சேர மன்னர் வரலாறு - முடிப்புரை
மேலும், களவுக் காலத்தில் தன் உள்ளத்துக் காதலைப் பிறர்க்குத் தெரிவிப்பதில் ஆண்மகனுக்கு உரனும் வாய்ப்பும் உண்டு. பெண்மகளோ எனின் அதனை வெளியிடமாட்டாள். அவளுடைய மேனியும் செய்கையும் எய்தும் வேறுபாடு கண்டு உரியவரால் உய்த்துணரப்படும் இந்நிலையில், காதலித்த பெண்ணை முற்பட முயன்று வரைந்து கொள்வதற்கு ஆண்மகனுக்கு ஏற்ற தகுதியுளதென்றாலும், வரைவு பற்றிய தூண்டுதலை அவன் தன் காதலிபால் எதிர்பார்க்கிறான் அதன் வாயிலாக அவன் உள்ளத்துக் காதல் இயல்பை நன்கு அறியும் நிலைமை உண்டாகிறது; அதனை அறிவதற்கே அவன் நெஞ்சும் அவாவி நிற்கிறது. அதனால் அவன் விரைவில் வரைவதை விரும்பாதான் போலக் களவொழுக்கத்தை நீட்டிக்கின்றான். அவன் கருத்தை அறியாமையால், அது தலைமைக் குணத்தால் சிறந்த தலைமகட்கு வருத்தம் தருகிறது. அதனை அறிந்த தோழி, ஒருகால் தலைமகன் தலைமகள் இருக்கும் பெருமனையின் ஒரு சிறையில் வந்து நிற்கக் காண்கின்றாள். தான் கூறுவதைக் கேட்டு வரைவின்கண் அவன் கருத்தைச் செலுத்தக் கருதுகிறான். தலைமகளோடு உரையாடுபவள் போல அவன் கேட்கத்தக்கதோர் இடத்தே நின்று, “தோழி, நம் காதலர் நம்மை விரைந்து வரைந்து கொள்ளாமையால் நமக்கு அவருடைய நட்பு மனத்தில் அச்சத்தை எழுப்புகின்றது. முன்பெல்லாம், நம்மிடத்தில் அவருக்கிருந்த காதல் இப்பொழுது குறைந்திருக்கிறது; அவ்வாறு இருக்க, அறவுணர்வில்லாத அன்னை, அவர் நம்பால் பேரன்பால் கூடினவர்போல் நினைத்து ‘அவன் யாங்கு உளன்?’ என்று கேட்கின்றாள். இனி அவர் வருவது அறிந்து நாம் எழுவோமாயின், நமது களவை அறிகுவள்; ஆனால் அவருடைய தேரிற் கட்டிய மணியின் ஓசை நள்ளிரவில் நம் ஊரின்கண் கேட்கின்றதே, இதற்கு என் செய்வேன்” என்று சொல்லுற்றாள்[8]”.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்தான் தலைமகன். அன்னை அறிந்தமையும், காதலியும் தோழியும் மனைக் காவலால் தன்னை வந்து காணமாட்டாமையும் எண்ணி, அவள் மனையோர், அறிவார் என்று அஞ்சி நீங்குகின்றான். நீங்குபவன், வரைந்து கோடலே இனி செய்தற்குரியதென அதற்கு வேண்டிய முயற்சியில் ஈடுபடுகின்றான்; காலம் சிறிது நீளுகிறது. அவனைச் சின்னாளாய்க் காணப் பெறாமையால் காதலியாகிய தலைகள் மனநோய் மிகுந்து மேனி வாடுகின்றாள். “சில நாள்களாய் நாம் அவரைக் காணப் பெறாமையால் அவர் வரைவிற்குரிய முயற்சி மேற்கொண்டுள்ளார் என்பது மெய்யேயாகும்; நீ அதுவரை பொறுத்திருக்க வேண்டும்” எனத் தோழி சொல்லுகிறாள். இந் நிலையில் ஒருகால் அவன் வந்து தலைவியினுடைய மனையின் சிறைப்புறமாக நிற்கின்றான்: அதனைக் கண்டுகொள்கிறான் தலைமகள். அவன் செவிப்படுமாறு தன் தோழிக்கு உரைப்பவள் போல, “தொழி, நமது வருத்தமும் கைம்மிக்கு விட்டது. மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்தாயிற்று, நீ பையச் சென்று அன்னையிடம் இவளை நம் மனைமுற்றத்தில் கொண்டு கிடத்தினால் இவள் பெரிதும் நந்துவள் என்று சொல்லுக; அதனால் இந்நோயைச் செய்த தலைமகனது குறைத்து நெடிய பக்கத்திற் படிந்து வரும் காற்று என் மேனியிற் படிந்த பாலையைச் சிறிது தீண்டும்[9]” என்று சொல்லாடுகின்றாள். இதனால் தலைமகளது காதல் மிகுதியைத் தலைமகன் செவ்வையாக உணர்ந்து ஊக்கம் மிகுகின்றான்.
