வாயு புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
பார்வதி நீல நிறத்தோடு இருந்ததால் சிவன் அவளைக் காளி என்றே அழைத்தார். பார்வதிக்கு இது பிடிக்கவில்லை. ஏன் நான் கறுப்பாக இருக்கிறேன் என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். என்னை விரும்புவது போல் பாசாங்கு செய்து ஏன் என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்? இந்த நிறம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் பிரம்மனை நோக்கித் தவம் செய்து இந்த நிறத்தை மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு பிரம்மனை நோக்கித் தவம் செய்தாள். பிரம்மன் எதிர்ப்பட்டு, “என்ன வேண்டும்?” என்று கேட்டபொழுது, இந்த நீல (கறுப்பு) நிறத்தை ஒழித்துவிட்டு நான் கெளரியாக வேண்டும் என்று கூறினார். பிரம்மன் வருவதற்கு முன்பே பார்வதியின் எதிரே ஒரு கொடிய புலி அவளை உண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் எதிரே படுத்திருந்தது. தன்னிடம் அன்பு பாராட்டுகிறது என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்த பார்வதி புலியின் உடம்பினுள் பிரவேசித்தாள். அவளுடைய சக்தி உள்ளே புகுந்ததால் புலி மிகச் சாதுவான பிராணியாக மாறி அவளுடனேயே இருந்து விட்டது. பிரம்மன் பார்வதியைப் பார்த்து, “நீ விரும்பியதை அடைவாய்” என்று கூறியவுடன் பார்வதியின் மேனியிலிருந்து கறுப்பு நிறம் முழுவதும் கீழே உதிர்ந்து விட்டது. அக் கறுப்பை எல்லாம் ஒன்றாகத் திரட்டி பிரம்மன் எடுத்துக் கொண்டான். அவன் வேண்டியதும் அதுதான். காரணம் வருமாறு: இரண்டு அரக்கர்கள்- கம்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, பிரம்மன் எதிர்ப்பட்ட வுடன் எந்த ஆண் மகனும் தங்களைக் கொல்ல முடியாத வரத்தைப் பெற்றனர். அதன்பிறகு அவர்கள் செய்த கொடுமைக்கு அளவே இல்லை. பிரம்மன் சிவபெருமானிடம் சென்று, நடந்தவற்றைக் கூறிப் பார்வதியின் ஆற்றலின் ஒரு பகுதியைப் பெண்ணாக்கித் தந்தால் சும்ப, நிசும்பர்களை அழிக்க முடியும் என்று வேண்டிக் கொண்டார். பிரம்மனின் இவ் வேண்டுகோளுக்கு இணங்கவே பார்வதியைத் தவம் செய்யுமாறு அனுப்பினார் சிவன். கீழே விழுந்த கறுப்பை யெல்லாம் ஒன்றாகத் திரட்டி கெளசிகி என்ற பெயருடன், பிரம்மனிடம் ஒப்படைத்தார். பார்வதியின் அம்சமாக அவள் இருந்தாள். அவளைக் கொண்டே சும்ப, நிசும்பர்களை அழிக்கச் செய்தான் பிரம்மன். கெளரியாக மாறியவள் புலியையும் அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றாள். அப்புலியை ஒர் ஆணாக மாற்றி நந்திக்குத் துணையாக சோமநந்தி என்ற பெயருடன் இருக்கச் செய்தார் சிவன்.
உபமன்யுவின் கதை
முன்னொரு காலத்தில் வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர்) என்ற முனிவருக்கு உபமன்யு என்ற ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்த பொழுது தனக்குப் பால் வேண்டும் என்று அழுதது. உபமன்யுவின் தாய் பால் போன்ற ஒரு பொருளைக் கொடுத்தாள். குழந்தை அதைச் சாப்பிட்டுப் பார்த்துத் தந்தையிடம் சென்று இது பாலில்லை. பாலின் ருசி இதிலில்லை என்று அடம் பிடித்தது. அப்போது உபமன்யுவின் தாய் 'நானோ வறுமையில் வாடுகிறேன். பாலுக்கு எங்கே போவது? நான் அரிசிக் கஞ்சிதான் உனக்குத் தந்தேன்' என்றார். உடமன்யு சிவனை நோக்கித் தவம் செய்து பாலைப் பெறப் போகிறேன் என்றார். அவன் தாய் சிவனைக் குறித்துத் தவம் செய்ய ஒரு மந்திரத்தையும், ஆபத்து நேர்ந்தால் காத்துக் கொள்ள அகோராஸ்திர மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்து அனுப்பினாள். இமயமலையில் ஒரு பகுதிக்குள் சென்று உபமன்யு தவத்தைத் தொடங்கினான். அரக்கர்களும், அசுரர்களும் எவ்வளவு முயன்றும் அவன் தவத்தைக் கலைக்க முடியவில்லை. இறுதியில் அவனைச் சோதனை செய்வதற்காகச் சிவன், இந்திரன் வடிவம் எடுத்துக் கொண்டு அவன் முன் தோன்றினார். உடமன்யு கண்விழித்துப் பார்த்து, தேவர்கள் தலைவனே! என்னை நாடி வந்ததில் பெருமகிழ்ச்சி என்றான். தேவேந்திரனாக வந்தவர், உனக்கு என்ன வேண்டும்? யாரைக் குறித்து நீ கடுந்தவம் செய்கிறாய்?" என்று கேட்டார். உடமன்யு சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்கிறேன் என்றான். அதைக்கேட்ட இந்திரன், சிவபிரானா, அவன் ஒன்றுக்கும் உபயோகமில்லாத பயித்தியம், அவனைக் குறித்து ஏன் தவம் செய்ய வேண்டும்? என்றார். அவர் சிவன் என்று அறியாத உடமன்யு மிக்க கொடியதாகிய அகோராஸ்திர மந்திரத்தைப் பயன்படுத்திவிட்டான். அது சிவனுடைய அஸ்திரம் ஆதலால் உடன் வந்த நந்தி அதை ஏற்றுக் கொண்டார். சிவன் தன் வடிவத்தைக் காட்டிப் பல மந்திரங் களையும் உபதேசித்துப் பாலுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் வரத்தையும் தந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 17 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தவம், பிரம்மன், சிவன், வேண்டும், அவன், உடமன்யு, நான், பார்வதியின், செய்து, தாய், என்றார், குழந்தை, சென்று, நோக்கித், பிரம்மனை, உபமன்யுவின்