சேர மன்னர் வரலாறு - முடிப்புரை
பெரியோருடைய பெருமை என்பது, பிறர்நலம் பாராட்டலும் பிறர்க்கு உளதாகும் குறையறிந்து தாங்கலுமாகும். நாடோறும் இங்கே வந்து இவளது நலம் பாராட்டுவதாகிய பெருமைப் பகுதியை மாத்திரம் மேற்கொண்டு செய்கின்றாய். இந் நங்கைக்கு உண்டாகிய வண்ணக் கேட்டினைக் கேட்டறிதல் பெருமையன்று எனக் கருதகின்றவர் போல வாளாது போகின்றாய்; ஒரு நாளைக்கேனும் யாங்கள் மனம் தெளியக் கேட்பீராயின், எனக்கு அது மிக்க ஆறுதலையாகும்; நும் பெருமைக்கும் சிறப்பாம் என்றெல்லாம் சொல்லக் கருதிய தோழி, சுருங்கிய சொற்களால் பெருமை யென்பது கெடுமோ?” என்று சொல்லுகிறாள். இதனைக் கேட்டதும் அந்தக் காதலன், “ஏன் இவள் இங்ஙனம் இன்று பேசுகிறாள் என நினைக்கின்றான். தோழி இதனைச் சொல்லுதற்கு முன்பு அவள் உரைத்தவை அவன் நினைவுக்கு வருகின்றன. பெருங் கடலுள் கிடக்கின்ற மீன்களை அவ்விடத்தினின்றும் தமது வலையால் நீக்கிக் கரைக்குக் கொணர்ந்து இரப்பவர்க்கும் தம் இனத்தவர்க்கும் வழங்கி, மீனாகிய உயிர்களை வருந்தினோமே என்ற உணர்ச்சியின்றி மீன் வேட்டுவர் மணற்குன்றிலே உறங்கும் துறைவனே என்ற கருத்துப்பட,
“நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக் கடல்பாடு அழிய இனமீன் முகந்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி... பெருங்களம் தொகுந்த உழவர் போல இரந்தோர் வறுங்கலம் நிறைய வீசிப் பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணல் துஞ்சும் துறைவ, பெருமை என்பது கெடுமோ?” |
என்றான். இதனை நினைத்தபோது, பெருங்குடியிற் பிறந்திருக்கின்ற இவளை நின் காதல் வலையால் நின் வயமாக நீக்கிக், கடிமணம் புரிந்து கொள்ளக் காலம் தாழ்த்து வருத்தி இவள் மேனி வேறுபடுவது கண்டு பிறரெல்லாம் பலப்பல குழும்படி அலராக்கிவிட்டுத் துயரமின்றி நின் மலையின்கண் நீ உறங்குகின்றாயே என்ற கருத்து உள்ஸ்ரீத்தப்பட்டது தெரிகிறது. பின்னர் அவன் அவளை விரைவில் வரைந்து கொள்கிறான். இங்ஙனம் சிந்திக்குமிடத்துச் சிறந்து செந்தேன் முந்திப் பொழியும் முழுநலம் அமைந்த சொற்களைத் தொடுத்துப் பாடும் இச் சேரமான் பாடல் உள்ளுதோறும் உள்ளம் இனிக்கும் உயர்வமைந்ததாகும்.
சேரமான் இளங்குட்டுவன்: இச் சேரமானுடைய பெயரை நோக்கும் போதே இவன் குட்டநாட்டு அரசர் குடிகள் ஒன்றில் தோன்றியவன் என்பதை அது காட்டிவிடுகிறது. இவனைப் பற்றி அரசியல் குறிப்பொன்றும் இதுகாறும் கிடைக்கவில்லை. இளங்கடுங்கோ, இளஞ்சேரல், இரும்பொறையென்றாற் போலச் சேரமன்னர் நிரலுள் இவன் இளங்குட்டுவன் எனப்படுகின்றான் தான் தோன்றிய குட்டுவர் குடியில் இவன் இளைய னாதல் பற்றி இவனை இளங்குட்டுவன் என்றனர். இவன் பாடிய பாலைப் பாட்டு ஒன்று அகநானூற்றில் உளது. வேறே இவன் பாடிய பாட்டுகளும் இல்லை.
