 13. புறம். 245
- ↑ 14. Ep. A.R. No.609 of 1912.
- ↑ 15. A.R. No. 481 of 1929-30.
- ↑ 16. W. Logan’s Malabar P.207.
- ↑ 17. The Origin and growth of religion among the Babylonians of Dr. Sayee - Hibbert Lectures for 1887.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிப்புரை - History of Chera - சேர மன்னர் வரலாறு - சான்றோர், எனவும், என்பது, உயிர், மாக்கோதை, அவன், தமிழ்