சேர மன்னர் வரலாறு - முடிப்புரை
தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து என்னும் நூலைத் துணையாகக் கொண்டு இதுவரையும் பண்டை நாளைச் சேர மன்னர்களின் வரலாற்றை ஒருவாறு நிரல்பட வைத்துக் கண்டு வந்தோம். இங்கே நாம் கண்டவர்களின் வேறாக ஏனைத் தொகை நூல்களுள் சிலர் காணப்படுகின்றனர். அவர்களில் குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெருஞ்சேரலாதன், சேரமான் அந்தை, முடக்கிடந்த சேரலாதன், இளங்குட்டுவன், நம்பி குட்டுவன், மருதம் பாடிய இளங்கடுங்கோ , கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்போர் சிறந்து விளங்குகின்றனர்.
குடக்கோ நெடுஞ்சேரலாதன் காலத்தில் சோழ நாட்டில் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி ஆட்சி புரிந்தான். இருவர்க்கும் எக் காரணத்தாலோ பகையுண்டாகவே இருவரும் போர் செய்தனர். போர் முடிவில் நெடுஞ்சேரலாதன் இறந்தொழிந்தான். போர் செய்த இடமும் போர்ப்புறம் என அவர்கட்குப் பின் பெயரெய்துவதாயிற்று. அதனை இப்போது கோவிலடி என்பர்; கல்வெட்டுகள்[1], திருப்பேர்த் திருப்புறம் என வழங்குகின்றன. இப்போரில் வென்றோரும் தோற்றோரும் இல்லாதவாறு சேரலாதனும் பெருநற்கிள்ளியும் ஒருவர் பின் ஒருவராய் உயிர் துறந்தனர். அப்பொழுது அவர்களைக் காண்டற்குக் கழாத்தலையார் என்னும் சான்றோர் சென்றார். நெடுஞ்சேரலாதன் மாத்திரம் குற்றுயிராய்க் கிடந்தான். அவன் கழாத்தலையாரையும் அவருடன் போந்த பரிசிலர் சுற்றத்தையும் கண்டு கண்ணீர் சொரிந்து, தன் கழுத்திற் கிடந்த ஆரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பால் உணர்த்தினான். உடனிருந்த சான்றோர் பலரும் அவனது வள்ளன்மையை நினைந்து வியந்து வருந்தினர். “நின் வெற்றி கண்டு பாடிக் களிறு முதலிய பரிசில் பெற வந்தோம். களிறுகள் கணை பட்டுத் தொலைத்தனர்; தேர்கள் பீடழிந்து நிலஞ் சேர்ந்தன; குதிரைகள் குருதிப்புனலில் கூர்த்தொழிந்தன; ஆகவே யாம் பாடி வந்தது. நின் தோளிடைக் கிடந்த ஆரம் பெறற்கே போலும்[2]” என்று பாடிப் பரிபுலம்பினர். சேரலாதனும் சிறிது போதில் உயிர் துறந்தான். அதனைக் கண்ட கழாத்தலையார் மனம் கரைந்து,
“அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாம்மாய்ந்தனரே; குடை துளங்கினவே;” என்று சொல்லி, இருவரும் ஒருங்கே இறந்ததைச் சுட்டி , “பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞலம் இடங்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக் களம்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர் என்றும் உடன்வீழ்ந் தன்றால் அமரே” |
அவ் வேந்தருடைய மனைவியரும் பின்னே உயிருடன் இருந்து கைம்பெண்களாய் வாழ்வதை
“பெண்டிரும்,
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே[3]” |
என்றும் பாடி வருந்தியுள்ளார்.
பரணர் என்னும் சான்றோர், அவர்களுடைய வீழ்ச்சி கண்டு மன நோய் மிகுந்து, யானைப்படை; குதிரைப்படை, காலாட்படை யாவும் வீழ்ந்தது கூறி, அரசர் இருவரும் வீழ்ந்த நிலையை,
“சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென, வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர்” |
என்று எடுத்துரைத்தார். அப்போது அவர்களை இழந்த நாடுகளின் நலத்தை எண்ணி, அவர்களுடைய நல்லரசால் நல்வாழ்வு பெற்று இனிதிருந்த நாடு என்னாகுமோ? என ஏங்கி,
"இனியே என்னா வதுகொல் தானே கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித் தண்புனல் பாயும் யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே”[4] |
எனக் கையறுகின்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிப்புரை - History of Chera - சேர மன்னர் வரலாறு - கண்டு, நெடுஞ்சேரலாதன், சான்றோர், போர், இருவரும், என்னும்