வாயு புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் பார்வதி சிவனைப் பார்த்து உங்கள் நெற்றியில் இருக்கும் சந்திரன் எப்படி அங்கே வந்தான் என்று எனக்குச் சொல்ல முடியுமா என்று வினவினாள். உடனே சிவன் அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
பார்வதி முற்பிறப்பில் சதி என்ற பெயருடன் தட்சனின் மகளாகப் பிறந்திருந்தார். தட்சன் யாகத்திற்குச் சென்ற சதி அவனால் அவமானப்படுத்தப்பட்டு அங்கேயே உயிரை நீத்தார். சதியை இழந்த சிவன் இங்குமங்குமாக அலைந்தார். அங்கு கடுமையான தவம் மேற்கொண்டார். அவருடைய கடுமையான தவத்தினால் மரம், செடி, கொடிகள் ஆகிய அனைத்தும் எரிந்து சாம்பலாயின. மலைகளும் இதில் அடங்கும். தேவர்கள் எல்லாம் கூடி பிரம்மனிடம் இந்நிலையை எடுத்துக் கூறினர். பிரம்மன் சந்திரனை அமுத கலசத்திற்குள் போட்டு, அந்தக் கலசத்தையும், வேறொரு கலசத்தில் விஷத்தையும் நிரப்பிக் கொண்டு சிவனிடம் சென்றார்கள். சிவனிடம் இந்த இரண்டு கலசங்களிலும் இன்னதென்று சொல்லாமல் இந்த இரண்டு கலசங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றார். சிவன் முதலில் அமுத கலசத்தை எடுத்துக் குடித்தார். அதனுள் இருந்த சந்திரன் திடீரென்று சிவனுடைய நெற்றியில் ஒட்டிக் கொண்டு அவரைக் குளிர்ச்சியடையச் செய்தான். விஷக் கலசத்தில் ஒரு விரலை நனைத்துச் சிவன் தொண்டையில் தொட்டார். உடனே அந்த இடம் நீல நிறமாக மாறி விட்டது. அதிலிருந்து சிவனுக்கு நீலகண்டன் என்று பெயர் வந்தது. நெற்றியில் ஒட்டிய சந்திரன் ஒர் அணியைப் போல இருப்பதால் சிவனுக்குச் சந்திரசேகரன் என்ற பெயர் ஏற்பட்டது.
சிவன் அணியும் விபூதி
ஒரு காலத்தில் பிருகுவின் பரம்பரையில் வந்த பிராமணர் மிகக் கடுமையான ஒரு தவத்தை மேற்கொண்டார். அவர் தவ வலிமையால் சுற்றிலும் உஷ்ணம் பரவியது. அதன்மேல் மேகம் மழையைப் பொழிந்தது. இந்த உஷ்ணமோ, நீரின் குளிர்ச்சியோ அந்த பிராமணனை ஒன்றும் செய்யவில்லை. தவம் தொடர்ந்தது. கொடிய விலங்குகளில் இருந்து மான் வரை அவரிடம் அச்சமின்றி அன்போடு பழகின. பசி எடுக்கும்போது பிராமணன் அந்த விலங்குகளைப் பார்த்து, "சாப்பிட ஏதாவது கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, உடனே அந்த மிருகங்கள் அவனுக்குத் தேவையான மாமிசத் தைக் கொண்டு வந்து கொடுத்தன. தவம் மேலும் தொடரவே, மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டுப் பச்சை இலைகளைச் சாப்பிடத் தொடங்கினார். பச்சை இலைகளுக்கு வடமொழியில் ‘பர்னா’ என்று பெயர். ஆதலால், அதைத் தின்னும் பிராமணர் ‘பிரன்னதா’ என்று அழைக்கப்பட்டார். மேலும் தவம் தொடர்ந்தது. ஒரு நாள் பிராமணத் தவசி புல்லறுக்கும் கத்தியைக் கொண்டு புற்களை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்தக் கத்தி அவர் நடுவிரலை வெட்டி விட்டது. என்ன அதிசயம்? இரத்தம் வருவதற்குப் பதிலாக வெட்டுண்ட விரலில் இருந்து செடி, மரம் முதலிய வற்றிற்கு உள்ளே இருக்கும் தாவர உயிர்ச்சாறு போன்ற ஒரு திரவம் காயத்தின் வழியே கசியத் துவங்கியது. பிராமணர் தான் மிகப் பெரிய நிலையை அடையத் துவங்கி விட்டதாகவும், இரத்தத்திற்குப் பதிலாக தாவர உயிர்ச்சாறு தன் உடம்பில் ஒடுகிறது என்றும் குதிக்கத் தொடங்கிவிட்டார். இதைப் பார்த்த சிவன் இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கருதி பிராமணன் வடிவம் கொண்டு இந்தப் பார்ப்பனன் எதிரே வந்தார். இவனைப் பார்த்து, “என்ன ஆனந்தம் உனக்கு? ஏன் இப்படித் துள்ளித் துள்ளிக் குதிக்கிறாய்?" என்று கேட்டார். பிராமணத் தவசி நடந்தவற்றைக் கூறித் தவத்தின் உச்ச கட்டத்தை அடைந்துவிட்டேன். அதனால்தான் குதிக்கிறேன்" என்றான். இதைக்கேட்ட பிராமண சிவன், "பூ! இவ்வளவு தானா? இன்னும் உன்னுடைய உடம்பில் நீர்ச்சத்துதானே இருக்கிறது. என்னுடைய உடம்பைப் பார்!’ என்று கூறிவிட்டுத் தன்னுடைய விரலை வெட்டிக் கொண்டார். அதிலிருந்து விபூதி பொலபொலவெனக் கொட்டியது. பிராமணன் அகந்தை அடங்கியது. அதிலிருந்து சிவன் மேனி எல்லாம் விபூதி விளங்கத் தொடங்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 16 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், கொண்டு, அந்த, தவம், விபூதி, பெயர், பிராமணர், பிராமணன், ", அதிலிருந்து, நெற்றியில், அந்தக், சொல்ல, கடுமையான, பார்த்து, சந்திரன், உடனே