இவ் வண்ணம் நாள்கள் சில செல்ல, ஒரு நாள் தலைமகன் தானே தலைவிக்குத் தான் கடிதில் வரைய இருப்பதாகவும் அதுகாறும் அவள் ஆற்றியிருக்க பேண்டுமெனவும் நேரிற் கூறல் வேண்டி வருகின்றான். அவனைத் தோழி எதிர்ப்பட்டு, கருத்தறிந்து கொண்டு, “அன்ப,
“அரிய பெரிய கேண்மை ; நும்போல் சால்பு எதிர் கொண்ட செம்மை யோரும் தேறா நெஞ்சம் கையறுபு வாட நீடின்று விரும்பா ராயின் வாழதல்மற்று எவனோ? தேய்கமா தெளிவே”[10] |
என்று சொல்லி அவன் கூற்றை மறுக்கின்றான்.
இதன்கண் மற்றொரு செய்தியையும் அவள் கூறாமல் கூறுகின்றாள். “நின் நாட்டுக் கழிகளில் ஆம்பல்கள் நிறையவுள்ளன. கானலில் காய்ந்த கண்டல்களின் பசுங்காய் கழன்று கழியில் வீழ்கின்றன; அதனால் மலரும் பருவத்தில் இல்லாத ஆம்பற் போதுகள் காய்களால் மோதுண்டு வாய்விரிகின்றன காண்” என்பாளாய்,
“கானற் கண்டல் கழன்றுகு பைங்காய் நீனிற இருங்கழி உட்பட வீழ்ந்தென உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல் சிறுவெண் காக்கை ஆவித் தன்ன வெளிய விரியும் துறைவ” |
என்று எடுத்துரைக்கின்றாள். “அயலார் அலர் தூற்றுவர் என்ற அச்சத்தால், இதுவரை நாணம் முதலிய பண்புகளால் வாய் திறவாதிருந்த இவள் இப்போது வாய்விட்டே புலம்பத் தொடங்கிவிட்டாள்” என்ற கருத்து இதன்கண் உள்ஸ்ரீத்தப்பட்டிருக்கிறது.
பிறிதொருகால், தோழி, அவனைக் கண்டு, தலைவியின் மேனி வேறுபட்டால் ஊரில் அலர் தோன்றிவிட்டது; இனி இது என்னாய் முடியுமோ என்பாளாயினாள். அப்போது அவள், தலைமகளை நோக்கி உரைக்கலுற்று,
“முடக்கால் இறவின் முடங்குபறப் பெருங்கிளை புணரி இருதிரை தரூஉம் துறைவன் புணரிய இருந்த ஞான்றும் இன்னது மன்னோ நன்னுதல் கவினே”[11] |
என்று சொல்லுகின்றாள். “நுதல்கவின் இன்னது” என்றது, நினது நுதலழகு பசலையுற்றுப் பிறர் அலர் தூற்றுதற்கு ஏதுவாயிற்று என்பதாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிப்புரை - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன், அவள், தலைமகன், தோழி, காதல், அலர், அவர், வந்து, அதனால், வரைந்து