காதலொழுக்கம் பூண்ட, பண்புடைய இளையர் இருவர் இடையே ஒருவரை யொருவர் இன்றியமையாத காதலன்பு மிகுந்தது. காதலியை மணந்து கோடற்குரிய முயற்சியில் காதலன் ஈடுபட்டிருக்கையில், வேற்றவர் மணப் பேச்சும் பெற்றோர் மகள் மறுப்பர் என்ற குறிப்பும் முற்பட்டெழுந்தன. காதல் மகளின் கற்பறம் அறியாத பெற்றோர் பால் இருந்து அறம் கெடுதலை விரும்பாத அவள், பெற்றோர் செயலைத் தன் காதலனுக்கு உணர்த்துகிறான். கற்பறம் காத்தற்கண் மணமாகு முன்னே காதலனுடன் தனிமையில் உடன்போதலைக் கற்புடைய பெண்ணுக்கு அறமாம் என்பது தமிழ் நூலோர் முடிபு. அதனால் ஒருநாள் இரவில் யாவர் கண்ணுக்கும் தெரியாமல் இருவரும் கூடி அவனுடைய ஊர்க்குச் சென்று அங்குள்ள சான்றோர் அறிய மணம் முடித்துக் கொள்ளுகின்றனர்.
அந் நிலையில் மகட்போக்கிய தாய் செவிலியிடம் மகளியல்பு சொல்லி வருந்துகின்ற துறை அமைந்தது இந்த இளங்குட்டுவனாரது பாட்டு. தன் மகள் போகிய காட்டு வழியின் கடுமையும், அருமையும், மகளினுடைய மென்மையும் தாய் சொல்வதாக இந்தச் சேரமான் வகுத்துரைக்கும் இப் பாட்டு நம்மை இன்புறுத்துகிறது. மகளின் இளமையையும் மென்மையையும் நினைத்த தாய்,
“நோகோ யானே; நோக்கும் உள்ளம்; அந்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப் பந்துவழிப் படர்குவ ளாயினும் நொந்து, தனி வெம்பும்மன்; அளியள் தானே” |
என்று சொல்லிக் கண்ணீர் வடிக்கிறாள். இத்துணை மென்மையுடையவள் “உம்மைப் பிரியும் மன வன்மையை எவ்வாறு பெற்றாள்? தன் பிரிவால் நீவிர் வருந்தும் வருத்தத்தை அவள் எப்படி நினையாளாயினாள்? என்பன போன்ற வினாக்கள் கேட்போர் உள்ளத்தில் எழும் அன்றோ! அவற்றிற்கு விடை கூறுவாள் போல, அவள் மிக்க மென்மை யுடைய வளாகவே இதுவரை இருந்தாள்; அந்த வன்கணாளனால் (காதலனால்) இப்போது இவ்வளவு வன்மையும் ஊட்டப் பெற்று எமது துன்பத்தை நினையாமல் அக் காளையின் பின் செல்வாளாயினாள்” என்று சொல்லுவாளாய்,
“நனிவெம்பும்மன் அளியள் தானே; இனியே வன்கணாளன் மார்புற வளைஇ இன்சொல் பிணிப்ப நம்பி, நங்கண் உறுதரு விழுமம் உள்ளாள்” |
என்று தாய் மொழிகின்றாள். காதலனாகிய வன் கணாளன் தன் மகட்கு வன்மை ஊட்டிய திறத்தை, “மார்புற வளைஇ, இன்சொல் பிணிப்ப நம்பி” என்பதனால் மிகவும் அழகுறுச் செப்புகின்றாள். மகளை நினைக்குந்தோறும் தன் மனத்தெழுந்து மிகும் துயரத்தை “நங்கண் உறுதரும் விழுமம்” என்று செல்வது மிக்க நயம் வாய்ந்தது. உறுதரும் என்பது உண்டாகி மிகும் என்று பொருள்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிப்புரை - History of Chera - சேர மன்னர் வரலாறு - இவன், அவள், தாய், என்பது, பாட்டு, பெற்றோர், சேரமான், மிக்க, நின், பெருமை, இளங்குட்டுவன்