சேர மன்னர் வரலாறு - முடிப்புரை
பெருஞ்சேரலாதன்: சேரமான் பெருஞ்சேரலாதன் பெயர் சில ஏடுகளில் பெருந்தோள் ஆதன் எனவும் காணப்படுகிறது. இவன் காலத்தே சோழநாட்டில் கரிகாலன் ஆட்சிபுரிந்து வந்தான் யாது பற்றியோ இருவர்க்கும் போர் மூண்டது. பெருஞ்சேரலாதனது பெருமை சோழன் கரிகாலன் முன் சிறுமையடைந்து விட்டது. அவன் எறிந்த வேல் பெருஞ்சேரலாதனது மார்பில் பாய்ந்து உருவி முதுகிற் புண் செய்துவிட்டது. சேரலாதன் உயிர்க்கு இறுதியுண்டாகவில்லை; ஆயினும், சேரலாதன் மானத்துக்கு அது பெரியதோர் இழுக் காயிற்று. போர் நிகழ்ந்த இடமாகிய வெண்ணி என்ற ஊரிலேயே அவன் வடக்கிருத்தல் என்ற நோன்பு மேற்கொண்டு உயிர் துறந்தான். அதனை அறிந்த கழாத்தலையார்,
“தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள்வடக் கிருந்தனன், ஈங்கு நாள்போற் கழியல் ஞாயிற்றுப் பகலே [5]“ |
என்று பாடி வருந்தினர்; வெண்ணியென்னும் ஊரவரான குயத்தியார் என்ற புலவர் பெருமாட்டியார் பெரிதும் வியந்து பெண்மையால் மனங்குழைத்து,
“களவியல் யானைக் கரிகால் வளவ சென்றமர் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய்; நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே"[6] |
என்று பாடினர்.
இவ்வாறு இச் சேரமான் புறப்புண் நாணி வடக்கிருந்து உயர் துறந்த செய்தி சேர நாடு சென்று சேரவும், அந்நாட்டு மறச்சான்றோர் பலர் தாமும் அவன் போலவே உயிர் துறந்தனர் என ஆசிரியர் மாமூலனார் கூறுகின்றார்.
சேரமான் அந்தை: இவர் பெயர் எந்தை என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. அந்தை என்பது இவரது இயற்பெயர். பண்டை நாளில் அந்தை ஆந்தை என்பன மக்கட் பெயர் வகையாக இருந்துள்ளன. கோட்டையூர் நல்லந்தையார் என்றொரு சான்றோர் சங்க நூல்களில் காணப்படுகின்றார். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் இவர் பாடிய பாட்டுகள் தொகை நூல்களில் உள்ளன.
புதுமணம் செய்து கொண்டு மனை வாழ்வில் இன்புற்றிருக்கும் செல்வக் காதலரிடையே கடமை காரணமாகக் காதலன் பிரிந்து செல்ல வேண்டியவனாகிறான். அவனது குறிப்பறிந்த காதலிக்கு அவன் பிரிவு வருத்தம் செய்கிறது. “நீர்வார் கண்ணாய், நீ இவண் ஒழிய யாரே பிரிகிற்பவரே[7] ? என்று தோழி தேற்றுகிறான். பின்பு ஒருவாறு அவளைத் தேற்றிவிட்டு அவன் சென்று விடுகிறான். சென்ற விடத்தே அக் கட்டிளங்காதலன் கண்ணெதிரே, கானம் தளிர்த்துப் பூத்து இனிய காட்சியால் அவன் உள்ளத்தை ஈர்க்கின்றது. தான் பெறும் இன்பத்தைத் தன் காதலியோடு உடனிருந்து நுகர்தற் கில்லாமையை நினைந்து அவன் வருந்துகிறான். அதனை எண்ணிய இச் சேரமானார்,
“காடணி கொண்ட காண்தகு பொழுதின் நாம்பிரி புலம்பின் நலம்செலச் சாஅய் நம்பிரிவு அறியா நலனொடு சிறந்த நற்றோள் நெகிழ வருந்தினன் கொல்லோ” |
எனக் கூறி வருந்துவதாகப் பாடி நல்லிசைச் சான்றோர் நிரலை எய்திவிடுகின்றார்.
சேரமான் முடக்கிடந்த நெடுஞ்சேரலாதன்: இச் சேரமானை முடம் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்றும் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்றும் ஏடுகள் குறிக்கின்றன. இதனால் இவன் முடக்கு நோயால் வருந்தினவன் என்பது புலனாகிறது. நோயின் நீங்கினாலன்றித் தெளிவான கருத்தமைந்த அகப்பாட்டு எழாமையால், இவன் முடக்கு நோயை வென்று உயர்ந்தமை தோன்ற நிற்கும் முடக்கு இடந்த நெடுஞ்சேரலாதன் என்ற பாடம் பொருத்தமாக மேற்கொள்ளப்பட்டது.
இச் சேரலாதன் வரலாறு ஒன்றும் தெரியவில்லையாயினும், இவன் சீரிய புலமைச் செல்வன் என்பது இவன் பாடிய அகநானூற்று நெய்தற் பாட்டு ஒன்றால் இனிது தெரிகின்றது. நற்பண்புகளெல்லாம் உருவாய் அமைந்த தலைவன் தன் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த தலைவிபால் காதல் கொண்டான்; அவளுக்கும் அவன்பால் காதலுண்டாயிற்று. இவ்விருவரும் தம் உள்ளத்தே தோன்றிய காதலைக் களவு நெறியில் வளர்த்து முடிவில் கடிமணம் செய்து கொள்ளும் கடன்மை மேற்கொண்டனர். நங்கையின் காதல் முறுக்கிக் பெருகி அவனை இன்றி அமையாத செவ்வி எய்தவும், அவன் கடிமணத்தை விரைந்து நாடாது சிறிது காலம் தாழ்க்கலுற்றான். அவனைக் கடிமணத்தில் கருத்தைச் செலுத்துவிக்கக் கருதுகிறான் தோழி. அவன் காலம் தாழ்த்துவதால் நங்கையின் மேனி வாடுகிறது. அதனையும் தோழி காண்கிறாள். ஒருநாள் அவன் வரவு கண்ட தோழி அவனை நோக்கி,
"பெருமை என்பது கெடுமோ ஒருநாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண்நறுங் கானல் வந்து நும் வண்ணம் எவனோ என்றனிர் செலினே“ |
என்று வினவுகின்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிப்புரை - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன், இவன், சேரமான், என்பது, தோழி, நெடுஞ்சேரலாதன், என்றும், முடக்கு, நாணி, பெயர், சேரலாதன், புறப்புண், அந்தை