வாயு புராணம் - பகுதி 19 - பதினெண் புராணங்கள்
தவத்தால் கண்பார்வை பெற்றுவிட்ட அந்தகன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். அனைவரையும் துன்புறுத்தினான். சிலகாலம் கழித்து மந்தார மலைக்குத் தனது மூன்று சேனாதிபதிகளுடன் சென்றான். அந்த மலை மிக அழகாக இருந்ததால் அங்கேயே தங்கிவிட விரும்பினான். அவனுடைய சேனாதிபதிகள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து வரும்பொழுது ஒரு குகையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தனர். அந்த முனிவன் புலித் தோலை இடையில் கட்டி, மண்டை ஒடுகளை மாலையாக அணிந்திருந்தான். அவனுடைய சடையில் சந்திரன் இருந்தான். அவன் பக்கத்தில் அழகான பெண் ஒருத்தி வீற்றிருந்தாள். இதைக் கண்ட சேனாதிபதிகள் யோகத்தில் இருந்த முனிவனை எழுப்பி, "துறவியாகிய உனக்கு இவ்வளவு அழகான பெண் எதற்காக? எங்களுடைய அரசனுக்கு இவளைக் கொடுத்துவிடு” என்றனர். முனிவர் வேடத்தில் இருந்த சிவன் "அப்படியானால் உங்கள் அரசனே இங்கு வந்து அவளைப் பார்த்துவிட்டு அழைத்துச் செல்லட்டுமே” என்றார். முனிவர் வேடத்தில் இருந்தவர் யார் என்பதையும், அழகிய பெண் யாரென்பதையும் அறியாத அவர்கள் ஒடிச் சென்று முனிவன் சொன்னதை அந்தகனிடம் சொல்லவும், மிக்க ஆசையோடு புறப்பட்டு வந்தான் அந்தகன். வயதில் முதிர்ந்தவளை நான் விரும்பினால் எனக்குச் சாவு வரட்டும் என்று பிரம்மனிடம் கேட்டுக் கொண்டது நடைபெறும் காலம் வந்து விட்டது. அனைத்திற்கும் மூத்தவளாகிய பார்வதிதேவியை விரும்பியதால் முனிவர் வேடத்தில் இருந்த சிவன் எதிரே வந்து நின்றார். அவனுக்குப் பக்கபலமாகப் பல அசுரர்களும் அவர்கள் குருவாகிய சுக்ராச்சாரியாரும் வந்தனர். முனிவன் பக்கமாக நந்தி, விஷ்ணு ஆகியோர் போருக்குத் தயாரா னார்கள். நந்தியே பல அசுரர்களை அழித்தார். அந்தகனின் சேனாதிபதிகளுள் ஒருவனாகிய விகாசா என்பவன் விஷ்ணு உட்பட அனைவரையும் விழுங்கிவிட்டான். இந்நிலையில் சிவன் காளை வடிவம் கொண்டு வந்து விகாசாவின் வயிற்றைக் கிழித்து அனைவரையும் விடுவித்தார். அசுரர் படைகளைக் கொல்லக் கொல்ல, இறந்தவர்களை எழுப்பும் மந்திரங்களைக் கற்ற சுக்ராச்சாரியார் அத்துணை அசுரர்களையும் மறுபடியும் உயிர்ப்பித்தார். இதைக் கண்ட சிவன் சுக்ராச்சாரியாரை விழுங்கியவுடன் இறந்தவர் உயிர்பெறும் சூழ்நிலை மாறிவிட்டது. இந்திரனுடைய பாணங்கள், விஷ்ணுவின் கதாயுதம் ஆகியவை இவனை ஒன்றும் செய்யாமல் போகவே, சிவன் படைகளை அந்தகன் மீது ஏவினார். அவனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் கீழே விழுந்தவுடன் ஒவ்வொன்றும் ஒரு அந்தகனாக உருவாயிற்று. அப்பொழுது சிவன் காளியைப் படைத்து அந்தகாசுரனின் இரத்தம் ஒரு சொட்டுக் கூடக் கீழே விழாதபடி குடிக்கச் செய்தான். இந்த நிலையில் சிவன் தன்னுடைய திரிசூலத்தை அந்தகாசுரன் மேல் செலுத்தி அவனைக் கொன்றார். போருக்குப்பின் சுக்ராச்சாரியாரைத் தன் வயிற்றில் இருந்து எடுத்துச் சிவன் வெளியே விட்டு விட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 19 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், அந்தகன், முனிவர், சாவு, வந்து, பெண், வேண்டும், வேடத்தில், உனக்கு, பிரம்மன், இருந்த, வரம், அனைவரையும், அந்த, எனக்குச், முனிவன்