வாயு புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் ருருத்ரகா என்ற வேடன் காட்டில் வாழ்ந்து வந்தான். கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும், மிருகங்களை வேட்டையாடுவதும் அவன் தொழிலாகும். அவனுக்கு யாரிடமும் கருணை காட்டிப் பழக்கமும் இல்லை. ஒருமுறை அவனுடைய குடும்பத்தினர் மிகவும் பசியால் வருந்தியபொழுது அவனிடம் "எதையாவது வேட்டையாடிக் கொண்டு வா” என்றனர். வேடன் வேட்டையாடப் புறப்பட்டான். எந்த விலங்கும் கிடைக்காமை யால் நீர் நிறைந்த குட்டையின் பக்கத்தில் நின்ற அவன் எப்படியும் ஏதாவது ஒரு மிருகம் தண்ணிர் குடிக்க வரும், பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, ஒரு குடுவையில் தண்ணிர் நிரப்பிக் கொண்டு பக்கத்தில் உள்ள மரத்தில் அமர்ந்து கொண்டான். அது ஒரு வில்வ மரம். எனவே அதனடியில் ஒரு லிங்கம் இருப்பதே அவனுக்குத் தெரியாது. அன்று சிவராத்திரி என்பதும் தெரியாது. பொழுது சாய்ந்ததும் ஒரு பெண்மான் நீர் குடிக்க வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்த வேடன் தன்னுடைய வில்லைக் கையிலெடுத்தான். அவனுடைய குடுவையில் இருந்த நீர் கொஞ்சம் கீழே விழுந்தது. அவன் அசைந்து எழுந்ததால் மரத்தில் உள்ள வில்வங்கள் கீழே விழுந்தன. இவை இரண்டும் கீழே இருந்த லிங்கத்தின்மேல் விழுந்தன. வேடன் குறிபார்த்தபொழுது, அந்தப் பெண் மான் கூறிற்று: "வேடனே, என்னை இப்போது கொல்ல வேண்டாம். என் கணவரும் பிள்ளைகளும் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு நிச்சயம் வருவேன்” என்றது. அவன் தன் வார்த்தையை நம்பவில்லை என்று அறிந்தவுடன் பெண் மான் மீண்டும் வருவதாக சத்தியம் செய்தது. மனமிரங்கிய வேடன் அதனைப் போய் வருமாறு பணித்தான்.
அந்தப் பெண் மான் சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு பெண் மான் வந்தது. முதல் மானுக்கு நடந்த அனைத்தும் இம்மானிடமும் நடைபெற்றது. இரண்டாம் முறை சிவலிங்கத் திற்கு அபிஷேகம், வில்வார்ச்சனை அவனையுமறியாமல் செய்தான். இந்தப் பெண்மானும் முன்னர் வந்த பெண்மானும் சகோதரிகளாகும். ஒரே ஆண்மானுக்கு இந்த இரண்டு பெண் மான்களும் மனைவியாயிருந்தன.
இதற்கு அடுத்தபடியாக ஒர் ஆண் மான் வந்தது. அதே உரையாடல், அதே சக்தியால் மூன்றாம் முறையாக லிங்கத்திற்கு அபிஷேகம், வில்வார்ச்சனை நடைபெற்றது. ஆண் மான் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று மான்களும் தாங்கள் செய்த சத்தியப்படியே வேடனிடம் வந்தன. ஒவ்வொன்றும் அவன் தன்னையே கொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டன. இது போதாதென்று அவற்றின் பிள்ளைகளாகிய மான் கன்றுகள் வந்து தாய் தகப்பனில்லாது நாங்கள் உயிர் வாழ முடியாது. எனவே அவர்களை விட்டுவிட்டு எங்களைக் கொல்லுங்கள் என்று கூறின. வேடன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான். அந்த நேரத்தில் அவனையும் அறியாமல் செய்த சிவராத்திரி மூன்று கால பூஜையால் சிவன் வெளிப்பட்டு அவன் குற்றங்களை எல்லாம் மன்னித்து இந்த விநாடி முதல் உன்னுடைய பெயர் குகன் என்று வழங்கட்டும். ஸ்ரீராமன் இங்கு வரும்பொழுது அவனுக்குத் தோழனாக நீ இருப்பாய் என்று கூறி மறைந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 15 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மான், அவன், வேடன், பெண், போய், கீழே, நீர், கொண்டு, சிவராத்திரி, வந்தது