வாயு புராணம் - பகுதி 21 - பதினெண் புராணங்கள்
சதநிகாவும், சகஸ்ரநிகாவும்
மன்னன் சதநிகா தினந்தோறும் பிராமணர்களுக்கு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்து நூற்றுக்கணக்கான பொற்காசுகளை தானம் செய்தான். இறுதியில் அவன் இறந்து விடவே மகன் சகஸ்ரநிகா பட்டத்துக்கு வந்தான். அவன் தகப்பனைப் போல தானம் செய்வதை நிறுத்தி விட்டான். வருமானத்தை இழந்த பிராமணர்கள் மன்னனிடம் வந்து உங்கள் தந்தை பிராமணர் களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைத் தேடிக் கொண்டார். நீ ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று கேட்டனர். சகஸ்ரநிகா அவர்களைப் பார்த்து தானத்தைப் பெற்றுக் கொண்டு என் தந்தைக்குப் புண்ணியம் தேடித் தந்தவர்களே. இப்பொழுது என் தந்தை எங்கிருக்கிறார் என்று சொல்ல முடியுமா என்று கேட்டான். அது முடியாது என்று அறிந்த பிராமணர்கள் எப்படியாவது அரசனைத் திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக, பார்க்கவ முனிவரைத் தேடிச் சென்று இறந்த அரசன் எங்கிருக்கிறார் என்பதை அவர் தவ வலிமையால் அறிந்து சொல்லுமாறு கேட்டனர். பார்க்கவ முனிவர் சூரியனின் உதவியை நாடினார். சூரியன் அவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான். வழியில் ஒரு பிராமணன் பார்க்கவரைத் தடை செய்தான். நான் இறப்பதற்கு முன்னால் நீர் எனக்கு ஒரு பொற்காசு தரவேண்டியுள்ளது. அதை இப்பொழுது கொடுத்தால் ஒழிய மேலே போக விடமாட்டேன் என்றான். பார்க்கவரிடம் காசு இல்லாததனால் அவர் புண்ணியத்தைச் சிறிது பெற்றுக் கொண்டு மேலே அனுப்பினான். கடைசியாக நரகத்தின் மிக ஆழமான இடத்தில் இறந்து போன அரசன் பெருந் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். ஆச்சரியப்பட்ட முனிவர் அரசனைப் பார்த்து, 'நீ பிராமணர்களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைச் சேகரித்தாய் என்றல்லவா கேள்விப் பட்டிருந்தேன். உனக்கு ஏன் இந்த கதி? என்று கேட்டார். அரசன், 'உழைக்கும் ஏழை மக்களிடம் வரி என்ற பெயரில் அநியாயமாகப் பணத்தை சம்பாதித்து, புண்ணியம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் பிராமணர்களுக்குக் கொடுத்தேன். எவ்விதப் புண்ணியமும் எனக்கு வரவில்லை. ஆனால் இந்த வரியைக் கொடுப்பதற்குப் பாடுபட்ட அந்த ஏழை மக்களின் கண்ணீர் பெரிய பாவ மூட்டையாக என்னை வந்து அடைந்தது. அதனுடைய பயனை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்' என்று என் மகனிடம் சொல்லுங்கள் என்றான்.
அதைக்கேட்ட பார்க்கவ முனிவர், நேரே சகஸ்ரநிகாவிடம் வந்து நடந்ததைக் கூறினார். மன்னன் உழைப்பவர்களிடம் கடுமையான வரி வசூலிப்பதையும், பிராமணர்களுக்கு தானம் கொடுப்பதையும் உடனே நிறுத்தி விட்டான். தானும் உழைக்க ஆரம்பித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 21 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தானம், இப்பொழுது, வந்து, பார்க்கவ, முனிவர், அரசன், புண்ணியம், பிராமணர்களுக்கு, செய்து, செய்தான், அவன், புராணப்